Tuesday, March 31, 2009

மௌனங்கள்...Childhood Interrupted


குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள், அரசாங்கத்தின் உறுதி மொழிகள் இருந்தும் பிஞ்சுகள் நாளும் ஏதோ ஒரு முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டும் தானிருக்கிறார்கள். காலங்காலமாக நம் சமூகத்தில் நடந்தேறிக் கொண்டிருந்த சில மன்னிக்க முடியாத குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வர தொடங்கியிருக்கின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் மட்டும் 3 சம்பவங்கள். தந்தை என்று சொல்லி கொண்டிருந்த ஜென்மமே சொந்த மகளை கற்பழித்த கொடூரம். இதில் தாயும் உடந்தை. நினைத்துப் பார்க்கவே பதைக்கிறது. இதைத் தொடர்ந்து பஞ்சாபிலும், இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அல்லும் பகலும் காத்தருளும் ஒரு கட்சிப் பிரமுகரின் மகள், தன் தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறி இருக்கிறார்.

பாலியல் கல்வியின் அவசியத்தை ஆராய்ச்சிகள் மூலமும், எடுத்துகாட்டுகள் மூலமும் எடுத்துக் கூறியும், தங்களின் வக்கிர மனதுக்கு தீனி போடவே, அரசியல் கட்சிகள் பாலியல் கல்வியை வேண்டாமென்று ஒதுக்கி வருகிறார்கள் என்று தான் நான் கூறுவேன். பண்பாடு, கலாச்சாரம், வெங்காயம் என்று கூவி, கூவி இளைய தலைமுறையினருக்கும் இடையூறு விளைவித்து கொண்டிருக்கிறார்கள். வக்கிர மனங்கொண்ட அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.


குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறை அவர்களது சுதந்திரத்தையும், உரிமையையும் வன்முறைக்குள்ளாக்கி, அவர்களின் இருப்பை முடக்கி நிர்மூலமாக்குகின்றது.இது பெரும்பாலும் குடும்பத்துக்கு வேண்டியவர்களாலும், உறவினர்களாலுமே ஏற்படுகிறது என்பது தான் கொடுமை. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இரண்டு பாலாரும் வன்முறைக்கு உள்ளாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.


ஆராய்ச்சிகள் மூலமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நேர்காணல் மூலமும் இது போன்ற உண்மைகள் தெரிய வருகிறது. அதை வைத்து தான் பாலியல் கல்வியில் பாடங்களை வகுத்து இருக்கிறார்கள். இந்த வன்முறைகளிலிருந்து எவ்வாறு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறுவதே பாலியல் கல்வி. மற்றபடி பாலியல் கல்வி என்பது உடலுறவைப் பற்றி சொல்லிக் கொடுப்பது அல்ல. குழந்தைகளுக்கு யாரிடமிருந்து, எவ்வாறு இது போன்ற தொல்லைகள் வருகிறது, அதை எவ்வாறு அடையாளம் காண்பது, அதிலிருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, போன்ற பயிற்சிகள் அடங்கிய ஒரு கல்வி முறை தான் பாலியல் கல்வி.

நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அதை உணர்ந்து, முன்கூட்டியே மற்றவர்களிடம் எடுத்துக் கூற ஒரு நம்பிக்கையை ஊட்டவே இந்த பயிற்சி. 'பாலியல் கல்வி' என்றால் தகாத ஒன்றாக பார்ப்பதால், சிலர் அதை 'வாழ்வியல் கல்வி' என்றும் கூறுவர். பெற்றொர்களும் ஆசிரியர்களும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் யாராவது ஒருவரிடமாது அக்குழந்தை புகார் கூற வாய்பிருக்கிறது. ஒருவர் தவறு செய்தால், மற்றவரிடம் நாம் கூறலாம் என்ற நம்பிக்கை வரும்


பாலியல் கல்வியை முதலில் மகாராஷ்ட்ரா மாநிலம் அரசு தான் தடை செய்தது. அந்த தடைக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் பேராதரவு அளித்தன. அதைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் தடை செய்தன.



இந்திய அரசு தரப்பில் நடந்த ஒரு ஆராய்ச்சியில், மகாராஷ்டிர மாநிலத்தில், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், 49.43 % சதவீத ஆண் குழந்தைகளும் 50.57 % சதவீத பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக அவ்வறிக்கை சுட்டுகிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 61.73% பேர் குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்களாம். 5 வயதில் ஆரம்பித்து, 10 வயதில் வேகம் கூடி, 12-15 வயதில் வன்முறை உச்சத்தை அடைகிறதாம். (இதை டைப் செய்யக் கூட எனக்கு கை வரலை)
.

தங்களுக்கு நேரும் அவலங்களை தைரியமாக சொல்ல இந்தப் பிஞ்சுகளுக்கு தெரிவதில்லை. ஏதாவது ஒன்றை சொல்லி அவர்களை அடக்கி விடுவது எளிதான ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது. வெளியே சொல்லுவதற்கான ஏதுவான சூழ்நிலை எப்பொழுதும் அமைவதில்லை. சொன்னால் அவர்கள் மீதே பழி விழும் என்று பயந்து வெளியே சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும், குடும்ப கவுரவத்தை காரணம் காட்டி பெற்றோர்களும் உறவினர்களும் அதை மூடி மறைத்து விடுவார்கள். மாமாக்களும், சித்தப்பாக்களும் இது போன்ற விளையாட்டுக்கள் விளையாடாமல் இல்லை. பள்ளியில் வாத்தியாரின் தொடுதல் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இதை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எதையும் தங்களிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு பெற்றோர்களே இப்படி அயோக்கியர்களாக இருந்தால் என்ன செய்வது.இது மாதிரியான சூழ்நிலையில் தான் ஆசிரியர்களும், நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். இந்த உதவியை நாடுவதற்கான தைரியத்தை வாழ்வியல் கல்வி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்த மௌனங்கள் கலைக்கப்படவேண்டியவை...நண்பர்களாக, ஆசிரியர்களாக, பக்கத்துவீட்டுகாரர்களாக, தாயாக, தந்தையாக நாமும் இந்த மௌனத்தை கலைப்போம்

23 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம். வெளியே ப்ரச்சனைன்னா வீட்டில் சொல்லலாம்..வீட்டில் ப்ரச்சனைன்னா ன்னு பயந்துகிடப்பவங்களுக்கு நீங்க சொல்றாப்பல வெளியே ஒரு நட்புக்கரம் வேண்டும்..வாழ்வியல் கல்வி தேவை தான்.

அபி அப்பா said...

பாலியல் கல்வியை விட இந்த வாழ்வியல் கல்வி நிச்சயம் தேவை தான்!மங்கை சூப்பர் பதிவுங்க இது!

Thekkikattan|தெகா said...

மங்கை,

மற்றொரு அவசியமான பதிவுங்க! சொல்ல வந்ததை நல்லா அழுத்தி சொல்லியிருக்கீங்க.

இது போன்ற குழந்தைகள் அப்யூஸ் உலகம் தழுவிய முறையில் பரவிக்கிடக்கிறதென்றாலும், இந்தியாவில் அதிகமாக நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக படுகிறது.

நீங்கள் கூறியபடி நம் சமூகத்தில் "வெளியே தெரிந்தா வெக்கக் கேடு"ன்னு குழந்தையின் வலியை விலக்கிவைத்துவிட்டு வயது வந்தோரின் பக்கமே சட்டமும், சரி வீட்டு மக்களும் சரி சாய்கிறார்கள். இந்த பள்ளிகளில்'பாலியல் கல்வி' கொடுப்பது, தனக்கு நடப்பதை வெளியே சொல்வதற்கேனும் ஒரு வடிகாலாக அமையலாம்.

எனக்குத் தெரிந்து நிறைய நடுநிலை பள்ளிகளில் இது போன்ற அநீதி பள்ளி ஆசிரியர்களின் மூலமே நடைபெறுவதாக காண முடிகிறது. மீண்டும், மீண்டும் அது போன்ற ஆசிரிய/யைகள் பள்ளிகள் மாற்றி மட்டும் போடப்பட்டு போகுமிடமெங்கும் அதே பிரச்சினை கிளப்புகிறார்கள்.

சட்டம் கொஞ்சம் வலிமை உள்ளதா ஆனாதாங்க இதற்கு விடிவு.

மங்கை said...

நன்றி லட்சுமி..

அபி அப்பா...பாலியல் கல்வி தேவைனு நான் பதிவு போட்டா நீங்க இப்படி சொல்றீங்க... அப்புறம் ஒரு விஷ்யம்..பாலியல் கவ்லி தான் இப்பொ வாழ்வியல் கல்வின்னு பெயர் மாற்றம் பெற்றிருக்கு...

மங்கை said...

//நீங்கள் கூறியபடி நம் சமூகத்தில் "வெளியே தெரிந்தா வெக்கக் கேடு"ன்னு குழந்தையின் வலியை விலக்கிவைத்துவிட்டு வயது வந்தோரின் பக்கமே சட்டமும், சரி வீட்டு மக்களும் சரி சாய்கிறார்கள்.//

நூற்றுக்கு நூறு சரி தெகா.. குழந்தைகளை எம்பவர் பண்ண வேண்டும்.. இது தான் லாங் லாஸ்டிங் சொல்யூஷன்

யட்சன்... said...

பிரச்சினையின் தீவிரத்தை நாம் இன்னமும் முழுதாய் உணரத்துவங்கவில்லை....என்பதையே தொடரும் சம்பவங்கள் உணர்த்துகிறது.

பெண் குழந்தைகளை சூழ்ந்திருந்த இந்த அபாயம் இப்பொழுது ஆண் குழந்தைகளையும் சூழத்துவங்கியிருக்கிறது.

இதை அரசாங்கம்தான் ஆரம்பிக்க வேண்டியதென்பதில்லை...நாம் ஒவ்வொருவரும் முனைந்தாலே இதை சாதிக்க முடியும்...நான் இந்த முயற்சியினை இன்றே துவங்குகிறேன்...

காட்டாறு said...

Mutru pullai vaippavar yaar? Naam thaan. Indrey veettil thuvanguvom. Let us prepare ourselves and bring up our children to speak freely without any inhibition about what is happening to them and within them.

கோபிநாத் said...

யட்சன் அவர்களின் பின்னூட்டத்தை வழிமொழிக்கிறேன்.

பாலியல் கல்வியின் அவசியத்தையும் தேவையும் உணர்த்துக்கிறது பதிவு.

முன்னோர்கள் செய்யதை பற்றி பேசமால் இன்னோர்களும் வருபோர்களும் இதை உணர்ந்து நம்மாள் முடிந்தை குழந்தைகளுக்கு செய்ய வேண்டும்.

KarthigaVasudevan said...

வாழ்வியல் கல்வி மிக்க அவசியம் தான் ,முதலில் பெற்றோர்களிடம் இருந்து இதை தொடங்கலாமே,ஏனெனில் நம் இந்தியாவில் பண்பாடு...கலாசாரம் என்ற மகாப் பெரிய திரைகளைப் போட்டு பெற்றோர்களே வயது வந்த பெற்றோர்களே இன்னும் பல விசயங்களில் தெளிவில்லாமல் தான் இருக்கிறார்கள்,அவர்களுக்கே பாலியல் குறித்து ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும் நிலையில் விவரம் அறியா குழந்தைகளுக்கு எங்ஙனம் விளக்கிப் புரிய வைக்கப் போகிறார்களோ?
குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் நிச்சயம் தடுக்கப் பட்டே ஆக வேண்டும்,பெற்றோர்கள் வேலைப்பளு ...சோர்வு என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லாமல் தொடர்ந்து தங்கள் குழந்தைகளின் செய்கைகளை கண்காணித்து ஒரு நல்ல நண்பனைப் போலவோ அல்லது தோழியைப் போலவோ தம் குழந்தைகளிடம் பேசத் தொடங்குவார்கள் எனில் பாலியல் கல்வியை அங்கிருந்தே ஆரம்பிக்கலாம்.

Sanjai Gandhi said...

பாலியல் என்பது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டியது தான். அதற்கு தடை போடுவது முட்டாள் தனம்.

ஆனால் முதலில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களுக்கு அதை முழுமையாகக் கற்றுத் தர வேண்டும். இல்லை எனில் அதையும் தவறாக பயன்படுத்தும் சில மிருங்கங்கள்.

நல்ல பதிவு அக்கா. விழிப்புணர்வு எற்படுத்தனும்.

நாகை சிவா said...

மங்கை!

எபோஅ :)

இதை பற்றி பசங்களுக்கு பாடம் எடுப்பதுக்கு முன்பு நம் அரசியல் வாதிகளுக்கு பாடம் எடுக்கனும். அதை பற்றிய புரிதலே இல்லாமல் தான் நம் பல தலைவர்கள் உள்ளார்கள் என்பது என் கருத்து!

மங்கை said...

யட்சன்..

ஆண் குழந்தைகள் அதிக அளவில் இது போன்ற வன்முறைக்கு ஆளாகிறார்கள்.. இதனால் அவர்கள் வாழ்க்கையில் பல தவறுகளை செய்ய தூண்டப்படுகிறார்கள் என்பது இன்னொரு வேதனையான விஷயம்...

மங்கை said...

ஆத்தா காட்டாறு... எப்படி வந்தீங்க.. வழி தெரிஞ்சதா..:-)

சரியா சொன்னீங்க..அவர்களுக்கு உள்ளே ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் உணர்த்த வேண்டும்

மங்கை said...

நன்றி கோபி... நீங்க சொன்ன மாற்றத்தையும் பண்ணிட்டேன்..:-)

மிஸச்.தேவ்

பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எல்லோருக்கும் விழிப்புணர்வு தேவைதான்

மங்கை said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//ஆனால் முதலில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களுக்கு அதை முழுமையாகக் கற்றுத் தர வேண்டும். //

ஆசிரியர்களுக்கென்று தனிப் பயிற்வி இதுல இருக்கு சன்ஜய்

கருத்துக்கு நன்றி

மங்கை said...

நாகை சிவா said...

// எபோஅ :)//

இது என்ன சிவா..:-)))

அரசியல் வாதிகளுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கா என்ன...

கவிதா | Kavitha said...

குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லித்தரவேண்டும், அது மட்டும் தான் அவர்களை இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும்.பள்ளியில் பாலியில் கல்வி கண்டிப்பாக ஒரு பாடமாக்கபட வேண்டும்..

நல்ல பதிவு மங்கைஜி..!! :)

தமிழ் அமுதன் said...

திரை படங்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ,இணைய தளங்கள் ஆகியவற்றில் பாலியல் சம்பந்தமான குப்பைகளை தடுத்து நிறுத்த சட்டம் போட வக்கில்லாத, அரசியல் வாதிகள்
பாலியல் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்!!! முதலில் இவர்களுக்கு பாடம்
புகட்ட வேண்டும்! ஊரெல்லாம் நோய் கிருமிகளை பரப்பிவிட்டு மருத்துவ மனையை
இழுத்து மூடுவது போல உள்ளது இவர்கள் செயல் .

தேவன் மாயம் said...

பாலியல் கல்வி கட்டாயம் ஒரு புது வடிவம் எடுக்க வேண்டும்.
”நான் கட்டாயம் இது போட்டுக்காம போக மாட்டேன்” போன்ற அரை வேக்காட்டு அரசு அறிவிலிகலும் இருக்கிறார்கள்! திறமை உள்ளவர்கள் வெளியில் இருக்கிறார்கள்!!

DR.தேவா.

தேவன் மாயம் said...

உங்கள் பதிவு அருமை...

தேவா.

மங்கை said...

நன்றி கவிதா..

//இணைய தளங்கள் ஆகியவற்றில் பாலியல் சம்பந்தமான குப்பைகளை தடுத்து நிறுத்த சட்டம் போட வக்கில்லாத, அரசியல் வாதிகள்//

உண்மை அமுதன்....இதன் தொடர்ச்சியாக கவனிக்கப்படவேண்டிய விஷ்யங்கள் நிறைய இருக்கிறது..நன்றி

மங்கை said...

நன்றி திரு. தேவா

harveena said...

romba nalla padivu madam,,, welldone,,an adequate amount of specifications ,,And, what MR.Kattaru said is absolutely right enough,, along with sex education,, personality development must also be thought aside for them to be unambiguous on the whole,,,