கண்ணத்தில் கன மழையாய் பொழிந்து
நெஞ்சுக்குள் காவிரியாய் புகுந்த ஆனந்தக் கண்ணீருடன் எழுதுகிறேன்..
தமிழ்மண அன்பர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இன்னும் அழியாமல் இருக்கும் தமிழ் உணர்வை பார்த்து மகிழ்ந்தேன். நாடு விட்டு நாடு சென்றாலும், இந்த அளவிற்கு தமிழ் பற்றுடன், ஒரு குடும்பமாய் இருக்கும் இந்த அன்பு நெஞ்சங்களைப் பார்த்து மனம் நெகிழ்கிறது. கோவை அன்பர்கள் சிலரின் பதிவுகளையும் படித்தேன். இது ஒரு தனி சந்தோஷம்.
நாங்களும் அக்காவும் ஈடு பட்டிருக்கும் ஒரு திட்டத்தின், ஒருங்கினைப்பாளர்களின் சந்திப்பிற்கு இங்கு தில்லி வந்துள்ளோம். இதைப் பற்றிய தகவல்களை சந்திப்பு முடிந்த பின்பு அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.
பாதிக்கப்பட்ட நான் இன்று தன்னம்பிக்கையுடன் வலம் வரக் காரணம், என்னை சுற்றி இருக்கும் 'மனித நேயங்கள்', அக்காவைப் போல உறவுகள். ஆனால் இந்த பாக்கியம் பாதிக்கப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் கிடைப்பதில்லை. அதற்காகத்ததான் என்னால் ஆன சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மை நிலை உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை. இன்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குறிப்பாக கணவனை இழந்த இளம் பெண்கள். கணவனை இழந்த பின்னர் இவர்கள் பெற்றோராலும், புகுந்த வீட்டாராலும் நிராகரிக்கப்பட்டு, தனியாளாய், தங்கள் நிலையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு, அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். தனியாக வாழ வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட இவர்களுக்கு நம் சமுதாயம் எந்த வித பாதுகாப்பும் கொடுப்பதில்லை. ஒரு சராசரி பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் கஷ்டங்கள் இவர்களுக்கும் ஏற்படுகிறது.
தற்போது கோவையில் " பாதிக்கப்பட்ட தாய்மார்களின் மேம்பாட்டு கூட்டமைப்பு" (Society for Positive Mothers Development) என்ற அமைப்பின் மூலம்
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சில உதவிகளை (மருத்துவ உதவி, அலோசனை, யோகா, சத்துணவு, கல்வி) செய்து வருகிறோம். கோவை அளவில் இயங்கி வரும் இந்த அமைப்பைப் போல பல அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகிறது. நான், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆலோசகராகவும் பணி புரிந்து வருகிறேன்.
நானும் டாக்டர் மகாதேவனும்
படத்தில் இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களின் ஆதரவுடன் இன்று கோவையில் பாதிக்கப்பட்ட பலர் நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருத்தியாக நானும் வாழ்ந்து கொண்டிருகின்றேன். அவரின் சேவையை ஒரு வரியில் சொல்லி புரிய வைக்க முடியாது. அவரைப் பற்றிய தனிப் பதிவு ஒன்று வரும். என்னை தன் மகளாக தத்தெடுத்துக் கொண்டுள்ளார் என்றால், புரியும் உங்களுக்கு அவருள் இருக்கும் மனித நேயம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உதவி மறுக்கப் படுகிறது. இதனால், தடுத்திருக்கக்கூடிய பல இழப்புகளை பார்த்து விட்டோம். இது மேலும் நடக்காமல் இருக்க எங்கள் அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று ஒரு மருத்தவமனையை நிறுவுவது என்பது எங்கள் லட்சியம். கடவுள் இதற்கு அருள் புரிய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கென மாநில அளவில் ஒரு கூட்டமைப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன். அதற்கான முதற்கட்ட முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தொடங்கப்பட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தொழில் பயிற்சி வகுப்புகள் (கம்ப்யூட்டர்) தொடங்கலாம் என்று இருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து தொடங்க இருக்கும் இந்த திட்டம், எல்லாம் சரியாக நடந்தால், விரைவில் செயல் படும்.
மனிதருள் மனிதராய் வாழும் ஒரு கடவுள்-சகோதரி. லயோலா
பாதிக்கப்பட்ட நாங்கள், சாந்தி ஆசிரமம், டாக்டர். மகாதேவன், சகோதரி.லயோலா, மங்கை, தன்னல மற்ற சில தொண்டு நிறுவணங்கள், ஒரு குடும்பமாக, புரிதலுடன், ஒத்த சிந்தனையுடன், மன நிறைவுடன் சேர்ந்து பணி புரிகிறோம். எங்களுக்குள் இருக்கும் பல அனுபவங்கள், உணர்வுகள், சாதிக்க வேண்டும் என்ற உந்துதல், எங்களை ஒன்றாக கட்டிப் போட்டிருக்கிறது. விமானம் ஒன்று வந்தால் ஓடி வந்து அண்ணாந்து பார்த்து கூச்சல் போடும் ஒரு சராசரி கிராமத்துப் ( தொண்டாமுத்தூர், கோவை) பெண்ணாக வாழ்ந்தவள் தான் நான். இன்று அதே விமானத்தில் சாதரணமாய் பறந்து கொண்டிருகின்றேன். இதற்கு காரணம், என் நிலையும், அதை உணர்ந்து எனக்கு உதவி செய்யக் காத்துக் கொண்டிருக்கும் சில மனித நேயங்கள். இந்த நம்பிக்கைக்கு நன்றி என்ற ஒரே வார்த்தையில் சொல்லி என்னை அவர்களிடம் இருந்து வேறு படுத்திக் கொள்ள எனக்கோ அவர்களுக்கோ விருப்பம் இல்லை.
மறுமணம் செய்து கொண்ட எங்கள் தோழியும், பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனும்
உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். பாதிக்கப்பட்ட யாரையாவது பார்க்க நேர்ந்தால், நம்பிக்கை கரம் நீட்டுங்கள். அதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையை சொல்லும் வண்ணம் உங்கள் பதிவுகளில் 'ரெட் ரிப்பனை' போட்டு உங்கள் ஆதரவை காட்டுங்கள். இது என் அன்பு வேண்டுகோள். ரெட் ரிப்பனில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். அந்த உணர்வைப் பற்றி எங்களுக்குத் தான் தெரியும்.
நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பதினால், சந்தோஷம் எனக்கும் அக்காவிற்கும். வந்த இடத்தில் தோழி முத்துலெட்சுமியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. சந்தோஷம். உங்களில் சிலரின் பதிவுகளையும் படித்தேன். சிந்திக்க, சிரிக்க, வியக்க, அழ வைத்த எல்லாமே முத்து முத்தான பதிவுகள். இந்த உலகம் என்னை வியக்க வைக்கிறது. வெளி உலகத்தில் இல்லாத ஒரு புரிதலும், உணர்வையும் இங்கே நான் உணர்கிறேன். அசாதாரணமான ஒரு சக்தி உங்களிடம் இருக்கிறது. இதே போல் நீங்கள் என்றும் ஒற்றுமையுடன், உங்கள் எழுத்தின் மூலம் பல நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ஆக்கப் பூர்வமான சில காரியங்களும் செய்யலாமே, செய்வீர்கள் என்ற நம்பிக்கையிடன் விடை பெறுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம். எங்களையெல்லாம் பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் அக்காவிடம் பேச இன்னும் நிறைய இருப்பதினால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
எங்கள் திட்டங்களும், லட்சியமும் நிறைவேற கடவுளின் ஆசியும், உங்கள் வாழ்த்துக்களும் வேண்டி உங்கள் தோழி
மீனாட்சி.
( எங்கள் அமைப்பின் வலைதளம் . இதில் செய்யவேண்டிய சில மாற்றங்கள் பற்றி அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கின்றேன்.)
பொறுமையாக படித்தமைக்கு நன்றி.