Monday, October 11, 2010

kasme vade pyar wafa @ கனவு காணும் வாழ்க்கை யாவும்

மனோஜ் குமார் இயக்கத்தில் 1967 ல் வெளியாகிய இந்தப் படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட். மேலும் பல பல விருதுகளை பெற்றது இந்த படம். 

அப்பா சொல்லுவார், அந்த கால கட்டதில் பிறந்த குழந்தைகளுக்கு பிரான் என்று பெயர் கூட வைக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு கொடுமையான வில்லனாக கொடிகட்டி பறந்தவர் பிரான்.  முதல் முதலாக வில்லன் கதாபாத்திரத்தை விட்டு இந்த படத்தில்தான் அவர் ஒரு பாஸிடிவ் ரோல் செய்திருக்கிறார்.

பிரானின் அசாத்திய நடிப்புத் திறமை இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது, கமாரின் வரிகள், மன்னா தே இன் குரல், கல்யான்ஜி ஆனந்த ஜீ யின் இசை.. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதை அள்ளிச் செல்லும். 

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத்த்து....



---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடல் அச்சு அசலாய் தமிழ் பாடல் ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகிறதல்லவா....இவை இரண்டும் வேறு வேறு கால கட்டத்தில் எடுக்கப் பட்ட படங்கள்....கல்யாண்ஜியின் அனுமதியோடு இளையாராஜா இந்த மெட்டினை பயன்படுத்தியதாக கேள்வி..... 


Sunday, October 03, 2010

ரசித்ததோர் தருணம்


உன் கனிவில் அந்த குழைவில்
காட்டும் அன்பில் அரவணைப்பில்
கவனமாய் ஊட்டிய அன்னத்தில்
ரசித்துச் செய்து விட்ட அலங்காரத்தில்
ஆசையாய் அழுந்தத் தந்த முத்தத்தில்
உயிர்த்தெழுகிறது அந்த பொம்மை

ஒரு நிகழ்வு ஏற்படுத்தும் உணர்வை அதன் தன்மை மாறாமல் கவிதை வடிவமாகக் கொடுப்பதற்கு எல்லோராலும் முடியாது. கடலூர் பள்ளியின் மேற்பார்வையின் போது எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டதென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கவித்துமான படைப்புகளை தருபவர்கள் அதையே அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

வகுப்பறையில் ஒரு குழந்தை, பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த  கணத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்வை, கவிதையாய் நடந்த அந்த நிகழ்வை எழுத்தாக்கியிருக்கிறேன். அவ்வளவே!


Thursday, September 30, 2010

இனி ஒரு விதி செய்வோம்.....


மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.அதன் சாரம் இதுதான்...
 
ஆந்திரா, அஸாம், பீஹார், தில்லி, கோவா, கேரளா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா,, மிசோரம், ராஜஸ்தான், உத்திரபிரேதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பதின்மூன்று மாநிலங்களில் உள்ள ஐந்து முதல் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட  12,477 குழந்தைகளிடையே நடத்திய ஆய்வில் 66.8% குழந்தைகள் உடல் சார்ந்த வன்முறையினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிற்து. மேலும் 55% குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலே சொன்ன 12,477 குழந்தைகளில் 2317 குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் என போகிறது அந்த ஆய்வறிக்கை.

எதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளில் 66.8 விழுக்காட்டினர் உடலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது வேதனையான நிதர்சனம்,இம்மாதிரியான அத்து மீறல்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எத்தகைய எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதை சொல்லித்தான் யாரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.உலகத்தில் இந்தியாவில்தான் தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம், நம்மிடம் இருக்கும் கணக்கின் படி இந்தியாவில் 18 மில்லியன் குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கின்றனர்.இந்தவகையில் உலகில் நாம்தான் முதலிடம்...

இந்த நிதர்சனங்கள் இப்படியிருக்க...இப்படியும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதானிருக்கிறது...








Thursday, September 09, 2010

பயணம், அனுபவம், உணர்வு

கடலூர் மாவட்டம் மடவபள்ளி கிராமம், நகரத்து நாகரீக பாதிப்புகள் ஏதுவும் இல்லாத அழகிய கடற்கரை கிராமம். ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தில் சின்னாபின்னமான கிராமங்களில் ஒன்று. பெரிதான அடிப்படை வசதிகள் எட்டிப் பார்க்காத இந்த கிராமத்தில், கல்வி அறக் கட்டளை ஒன்று முற்றிலும் இலவசமான அதே நேரத்தில் தரமான கல்வியினை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறது.


இந்த பள்ளியின் செயல்பாடுகளை ஆய்ந்து மேம்படுத்தும் பணி தொடர்பாக கடந்த இரு தினங்களாய் இங்கே முகாமிட்டிருக்கிறேன்.பள்ளியில் இருந்து 5 நிமிடம் நடந்தால், ஒரு பக்கம் முந்திரி தோப்பும், மறுபக்கம் கடலும், கண்ணைக் கவரும் இயற்கைப் பேரழகு திரும்பிய பக்கம் எல்லாம் கொட்டிக் கிடக்கிறது.

வழக்கம் போல காலையில், குழந்தைகளின் பிஞ்சுக் குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளி துவங்கியது. எப்பொழுது கேட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ரசித்து பாடி மனம் லேசாவதை அனுபவிப்பேன். ஆனால் ஏனோ இன்று தமிழ்த்தாய் வாழ்த்தின் போதும் கொடிப்பாட்டின் போதும் அந்த குழந்தைகளின் குரல் மனதை பிசைந்தது. ஆழிப்பேரலையின் கோர தாண்டவமும்,அப்பாவிகளின் கதறலும்,வேதனையுமான காட்சிகளே கண் முன்னால் வந்து போனது.


மாலையில் தனியே கடற்கரையில் நிறைய நேரம் உட்கார்ந்திருந்தேன்.. அங்கே என்னைத் தவிர வேறு யாரும் தென்படவில்லை... எனக்கே எனக்கான இடமாக தெரிந்தது.....அலைகளில் காலை வைத்து கட்டுமரத்தில் உட்கார்ந்து இருந்தேன்....அமைதியாக கரையை வந்து தொட்டுப் போகும் இந்த அலைகளா பொங்கி வந்தது? இந்தக்கடலா அழிவைத்தந்தது?...

இந்த அனுபவம் தந்த உணர்வுகளைப் பற்றி நிறைய சொல்லவேண்டும், எழுத வேண்டும் என்று தோணுகிறது....இந்த பயணம் முடிந்த பின்னால் அதை முயற்சிக்கிறேன்...ம்ம்ம்ம்ம்


Sunday, August 15, 2010

உறக்கம் கலைவோம்....

சுதந்திரம்   வந்து 63 வருடம் முடிந்து இன்று அறுபத்தி நாலில் அடியெடுத்து   வைக்கிறோம்.  சாதனைகள், உயரங்கள், உற்சாகமாய் வெளிச்சம் போட்டு காட்டி   பெருமித  முகங்கள், வாழ்த்துக்கள், நாளைய கனவுகள் பற்றி உரக்க பேசி  சந்தோஷப்   படுகிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது பார்ப்பதற்கும்,    கேட்பதற்கும்.


இந்த   இடத்தில் ஒரு பழைய சம்பவம். வருடம் 1923, சேரன்மாதேவியில் உள்ள  வா.வே.சு   அய்யர் அவர்களின் ஆசிரமம் அல்லது குருகுலம். இதற்கு பொருளுதவி  செய்து   வந்தது அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் அமைப்பு. தந்தை  பெரியார்   அப்போது அதில் செயலாளர். குருகுலத்தில் ஒரு பழக்கம் தீவிரமாக   கடைபிடிக்கப்  பட்டது. அவர் சார்ந்த சமூகத்தவருக்கு ஒரு பந்தியும்,   மற்றவர்களுக்கு ஒரு  பந்தியுமாய் உணவு வழங்கப் படும். இதை அறிந்த பெரியார்   கொதித்தெழுந்து  எதிர்த்தார். காந்தியடிகளின் காதுக்கும் கூட செய்தி  போனது,  ஒன்றும்  நடக்கவில்லை. வெறுத்துப் போன பெரியார் பதவியை தூக்கி  எறிந்து  விட்டு  வந்தார்.


87 வருடங்கள் ஓடிப் போய்  விட்டது. நமது  சிந்தனைகள் செயல்களில் கூட  பெரிய அளவில் மாற்றம்  வந்திருக்கிறது.அறுபத்தி  மூணு ஆண்டு சுதந்திரம்  நமக்கு தடையில்லாத பேச்சு  மற்றும் எழுத்து  சுதந்திரத்தை கொட்டிக்  கொடுத்திருப்பதனால் புதிய  சிந்தனைகளினால் எல்லா  துறைகளிலும் மிளிர்ந்து  கொண்டிருக்கிறோம்.  இப்படித்தானே எல்லா பக்கமும்  சொல்லிக்  கொண்டிருக்கின்றோம். ஆனால் சமூக நீதி  மற்றும் சாதிய உணர்வுகளில்...?


சமீபத்தில்  உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்கிவரும் அறக்கட்டளை  ஒன்றின் பள்ளி நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் வாய்ப்பு வந்தது. அந்த பள்ளியில்  சீருடையில் இருந்து,  புத்தகம்,  மதிய உணவு உட்பட  அனைத்தையும்  அறக் கட்டளை இலவசமாய்  வழங்குகிறது. 

பொருளாதார ரீதியில் பின் தங்கிய அந்த பகுதி மக்களுக்கு அதை எத்தனை பெரிய உதவி  என்பதை அறிந்து  மகிழ்ச்சி அடைந்தேன். ஆசிரியர்களும்  ஊழியர்களும்  குழந்தைகளை அக்கறையுடனும் கவனித்துகொண்டு முழுஈடுப்பாட்டுடன்  இருப்பதை  பார்த்து எனக்குள் திருப்தியும், நிம்மதியும் ஆன ஒரு  உணர்வும் ஏற்பட்டது. அந்த சூழலில் என் மனதிற்கு  உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிட்டியது  என்பது உண்மை.


மதியம்   குழந்தைகளோடு நானும் உணவருந்திக் கொண்டிருந்த போது சில குழந்தைகள்    மட்டும் தாங்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்திருந்ததை கவனித்தேன். அத்தருணத்தில் அது எனக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.  ஆனால் அந்த குழந்தைகளில் சிலர் பள்ளியில் தரப்படும் உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்பதையும் கவனித்தேன். இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்செயலாய் அந்த ஊர்காரர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்த மதிய உணவு பற்றி அவர் கூறியபோதுதான் வீட்டில் இருந்து உணவு கொண்டுவரும் செயலின் பிண்ணனி புரிந்தது.


ஒடுக்கப்பட்ட   சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும், மேல் ஜாதி என தங்களை  நினைத்துக்   கொள்வோரின் குழந்தைகளுக்கும் ஒரே தட்டில் உணவு  பரிமாறப்படுவதால், மேல்ஜாதி   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான உணவினை  தனியே கொடுத்தனுப்புகின்றனர்   என்றார் அவர்.


 தீண்டாமை!, சொல்வதற்கே வெட்கமாய்த்தான்   இருக்கிறது. அறுபத்தி நாலு ஆண்டு  சுதந்திரத்திற்குப் பின்னரும் நகர்புறம்   தாண்டிய அந்த பகுதி மக்களின்  எண்ணங்களும் பார்வையும் என்னவோ இன்னமும்   அபப்டியே தான் இருக்கின்றன. எத்தனை  பெரியார்கள் வந்தென்ன?, போயென்ன?


 எட்டாக்கனியாக   இருக்கும் கல்வியை எளிதாக்க யாரோ ஒரு நற்சிந்தனையாளர்  தேவையின்   அடிப்படையில் மகத்தான சேவையினை செய்து வந்தால் அதிலும் நம் சாதிய  ஒடுக்கு முறை புத்தியை காட்டி பிரிவினையை உண்டு பண்ணும் நம் சமூகத்தை என்ன  வென்று   சொல்வது. சீரான சமூக பழக்கவழக்கங்களை  இலக்காக்கி மனிதனை மனிதனாக   மதிக்கும்  நாகரீகத்தை வளர்க்கும் ஒரே இடம் பள்ளி தான்.  மதிப்பீடுகளில்   சாதியும்  மதமும் வரக்கூடாது என்பதை வலியுறுத்தவும்  ஒழுக்கத்தையும்   சகிப்புத்தன்மையும் வளர்க்கவும் வகுப்பறையே ஏதுவான இடம். 


அக்குழந்தைகள்   கண்டிப்பாக தங்கள் பெற்றோர்களை காரணம் கேட்டிருப்பார்கள் எதற்காக  தாங்கள்   மட்டும் பள்ளியில் சாப்பிடக்கூடாது என கேட்காமல்  இருக்கப்போவதில்லை.   அப்பெற்றோர்களும் உண்மையான காரணத்தை பெருமிதத்துடன்  சொல்லாமல்   இருக்கப்போவதில்லை. இது எந்த வகையான ஒரு தாக்கத்தை, எண் ஓட்டத்தை அந்த  பிஞ்சின்   மனதில் ஏற்படுத்தும்?


குழந்தைகளுக்குள் எந்தவித   வேறுபாடுகளும் இல்லை. பள்ளியில் சாப்பிடும்  தட்டில் கூட தீண்டாமையை   கடைபிடிக்கும் இப்பெற்றோகளுக்கு அல்லவா கல்வி  தேவைப்படுகிறது. ஒருவரின்   இருப்பை கேவலப்படுத்தி சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி என்னோடு சரிசமமாக உட்கார்ந்து   உணவருந்தும் தகுதி உணக்கில்லை என்பதை  முகத்தில் அறைந்து சொல்வது   அவனுக்குள் எப்பேர்பட்ட காயத்தை ஏற்படுத்தும்.  அந்த இடத்தில் நம்மை வைத்து   மனசாட்சியோடு சிந்தனை செய்தால் மட்டுமே அந்த வலி  புரியும். நிராகரிப்பின் வலியை   அனுபவித்தால் ஒழிய புரியாது.ம்ம்ம்ம்


மாணவர்கள் வீட்டில்   இருந்து கொண்டுவரும் உணவை சகமாணவர்களுடன் பகிர்ந்து ஒன்றாக  உண்ண   வேண்டும் என வலியுறுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.ஐந்தில் வளையாத உடல் மட்டும் அல்ல எண்ணங்களும் ஐம்பதில் வளையாது. விதை ஒன்று    போட்டால் செடி ஒன்று முளைக்காது. விதைகளை அனைத்துச்செல்லும் விருட்சங்களாக    வளர்ப்பது நம் கையில் தானிருக்கிறது.


1924 ல் குருகுலத்தில்   நடந்த அந்த பிரிவினைச் சார்ந்த செயலானது ஒரு குறிப்பிட்ட உயர்  சமூகத்தார் மற்ற    சமூகத்தார் அனைவரின் மீதும் ஏவிய ஒடுக்குமுறை. இன்றைக்கு பெரியார் மாதிரியான சமூக புரட்சியாளர்கள் மீட்டுத் தந்த சமூக நீதியின் நீட்சியாக மேலே வந்த பிற சமூகத்தினர் தனக்கும் கீழான சமூகத்தவன் என மற்ற சமூகத்தினர் மீது அதே வன்முறையினை  நிகழ்த்துகின்றனர். குப்பனும் சுப்பனுமாக வீரம் இழந்து மானம் இழந்து அடிமைப்பட்டு கிடந்தவர்கள் கொஞ்சம் வசதியும், வாய்ப்பும்  வந்தவுடன்  கடந்த காலத்தை மறந்து, சாதீய போதையில் சக மனிதனை மனிதனாக மதிக்க மறுக்கின்றனர்.
  
ஆளப்பிறந்தவர்கள்    என்று கூறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து  நமக்கு பெரியார்  விடுதலை   வாங்கிக் கொடுத்துவிட்டார். இருப்பினும் அதே ஒடுக்குமுறை உணர்வு  அரசியல்,   கல்வி, பொருளாதாரத்தில் தங்களின் ஆட்சியே இருக்கவேண்டும் என்ற  சுயநல  உணர்வு அடுத்த தட்டு மக்களின் மனத்தில் ஆழமாகப்  பதிந்து விட்டது. 87  வருடங்களுக்கு   பின்னரும் நாம் இதே குறுகிய எண்ண வட்டத்தில் தான்  சுழன்றுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் பெரியார் மாதிரியான மகாத்மாவிற்கு நாம் இழைக்கும் துரோகம், இதற்காக அனைவருமே வெட்கப் பட வேண்டும்.

சாதீய  கட்டமைப்புகள்,பேதங்கள்,  தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என   சாதியத்தின் பெயரால்  மக்களைப்  பிரித்து ஒதுக்கும் கொடுமையை இன்னும்  எத்தனை நாட்களுக்கு சகித்துக்   கொண்டிருக்கப்போகிறோம்.விடுதலை கொண்டாட்டங்கள் என்பது நமது எண்ணம், செயல், சிந்தனைகளின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து பெருமையடைவதாக இருக்கவேண்டும். இந்த நாளிலாவது அதற்கான உறுதி மொழியினை ஏற்றிடுவோம். சக மனிதனை சாதியின் பெயரால் அவதூறு செய்வதை ஒழித்திடுவோம்

 பிற்சேர்க்கை - பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசிகொண்டிருந்த போது அவர், "அவ்வாறு தனியாக உணவு கொண்டு வருவதை நாங்கள் ஆதரிப்பது இல்லை. சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கும்போது வீட்டில் இருந்து கொண்டுவருவார்கள். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சநதிப்பில் இந்தப் பிரச்சனை வராமல் இருப்பதில்லை. பள்ளியின் கொள்கைக்கும் கட்டுப்பாடிற்கும் கட்டுப்பட்டால் மட்டுமே குழந்தைகளை சேர்த்துக்கொள்வது' என்றார்

Saturday, August 07, 2010

கண்ணாடிப் பெண்...


கனவு நினைவு நிம்மதி மகிழ்ச்சி
தேவைகள் தடைகள் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
பயம் பதட்டம் கவலை வலி
இன்னும் எத்தனையோ வரட்டும்
பகிர்ந்து கொள்ளவும் பாதியாக்கவும்
மௌனம் நிறைத்த அவளின் இதமான அழுத்தம்
ரயில் பயணத்தில் நொடி நேரம் தோன்றி
மறையும் காட்சிகளாய் கடந்திட வைத்த
அவளின் பார்வை
இத்தனைக்கும் கண்ணாடியில் மட்டுமே அவளை...


Tuesday, August 03, 2010

வெளிச்சம்....


ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்..
என் சுயநினைவை கிழித்துக்கொண்டு ச்சோவென பெய்கிறது மழை
முகத்தில் அறைகிறது காற்று

மழையும் நிற்கப் போவதில்லை..
இந்த காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???
கைகளை கேடயமாக்கி சுருண்டு கொள்கிறேன்
இந்த இரவு விடியாமலே போய்விட்டால்???
அறையெங்கும் அவநம்பிக்கைகள்

இறுதி நிமிடங்களில் இரவு - அதைக்
கிழிக்கும் ஒளிக்கீற்று வரவேண்டும்
சூரியனை மிரட்டலாம்தான்...எடுபடுமா?
அவநம்பிக்கைகள் மீது வெறுப்பு படர்கிறது

கருப்பையின் கதகதப்பிற்கு ஏங்கிக்கிடக்கிறேன்
மழைச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது
கண்ணுக்குள் கருமை நிறைந்திருக்கிறது
இந்த கருமைக்குள் தொலைந்து விடுவேனோ...

நிசப்தத்தை கிழிக்கும் என் எண்ணங்களின் கூக்குரல்
வெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்
அதிர்ந்து எழுகிறேன், மெல்லிய வெளிச்சம் அறையெங்கும்..

நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்...



Monday, May 24, 2010

கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் !

தனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடும்
மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் உடந்தையாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..

மருந்துகளின் உற்பத்திச் செலவு என்று பார்த்தால் மிகக் குறைவாகவே ஆகிறது.ஆனால் அதற்கு பின் நடக்கும் சந்தைப் படுத்தும் ஆடம்பரங்கள், ஆராய்ச்சிகள், லாப நோக்கு போன்ற காரணிகள் தான் விலையை உச்சானிக் கொம்பில் கொண்டு போய் விடுகிறது. சமீப ஆண்டுகளில் மருந்து கம்பெனிகளின் அதீத வளர்ச்சியும் அவர்கள் எடுக்கும் லாபமும் இதற்கு சான்று.



ஒரு உதாரணத்திற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன் படும் Atenolol என்ற மருந்து, தற்போது ஒரு அட்டை 20 அல்லது 25 ரூபாயில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதே மருந்தினை உலக சுகாதார மையத்தின் தரக்கட்டுப்பாடுகளின் படி தயாரித்து ரூபாய் 5 க்கு ஒரு நிறுவனம் தன்னால் இயன்ற வரை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இது எப்படி சாத்தியம்? யார் அவர்கள்? அவர்களின் பின்புலம் என்ன?, அதைப் பற்றி சொல்லவே இந்த பதிவு.


லோகாஸ்ட் (Low Cost Standard Therapeutics) என்ற அந்த தனியார் டிரஸ்ட் பரோடாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை, மிக மிக குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் சில எளிய முறைகளை பின்பற்றி அதே உலக தரத்துடன் கூடிய மருந்துகளை விற்று வருகிறது.
குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மருந்துகள் போய் சேருகின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் டிப்போக்கள் உள்ளன. கேள்விப்படாத கிராமங்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் இந்த மருந்துகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மருந்து கடைகளில் இதை விற்க ஒப்புதல் பெற்று, மருத்துவர்களிடமும் ஏழை நோயாளிகளுக்கு இதையே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர்.
இதை ஒரு தவமாக செய்து வரும் இவர்கள், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் தொழிளார்களுக்கு நல்ல கூலியையும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்க ஒரு அம்சம். எல்லா செலவும் போக இவர்களுக்கு 10% நிகர லாபம் நிற்கிறதாம். அப்படி இருக்கையில் நம் தனியார் நிறுவனங்கள் பார்க்கும் லாபம்?.........ம்ம்ம்ம்

இதைத்தவிர, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் லோகாயத் மெடிக்கல் சென்டர் என்ற ஒரு ஆலோசனை மையத்தை புனேவில் நிறுவி இருக்கிறார்கள். இந்த மையத்தின் பணியை கேட்டால் இப்படி கூட நம் நாட்டில் நடக்கிறதா என்று ஆச்சிரியப் பட வைக்கிறது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும் இந்த மையம், மருந்து பரிந்துரைத் தாளுடன் வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றிய ஆலோசனை வழங்கி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், லோகாஸ்ட் மருந்துகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகிறது.
மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும் முன்னர், நோய் பற்றியும், உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மையம்.

மாஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் மொபைல் க்ளீனிக்குகள் அமைத்து 5 அல்லது 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி லோகாஸ்ட் மருந்துகளை வழங்கி வருகிறார்கள்.
இந்தியா மீது படை எடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சில உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தயாரித்து வழங்கி வருவதில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருந்து வருகிறதென்றால் மிகையில்லை.

இதைப் படிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தார் இவர்களின் சேவையினை தமிழகத்திலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த பதிவினை இட்டதன் பலனை அடைந்ததாக நினைப்பேன்.
(http://www.locostindia.com )

Wednesday, April 21, 2010

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

நிர்பந்தங்கள் அற்ற நேசங்களை நினைவில் கொண்டு....இதோ இந்த பாடல்




இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
வசந்த்தின் மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

Saturday, April 17, 2010

'துஜ் சே நாராஸ் நஹி ஜிந்தகி'

1983 ல் வெளி வந்த மாசூம் படத்தில் அனைத்து பாடல்களும் நெஞ்சை உருக்குபவை. சேகர் கபூர் முதன் முதலில் இந்தியில் இயக்கிய படம். தமிழில் பிரபு, அமலா மற்றும் சரிதா நடித்து வெளிவந்தது. மனதை தட்டி எழுப்பும் குல்சாரின் வரிகளை கொண்டது.

இந்தப் படத்தில் வரும் 'துஜ்சே நாராஸ் நஹி ஜிந்தகி' என்ற பாடலை ஜி டீவி யில் நடந்த சரிகமப நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த அமானத் அலி பாடினார். இந்த போட்டி நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன.

கீழே உள்ள வீடியோ படத்தில் அனூப் கோஷல் பாடியது.

மேலே உள்ள வீடியோ போட்டியில் அமானத் அலி பாடியது.

சிலர் பாடும் போது காதுகள் வழியே இறங்கி இதயத்தை உலுக்குகிற மாதிரி ஓர் உணர்வு ஏற்படும். ஏதொ ஒரு சக்தி நம்மை இழுத்து உட்கார வைக்கும். இந்த இளைஞன் பாடியதை கேட்ட போது நானும் இதை தான் உணர்ந்தேன். பாடல் வரிகளும், அவன் பாடிய விதமும், வெளிபடுத்திய உணர்ச்சிகளும் மனதை பிசையாமல் இல்லை. கண்ணில் கண்ணீரை வரவழைக்கும்.


அரங்கில் இருந்தவர்கள் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கூறி மூன்று தடவை பாடவைத்தனர். எத்தனை முறை கேட்டாலும் அதே உணர்வை ஏற்படுத்தும் குரல்.

இரண்டையும் கேட்டு பாருங்கள்...அமானத்தின் குரல் ஏற்படுத்தும் ஜாலம் புரியும்







tujhase naaraaz nahi zindagi, hairaan hoon main
o hairaan hoon main
tere masoom savalon se pareshaan hooN main
o pareshaan hoon main

jeene ke liye socha hi na tha, dard sambhalane honge
muskuraoon to, muskurane ke karz utaarne honge
muskuraoon kabhi to lagata hai
jaise hontonn pe karz rakhaa hai
tujhase ...

aaj agar bhar ayi hai, boondein baras jaayengi
kal kya pata inke liye aakhen taras jayengi
jaane kahan gum kahan khoya
ek aansu chhupake rakha tha
tujhase ...

zindagi tere gum ne hamain rishte naye samajhaye
mile jo hamain dhoop main mile chhaanv ke thande saaye

o tujhase ..

Monday, March 22, 2010

Catch them young..?????

மேல் நிலை பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை பாலியல் அறிவினை கற்பிக்க முயற்சிகள் நடந்ததும் அப்போது வந்த எதிர்ப்புகளும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

உளவியல் மட்டும் சமூகவியலாளர்கள் நீண்ட விவாதம் மற்றும் அராய்ச்சிக்குப் பின்னரே இந்த வளர் இளம் பருவ கல்விக்கான தேவையின் அவசியத்தை உறுதி செய்து செயல்படுத்த முடிவெடுத்தனர்.
நமது குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழியினையும் ஒரு பயிற்சி வகுப்பாக தொகுத்து இறுதி செய்தனர். இது முழுக்க நமது கலாச்சாரம் சமுதாய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே திட்டமிடப்பட்டது.

மேற்கூறிய வளர் இளம் பருவ கல்வி என்பது அந்த பருவத்திற்கே உரிய உடல் கூறு, பொதுவான ஆரோக்கியம் பாலுணர்வு சிந்தனைகள், உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள், தவறான பழக்கங்கள், செயல்கள்,தீர்மானங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் தொடர்ச்சியாக பதின்ம பருவத்தில் உடலுறவும், கர்ப்பம் தரித்தலும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த கல்வி எடுத்து கூறுகிறது. இத்தனை விசாலமான பார்வையுடன் திட்டமிட்ட போதும், வழக்கம் போல நம் கலாச்சார காவலர்கள் அலறி அடித்து ஓடு வந்து அதை முழுமையாக நிறைவேற்ற விடாமல் வெற்றிகரமாக நிறுத்தி விட்டனர்.

சரி இது இப்படி இருக்க நான் சமீபத்தில் படித்த ஒரு தெய்தி, இது டூ மச், த்ரீமச்னு நினைக்கத் தோன்றியது. மேற்கூறிய விழிப்புணர்வு கல்வியி்ல் ஆணுறை பற்றிய குறிப்பும் இடம் பெறுகிறது. மறுக்கவில்லை. ஆனால் இப்ப இந்த பதிவில் சொல்ல வந்த விஷயம் என்னன்னா சுவிட்சர்லாந்தில், காண்டம் தயாரிக்கும்
நிறுவனம் ஒன்று, உலகில் முதன்முறையாக 12 வயது சிறுவர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய காண்டங்களைத் அறிமுகப் படுத்தியிருக்கிறது.

நான் 15 ஆண்டு காலமாக ஊர் ஊராக சென்று ஆணுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவள் தான். இருந்தாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, ஒரே அடியாக இது தேவையில்லாத ஒன்று என்று ஒதுக்கவும் முடியவில்லை.

இதற்கு அந்த நிறுவனம் கொடுக்கும் விளக்கம், "சிறுவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர்வதில்லை. அதன் விளைவுகள் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் உடல் உறவு வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆனால், அது அவர்கள் பிரச்சனை என்று நினைக்கிறார்கள்".


இங்கிலாந்தில் 12 லிருந்து 14 வயது சிறுவர்கள் இப்போது உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது, இதனால் டீன் ஏஜ் கர்ப்பமும், முறையற்ற கருக்கலைப்பும் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களை முன் நிறுத்தி சிறிய அளவிலான காண்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் டீன் கர்ப்பம், பாலியல் நோய்கள் போன்றவை அதிகரித்து உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.
இந்த நிலவரத்தை மனதில் கொண்டு அந்த அரசு சி-கார்ட் என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வைத்து தானியங்கி காண்டம் இயந்திரங்களில் காண்டங்களை எடுத்துக் கொள்ளலாம். மத அமைப்புகள் இதை பலமாக எதிர்த்து வருகின்றன.


ஆராய்ச்சி முடிவுகள் ஏற்படுத்தும் தேவைகளினால் அரசும் மற்ற நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அடிப்படை ஒழுக்கம் வாழ்க்கை குறித்த பொறுப்புணர்ச்சியும், சரியான கண்ணோட்டமும் இளைஞர்களுக்குள் வளர செய்வதே இந்த பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் என்பது என் கருத்து.

Monday, March 08, 2010

விருட்சங்களுக்கு வாழ்த்துக்கள்



குஜராத் மாநிலம் பாவ்நகர் ரயில்நிலையத்தில் மற்ற எந்த இடத்திலும் காண இயலாத ஒரு காட்சியை காணலாம். பொதுவாக லக்கேஜ்களை தூக்க ஆண்கள் தான் சிவப்பு நிற சட்டை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பாவ்நகர் ரயில்நிலையத்தில் லக்கேஜ்களை தூக்க சிவப்பு நிற ஆடையில் பெண்களை பார்க்கலாம். சுமார் முப்பது பெண்கள் இங்கு கூலி வேலை பார்க்கிறார்கள். சிலர் தலைமுறை தலைமுறையாக இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


ஒரு நூற்றாண்டிற்கு முன்பு இந்த பகுதியை ஆண்டு வந்த ராஜா மஹாரானா கிருஷ்ன பிரதாப் சிங், பெண் போர்ட்டர்களை நியமித்து பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அது இப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் போது, அந்த அரசனையும் பெண்களையும் வாழ்த்த தோன்றுகிறது.


முன்னோர்கள் போட்ட நம்பிக்கை என்ற விதை இன்று விருட்சமாக பெண்களான எங்களுக்குள் வளர்ந்து நிற்கிறது
.

பெண்களின் உழைப்பிற்கும் உணர்வுகளுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுப்போம்.

உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

Wednesday, March 03, 2010

போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா


ஆன்மீகத்தில் தேடல், பசி, தாகம்,ஈரவெங்காயம் எல்லாம் அதிகரிச்சு போயிருச்சு.. இதுக்குன்னு ஒரு கூட்டம் சுத்தீட்டே இருக்கு..யாரு புதுசா காவி கட்டீட்டு வருவாங்கன்னு... புரியாத பாஷையில பேசுற ஆளாக்கு கிராக்கி ஜாஸ்தி..

யோகா, தியானத்தை சொல்லி குடுக்கறதுக்கு நல்ல மனுஷங்க எவ்வளோ பேர் இருக்காங்க..அவங்க கிட்ட போங்கய்யா..

ஆன்மீகத்தை ஊர் ஊரா, வீதி வீதியா கூவி விக்க ஆரம்பிச்சுட்டாங்க...அது தரம் பிரித்து வாங்க நமக்கு பத்தாது...

அதுனால.. போங்க போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க..(டேங்ஸ் வடிவேலு)...நாலு வார்த்தை நல்ல வார்த்தை சொல்லி வளர்த்துங்க.. அது போதும்...


(படத்துல காஸ்ட்யூம் பாருங்க..ஹ்ம்ம்ம்)

Tuesday, January 05, 2010

கருணைக் கொலை-ஒரு உணர்வுப் போராட்டம்


கருணைக் கொலை பற்றி யோசிக்கவோ பேசவோ சந்தர்ப்பங்கள் எழும் போதெல்லாம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் யாவும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காதவைகளாகவே இருந்திருக்கின்றன. அது கருணை கொலைக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, எதிராக இருந்தாலும் சரி, சம்பந்தப் பட்ட உயிர் பிரிவதாலோ, வாழ்வதாலோ நமக்கு நேரடியாக எந்த விதமான இழப்போ லாபமோ இருந்ததில்லை. (எனக்கு இருந்ததில்லை என்று வைத்துக் கொள்வோம்). அதனாலேயே அதைப்பற்றி பேசும்போதெல்லாம் சுலபமாக கருத்தை சொல்ல முடிந்திருக்கிறது. அதுவே நாம் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதை சமீபத்தில் உணர முடிந்தது.

நான் பேசுவது என் 10 வயது ஜூலியை பற்றியது. 15 நாட்களுக்கு முன்பு உடல் நிலை குன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளானது. நடக்க முடியவில்லை, உணவு உட்கொள்ளவில்லை, சிறுநீர் கழியவில்லை, மூச்சு விடுவதில் சிரமம், இப்படி பல பிரச்சனைகள். அழைத்தால் அன்புடன் வால் மட்டும் லேசாக ஆடும். தினமும் மருத்துவமனைக்கு சென்று 250மி.லி. க்ளூகோஸ் ஏற்றி வந்தோம்.அது மட்டுமே அதுக்கு உணவாக இருந்தது. 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்பும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையில் குடும்பத்தில் இந்த 10 நாட்களில் வெவ்வேறு விஷேசங்கள். ஜூலியை இந்நிலையில் விட்டு விட்டு போக மனம் வரவில்லை. இது வரை நம்மை சுற்றி சுற்றி வந்து நட்பு பாராட்டிய அந்த உணர்வுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதனால் ஓரிரண்டு இடத்திற்கு போக முடியாததன் காரணத்தை சொன்ன போது, ஒரு 'நாய்க்கு' நான் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "எத்தன நாள் தான் இதே காரணத்தை சொல்லீட்டு இருப்பே, பேசாம மெர்சி கில்லிங்க் பண்ணீட்டு அடுத்த வேலையை பார்" என்று அறிவுரைகள். இவ்வளவு வதைப்படும் ஒரு உயிரை கருணைக் கொலை செய்வது தவறில்லை என்பது அவர்கள் வாதம். ஐந்து ஆறு மணி நேரம் ஜூலி பட்ட கஷ்டத்தை பார்த்த போது. ஒரு வேளை அவர்கள் சொல்வது சரியோ என்றுகூட பட்டது. எது நடந்தாலும் சரி, அது சீக்கிரம் நடக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்.

16 ஆம் தேதி மதியம் நிலைமை மிகவும் மோசமானது. இனி சிகிச்சை கொடுத்து பலன் இல்லை என்று தெரிந்து விட்டது. அந்த முடியாத நிலையிலும், 4 முறை அழைத்தால், ஐந்தாவது முறை வாலை ஆட்டும். உயிருடனும் உணர்வுகளுடனும் கிடக்கும் அந்த ஜீவனை, ஜீவன் இல்லாமல் ஆக்க என்னால் முடியவில்லை. மனதில் ஏதோ ஒரு சிறிய நம்பிக்கை. வாலை ஆட்டும் போதெல்லாம், இதோ நம் அழைத்தால் வாலை ஆட்டுகிறது, நாளை எழுந்து விடும் என்ற நம்பிக்கை. ஆனால் நேரம் ஆக ஆக அதுவும் நின்று போனது. சுமார் 10 மணிக்கு மகள் சிறிது தண்ணீர் விட்டதும், அடுத்த நிமிடம் உயிர் பிரிந்தது.

சிக்கலை மட்டுமே சந்தித்து வந்த நாட்களில் இதே ஜூலி தான் எங்களுக்கு ஆதரவாக இருந்ததென்றால் மிகையில்லை. உறவுகள் ஒதுக்கிய அந்த கால கட்டத்தில், நம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு தோழியாகத் தான் இருந்தாள். நாளெல்லாம் அலைந்து திரிந்து களைத்துப்போய் வீடு வந்து சேர்ந்தால், ஓடி வந்து, சின்ன சின்ன முனகலுடன் காலைச் சுற்றும் அந்த அன்பை வாழ்நாளில் மறக்க முடியாது.

Thursday, December 24, 2009

மூன்றே நாட்களில் முடிந்த வழக்கு....நம்புங்கள்


நம் நாட்டில் ஒரு சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள் அந்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், புதிதாகத் தாக்கல் செய்யப்படும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகிறது. இது நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்று கூட சொல்லாம்.

ஆனால் கொல்கத்தா உயர்நீதி மன்றம் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணிக்கு, வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்றே நாட்களில் தீர்ப்பு வழங்கி சாதனை படைத்திருக்கிறது.

பம்பி தாஸ் என்ற பெண்மணி எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். ட்ரான்ஸ்போர்ட் பிஸினஸ் நடத்தி வந்த கணவர் எச்ஐவி நோய்க்கு ஆளாகி 2006 ஆம் ஆண்டு இறந்து போனார். எங்கேயும் நடப்பது போல இவருக்கும் கணவர் வீட்டார் பூரிவீக சொத்தை பிரித்து கொடுக்க மறுக்கவே, பம்பி தாஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

நோயின் தன்மையை கருத்தில் கொண்டு, உயர்நீதி மன்றம் வழக்கு விசாரனையை மூன்றே நாட்களில் முடித்து தீர்ப்பு வழங்கி இருப்பது மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷயம்.

பம்பி தாஸ் நியாயம் கோரி பல பேரிடம் கெஞ்சிப் பார்த்தும் முடியாமல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரின் உடல்நிலையை மனதில் நிறுத்தி, காலதாமதமாக தீர்ப்பு வழங்குவதால் எந்த உபயோகமும் இல்லை என்று மூன்றே நாட்களில் வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.

Wednesday, December 09, 2009

கண்ணா சுகமா கிருஷ்னா சுகமா......

காவியத் தலைவி

தாயில்லாமல் வளரும் ஒரு பெண்ணும்.....தான் தான் தாய் என்பதை சொல்ல முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட தாயும் சேர்ந்து பாடும் பாட்டு...தாயும் மகளுமாக இரு வேடத்தில் செளகார் ஜானகி நடித்த அருமையான ஒரு படத்திலிருந்து.....

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா? என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே சொல் என்றேன் அன்னை முகமோ காண்பது நினமோ
கனவோ நனவோ சொல் என்றேன் கனவோ நனவோ சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? - என் கண்மணி சுகமா? சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Friday, October 16, 2009

Thursday, October 15, 2009

நினைத்தாலே இனிக்கும்...

எத்தன வருஷமானாலும்...எத்தன தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்...



Tuesday, September 15, 2009

இனி விருட்சங்களை மட்டுமே விதைப்போம்....


மனதை மிகவும் பாதித்த ஒரு சம்பவம், பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு...

ஒரு பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் அந்த பெண்மணி என்னை சந்திக்க விரும்பி அழைத்தார். அவரின் நம்பிக்கைக்கு உரித்தான ஒரு பெண் ஊழியருக்கு ஒரு செய்தியை நான் பக்குவமாய் எடுத்துச் சொல்ல உதவ வேண்டுமென கோரினார்.

அந்த பெண் எச்ஐவி வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்...

இருபதுகளின் நடுவில் இருக்கும் அந்த பெண், திருமணமாகி இரண்டே மாதத்தில் கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். சமீபத்தில் அவரின் வயதான மன நலம் குன்றிய தாயாருக்கு மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு எச்.ஐ.வி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவர, அதிர்ச்சியான நிர்வாகம் அவரது தாயாரின் மருத்துவ கோப்புகளை ஆராய்ந்த போது சமீபத்தில் மற்றொரு மருத்துவமனையில் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்திருப்பதும், அப்பொழுது சம்பந்தப்பட்ட பெண் அவர் தாயாருக்கு ரத்தம் கொடுத்திருப்பது தெரியவும், அந்த பெண்ணுக்கும் ரத்தம் பரிசோதிக்கப்பட அவரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தகவல் அவரின் முதலாளிக்குப் போக, மனித நேயம் கொண்ட அந்த பெண் நிர்வாகி எக்காரணம் கொண்டும் தனது நம்பிக்கையான ஊழியர் மனதளவில் பின்னடைந்துவிடக் கூடாது என்கிற அக்கறையினால் அந்த பெண்ணுக்கு விவரம் கூறி உதவ என்னை அழைத்திருக்கிறார். அவரும் நிர்வாகமும் அந்த பெண்ணுக்கு பின்னால் நிற்கிறார்கள் என்பதை நான் அவருக்கு புரியவைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

இதற்கு முன்னர் இத்தகைய பணிகளை பல முறை செய்திருந்தாலும், ஒருவரின் வாழ்க்கையை நிமிடத்தில் புரட்டிப் போடும் ஒரு செய்தியை சொல்வது சுலபமல்லவே... இம்மாதிரியான சந்தர்ப்பங்களை எதிர் கொள்வது, எத்தனை வருடங்களானாலும் கடினமான ஒன்றே. அன்றைக்கும் அப்படியே....

செய்தியின் அதிர்ச்சியில் நொறுங்கிப் போன அந்த பெண் வாய்விட்டு அழத்துவங்கினாள், அழுது ஓயட்டும் என பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டுமாத திருமண பரிசுதான் இந்த பாதிப்புக்கு காரணமெனெ தெரிந்தது. அந்த பையனைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென இவளின் தாயார் ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்திருக்கிறார். உறவின் போது கணவனின் ஆணுறுப்பில் சீழ் வடியும் புண்கள் இருந்திருக்கிறது. அவன் விலைமாதர்களிடன் சென்றிருப்பதாகவும் கூறியிறுக்கிறான். உறவுக்கு விருப்பமில்லாவிட்டாலும், தன்னை சந்தேகப் படுவானோ என்கிற தயக்கத்தில் உறவுக்கு சம்மதித்திருக்கிறாள். இதை எப்படி வெளியே சொல்வது என்கிற பயம். இது நம் பெண்கள், படித்தவர்களானாலும் படிக்காதவர்களானாலும், முடிவெடுப்பதில் தயக்கமே காட்டுகிறார்கள். சிறு வயதில் இருந்து நம் பெண்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு மன பக்குவதை இயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம்ம்


விருப்பமில்லாத அல்லது பொறுத்தமில்லாத இந்த திருமண உறவு இரண்டே மாதத்தில் அறுந்து போனதில், தவறான முடிவெடுத்துவிட்ட குற்ற உணர்ச்சியில் மனதொடிந்த அந்த பெண்ணின் தாயார் மனநோயாளியானதுதான் மிச்சம். அந்த பெண்ணின் சகோதரர்கள் கடமை முடிந்தால் சரி என ஒதிஙகிக்கொண்டிருக்க வேண்டும். ஒரே ஒரு சகோதரியும் அவளின் கணவர் மட்டுமெ இந்த பெண்ணிற்கு ஆதரவு. இதுதான் தற்போதைய நிலமை.

இயலாமையின் உச்சத்தில் வாய்விட்டு அழும் அந்த பெண்ணிற்கு முன்னால் ஆத்திரம், ஆதங்கம் இத்தோடு இயலாமையுடன், உட்கார்ந்திருந்தேன். வாழ வேண்டிய வயதில் ஒரு பெண்ணின் வாழ்க்கை தகர்க்கப் பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், தான் நினைத்த பையனை ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்த தாயா? , கணவணின் உடலுறுப்பில் நோய் தாக்கியிருப்பது தெரிந்தும் விருப்பமில்லாமல் ஆனால் சமூகத்துக்குப் பயந்து உறவுக்கு ஒத்துக்கொண்ட அந்த பெண்ணின் இயலாமையா? கூடப்பிறந்தவளுக்கு பிரச்சினையென்றதும், அவளை தாங்கும் சுமை தங்கள் தலையில் விழுமென சுதாரித்துக் கொண்டு நழுவிய உடன் பிறந்தாரா ?

அழுது ஓய்ந்த பின்னர், மெதுவாக அவளை தேற்றும் பணியினை ஆரம்பித்தேன், வாழ்க்கை குறித்த பார்வைகள் அல்லது வரையறைகளை நாம்தான் வகுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய மற்றவர்களின் கோணத்தில் வாழ்க்கையை வாழ்வதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதை புரியவைக்க முயற்சித்தேன். இது எல்லாம் சொல்வது சுலபம் என்பதையும் நான் அறிவேன். நேற்று வரை வாழ்க்கை என்பது இது தான் என்ற கண்ணோட்டத்தில் வாழ்ந்து வந்த பெண்ணிடம் இந்த வசனங்களை பேசினால் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்லவே.

அவள் இருக்கும் சூழலில் தனக்கு உகந்த வாழ்க்கை இலக்குகளை வகுத்துக் கொள்வதன் அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் பேசப் பேச சிறிது சிந்திக்க தொடங்கினாள்.

பாதிப்பின் எந்த கட்டத்திலிருக்கிறாள் என்பதை கண்டறிவதும், அதன் தொடர்ச்சியாய் எடுத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை விளக்கிய பின்னர், அவளின் நிர்வாகியும், நிர்வாகமும் அவளுக்கு துணையாய் நிற்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அவளுக்கு மறு திருமணத்திற்கு அவளது சகோதரி ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும், திருமணம் செய்யலாமா எனவும் கேட்டாள். உன் நிலமை அறிந்து உன்னை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என சொன்னேன்...எல்லாம் பேசி ஓரளவிற்கு நிஜங்களை ஜீரணிக்கும் மனபக்குவத்திற்கு வந்த பின் நாங்கள் விடைபெறும் தருணத்தில் அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை......

நான் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா ?

ஆவளுள் புதைந்திருக்கும் தாய்மை உணர்வை புரிந்து கொண்டேன். அதை அவளிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, குழந்தை பிறந்தால் வரும் பாதகங்களையும் எடுத்துச் சொன்னேன். அவளே சிந்தித்து முடிவெடுக்கட்டும் என்று விட்டு விட்டேன். ஆலோசனை என்றும் வழிகாட்டுதலாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களுக்கு பதில் நாம் முடிவெடுக்க கூடாது. இது எதற்கென்றால் இது மாதிரியான மற்றொரு சந்தர்பத்தில் அவர்கள் முடிவெடுக்க தயங்கக் கூடாது.

பெண் தன் குடும்ப மற்றும் சமுதாயத்திற்காக தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறாள். சில நிர்பந்தங்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன. இது போன்ற நிர்பந்தகளுக்கு பணியாமல், மற்றவர்களிடம் கலந்தாலோசித்து பயப்படாமல் ஒரு தீர்வை காணவேண்டும். இந்த மன உறுதியை சிறு வயதிலிருந்தே பெண்களுக்குள் வளர்த்த வேண்டும்.