Thursday, December 24, 2009

மூன்றே நாட்களில் முடிந்த வழக்கு....நம்புங்கள்


நம் நாட்டில் ஒரு சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள் அந்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், புதிதாகத் தாக்கல் செய்யப்படும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகிறது. இது நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்று கூட சொல்லாம்.

ஆனால் கொல்கத்தா உயர்நீதி மன்றம் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணிக்கு, வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்றே நாட்களில் தீர்ப்பு வழங்கி சாதனை படைத்திருக்கிறது.

பம்பி தாஸ் என்ற பெண்மணி எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். ட்ரான்ஸ்போர்ட் பிஸினஸ் நடத்தி வந்த கணவர் எச்ஐவி நோய்க்கு ஆளாகி 2006 ஆம் ஆண்டு இறந்து போனார். எங்கேயும் நடப்பது போல இவருக்கும் கணவர் வீட்டார் பூரிவீக சொத்தை பிரித்து கொடுக்க மறுக்கவே, பம்பி தாஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

நோயின் தன்மையை கருத்தில் கொண்டு, உயர்நீதி மன்றம் வழக்கு விசாரனையை மூன்றே நாட்களில் முடித்து தீர்ப்பு வழங்கி இருப்பது மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷயம்.

பம்பி தாஸ் நியாயம் கோரி பல பேரிடம் கெஞ்சிப் பார்த்தும் முடியாமல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரின் உடல்நிலையை மனதில் நிறுத்தி, காலதாமதமாக தீர்ப்பு வழங்குவதால் எந்த உபயோகமும் இல்லை என்று மூன்றே நாட்களில் வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.

Wednesday, December 09, 2009

கண்ணா சுகமா கிருஷ்னா சுகமா......

காவியத் தலைவி

தாயில்லாமல் வளரும் ஒரு பெண்ணும்.....தான் தான் தாய் என்பதை சொல்ல முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட தாயும் சேர்ந்து பாடும் பாட்டு...தாயும் மகளுமாக இரு வேடத்தில் செளகார் ஜானகி நடித்த அருமையான ஒரு படத்திலிருந்து.....

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா? என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே சொல் என்றேன் அன்னை முகமோ காண்பது நினமோ
கனவோ நனவோ சொல் என்றேன் கனவோ நனவோ சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? - என் கண்மணி சுகமா? சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Friday, October 16, 2009

Thursday, October 15, 2009

நினைத்தாலே இனிக்கும்...

எத்தன வருஷமானாலும்...எத்தன தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்...



Tuesday, September 15, 2009

இனி விருட்சங்களை மட்டுமே விதைப்போம்....


மனதை மிகவும் பாதித்த ஒரு சம்பவம், பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு...

ஒரு பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் அந்த பெண்மணி என்னை சந்திக்க விரும்பி அழைத்தார். அவரின் நம்பிக்கைக்கு உரித்தான ஒரு பெண் ஊழியருக்கு ஒரு செய்தியை நான் பக்குவமாய் எடுத்துச் சொல்ல உதவ வேண்டுமென கோரினார்.

அந்த பெண் எச்ஐவி வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்...

இருபதுகளின் நடுவில் இருக்கும் அந்த பெண், திருமணமாகி இரண்டே மாதத்தில் கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். சமீபத்தில் அவரின் வயதான மன நலம் குன்றிய தாயாருக்கு மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு எச்.ஐ.வி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவர, அதிர்ச்சியான நிர்வாகம் அவரது தாயாரின் மருத்துவ கோப்புகளை ஆராய்ந்த போது சமீபத்தில் மற்றொரு மருத்துவமனையில் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்திருப்பதும், அப்பொழுது சம்பந்தப்பட்ட பெண் அவர் தாயாருக்கு ரத்தம் கொடுத்திருப்பது தெரியவும், அந்த பெண்ணுக்கும் ரத்தம் பரிசோதிக்கப்பட அவரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தகவல் அவரின் முதலாளிக்குப் போக, மனித நேயம் கொண்ட அந்த பெண் நிர்வாகி எக்காரணம் கொண்டும் தனது நம்பிக்கையான ஊழியர் மனதளவில் பின்னடைந்துவிடக் கூடாது என்கிற அக்கறையினால் அந்த பெண்ணுக்கு விவரம் கூறி உதவ என்னை அழைத்திருக்கிறார். அவரும் நிர்வாகமும் அந்த பெண்ணுக்கு பின்னால் நிற்கிறார்கள் என்பதை நான் அவருக்கு புரியவைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

இதற்கு முன்னர் இத்தகைய பணிகளை பல முறை செய்திருந்தாலும், ஒருவரின் வாழ்க்கையை நிமிடத்தில் புரட்டிப் போடும் ஒரு செய்தியை சொல்வது சுலபமல்லவே... இம்மாதிரியான சந்தர்ப்பங்களை எதிர் கொள்வது, எத்தனை வருடங்களானாலும் கடினமான ஒன்றே. அன்றைக்கும் அப்படியே....

செய்தியின் அதிர்ச்சியில் நொறுங்கிப் போன அந்த பெண் வாய்விட்டு அழத்துவங்கினாள், அழுது ஓயட்டும் என பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டுமாத திருமண பரிசுதான் இந்த பாதிப்புக்கு காரணமெனெ தெரிந்தது. அந்த பையனைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென இவளின் தாயார் ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்திருக்கிறார். உறவின் போது கணவனின் ஆணுறுப்பில் சீழ் வடியும் புண்கள் இருந்திருக்கிறது. அவன் விலைமாதர்களிடன் சென்றிருப்பதாகவும் கூறியிறுக்கிறான். உறவுக்கு விருப்பமில்லாவிட்டாலும், தன்னை சந்தேகப் படுவானோ என்கிற தயக்கத்தில் உறவுக்கு சம்மதித்திருக்கிறாள். இதை எப்படி வெளியே சொல்வது என்கிற பயம். இது நம் பெண்கள், படித்தவர்களானாலும் படிக்காதவர்களானாலும், முடிவெடுப்பதில் தயக்கமே காட்டுகிறார்கள். சிறு வயதில் இருந்து நம் பெண்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு மன பக்குவதை இயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம்ம்


விருப்பமில்லாத அல்லது பொறுத்தமில்லாத இந்த திருமண உறவு இரண்டே மாதத்தில் அறுந்து போனதில், தவறான முடிவெடுத்துவிட்ட குற்ற உணர்ச்சியில் மனதொடிந்த அந்த பெண்ணின் தாயார் மனநோயாளியானதுதான் மிச்சம். அந்த பெண்ணின் சகோதரர்கள் கடமை முடிந்தால் சரி என ஒதிஙகிக்கொண்டிருக்க வேண்டும். ஒரே ஒரு சகோதரியும் அவளின் கணவர் மட்டுமெ இந்த பெண்ணிற்கு ஆதரவு. இதுதான் தற்போதைய நிலமை.

இயலாமையின் உச்சத்தில் வாய்விட்டு அழும் அந்த பெண்ணிற்கு முன்னால் ஆத்திரம், ஆதங்கம் இத்தோடு இயலாமையுடன், உட்கார்ந்திருந்தேன். வாழ வேண்டிய வயதில் ஒரு பெண்ணின் வாழ்க்கை தகர்க்கப் பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், தான் நினைத்த பையனை ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்த தாயா? , கணவணின் உடலுறுப்பில் நோய் தாக்கியிருப்பது தெரிந்தும் விருப்பமில்லாமல் ஆனால் சமூகத்துக்குப் பயந்து உறவுக்கு ஒத்துக்கொண்ட அந்த பெண்ணின் இயலாமையா? கூடப்பிறந்தவளுக்கு பிரச்சினையென்றதும், அவளை தாங்கும் சுமை தங்கள் தலையில் விழுமென சுதாரித்துக் கொண்டு நழுவிய உடன் பிறந்தாரா ?

அழுது ஓய்ந்த பின்னர், மெதுவாக அவளை தேற்றும் பணியினை ஆரம்பித்தேன், வாழ்க்கை குறித்த பார்வைகள் அல்லது வரையறைகளை நாம்தான் வகுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய மற்றவர்களின் கோணத்தில் வாழ்க்கையை வாழ்வதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதை புரியவைக்க முயற்சித்தேன். இது எல்லாம் சொல்வது சுலபம் என்பதையும் நான் அறிவேன். நேற்று வரை வாழ்க்கை என்பது இது தான் என்ற கண்ணோட்டத்தில் வாழ்ந்து வந்த பெண்ணிடம் இந்த வசனங்களை பேசினால் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்லவே.

அவள் இருக்கும் சூழலில் தனக்கு உகந்த வாழ்க்கை இலக்குகளை வகுத்துக் கொள்வதன் அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் பேசப் பேச சிறிது சிந்திக்க தொடங்கினாள்.

பாதிப்பின் எந்த கட்டத்திலிருக்கிறாள் என்பதை கண்டறிவதும், அதன் தொடர்ச்சியாய் எடுத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை விளக்கிய பின்னர், அவளின் நிர்வாகியும், நிர்வாகமும் அவளுக்கு துணையாய் நிற்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அவளுக்கு மறு திருமணத்திற்கு அவளது சகோதரி ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும், திருமணம் செய்யலாமா எனவும் கேட்டாள். உன் நிலமை அறிந்து உன்னை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என சொன்னேன்...எல்லாம் பேசி ஓரளவிற்கு நிஜங்களை ஜீரணிக்கும் மனபக்குவத்திற்கு வந்த பின் நாங்கள் விடைபெறும் தருணத்தில் அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை......

நான் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா ?

ஆவளுள் புதைந்திருக்கும் தாய்மை உணர்வை புரிந்து கொண்டேன். அதை அவளிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, குழந்தை பிறந்தால் வரும் பாதகங்களையும் எடுத்துச் சொன்னேன். அவளே சிந்தித்து முடிவெடுக்கட்டும் என்று விட்டு விட்டேன். ஆலோசனை என்றும் வழிகாட்டுதலாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களுக்கு பதில் நாம் முடிவெடுக்க கூடாது. இது எதற்கென்றால் இது மாதிரியான மற்றொரு சந்தர்பத்தில் அவர்கள் முடிவெடுக்க தயங்கக் கூடாது.

பெண் தன் குடும்ப மற்றும் சமுதாயத்திற்காக தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறாள். சில நிர்பந்தங்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன. இது போன்ற நிர்பந்தகளுக்கு பணியாமல், மற்றவர்களிடம் கலந்தாலோசித்து பயப்படாமல் ஒரு தீர்வை காணவேண்டும். இந்த மன உறுதியை சிறு வயதிலிருந்தே பெண்களுக்குள் வளர்த்த வேண்டும்.

Monday, June 15, 2009

ஹானர் கில்லிங்-கெளரவக் கொலைகள்


ஐக்கிய நாடுகள் சபைகளின் ஆய்வுகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 5000 பெண்கள், கெளரவக் கொலைகள் என்ற பெயரில் உறவினர்களால் கொல்லப் பட்டு வருகிறார்கள். இது போன்ற கொலைகள் இஸ்லாமிய நாடுகளில் தான் நடத்தப் பட்டு வருவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வட இந்திய கிராமங்களில் இன்றும் இது நடந்து கொண்டு தானிருக்கிறது.

பரம்பரையாக கட்டி காத்து வரும் மானத்திற்கு, மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தினால் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'கெளரவக் கொலையை' செய்து அந்த 'கலங்கத்தை' சரி செய்ய இது போல செயல்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்துவிட்டாலோ, அல்லது ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டாலோ அந்தப் பெண் உறவினர்களாலேயே கொலை செய்யப்படுவது தான் 'ஹானர் கில்லிங்'.தாங்கள் சேர்ந்த இனத்திற்கு அவமானத்தை உண்டு பண்ணிய பெண்ணை கொல்வது அவளுக்கும், இனத்திற்கும் கெளரவம் என்பது இவர்கள் வாதம்.

இது போல மனித உரிமை அத்து மீறல்கள், ஜாதி மத கோட்பாடுகளை காரணம் காட்டி இன்றும் வட இந்திய கிராமங்களில் வெகுசாதாரணமாக நடந்து வருகிறது. நம் சமூகம் தொடர்ந்து பரிணமித்து வந்தாலும் இன்றும் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை தக்க வைத்துக்கொண்டு, கெளரவத்தை கலாச்சாரத்தை நிலை நாட்டுகிறோம் பேர்வழி என காட்டு மிராண்டிதனமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே. இது போன்ற ஜாதி வெறி பிடித்த கலாச்சார காவலர்கள் சிலரின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் இருக்குமெனில் அவள் வாழ இந்த சமூகம் அவளுக்கு உரிமை அளிக்கிறது. அப்படி அவள் நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் அவளைக் கொலை செய்ய இந்த சமூகத்திற்கு அதிகாரம் உண்டு போன்ற ஒரு எண்ணத்தை இந்தக் கொலைகள் நம்முள்ளே எற்படுத்துகிறது.

இவர்கள் பார்வையில் இப்படி ' முறை தவறிய' பெண்ணிற்கு, தண்டனையாக அவளை அந்த கிராமத்து 'பெரியவர்கள்' வன்புணர்வதும் உண்டு. அதுவும் அங்கீகாரத்துடன். பல பெண்ணுரிமை போராளிகள் கேட்டுக்கொண்டும் இதுவரை அதனைத் தடுக்கும் சட்டம் வரவில்லை.

இதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், சம்பந்தப் பட்ட ஆணும் பல சமயங்களில் தண்டனையிலிருந்து தப்ப முடிவதில்லை. நோய்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில் காதலித்த ஆணும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கில், ஹரியானா, உத்திரபிரதேசம், பஞ்சாப், பீஹார் போன்ற மாநிலங்கலில் இது போன்ற கொலைகள் நடந்து வருகிறது. பீஹார் மாநிலத்தில் பகல்பூர் கிராமம் தான் இதில் முன்னோடி. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாவட்டமான பகல்பூரில் எல்லாவிதமான மனித உரிமை அத்துமீறல்களும் சாதாரணமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லாத ஒரு மாவட்டம்.

சமீபத்தில், கூலித்தொழிலாளியான ரத்தன் மண்டலுக்கும், கஞ்சன்குமாரி என்ற 18 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கஞ்சன் குமாரி பணக்காரப் பெண். அந்தக் கிராமத்தின் இரு வேறு கோஷ்டியை சேர்ந்த இவர்கள் ஊரை விட்டு ஓடி விட்டதால் பெண் வீட்டார், பையனின் குடும்பத்தை சேர்ந்த 8 பேரின் தலையை வெட்டி ஆற்றில் வீசி விட்டனர். இதில் காதலித்தவர்கள் தப்பித்துவிட்டார்கள்.

இந்தக் கொலைகளை சட்டத்தால் கூட தண்டிக்க முடிவதில்லை. பெரும்பாலும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, இந்தக் கொலைகள் தற்கொலைகளாக காட்டப் பட்டு வருகிறது. இதை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளுக்குள்ளும் அதே வெறி இருப்பதால், இந்தக் கொலைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. சிலர் வெளியே வந்து தைரியமாக தாங்கள் இந்தக் காரணத்திற்காகத்தான் இதை செய்தோம் என்று சரண் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் உதவியுடன் வெகு சுலபமாக குறைந்தபட்ச தண்டனையுடனோ, அல்லது அதுவும் இல்லாமலோ தப்பித்து விடுகிறார்கள். இந்தக் கொலைகளைத் தடுக்க இதுவரை எந்த சட்டத்தையும் உருவாக்க முடியவில்லை.

ஜூலை 2006 ல் நடந்த ஒரு வழக்கில், உச்ச நீதி மன்றம் இது போன்ற கெளரவக் கொலைகள் கண்டனத்துக்கு உரியவை என்றும் நாடு முழுதும் இருக்கும் காவல் துறை அதிகாரிகள், இது போன்ற கொலைகள் தெரிய வந்தால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் இது எந்த வித பாதிப்பையும் இது வரை ஏற்படுத்த வில்லை என்பது தான் உண்மை.

மதத்தையும் கலாச்சாரத்தையும் காரணம் காட்டி பெண்களை கெளரவக் கொலைகள் என்ற பெயரில் தண்டிப்பது காட்டுமிராண்டித்தனம். கலாச்சாரம் என்பதை இருக்கமான ஒரு கட்டமைப்பாகக் கொள்ளாமல், அதையே கொஞ்சம் தளர்த்திக் கொண்டு சகிப்புத்தன்மை, சகோரத்துவம் போன்ற நன்னெறிகளை வளர்க்க பயன்படுத்தவேண்டும். கலப்புத்திருமணங்கள் இதற்கு வழி வகுக்கும். காலத்திற்கு ஏற்ப, தேவைகளுக்கு ஏற்ப கலாச்சார மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். மற்றவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாத வரை, தன் எல்லையை நிர்ணயித்து போகும் வரை அது தவறில்லை.

எந்த ஒரு கலாச்சாரத்திற்கும் ஒரு பெண்ணை அவள் நடத்தையை முன்னிருத்தி தண்டிக்கும் உரிமை இல்லை.கலாச்சாரத்தையும் மதத்தையும் நலிந்தவருக்கெதிரான குற்றங்கள் புரிய எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த கெளரவக் கொலைகளே எடுத்துக் காட்டு.

இந்த கொலைகளினூடாக, இந்த உலகில் பிறந்த ஒரு மனிதனின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதாகிறது. தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. வன்முறைக்கு எதிரான சட்டம் எதுவும் இவர்கள் துணைக்கு வருவதில்லை. வன்முறைக்கு எதிரான சட்டத்திலுருந்து இவர்களை தப்பிக்க வைக்கும் வரை, கலாச்சாரத்தையும் மதக்கோட்பாடுகளையும் காரணம் காட்டி நடத்தப்படும் வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கும்.

Tuesday, June 09, 2009

கரன் / கிரன் ஏழைத் திருடர்கள்

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆச்சு.

நான் பணி புரிந்து வந்த கல்லூரியில, ஒரு திங்கள் காலையில எங்கள் துறையில ஜன்னல் எல்லாம் உடைஞ்சு, அலுவலகமே தலைகீழா இருந்துச்சு. ஆனா கதவு மட்டும் மூடினது மூடின படி இருக்கு. கணினி சி பி யூ பிரிஞ்சு கிடந்துச்சு. அதிர்ச்சியுடன் என்னன்னு போய் பார்த்தா 5 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு. கணினியின் மற்ற பாகங்கள் எல்லாம் அப்படியே இருக்கு. ஜன்னல் கம்பிகளை உடைச்சு ஹார்ட் டிஸ்க் மட்டும் எடுத்துட்டு போயிட்டாங்க.

திருட வந்தவன் திருடினது மட்டுமல்லாமல், மேஜை மேல் இருக்கும் ஃபைல், பேப்பர் எல்லாம் பார்த்து இருக்கிறான். இங்க தான் திருடனின் நகைச்சுவை உணர்ச்சியை பாராட்டனும். திருடு போனது சனிக்கிழமை. வெள்ளிக்கிழமை, எங்கள் நிறுவனம் நடந்தி வரும் இலவச பெண் கல்வி திட்டத்திற்கு நன்கொடை அளித்தவர்களுக்கு அனுப்ப " தேங்ஸ் லெட்டர்" ஆங்கிலத்துல டைப் பண்ணி, துறைத்தலைவரின் கை எழுத்திற்காக மேஜை மேல் வச்சிறுந்தோம். அந்த லெட்டர்ல நன்கொடை அளித்தவர்கள் எந்த குழந்தைக்கு ஸ்பான்சர் பண்றாங்கன்னு விவரம் இருக்கும். கரன் மற்றும் கிரன் என்ற இரு ஏழை குழந்தைகளின் விவரம் அடங்கிய லெட்டர் மேலால இருந்துச்சு. அதில் அவர்களின் ஏழ்மை நிலவரத்தை படிச்சு தெரிஞ்சுட்டான். ஆங்கிலம் தெரிந்த திருடன். மேஜை டிராயரில் இருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து (லிப்ஸ்டிக் பற்றிய கேள்வி எல்லாம் கேட்க கூடாது சொல்லிட்டேன்) சுவற்றில் "கரன் அவுர் கிரன், கரீப் ச்சோர் " ( கரன் மற்றும் கிரன், ஏழைத் திருடர்கள்) னு கொட்டை எழுத்தில் எழுதி, ஒரு பெரிய ஸ்மைலியும் போட்டுட்டு போயிட்டாங்க. பக்கத்துல இருந்த ஃபிரிட்ஜ்ல இருந்து கூல் ட்ரிங்கஸ் எல்லாம் காலி பண்ணி, ரிலாக்ஸ்டா இருந்துட்டு போயிருக்காங்க.

எல்லா இடத்துலே இருக்குற மாதிரி இங்கேயும் நிறுவனத்து மேலே அன்பு, அக்கறை, பாசம், கோவம், நக்கல் எல்லாம் இருக்கு. அது இந்த மாதிரி நேரத்துல தானே பொங்கி வெளியே வரும். அதுலேயும் கரீப் சோர் மேட்டரை படிச்சதும் யாருக்கும் சிரிப்பை அடக்க முடியலை. ஹார்ட் டிஸ்க் போன சோகம் போயே போச். அப்படி ஒரு இளிப்பு.

துறைத் தலைவர் ரிடயர்ட் மேஜர் ஜெனரல்...கையில் விலை உயர்ந்த ஒரு வாக்கிங் ஸ்டிக்குடன் சினிமாவில் வரும் பணக்கார அப்பா மாதிரி எப்பவும் மிடுக்காக இருப்பார். விஷயம் கேள்விபட்டு, எல்லோரையும் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வர சொன்னார். ஹாலுக்குள்ள போறதுக்கே பயம். அவருக்கு முன்னாடி சிரிச்சுட்டா என்ன பண்ணன்னு பயம்.

கல்லூரியில ஒரு துப்பறியும் துறைனே ஒன்னு இருக்கு. அதுக்கு ஹுக்கும் சிங் என்பவர் தான் தலைவர். விஷயம் தெரிவிக்கப்பட்டு ஹுக்கும் சிங் வந்தார். முதல் சந்தேகம் எங்க மேலயாம். அதுனால எங்க கை ரேகை எல்லாம் எடுத்து எங்களை விசாரிச்சாங்க. அப்புறம் கை எழுத்து மேட்ச் பண்ணலாமுன்னு முடிவு பண்ணி எல்லார்த்தையும் ஹிந்தில கரன் அவுர் கிரன் கரீப் ச்சோர் னு எழுத சொன்னாங்க. அப்படியே எங்க பேரையும் ஹிந்தில எழுதுனமாம். நமக்கு தான் ஹிந்தி எழுத படிக்க தெரியாதே, அதுனால பந்தாவா கைய கட்டி பேசாம நின்னுட்டு இருந்தேன்.

'ஏன் நீ எழுதலையா' னு கேட்டார் துறைத்தலைவர்.

'சார் எனக்கு ஹிந்தி எழுத தெரியாது' னு சொன்னேன்.

அதுக்கு ஹுக்கும் சிங், "கரெக்ட்!!!.. சுவற்றில எழுதின கை எழுத்து கூட எழுத படிக்க தெரியாதவன் எழுதின மாதிரி தான் இருக்கு. அதுனால பேட்டி ( ஹிந்தி பேட்டி..அதாவது மகளே- இது வேற) நீ தான் கண்டிப்பா எழுதனும்" னார். இன்டர்போல்ல இருக்க வேண்டியவுங்க இப்படி இங்க வந்து மாட்டிட்டாங்களேன்னு நொந்துட்டு எரிச்சலுடன் சிரிப்பையும் அடக்க முடியாமல் உட்கார்ந்தேன்.

துனை துறைத் தலைவர், "பரவாயில்லைம்மா, உனக்கு ஹிந்தி தெரியாட்டி அதை ஆங்கிலத்துல எழுது" ன்னு ரொம்பபப புத்திசாலித்தனமா சொன்னார். மீண்டும் மீண்டும் சிரிப்பு. மறுபடியும் எல்லாரும் பலமா சிரிச்சுட்டாங்க. ஏன்யா கையெழுத்து மேட்ச் பண்றதுக்கு தானே எழுத சொல்றீங்க, அப்புறம் அதை நான் ஆங்கிலத்துல எழுதி என்ன ஆக போகுதுன்னேன். ஓ அப்படி வேற ஒன்னு இருக்கோ... சரி அப்போ உனக்கு எப்படி வருதோ அப்படி எழுது ன்னு சொன்னார்.

நான் என் பேரை தமிழ்ல எழுதி கொடுத்தேன். :-).. what is this rubbish னு கத்தல்... எனக்கு வந்ததே கோபம்.. சார் திருடனை பிடிக்க வக்கில்லை..நாங்க தான் ஜன்னலை உடச்சிட்டு வந்து எடுக்கறமா...does it make any sense? னு எல்லாரும் பிடிச்சிட்டோம்.

அலுவலக நண்பன் ஒருவன் ஹுக்கும் சிங் தோள்ல கைபோட்டு அந்தப் பக்கம் கூப்டுட்டு போய் 'சார் இப்படி செய்தா என்ன, லிப்ஸ்டிக்ல தானே எழுதி இருக்கு யாரோட லிப்ஸ்டிக்குன்னு பார்த்துடலாமே' னு சொல்ல அவர் பாவம் 'ஐயா தம்பிகளா கொஞ்சம் எல்லாரும் போங்க' னு அழ ஆரம்பிச்சுட்டார்.

இன்னொருத்தன் சார் இந்த துப்பறியும் துறைக்கு ஏதாவது வேலை கொடுக்கனும்னு இந்த மாதிரி நீங்களே செய்துட்டீங்களான்னு துறைத் தலைவரை கேட்க, அவருக்கு டென்ஷன் ஆயிடுச்சு. சேர்மன்க்கு என்ன பதில் சொல்றதுன்னு அவருக்கு கவலை. "எல்லாரும் வீட்டுக்கு போங்க...leave me alone." அப்புறம் என்ன...கரன் அண்ட் கிரன் புண்ணியத்துல ஒரு நாள் ஜாலியா ஊர் சுத்தீட்டு வீட்டுக்கு போனோம்.

அதுக்கு அப்புறம் 8 எல் சி டி காணாம போச்சு. ஆனா நம்ம இன்டெர்போல் ஹுக்கும் சிங் மூச்சு விடலை. எங்களைப் பார்த்தாலே தலைய தொங்கப் போட்டுட்டு போயிடுவார்.

Monday, May 25, 2009

ROCK ONNNNNN.............

என்னுடைய 23வது வயது வரை சினிமா இல்லாத சனிக்கிழமையை நினைத்துக் கூட பார்த்தது இல்லை, ஏன் இரண்டு படங்கள் கூட பார்த்து உண்டு. யார் கண் வைச்சாங்களோ.. அதுக்கு அப்புறம் இந்த 19 வருசத்துல மொத்தம் நான் பார்த்த படங்களே 4 அல்லது 5. அதுவும் கடைசியா நான் எப்போ தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன்னு எனக்கே நினைவில்லை.

இன்னைக்கு என் பழைய அலுவலக நண்பனும் அவன் அம்மாவும், சொல்லாமல் கொள்ளாமல் ஒரு தியேட்டருக்கு கடத்தீட்டு போனாங்க...சினிமானு சொன்னா நான் வரமாட்டேனு..ஷாப்பிங்க போலாம்னு பொய் சொல்லி...'ராக் ஆன்' என்ற இந்தி படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து அழைச்சுட்டு போனாங்க. தியேட்டர் காலியா இருந்துச்சு..இதுக்கு எதுக்கு ரிசர்வ் பண்ணாங்கன்னு தெரியலை... தி்யேட்டர்ல 2 1/2 மணி நேரம் உட்காருவதே கஷ்டம்...அதுவும் கூட்டமே இல்லாத படத்துக்கு கூப்டுட்டு வந்து இம்சை பண்றாங்களேனு எரிச்சல்... தியேட்டரில் ஜில்லுனு ஏசி...உள்ளே நுழைஞ்ச உடனே, மனதில் ஏதோ ஒரு குதூகலம்....அந்த சூழல்.... ட்ஜிட்டல் சவுண்ட்...படம் பார்க்க வந்திருந்த காதல் ஜோடிகளின் சிரிப்பு, கல்லூரி மாணவர்களின் கலாட்டா மனசுக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது.

பழைய நினைவுகள், தோழிகளுடன் கோவை கே ஜி தியேட்டரில் கூத்தடித்த நாட்கள் சட்டென்று கண் முன்னே நடனம் ஆடின. சனிக்கிழமை காலைக்காட்சி அல்லது மதியம் கண்டிப்பாக அங்கிருப்போம். ஸ்டடி ஹாலிடேஸ்களில்,எங்கள் க்ரூப் ஸ்டடி பெரும்பாலும் கே ஜி தியேட்டரில் தான். டிக்கெட் இல்லாமல் திரும்பின நாட்களே இருக்காது. யாரையாவது பிடித்து படத்தை பார்த்துவிட்டு தான் வருவது. என்னை தவிர தோழிகள் எல்லோரும் தீவிர ரஜினி ரசிகைகள்...ரஜினி படத்தை ஓபனிங் ஷோ பார்ப்போம்னா...நாங்க அடிச்ச கூத்த கொஞ்சம் நினைச்சு பாருங்க...அது எல்லாம் ஒரு காலம்...ஹ்ம்ம்ம்ம்...

சரி Rock On..படத்தைப் பற்றி கொஞ்சம் பார்போம்...2008 ல் வெளிவந்த படம்...இப்படத்தின் தயாரிப்பாளர் 'தில் சாத்தா ஹை' புகழ் ஃபர்ஹான் அக்தர்.இவர் ஜாவேட் அக்தரின் (ஷபனா ஆஸ்மியின் கணவர்) முதல் மனைவியின் மகன். படத்தை இயக்கியவர் அபிஷேக் கபூர். பல விருதுகளைப் பெற்ற படம்.

ஏற்கனவே என் மனதில் ஓடிக்கொண்டிருந்த நினைவுகளுக்கு தீனி போட்டது படம். நம் சிறு வயது ஆசா பாசங்களை, சில காரணங்களினால் காலப்போக்கில் நாம் எவ்வாறு மறந்து போகிறோம் என்பது தான் கரு. நமக்கு நாமே சமாதானங்கள் கற்பித்துக்கொண்டு, காரணங்களை பட்டிலிட்டுக் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் போய் ஏற்றுக் கொள்கிறோம். இது ஒரு வகையில் நல்லதாக பட்டாலும், இன்று எனக்கு அமைந்தது போன்ற ஒரு நாளில்,ஒரு அனுபவத்தில், பழைய வாழ்க்கைக்கு மனது ஏங்காமல் இருப்பதில்லை. பெரிதாக ஏதும் இழக்கவில்லை என்றாலும், அந்த நினைவுகளுக்கு ஈடாக வேறு ஏதும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?....ம்ம்ம்ம்


படத்தில் நான்கு நண்பர்கள் ஆதித்யா (ஃபர்ஹான் அக்தர்), ஜோ (அர்ஜுன் ராம்பால்) ராப் மற்றும் கே.டி, மேஜிக் என்ற ராக் இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். திறமை இருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு போட்டியில் ஜெயித்து, அதன் பரிசாக நல்லதொரு வாய்ப்பு அமையும் பொழுது, ஆதிக்கும் ஜோவிற்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து நண்பர்கள் பிரிந்து விடுகிறார்கள். பத்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன.

ஆதி பெரும் பணக்காரனாகி விடுகிறான். அவனுக்கு தன் அலுவலக பணிகளைத் தவிர வேறொன்றும் பெரிதில்லை. சிரிப்பதை கூட மறந்து, மனைவி சாக்ஷியிடம் கூட தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல், இயந்திரத்தனமான வாழ்க்கயை வாழ்ந்து வருகிறான்.

ஜோ இசையை தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியாமல், வாழ்க்கையை வறுமையில் கழிக்கிறான். தன் குடும்ப தொழிலான மீன் வியாபரத்தை அவன் மனைவி கவனித்துக் கொள்கிறாள்.



அர்ஜுன் ராம்பால்


கேடி தன் தந்தையின் ஷோரூமை அக்கறை இல்லாமல் நிர்வாகம் செய்கிறான். ராப் மட்டும் சில விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

ஆதியின் மனைவிக்கு தன் கணவன் வாழ்க்கையில் எதையோ பரிகொடுத்தவனைப் போல இருப்பதாக படுகிறது. ஏதோச்சையாக அவள் கணவனின் இசை ஆர்வமும், அவனின் கடந்த கால வாழ்க்கையும் தெரிய வருகிறது. இசையை இப்படி வெறித்தனமாக ரசித்தவனா இன்று ஒரு ஜடம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று ஆச்சிரியப்படுகிறாள்.அவளின் முயற்சியால், ஆதிக்கு விருப்பம் இல்லாவிடினும், ஒரு சந்தர்பத்தில் மனம் மாறி, சில பல சம்பவங்களுக்குப் பின்னர் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.

பிரிந்த நண்பர்கள், 10 வருடங்கள் கழித்து ஒன்று சேரும் பொழுது அவர்களின் தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கூட படத்தில் ஆழமாக சித்தரிக்கப்ப
ட்டிருக்கிறது. 20 களில் நீண்ட கூந்தலுடன் இருந்த நண்பர்கள், இப்பொழுது ஜோவைத் தவிர மற்றவர்கள் ட்ரிம் செய்து கொள்கிறார்கள். ஜோ காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதை இது காட்டுகிறது. ராப்புக்கு தலை முடி வெகுவாக குறைந்திருப்பதை நண்பர்கள் கேலி செய்கிறார்கள். அதற்கு ராப், இப்போது இது தானே ஃபேஷன் என்று கூறி சிரிக்கிறான். வயதாகி விட்டது, முடி கொட்டிவிட்டது என்று ஒத்துக் கொள் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் முடி கொட்டுதல் வயதினால் அல்ல,புற்று நோய்க்கு அவன் எடுத்துக் கொண்டிருக்கும் கீமோ தெரபியினால் என்று பின்னர் தான் தெரியவருகிறது. அவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கொண்ட பின் இரண்டு மாதங்களில் ராப் இறந்து விடுகிறான். ஆதிக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு ராப் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மீண்டும் தங்கள் உயிரான இசையை வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கிறார்கள்.

சாதாரண கதை, ஆனால் அது சொல்லப்பட்டிருக்கும் விதம், அசத்தல். நடித்த ஒவ்வொரு நடிகரும் உணர்வு
ப் பூர்வமாக நடித்திருக்கிறார்கள். ஜோவாக நடித்த அர்ஜூன் ராம்பால்...ஆதியாக நடித்த ஃபரான் அக்தர்...நம் நடிகர்கள் இவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம். தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்தின் தன்மையை நன்றாக உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இதில் நடித்த நான்கு நடிகர்களுமே திறமையாக நடித்திருக்கிறார்கள். ஆதியின் மனைவியாக நடித்த ப்ரச்சி தேசாய், தன் சிறிய புன் சிரிப்பிலேயே அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டிவிடுகிறார்.

என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோவின்
மனைவியாக நடித்த சஹானா
கோஸ்வாமி. நசிருதீன் ஷா முதன்
முதலில் இயக்கிய படத்தில் அறிமுகமானவர். சர்வ சாதாரணமாக அலட்டல் இல்லாமல் நடித்து, கதாபாத்திரத்தின் உணர்வுகளை கலக்கலாக வெளிப்படுத்துகிறார்.

ஆதியின் மனைவி எடுக்கும் முயற்சி அவனுக்கு பிடிக்காமல் போகவே அவளை கடிந்து கொள்கிறான். பிரிந்து போன மனைவி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று மனைவியின் தோழியிடம் சொல்கிறான். அவள், அவன் மனைவி அவனின் சந்தோஷத்திற்காகவே செய்ததாக சொல்லும்போது, ஆதி சொல்கிறான்' எனக்கு யாரையும் சந்திப்பதில் விருப்பமில்லை...இன்னும் எத்தனை நாட்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வுகள் என் பின்னால் ஓடி வரும்' என்று கேட்கிறான், அதற்கு தோழி ''நீ அதைக் கண்டு ஓடும் வரை" என்கிறாள்.


நன்றாக எடுக்கப் பட்டிருக்கும் ஒரு படம். கண்டிப்பாக சிடி வாங்கி பாருங்கள்.

Monday, May 18, 2009

ஜெர்சி கர்ல்- Jersy Girl-திரைப்பார்வை


ஜெர்சி கர்ல்... திரைப்பட விமர்சகர்களால் பல் வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.

ஊடகத்துறையில் பிரபலமானஆலிவர் ட்விங்கி் (Ben Affleck) மனைவியை இழந்தவர்.
குழந்தை பேற்றின்போது மனைவி இறந்து விடுகிறார். மனைவி இழந்த துக்கத்தை மறக்க தன் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். பிறந்த குழந்தையின் மேலும் அக்கறையில்லை. ஆலிவரின் தந்தை ஊரில் இருந்து வந்து குழந்தையை பார்த்துக் கொள்கிறார். மகனின் இந்தப் போக்கை திருத்த நினைத்து, ஒரு நாள் தன் ஊருக்கு கிளம்பிவிடுகிறார். மனைவியை இழந்த துக்கம் ஒரு பக்கம் அழுது கொண்டே இருக்கும் குழந்தை ஒரு(மறு) பக்கம், இதனால் மிகுந்த மன அழுத்தம் அடைந்து அடுத்த நாள் பணி செய்யும் இடத்தில் பிரபல நடிகர் வில் ஸ்மித்தை அறைந்து விடுகிறார். அனைவருக்கும் எதிரில் இது நடந்ததால், வேலையை இழக்க நேரிடுகிறது. அதுமட்டுமில்லாமல் அனைத்து நிறுவனங்களும் இவரை பிளேக் லிஸ்ட் செய்து விடுகிறது. இதனால் ஆலிவரின் தந்தை இருக்குமிடமான நீயூ ஜெர்ஸ்சிக்கே குழந்தையுடன் சென்று விடுகிறார். குழந்தையை பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவதுடன் அதை முழுமனதுடன் நேர்த்தியாக செய்து வருகிறார்.

எவரும் அவருக்கு ஏற்ற வேலையை கொடுக்காத நிலையில், ஒரு அரசு நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். ஒரு நல்ல தந்தையாக இருப்பதை மட்டுமே மனதில் கொண்டு வேறு பெண்களை மனதிலும் நினைக்காமல், மனைவியின் நினைவுகளுனூடேயே 7 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில் அருகில் இருக்கும் ஒரு வீடியோ/சீடி கடை
யில் பணி புரியும் ஒரு பெண் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல தோழியாக இருந்து வருகிறார்.

ஒரு பொதுப்பணியில் சிலருக்கு ஆதரவாக பேசி அவர்களுக்கு நியாயம் வாங்கி கொடுத்த பின், தன் கடந்தகால பணி அவருக்கு நினைவு வருகிறது. மீண்டும் நீயூயார்க் நகரம் செல்ல முயற்சி செய்கிறார். பழைய நண்பர் ஒருவர் மூலம் ஒரு நிறுவனத்திடம் நேர்காணலுக்கான தேதியை குறிக்கிறார். இது தந்தைக்கோ, மகளுக்கோ தோழிக்கோ யாருக்கும் பிடிக்கவில்லை. நியூஜெர்சியை விட்டு போக மகளுக்கு விருப்பமில்லை. நேர்கானலுக்கு செல்ல வேண்டிய அதே நாளில் தான் பள்ளியில் குழந்தையுடன் ஒரு போட்டியில் தானும் பங்கேர்க்க வேண்டும். இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் குழந்தை அழுகிறாள். விவாதத்தில் உணர்ச்சிவசப்பட்டு, கோவத்தில், உன்னாலும் உன் அம்மாவாலும் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று கூறிவிடுகிறார்.

இந்த வார்த்தைகளை எதிர்பாக்காத குழந்தை அழுதபடி தன் அறைக்குள் சென்றுவிடுகிறாள். அடுத்த நாள் தன் தவறை உணர்ந்து குழந்தையிடம் மன்னிப்பு கேட்கும் இடத்தில் அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்குகிறது. தொழிலின் மேல் தந்தைக்கு இருக்கும் ஆர்வத்தினாலேயே அப்படி நடந்து கொண்டார் என்பதை உணர்ந்து, நியூயார்க் செல்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறாள்.

நியூயார்க் நகரில் நேர்காணலுக்காக காத்துக்கொண்டிருக்கும் போது 7 ஆண்டுகளுக்கு முன் இவர் அறைந்த வில் ஸ்மித்தை சந்திக்கிறார். ஆனால் வில் ஸ்மித்திற்கு இவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. பேச்சு குழந்தை குடும்பம் என்று செல்கிறது. இந்த உரையாடலில் குழந்தையின் மகிழ்ச்சியை விட இந்த உலகத்தில் வேறொன்றும் பெரிதில்லை என்று நம்புகிறார்.

உடனே
நேர்காணலை புறக்கணித்துவிட்டு தன் குழந்தையுடன் பள்ளியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரைகிறார். கடைசி நிமிடத்தில் மேடையில் தோன்றி குழந்தையை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்.

போட்டியில் வெற்றி பெற்ற பின் குழந்தை, தாத்தாவுடனே இருக்கப்போகிறோமா என்று கேட்க, ஆலிவரும் ஆமாம் என்கிறார்.

மகள்- " உனக்கு அந்த வேலை அவ்வளவு பிடித்தமான ஒன்றென்றால் அதை ஏன் ஏற்கவில்லை'.

ஆலிவர்-
எனக்கு அந்த வேலை பிடித்தமானது தான்.. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் வாழ்க்கையில் உனக்கு அப்பாவாக இருப்பதில் மட்டும் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்"

ஆலிவரின் இந்த பதில் தான் எனக்கு இந்த பதிவை எழுத தூண்டியது.


நியூயார்க் நகருக்கு தான் செல்லுவதாக மகன் கூறியதும்..தானும் அவர்கள் கூட வருவதாக ஆலிவரின் தந்தை கூறுவார். அந்த உரையாடல்..............

ஆலிவர்-அப்பா நீங்க கடைசி காலத்தில் தனியாக இருக்க விரும்பவீ்ங்கன்னு நினச்சேன்.

அப்பா - இருக்கலாம், அதே சமயம் நான் தனியாக சாக விரும்பவில்லை

Tuesday, April 14, 2009

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்



அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே


ஒற்றுமையும் அன்பும் தழைத்து

கருணை, சகோரத்துவம் ஆகிய நற்பண்புகள் பெற்று

புத்துணர்வோடும் புதுப்பொலிவோடும் இனிதே வாழ

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என் அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு இனிய

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, April 13, 2009

ஏன் இப்படி இருக்க கூடாது?......

தொடர்ந்து ஒரே மாதிரி என் துறை சார்ந்த விஷயத்தை மட்டுமே எழுதறேன்னு ஒரு எண்ணம். அதனால ஒரு மாறுதலுக்காக வேற ஏதாவது எழுதலாம்னு ஒரு ஆசை.

தமிழ் வலைப்பதிவுகள்ள ஒரு காலகட்டத்துல துறை சார்ந்த பதிவுகள் அதிகமா வந்துட்டு இருந்துச்சு. ஒவ்வொருதுறையிலும் விஷயம் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருந்தாங்க...இருக்காங்க.. வலையுலகில் நான் காலடி எடுத்து வைத்த புதிதில் இது போன்ற பதிவுகள் நிறைய படிக்க முடிஞ்சது. உதாரணத்திற்கு- சாஃப்ட்வேர் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்.அதையெல்லாம் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள பலருக்கு பொறுமை இருக்காது.எனக்கு இல்லை..:-) லட்டு மாதிரி எளிய தமிழில் தெளிவா எழுதி கொடுத்துட்டு இருந்தாங்க. ஆர்வத்துடன் படித்து வந்தோம். ஆனா அது எல்லாம் இப்போ சுத்தமா காணோம்.

புகைப்படக்கலை , மென்பொருள், கணினி, மருத்துவம், பொருளாதாரம், மனோதத்துவம், உயர் கல்வி இப்படி நமக்கு ரொம்பவும் பரிச்சயமில்லாத பல துறைகளை பற்றிய தமிழ் பதிவுகள் என் போன்ற பலரின் அறிவுக்கு சத்தான தீனியை போட்டவை. குறிப்பாக பொருளாதாரம் பற்றிய மா.சிவகுமாரின் பதிவுகள். நான் விரும்பி படிப்பவைகளில் ஒன்று. எதனாலோ அது எல்லாம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டன. அந்ததந்த துறையில் இருப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால், உலக தமிழ்மக்கள் பலருக்கு உதவியாக இருக்கும்.

இதுல விதிவிலக்கா நானும் ரொம்ப நாளா கவனிச்சுட்டு இருக்குற ஒன்னு... இந்த பங்கு சந்தையை பத்தி எழுதுற சரவணகுமார் மட்டும் யாருக்காக எதுக்கு இப்படி மெனகெட்டு மாங்கு மாங்குனு எழுதறார்னு நினப்பேன். (http://panguvaniham.wordpress.com) . அவர் ஆரம்பித்த கால கட்டத்தில் அதுல அதிகமா பின்னூட்டம் நான் பார்த்தில்லை. அப்புறம் யார் வந்து படிக்கிறாங்கன்னு இவர் தினமும் எழுதறார்னு நினச்சதுண்டு. ஆனா இப்ப தான் தெரியுது பின்னூட்டமிடாமல் நிறைய பேர் படிச்சிட்டு இருந்திருக்காங்கன்னு.

அவருடைய ஆர்வத்தினாலேயே தினமும் பங்குச்சந்தை நுட்பங்களை ஆராய்ந்து, நிலவரங்களை சொல்வதோடு நில்லாமல், வர்த்தகம் செய்யக்கூடிய பங்குகளை பரிந்துரையும் செய்துவருகிறார். இவரைத் தொடர்ந்து திரு. சாய் கனேஷ் அவர்களும் பங்குசந்தை நிலவரங்களை அருமையாக தினமும் வழங்கி வருகிறார். இவர்களை தொடர்ந்து Share hunter, பாலாஜி, விஜய்கனேஷ், அஷோக் நாட்டாமை ன்னு நிறைய பேர் இப்போ தினமும் சந்தை பற்றி தங்களின் பார்வையை எழுதிட்டு இருக்காங்க.

கோவை சென்ற போது தோழி ஒருத்தி இந்த பதிவுகளுக்கு பாராட்டு பத்திரம் கொடுத்த போதுதான் இவர்களின் பங்களிப்பின் அருமை எனக்கு தெரிந்தது. சக வலைபதிவர் என்கிற முறையில் அது மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. முழுநேர தினவர்த்தகம் செய்யும் அவள், இந்த பதிவுகள் அவளுக்கு பேருதவியாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினாள். இது வலைபதிவுகளின் வெற்றியல்லவா!


பங்குச்சந்தை பற்றிய அடிப்படைகளை தெரிந்து கொள்ளவும், நுட்பங்களை கற்றுக்கொள்ளவும் பல ஆங்கில தளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அன்றாடம் அமெரிக்க பொருளாதாரம் சரிவதையும், அது சந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கதையும், தங்கத்தின் ஏற்ற இறக்கத்தையும் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது?, இதன் பின் புலம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிருந்தும், அதை ஆங்கிலத்தில் தேடிப்பிடித்து படித்து தெளிய நமக்கு பொறுமையோ,ஆர்வமோ இருப்பதில்லை.

அதையே எளிய தமிழில் நமக்கு தர கூடிய பதிவர்கள் கண்டிப்பாக நம்மிடையே இருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களை பங்குசந்தையை அலசுவதன் மூலம் இந்த பதிவுகள் நமக்கு தருகின்றன. எத்தனை பேருக்கு இந்த பதிவுகள் இருப்பது தெரியும் என்று தெரியவில்லை.

பங்குசந்தை நிலவரங்களை கூறவும், அன்றைய தினத்திற்கான பரிந்துரைகளைச் சொல்லவும், இந்த நண்பர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு குறிப்பிட்ட பங்கினை பரிந்துரைக்க அந்தப்பங்கின் கடந்த கால நிலை, தற்போதைய நிலை, பங்கின் விலையை நிர்ணயிக்கும் வெளி - உள் காரணிகள் ஆகியவைகளை ஆராய்ந்து, அவை அன்றைய தினத்திற்கு வர்த்தகம் செய்ய ஏற்றதுதான என்பதை கூறி தினவர்த்தகர்களுக்கு உதவி வருகிறார்கள். இதில் மற்றவர்களின் பணம் சம்பந்தப்படிருப்பதால் இவர்கள் அதிக அக்கறையுடனும், கவனத்துடனும் ஆராய்ந்து கூறிவருகிறார்கள்.

கடந்த 4-5 மாதங்களாக பங்குசந்தையில் தினவர்த்தகம் செய்து வரும் சில நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இதில் ஆர்வத்துடன் தினவர்த்தகம் செய்யும் பெண்களும் உள்ளனர். இவர்களில் பலர் குடும்பத் தலைவிகள். இவர்கள் சாதாரணமாக என்னுடன் யாஹூவில் தமிழில் பேசிக் கொண்டே தினவர்த்தகம் செய்வது இன்றுவரை எனக்கு பெரிய ஆச்சிரியமே. இவர்களுக்கு உற்சாகமளித்து உதவுபவர்கள் மேற்கூறிய பதிவுகளை எழுதும் நண்பர்கள் என்பது சந்தோஷமான ஒரு சங்கதி.


பங்குசந்தை பற்றிய அடிப்படையில் இருந்து நுட்பகூறுகள் வரை தாங்கள் கற்றுக் கொண்டது இந்த பதிவுகள் மூலம் தான் என்று இவர்கள் கூறும் போது, இந்தப் பதிவுகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களின் அனுபவத்தினை, ஆற்றலை தன் தாய் மொழியில் அனைவரும் பயன்படுத்திடும் வகையில் எடுத்துரைக்கும் இவர்கள்தான் உண்மையான மொழி பற்றாளர்கள் அல்லது இன உணர்வாளர்கள் என்றால் அது மிகையாகாது.


தினவர்த்தகம் பற்றிய பதிவுகள்


சரவணகுமார் - http://panguvaniham.wordpress.com
சாய்- http://top10shares.wordpress.com/

சரவண பாலாஜி- http://mayashare.blogspot.com/

விஜய் கணேஷ்- http://krvijayganesh.wordpress.com/

அசோக் நாட்டாமை - http://investorarea.blogspot.com/

அலெக்ஸ்- http://sharehunter.wordpress.com

மிழ் வலைபதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டுமானால் இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்.தங்களுக்குத் தெரிந்ததை சக தமிழர்களுக்கு உணர்த்துவதன் மூலம் ஒற்றுமையையும், பினைப்பினையும் உருவாக்க இயலும். இந்த பதிவின் நோக்கமும், எதிர்பார்ப்பும் அதுவே.

Saturday, April 11, 2009

பெண்மையின் மென்மை கண்டு கலைஞனாகினான்..

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் 'நாளை இந்த வேளை பார்த்து...' பாடலுக்கு தான் பி. சுசீலா அவர்களுக்கு முதல் முதலில் தேசிய விருது கிடைத்தது (தமிழில்).
பாடும் வரிகளுக்கு உணர்ச்சியூட்டி நம்மை அந்த பாடலின் சூழ்நிலைக்கே கொண்டு சென்றுவிடுவார்.

சுசீலாம்மாவை சொல்லீட்டு இந்த பாட்டுக்கு ஒயிலாக நடனம் ஆடிய வாணிஸ்ரீ யை சொல்லைன்னா எப்படி...கருப்பு வெள்ளை படத்திலும் அழகோ அழகாக....

பாடலை கேட்டு ரசியுங்கள்.




பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய் ?

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா..
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ...
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்
கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்..
கலைஞனாகினான்..( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..
மயக்கம் கொண்டதேன்..( நாளை )

Tuesday, March 31, 2009

மௌனங்கள்...Childhood Interrupted


குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள், அரசாங்கத்தின் உறுதி மொழிகள் இருந்தும் பிஞ்சுகள் நாளும் ஏதோ ஒரு முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டும் தானிருக்கிறார்கள். காலங்காலமாக நம் சமூகத்தில் நடந்தேறிக் கொண்டிருந்த சில மன்னிக்க முடியாத குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வர தொடங்கியிருக்கின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் மட்டும் 3 சம்பவங்கள். தந்தை என்று சொல்லி கொண்டிருந்த ஜென்மமே சொந்த மகளை கற்பழித்த கொடூரம். இதில் தாயும் உடந்தை. நினைத்துப் பார்க்கவே பதைக்கிறது. இதைத் தொடர்ந்து பஞ்சாபிலும், இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அல்லும் பகலும் காத்தருளும் ஒரு கட்சிப் பிரமுகரின் மகள், தன் தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறி இருக்கிறார்.

பாலியல் கல்வியின் அவசியத்தை ஆராய்ச்சிகள் மூலமும், எடுத்துகாட்டுகள் மூலமும் எடுத்துக் கூறியும், தங்களின் வக்கிர மனதுக்கு தீனி போடவே, அரசியல் கட்சிகள் பாலியல் கல்வியை வேண்டாமென்று ஒதுக்கி வருகிறார்கள் என்று தான் நான் கூறுவேன். பண்பாடு, கலாச்சாரம், வெங்காயம் என்று கூவி, கூவி இளைய தலைமுறையினருக்கும் இடையூறு விளைவித்து கொண்டிருக்கிறார்கள். வக்கிர மனங்கொண்ட அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.


குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறை அவர்களது சுதந்திரத்தையும், உரிமையையும் வன்முறைக்குள்ளாக்கி, அவர்களின் இருப்பை முடக்கி நிர்மூலமாக்குகின்றது.இது பெரும்பாலும் குடும்பத்துக்கு வேண்டியவர்களாலும், உறவினர்களாலுமே ஏற்படுகிறது என்பது தான் கொடுமை. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இரண்டு பாலாரும் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.


ஆராய்ச்சிகள் மூலமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நேர்காணல் மூலமும் இது போன்ற உண்மைகள் தெரிய வருகிறது. அதை வைத்து தான் பாலியல் கல்வியில் பாடங்களை வகுத்து இருக்கிறார்கள். இந்த வன்முறைகளிலிருந்து எவ்வாறு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறுவதே பாலியல் கல்வி. மற்றபடி பாலியல் கல்வி என்பது உடலுறவைப் பற்றி சொல்லிக் கொடுப்பது அல்ல. குழந்தைகளுக்கு யாரிடமிருந்து, எவ்வாறு இது போன்ற தொல்லைகள் வருகிறது, அதை எவ்வாறு அடையாளம் காண்பது, அதிலிருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, போன்ற பயிற்சிகள் அடங்கிய ஒரு கல்வி முறை தான் பாலியல் கல்வி.

நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அதை உணர்ந்து, முன்கூட்டியே மற்றவர்களிடம் எடுத்துக் கூற ஒரு நம்பிக்கையை ஊட்டவே இந்த பயிற்சி. 'பாலியல் கல்வி' என்றால் தகாத ஒன்றாக பார்ப்பதால், சிலர் அதை 'வாழ்வியல் கல்வி' என்றும் கூறுவர். பெற்றொர்களும் ஆசிரியர்களும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் யாராவது ஒருவரிடமாது அக்குழந்தை புகார் கூற வாய்பிருக்கிறது. ஒருவர் தவறு செய்தால், மற்றவரிடம் நாம் கூறலாம் என்ற நம்பிக்கை வரும்


பாலியல் கல்வியை முதலில் மகாராஷ்ட்ரா மாநிலம் அரசு தான் தடை செய்தது. அந்த தடைக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் பேராதரவு அளித்தன. அதைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் தடை செய்தன.



இந்திய அரசு தரப்பில் நடந்த ஒரு ஆராய்ச்சியில், மகாராஷ்டிர மாநிலத்தில், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், 49.43 % சதவீத ஆண் குழந்தைகளும் 50.57 % சதவீத பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக அவ்வறிக்கை சுட்டுகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 61.73% பேர் குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்களாம். 5 வயதில் ஆரம்பித்து, 10 வயதில் வேகம் கூடி, 12-15 வயதில் வன்முறை உச்சத்தை அடைகிறதாம். (இதை டைப் செய்யக் கூட எனக்கு கை வரலை)
.

தங்களுக்கு நேரும் அவலங்களை தைரியமாக சொல்ல இந்தப் பிஞ்சுகளுக்கு தெரிவதில்லை. ஏதாவது ஒன்றை சொல்லி அவர்களை அடக்கி விடுவது எளிதான ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது. வெளியே சொல்லுவதற்கான ஏதுவான சூழ்நிலை எப்பொழுதும் அமைவதில்லை. சொன்னால் அவர்கள் மீதே பழி விழும் என்று பயந்து வெளியே சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், குடும்ப கவுரவத்தை காரணம் காட்டி பெற்றோர்களும் உறவினர்களும் அதை மூடி மறைத்து விடுவார்கள். மாமாக்களும், சித்தப்பாக்களும் இது போன்ற விளையாட்டுக்கள் விளையாடாமல் இல்லை. பள்ளியில் வாத்தியாரின் தொடுதல் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இதை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எதையும் தங்களிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு பெற்றோர்களே இப்படி அயோக்கியர்களாக இருந்தால் என்ன செய்வது.இது மாதிரியான சூழ்நிலையில் தான் ஆசிரியர்களும், நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். இந்த உதவியை நாடுவதற்கான தைரியத்தை வாழ்வியல் கல்வி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்த மௌனங்கள் கலைக்கப்படவேண்டியவை...நண்பர்களாக, ஆசிரியர்களாக, பக்கத்துவீட்டுகாரர்களாக, தாயாக, தந்தையாக நாமும் இந்த மௌனத்தை கலைப்போம்

Friday, March 27, 2009

மரப்பயிர்- ஒர்- பணப் பயிர்

தரிசு நிலங்கள் இருந்தும் பயன்படுத்தாதவர்களுக்கும், நிலம் நீர் வசதி இருந்தும் சரியாக பயன் அடைய முடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கும், நல்ல முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காகவும் அரசு தரப்பில் இருந்து ஒரு நல்ல வாய்ப்பு.

"தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு" என்ற திட்டத்தில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் வரை, ஒரு கோடி மரங்கள் நடப்பட்டு சாதனை படைக்கப்படுள்ளது. வரும் ஆண்டு 3 கோடி மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம்,
வனத்துறையின் கீழ் எல்லா மாவட்டத்திலும் செயல் படுத்தப்படுகிறது. தேக்கு, நாட்டு வேம்பு,மலை வேம்பு, சவுக்கு, தீக்குச்சி மரம், குமிழ், வாகை, முல்லில்லா மூங்கில் போன்ற மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப் படவுள்ளது. அடுத்த ஆண்டு மழைப்பருவத்தில் (செப்டெம்பர்- அக்டோபர்) நடவு செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வனத்துறை அலவலகத்தில் தங்கள் நிலம் சமபந்தப்பட்ட 10(1) அடங்கள் சமர்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செடிகள் வளர்க்கப்படுதால், இந்த முன் பதிவு அவசியமாகிறது.

இதற்கு நம்மிடம் குறைந்தது ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலம் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது ( சவுக்கு மட்டும் 2000 நாத்துகள் வழங்கப்படுகிறது.). மேலும் பராமரிப்பு செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படுகிறது.


தங்களின் நிலத்தின் மண்ணை ஆய்வு செய்து, கார அமிலத்தன்மையை பொருத்தும், நீரின் வகையை பொருத்தும், அருகில் மரங்களின் தேவை (Demand) மற்றும் விற்பனை (Marketing) வசதியை பொருத்தும், காலத்தின் அளவைப்
பொருத்தும் (மரங்களின் கால அளவு) தாங்கள் பயிர் செய்ய விரும்பும் மர வகைகளை முடிவு செய்யவும். (பொதுவாக சவுக்கு 3 அல்லது 4 ஆண்டுகளிலும் மற்ற வகைகள் 7 முதல் 20 ஆண்டுகளிலும் வெட்டலாம்).

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் வர்த்தகம் பதிவின் மூலம் தீக்குச்சி மரத்தை பற்றி தெரிந்து கொண்டேன். பிறகு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் போகும் பாதையில் இருக்கும் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று இந்த மரத்தை பற்றிய விபரங்களை அறிந்தேன். அங்கு இருந்த வனத்துறை அதிகாரி மிகப் பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் விவரங்களை அளித்தார். அதன் படி கடந்த 5 மாதங்களின் செயல்பாட்டில் கீழே படத்தில் உள்ள மரங்கள் கோவில்பட்டி அருகே பயிரிட்டிருக்கிறேன்.
இந்த மரத்தின் பெயர் பெருமரம் அல்லது பீமாட்டி(ailanthus). பொதுவாக தீக்குச்சி மரம் என்று அழைக்கபடுகிறது. இந்த மரத்தை நான் தேர்ந்தெடுத்தற்கு முக்கியமான சில காரணங்கள்

1) மார்கெட்டிங்க் - கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி போன்ற இடங்களில் அதிகமாக தீக்குச்சி ஆலைகள் இருப்பதால்.

2) 7 ஆண்டுகளில் வெட்டலாம்.

3) இந்த வகை மரங்களுக்கு எப்பொழுதும் நல்ல demand' இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.


ஒரு ஏக்கருக்கு 200 மரங்கள் வளர்க்கலாம்.
இடைவெளி - 14 x 14 அடி இந்த வகை மரத்துக்கு நீர் தேங்காத செம்மண் நிலமாக இருப்பது அவசியம். முதல் மூன்று ஆண்டுகளில் ஊடு பயிர் செய்யலாம்.( பாசிப்பயிர், உளுந்து, எள்..)

இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மரங்களை பயிர் செய்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன் சேர்ப்போம்.

மேலும் விபரங்களை பெற- 9942456605

Friday, February 27, 2009

நாட்டுப் பற்று என்றால்?????

வாக்கு வாதம் எனக்கு பிடிக்காத ஒன்னு தான்...அதுவும் அலுவலகத்துல, அலுவல்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை யென்றாலும், இன்னைக்கு அது தவிர்க்க முடியாததாயிடிச்சு....

மதியம் ஒரு அலுவலக நண்பர், இரண்டு பேரை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண், ஒரு பெண், 23 அல்லது 24 வயது இருக்கும். ஒரு ஆன்மீக அமைப்புல இருந்து வந்திருந்தாங்க. அலுவலக நண்பர்கள் 6 பேரை உட்கார வைத்து, அந்தப் பெண் பேச ஆரம்பித்தார்.

"வரும் ஞாயிறு நாங்க ஒரு பீஸ் மார்ச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கோம்..Peace march is against the terrorism and corruption.. Please..please..please...you should all join' அப்பிடீன்னு பல ப்ளீஸ்களை போட்டு பேச ஆரம்பித்தார். கூட வந்த பையன் "எதுக்கு நீ ப்ளீஸ் இவ்வளோ போடுறே..வரவேண்டியது அவங்க கடமை' னு ஆரம்பிச்சான்..அப்பவே நாங்க நெளிய ஆரம்பிச்சோம்.

பிறகு நாங்கள் எல்லோரும் "நல்ல விஷயம் தான்... நாங்களும் வர்ரதுக்கு முயற்சி செய்யறோம்" னு சொன்னோம். வந்த அம்மணி, "இல்லை நீங்க கண்டிப்பா வர்ரேன்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம்' னு சொல்ல...நாங்க ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்தோம்.


அலுவலக தோழி ஒருத்தி ரொம்ப யதார்த்தமா.. "நாங்க ஃபேமிலியோட வெளியே போறோம்...ஏற்கனவே பிளான் பண்ணிட்டோம்....இன்னைக்கு இரவே கிளம்பறோம்" னு சொல்ல.... வந்த பையன்...."நீங்க ஏன் அதை ஒரு வாரத்துக்கு தள்ளி போடக் கூடாது" னு கேட்டான். சரி நல்ல விஷயத்துக்காக இதை ஆர்வம் மிகுதியால சொல்றான்னு நினைத்து யாரும் ஒன்னும் பேசலை.

அவர் அதோட நிற்கலை...."நீங்க இந்த பீஸ் மார்ச்சுக்கு வராம, I am a true Indian...I love my India...I love peace னு சொன்னா... 'THAT MEANS YOU ARE A FRAUD' னு ஒரு அறிக்கை விட்டான்... எனக்கு வராத கோபம் வந்தே விட்டது.... நாங்களும் சின்ன பையன்...போகட்டும்னு அடக்கி வாசிச்சோம்...ஆனா இந்த வார்த்தை என்னை ரொம்பவே ட்ரிக்கர் பண்ணீடுச்சு.

"Who are you to give an endorsement for my patriotism?" னு கேட்டேன்... அவங்க குடும்ப சூழ்நிலை தெரியாம அவங்களை ஃபிராடுனு சொல்ல நீ யார்னு கேட்டேன்.... உதாரணத்திற்கு... நான் இங்க தனியா இருக்கேன்....நான் இருக்கும் இடத்திற்கும் பீஸ் மார்ச்சு துவங்கும் இடத்திற்கும் 35 கி மீ. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனியா வந்துட்டு போக எனக்கு தைரியம் இல்லை....தில்லி அவ்வளவு பாதுகாப்பான இடமும் இல்லை....அப்படி நான் வராத பட்சத்தில், உடனே எனக்கு நாட்டுப்பற்று இல்லை...நான் ஒரு ஃபிராடுனு சொல்ல நீ யார் னு கேட்டேன்... அவர் உடனே...அப்போ உங்களுக்கு உங்க பாதுகாப்பு தான் முக்கியம்....நாட்டின் பாதுகாப்பு முக்கியம் இல்லையானு கேள்வி எழுப்பினார். மேலும் பஸ் ரூட் தெரியலை, அதுனால வரலைன்னு சொல்ற நீங்க எல்லாம் ஹிப்போக்ரெட்ஸ். You people dont have the responsiblity....Wont you go miles if you get a job for 50,000..there you wont see safety...because you are paid.

நான் கேட்டேன்..do you want me to compromise my personal safety and join your peace march...னு கேட்டேன்...அவர்.".again and again you are talking about your personal safety and proving how selfish you people" are னு வசனமா வசனம் பேசினார். கூட வந்த பெண் இதுக்கு மேல பேச விட்டா நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வந்திடும்னு பையனை இழுத்துட்டு போயிட்டார்.

நோக்கம் சரியானதாய் இருந்தாலும் அதை அணுகும் முறையை நல்ல படியாக கையால வேண்டாமா?. ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபடும் இவர்கள், வார்த்தைகளை இப்படி மானாவாரியா விடலாமா?... நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை இங்கே கற்றுக் கொள்ளும் இவர்கள், அதை செயலில் காட்டவேண்டாமா?. எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு வார்த்தையை விட்டால், கேட்ப்பவர்களுக்கு இந்த நோக்கத்தின் மேல் நம்பிக்கை வருமா?.

குறிப்பு: ஒரு தனிமனிதன் ஒரு சக மனிதனின் மேல், அதுவும் அவரைப் பற்றி அறியாத பொழுது, சுமத்தும் குற்றச்சாட்டின் பொருட்டு வெளிப்பட்ட கோபத்தின் விளைவாக இந்தப் பதிவு....மற்றபடி பீஸ் மார்ச் போவதைப் பற்றியதில்லை

Saturday, February 07, 2009

விக்கி ராய் - குப்பையில் கிடைத்த மாணிக்கம்


தெருவோர நிஜங்களில், கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைஞனை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் பெயர் விக்கி. வீட்டை விட்டு ஓடி வந்து, தெருவில் வாழ்ந்து இன்று ஒரு தொண்டு நிறுவனத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்.

கொல்கத்தா மாநிலத்தின் புரூலியா என்ற இடத்தில் பிறந்த விக்கியின் வீட்டில் 6 குழந்தைகள். 6 பேருக்கான இடமோ, உணவோ இல்லாத சூழ்நிலை. தையல் வேலை பார்த்து வந்த தந்தைக்கு, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலை எப்பொழுதும். ரொட்டியும், ஊறுகாயுமே அன்றாட உணவாக இருந்து வந்தது. சில சமயம் அதுவும் இருக்காது.

7 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த விக்கிக்கு பள்ளியும் அலுத்து போனது. சதா அடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரால் படிப்பின் மேல் வெறுப்பு வந்தது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், தானும் வசதியாக வாழவேண்டும் என்ற வெறி மட்டும் மனதில். ஆனால் படிப்பு ஏறவில்லை. வீட்டை விட்டு ஓட திட்டமிட்டு, அம்மா சிமென்ட் வாங்க கொடுத்த 800 ரூபாயை கொண்டு தில்லிக்கு ரயிலேரிவிட்டார். விக்கியின் அனுபவங்களை அவரே சொல்கிறார்.

" தில்லிக்கு டிக்கெட் வாங்கி உட்கார்ந்த பின் அளவில்லா ஆனந்த மடைந்தேன். ரயில் புறப்பட்டவுடன் முகத்தில் அடித்த சிலு சிலு காற்று எனக்கு புத்துணர்சியை கொடுத்தது.



ஆனால் அந்த உணர்வுகள் மட்டுமே ஆனந்தமான ஒன்று என்ற உண்மை தில்லியில் இறங்கின அடுத்த நிமிடம் உணர்ந்து கொண்டேன். பாஷை தெரியாத ஊர், ஏன் என்று கேட்க ஆள் இல்லை, அம்மாவின் பாசத்திற்கும், அப்பாவின் பரிவிற்கும், அடுத்த வேலை உணவிற்கு வழி இல்லாவிடினும் என் உறவுகள் எனக்கு கொடுத்த பாதுகாப்பிற்கும் மனம் ஏங்கியது. என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னைப் போன்ற சிறுவர்களுடன் சேர்ந்து தெருவோரத்தில் கிடக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, நாளொன்றிற்கு 100ல் இருந்து 150 ரூபாய் வரை சம்பாதித்தேன்.



ஆனால் அதுவும் அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை. ஏரியா தாதாக்கள் அடித்து துன்புறுத்தி பணத்தை பரித்துக் கொண்டார்கள். என் மேல் பரிதாபப்பட்டு அங்கு இருந்த ஒரு ஹோட்டல் முதலாளி் பாத்திரம் கழுவும் வேலையை கொடுத்தார். 50 ரூபாய் கொடுத்து, நாள் முழுக்க மலைபோல் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள் கழுவ சொன்னார். உணவோ, ஓய்வோ இல்லாமல் என் கைகள் புண்ணாகும் வரை வேலை செய்தேன். அந்த சமையத்தில் அங்கு உணவு அருந்த வந்த பெண்மணி ஒருவர், சலாம் பாலக் ட்ரஸ்ட் என்ற அமைப்பை பற்றி சொன்னார். கடவுள் கிருபையால் அங்கே என்னை ஏற்றுக் கொண்டார்கள். சின்ன சின்ன கைவேலைப் பாடுகள் செய்ய கற்றுக் கொண்டேன்.



அப்பொழுது தான் எனக்கு வாழ்க்கையில் முன்னேற முதல் வாய்ப்பு அமைந்தது. அதை என் இரண்டு கைகளாலும் இருக்க பிடித்து கொண்டேன். ட்ரஸ்டில் இருக்கும் குழந்தைகளை புகைப்படம் எடுக்க பிரிட்டிஷ்காரர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ட்ரஸ்டை சுத்திக் காட்டும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டது. அது எனக்கு மிகவும் பெறுமையாக இருந்தது. ட்ரஸ்டில் மட்டுமில்லாமல் வெளியே தெருவில் வாழும் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். என்னுடன் தெருவில் வாழ்ந்த சிறுவர்களிடம் அழைத்து சென்றேன். எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் சிறுவர்கள் எதிரில் பேசியது எனக்கு பெருமையாக இருந்தது. அவரிடம் புகைப்படக்கலை பற்றி பேசி பேசி எனக்கும் அதில் ஆர்வம் வந்தது. இதற்கிடையில் நான் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களில் தேறினேன். எனக்கு18 வயதானபடியால் ட்ரஸ்டை விட்டு வெளியே வந்தாக வேண்டிய சூழ்நிலை. அங்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை தான் வைத்துக் கொள்வார்கள்.



வெளியே வந்தால் எனக்காக ஒரு வேலை தேடவேண்டும். பிரிட்டிஷ்காரர் அவரின் நண்பர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் ஒரு பேஷன் போட்டோகிராபர். எனக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்து அவர் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்து சென்றார். நிறைய கற்றுக் கொண்டேன். சென்னை, பங்களூர், மும்பை, கொல்கத்தா, லடக், கேஷ்மீர் என பல ஊர்களுக்கு சென்றேன். நான் சென்ற ஊர்களுக்கான பயணச்சீட்டுகளையும், விமானமானால் 'போர்டிங்க் பாஸும்' இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.மறக்க முடியாத நினைவுகள், அனுபவங்கள் அவை.

ஒரு பழைய கேமராவை வைத்து தெருக்குழந்தைளை படம் பிடித்தேன்.



நான் எடுத்த புகைப்படங்கள் பிரிட்டிஷ் ஹைகமிஷனின் ஆதரவில் ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டது. நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள், குழந்தைகள் மீதான வன்முறையை எடுத்து காட்டியது. குழந்தைகள் மீதான உரிமை மீறல்களை கருத்தாக கொண்டு படங்கள் எடுத்தேன். என் இந்த வளர்ச்சியை என் தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர்களும் வந்தார்கள். அவர்களின் முகத்தில் நான் பார்த்த பெருமிதமும்,

ஆனந்தக் கண்ணீரும் நான் கடந்து வந்த பாதையை எனக்கு நினைவு கூறியது. அந்த புகைப்படக்கண்காட்சி மூலம் எனக்கு கிடைத்த 10,000 ரூபாயில் ஒரு கேமரா வாங்கினேன், என்னை வளர்த்த ட்ரஸ்டிற்கு உதவித்தொகை வழங்கினேன்.

எனக்கும் ஒரு் கனவு இருக்கிறது. ஒரு ஆப்பில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும், 12.5 megapixel கேமரா வாங்கவேண்டும். கண்டிப்பாக வாங்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது".

விக்கிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம், அமெரிக்காவில் இருக்கும் World Trade Centre" ன் கட்டுமானப்பணிகளை புகைப்படம் எடுக்க தேந்தெடுக்கப்படிருக்கிறார்.

முனைப்பும், ஆர்வமும் இருந்தால் இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தையும் அடையலாம் என்பதற்கு விக்கி தான் சாட்சி. தனக்கு கிடைத்த முதல் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தன்னை ஆளாக்கிய நிறுவனத்திற்கு கொடுத்த அந்த மனித நேயம் இன்னும் பல வெற்றிகளை காண வேண்டும்.

மேலே உள்ள படங்கள் அனைத்தும் விக்கி எடுத்தது ...

Saturday, January 31, 2009

சாதர் தாக்னா- ஹரியானா மாநிலத்தின் ஒரு சமுதாய வழக்கம்


வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களின் அவல நிலையை முந்தைய எனது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கணவனை இழந்து, குடும்பத்தாராலும் கைவிடப்பட்டு, அன்றாட தேவைகளுக்கே கஷ்டப் பட்டு கொண்டிருப்பது ஒரு வகையான கொடுமை என்றால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கணவனை இழந்த சில பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேறொரு வகையான வதை.

ஒரு முறை சென்னை லயோலா கல்லூரியில் CNN IBN தொலைகாட்சியின், ராஜ்தீப் சர்தேசாய், நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது, "South India is more a conservative society than North India" என்ற தன் கருத்தை முன்வைத்து துவக்கினார். இந்த மனப்பான்மைதான் பெரும்பாலான வட இந்தியர்களுக்கு (வட இந்தியாவில் வாழும் அநேக தென் இந்தியர்களும் இதில் அடக்கம்) இருக்கிறதென்றால் அது மிகையில்லை. இந்த மக்களோடு மக்களாய் அன்றாடம் பழகி (பேருந்தில், கடைகன்னியில், அலுவலகங்களில்) வாழ்ந்து பார்த்தால் , ராஜ்தீப்பின் கருத்து சற்றும் உண்மையில்லை என்பது புரியும்.

தென்னிந்தியாவில், அதி முக்கியமாக தமிழ்நாட்டில் பெண்கள் நிச்சயமாக மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப் படுகிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அது இளம் பெண்களாக இருந்தாலு்ம் சரி, முதியவர்கள் என்றாலும் சரி. தமிழ்நாட்டிலும் சில பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அது சில இடங்களில் மட்டுமே என்று சொல்லலாம். சரி நான் இதை விவாதம் செய்ய வரவில்லை. அது இந்த பதிவின் நோக்கமும் இல்லை.

காலங்காலமாய் ஹரியானா மாநிலத்து கிராமங்களில் கணவனை இழந்த பெண்களின் மீது திணிக்கப்பட்டு வரும் சமுதாய பழக்கமான ‘சாதர் தாக்னா’ பற்றி நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், இதன் பின்னராவது ராஜ்தீப் போன்றோரின் கண் மூடித்தனமான கருத்துக்கள் சரியா என்பதை நீங்களே சொல்லுங்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்

சில மாதங்களுக்கு முன்னால் வட இந்திய பெண்கள் சிலரை ( பெண் பத்திரிகையாளர், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள், அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள்) கோவையில் நடந்த ஒரு கருந்தரங்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அரசு துறையில் பணி புரியும் ஒரு பெண் கணவனை இழந்தவர். முதலில் வருகிறேன் என்றவர், புறப்படுவதற்கு முந்தைய நாள் தன்னால் வரமுடியாது என்றும், அதற்கான காரணத்தை நேரில் சந்தித்து கூற விரும்புவதாகவும் கூறினார்.

இந்த இடத்தில் ‘சாதர் தாக்னா’ என்கிற பழக்கத்தை பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.' சாதர் தாக்னா' என்பது, ஹரியானா கிராமங்களில், இளம் வயதில் பெண்கள் கணவனை இழந்து விட்டால், கணவனின் சகோதரருடன் அந்தப் பெண்ணை வாழவைக்க செய்வது அந்த சமுதாயத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கம். அந்த நபர் பெரும்பாலும் திருமணம் ஆனவராகத்தான் இருப்பார். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரிவித்தாக வேண்டும். 'சாதர் தாக்னா " என்ற சடங்கை செய்து இப்படி வலுக்கட்டாயமாக கணவரின் சகோதரனுடன் சேர்ந்து வாழவைக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். உடனே காரணத்தை பட படவென்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நானும் ' சாதர் தாக்னாவில்' மாட்டிக் கொண்டேன். அதில் இருந்து தப்பிக்க என் பிறந்த வீட்டாரோடு சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இந்த வகை கட்டாயப்படுத்துதலை, அந்த வகை திருமணமாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இதில் அந்த நபருக்கு ஆண் வாரிசு இல்லாமல், கணவனை இழந்த பெண்ணுக்கு ஆண் வாரிசு இருந்து விட்டால்,இந்த கட்டாயப்படுத்தல் மேலும் அதிகமாகிறது. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை...ம்ம்ம்

கணவனை இழந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க, சமுதாயாத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பழக்கம் என்று இவர்கள் இதனை நியாயப்படுத்திகிறார்கள். இந்த வழக்கம் எப்படி தொடங்கியது என்று பார்த்தால், அந்தக்காலத்தில் கணவனை இழந்த, குழந்தை செல்வமில்லாமல் இருக்கும் பெண்களை, கணவனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் 'Levirate marriage' என்று கூறுவார்கள். இதை தென்னிந்தியாவிலும் சில இடங்களில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெண் வீட்டாரும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து பேசி எடுக்கப்படும் ஒரு முடிவு. பெரும்பாலும் பெண் வீட்டாரும், அந்தப் பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல விரும்புவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ம்ம்ம்ம் இதில் பெண்ணின் விருப்பம் இருந்து விட்டால் இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பெரும்பாலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை யாரும் மதிப்பதில்லை. பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பழக்கம், இன்று உருமாறி பெண்களை அடிமை படுத்தவும், தன் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே சில ஆண்கள் பயன் படுத்திக் கொள்ளும் ஒரு பழக்கமாகி இருக்கிறது என்பது தான் உண்மை.

கணவனை இழந்த பெண்ணும் அவளுக்கு சேர வேண்டிய சொத்தும் எப்பொழுதும் அந்த வீட்டின் ஆண் மகனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நான் மேலே குறிப்பிட்ட பெண் படித்து நல்ல வேலையில் இருப்பதால், தன் சொந்தக் காலில் நிற்க துணிவும் இருப்பதால், தன் விருப்பமின்மையை தெரிவித்து, வெளியே வந்துவிட்டார். இதனால் புகுந்த வீட்டாரின் வெறுப்பிற்கு ஆளான போதும், கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான ஹரியானா கிராம புறத்துப் பெண்கள் படிப்பறிவும், உலக அறிவும், சுய சிந்தனையும் அற்றவர்களாகவே, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எனது அனுபத்தில் நான் பார்த்த பெரும்பாலான வட இந்திய கிராம பெண்கள் சுய சிந்தனை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிரதான தேவை பணம்,அது தரும் ஆடம்பரமான வாழ்க்கை முறை, அலங்கார சாதனங்கள், விலை உயர்ந்த உடைகள், காலனி முதற்கொண்டு எல்லாவற்றிலும் படோபகாரம் தெரியவேண்டும். இதை வஞ்சனை இல்லாமல் இந்த ஆண்கள் கொடுத்து விடுகிறார்கள். என் நான்காண்டு வட இந்திய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும் இதுதான்.

ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு இவர்களே காரணம் என்று பல சமயம் நினைக்கத்தோன்றுகிறது. கணவனுக்கென ஒரு விரதம் (கர்வா சவுத்), அண்ணன் தம்பிகளுக்கென ஒரு விரதம் (பாய் தூஜ், ராக்கி) இது போக மருமகன் நன்றாக இருக்க வேண்டுமென்று சில சமுதாயத்தாரின் விரதம். இது கட்டாயமாக எல்லாப் பெண்களும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள். இல்லையென்றால் அவள் குடும்பத்திற்கே லாயக்கற்றவள் என்கிற முத்திரை குத்தப்படுவாள்.இந்த பூஜைகளையும், விரதங்களையும், ஆடம்பரத்தையும் தாண்டி இவர்களின் சிந்தனை செல்வதில்லை. அதற்கான சூழலும் கிராம புறங்களில் இல்லை.

இன்றும் பெண் கல்வியென்பது வட மாநில கிராமங்களில் அதிசயமான ஒன்றாகவே இருந்து வருவது அதிர்ச்சியளிக்கும் நிஜம். இந்தப் பகுதி மக்களின் கண்ணோட்டமும் சுயநல போக்கும் பல சமயங்களில் எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் இன்னும் இவர்கள் அடைபட்டு கிடைக்கிறார்கள் என்பதே உண்மை..

நம் எளிமையும், சகிப்புத்தன்மையும் ராஜ்தீப் போன்றோருக்கு நம்மை conservative ஆக காட்டுகிறது. உண்மையான பெண் அடிமைத்தனம் என்ன என்பதை வட மாநிலங்களில் வந்து வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.ம்ம்ம்ம்... தென்மாநிலங்கள் இந்த விஷயத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு சொல்லாமல் விடுவதில்லை. இது குறித்து இன்னும் விரிவாக எழுதிட முயல்கிறேன்.

இப்படி ஒரு முற்போக்கு சமுதாயத்தை ஏற்படுத்தி கொடுத்த பாரதி, பெரியார், போன்ற சமூக புரட்சியாளர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதை களங்கமில்லாமல் வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

Monday, January 26, 2009

தெருவோர நிஜங்கள்......

முன் குறிப்பு- Slum Dog Millionaire னு ஒரு படம்... எல்லாரும் கேள்விபட்டிருப்பீங்க.. உலக அளவில் சிறப்பான விருதுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு படம்... பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருக்கிறது...இந்திய மண்ணில் இருக்கும் சேரிகளின் உண்மை நிலைமையை எடுத்து சொல்லும் ஒரு நல்ல முயற்சி..

ஆனால் நம்மில் சிலர், தாங்கள் மட்டுமே
இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஜென்மங்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏதோ இல்லாத ஒன்றை சொல்லியிருப்பதாக குதிக்கிறார்கள். இந்திய நிலைமையை சொல்லி காசாக்கும் முயற்சி இது என்று நினைப்பவர்கள் சிலர்....ஒரு பிரிடிஷ்காரன் வந்து நம் நாட்டின் நிலைமையை சொல்ல அனுமதிக்க கூடாது என்றெல்லாம் பிரச்சினையை கிளப்புகின்றனர்.

சேரிகளில் இந்த நிலைமை இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா இவர்களால்??.. இல்லை அப்படி இருந்தால் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய பேசும் இவர்கள் ஏதாவது செய்யப் போகிறார்காளா???... கோவமும் ஆதங்கமும் தலைக்கு ஏறுகிறது.... இதில் தில்லி வாழ் மக்களை சொல்லவே வேண்டாம்.... கெட்டு குட்டிச்சுவரான கலாச்சாரம், உணர்வுகளை ஒதுக்கி படோபகார வாழ்க்கையில் லயித்துப்போயிருக்கும் திமிர் பிடித்த அயோக்கியர்கள்....

இந்த பதிவு இந்தப் படத்தை பற்றியதில்லை... ஆனால் இந்தப் படத்தில் வரும் சிறார்களைப் போல தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாபாத்திரங்கள் பற்றியது.


ஒவ்வொரு முறை தில்லி ரயில் நிறுத்தத்தில் ரயில் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்களை உறுத்தும் சில காட்சிகள். அங்கு குப்பை பொறுக்கும் குழந்தைகள், நாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் செய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள், ....ம்ம்ம்ம்... இதில் எதுவுமே பாதிக்காமல் கர்மமே கண்ணாயிரமாய் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டும், பாக்கு பாக்கெட் சரங்களை விற்றுக் கொண்டும், பிச்சை எடுத்துக் கொண்டும் இருக்கும் என்னற்ற குழந்தைகளை பார்க்கும் போது மனது சில நிமிடங்களேனும் நொறுங்காமல் போகாது.


இவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம். ஒரு வேளை உணவிற்காக செய்யக் கூடாத வேலைகளை செய்து, குழந்தை பருவம் என்ற ஒன்றை நினைவில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் வயதிற்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாத பெரியவர்களின் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இல்லை... வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களின் உலகத்தில் போட்டி போட்டு வாழ பழகிக்கொள்ளும் இவர்களுக்கு, குழந்தை பருவத்திற்கே உண்டான பிரத்யேக குணாதிசியங்கள் அறவே இல்லாமல் போய்விடுகிறது என்பது தான் கொடுமை.

இந்தக் குழந்தைகள் ஏரியா தாதாக்களாலும், ரவுடிகளாலும் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தைகளும் விதிவிலக்கில்லை. ஓரினச்சேர்க்கை இளைஞர்களால் இந்தச் சிறுவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு ஓரினச்சேர்க்கை உணர்வுகள் பெரும்பாலும் இருப்பதில்லையென்றாலும், பணத்திற்காக அதையும் செய்ய தயங்குவதில்லை. நாளடைவில் இவர்களுக்கும் இதுவே பிடித்து விடுகிறது. முடிந்தால் இதைப் பற்றி இன்னொரு தனிப்பதிவு போடுகிறேன்.

தில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம். ராஜஸ்தான், பீஹார், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பிழைக்க வந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம். இவர்களில், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருப்பார்கள். குழந்தைகள் பிச்சை எடுப்பது, ரோட்டோரத்தில் இருக்கும் பழைய பாட்டில் பேப்பர் போன்றவற்றை சேகரிப்பது, சிக்னலில் பொருட்களை விற்பது போன்ற வேலைகளை செய்து நாளொன்றுக்கு 100ல் இருந்து 150 வரை சம்பாதிக்கிறார்கள்.

தெருவில் வாழந்தாலும் இவர்களுக்கும் லட்சியங்கள், ஆசைகள், கனவுகள் உண்டு. ஒரு சின்ன மூலதனத்தை போட்டு, அதை சில நிமிடங்களுக்கே தெருவில் சந்திக்கும் மக்களிடம் விற்று காசாக்கும் திறமை கொண்ட இவர்களுக்கு கல்வியறிவும், நல்வழிகாட்டுதலும் அமைந்துவிட்டால்??... ம்ம்ம் இதை உணர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கென்று மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேறி இருக்கும் குழந்தைகளும் உண்டு.

ரோஹித் என்னும் 13 வயது அழகான பாலகன். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவன், 2 வருடம் முன்பு அப்பா அடித்தற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவன். இன்று தில்லி ரயில்வே நிறுத்ததில் தேங்காய் கீற்றுகளை விற்று நாளொன்றிற்கு 150 ல் இருந்து 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறான்.ரோஹித்துக்கு டாக்டர் ஆகி இவனைப் போன்ற ஆதரவில்லா குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா?... ம்ம்ம்ம்.. மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த குழந்தைகளுக்கென்று துவங்கி இருக்கும் வங்கி. பட்டர்ஃப்ளை என்ற தொண்டு நிறுவனத்தின் கண்கானிப்பில் இருக்கும் இந்த வங்கிக்கு தில்லியில் 12 கிளைகளும், சுமார் 2000 குழந்தைகள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த வங்கிகள் இந்தக் குழந்தைகளாலேயே பராமரிக்கப் படுகிறது. 6 மாதத்திற்கொரு முறை இவர்களே ஒரு மேளாளரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம், ஃபோர்னோகிராபியின் மூலம் ஈட்டிய பணம், திருட்டு வழியில் ஈட்டிய பணம், போதை பொருட்கள் விற்று ஈட்டிய பணம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பல குழந்தைகள் இது போல தீய வழியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். தங்கள் நண்பர்களை நல்வழிப் படுத்த இவர்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று.

தினமும் மாலையில் வங்கியில் இருக்கும் பணம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியில் தொண்டு நிறுவன கண்கானிப்பாளரால் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த சேமிப்பு பழக்கத்தினால், புகைபிடித்தல், அடிக்கடி சினிமாவுக்கு செலவு செய்தல், குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கவழக்கங்கள் குறைந்திருப்பதாக இக்குழந்தைகளே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

படிப்பு பிடிக்காமல் விட்டை விட்டு ஓடிவந்த அஜய்க்கு மேனேஜர் வேலை மிகவும் பிடித்தமான வேலை. உடையை அழகாக 'டக்கின்' செய்து, சர்டில் மேல் பட்டனை போட்டு, தலையை கோதி, ஒரு எக்ஸக்யூடிவ் ரேஞ்சுக்கு ஸ்டைலாக "கவுண்டரில்" அவன் உட்கார்ந்து இருக்கும் அழகே தனி. ..:-)))...புதியதாக வரும் கஸ்டமர்களின் பெயரை கேட்பதும், அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்து சொல்வதும், கறாராக நடந்து கொள்வதும்....பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.

இந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பொறுப்புணர்ச்சி. தினமும் பணத்தை சரியாக கணக்கு பார்த்து வாங்கி, 'கஸ்டமர்களின்' பாஸ் புத்தகத்தில் வரவு வைத்து, அதை தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்து, தங்களைப் போன்று கஷ்டப்பட்டு பணம் ஈட்டும் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.

இவர்களைப் போல தெருவில் வாழ்ந்து் 'சலாம்பாலக் ட்ரஸ்டால்' வழிகாட்டப்பட்டு, இன்று ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகியிறுக்கும் விக்கி என்ற இளைஞனைப் பற்றி அடுத்த பதிவில் போர்போம்.