Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



மீண்டும் ஒரு புதிய ஆண்டு

நாம் சோர்ந்தாலும் எதுவும் நமக்காக நிற்கப் போவதில்லை

என்பதை உணர்த்தும் காலப் பாதையின் மற்றொரு மைல்கல்

புதிய கனவுகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய பொறுப்புகள்

தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக,

இந்நாட்டின் ஒரு குடிமகனாக

நம் பொறுப்பை மனதில் கொண்டு

புதிய உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும்

புத்தாண்டை எதிர் கொள்வோம்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tuesday, December 09, 2008

மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனித நாகரீகத்தின் பயனத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். அந்த பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நடைமுறையாக்க இந்த மனித உரிமை நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.


இந்த ஆண்டிற்கான கருப்பொருள் " கெளவுரவமும், நீதியும் நம் அனைவருக்கும் ". உலகமிருக்கும் நிலவரத்திற்கு மிக பொருத்தமான கருப்பொருள்.

இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் 6 பேரை (5 தனி நபர், ஒரு நிறுவணம்) ஐநா சபை தேர்வு செய்திருக்கிறது. இதில் இறந்த பிறகு கொடுக்கும் பாஸ்துமஸ் (Posthumous) பரிசிற்காக இரண்டு பேர் தேர்ந்தெடுத்தப் பட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்றுக் கொண்ட முயற்சியில் கொடூரமாக கொள்ளப்பட்ட பெனாசீர் பூட்டோ,
மற்றும் பிரேசில் நாட்டில் நிலபுலன்கள் இல்லாத பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய கன்னியாஸ்திரி சிஸ்டர். டோரதி ஸ்டாங்க் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. டோரதி ஸ்டாங்க் பல கொலை மிரட்டல்களுக்கு மத்தியுலும் தளராது தைரியமாக தான் ஏற்றுக் கொண்ட பணியை செய்து வந்தவர். இவர் கொல்லப்பட்ட போது நடந்த சம்பவத்தை கேட்டால், நாம் எல்லாம் எவ்வளவு சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணத் தோன்றுகிறது. முன்று வருடங்களுக்கு முன்பு, அமேசான் காட்டுக்குள், அங்கு வாழும் பழங்குடியினருக்காக போராடிக் கொண்டிருந்த போது, இரண்டு பேர் துப்பாக்கியுடன் இவரை வழி மறித்தனர். அவர்கள் யாரால் எதற்காக அனுப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த இந்த மூதாட்டி, அவர்களை அன்புடன் வரவேற்று, அமைதியாக 15 நிமிடங்கள் பேசி இருக்கிறார். அவரின் போராட்டத்திற்கு பின்னால் இருக்கும் நியாயத்தை விளக்கி இருக்கிறார். கையில் இருந்த ஒரு வரை படத்தை வைத்து பழங்குடியனருக்கு சொந்தமான நிலத்தை சுட்டி காட்டி இருக்கிறார். எந்த நியாயத்தையும் கேட்கிற மன நிலையில் வந்தவர்கள் இல்லை என்று தெரிந்ததும், கடைசியில் தன் கைப்பையில் இருந்த பைபிலை எடுத்து, " எனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இது தான்" என்று கூறி ' "Blessed are the peacemakers, they shall be called children of God, Blessed are they who hunger and thirst for justice, for they shall be satisfied" என்ற வாசகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதே கொல்ல வந்தவர்கள் ஸ்டாங்கை 5 முறை சுட்டு விட்டு ஓடி விட்டனர். 79 வயதில் இப்படி ஒரு மன வலிமையா..ம்ம்ம்

இந்த பரிசை வாங்கப் போகும் மற்றவர்கள்...

ராம்சே க்ளார்க்: முதல்ல நம்ம ஹீரோ....:-))...யூ எஸ் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியவர். அமெரிக்க னித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் மரண தண்டனை முறை ஒழிக்கப்படுவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், சதாம் மீதான வழக்கில் சதாமிற்கு ஆதரவாக வாதாடியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். உலகமயமாக்கல் என்பது சாதாரன மனிதனுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் ஊடுருவல் என்ற கருத்தை உடையவர். கொல்கத்தாவின் நந்திகிராமில் நடந்த கொடுமையின் போது அங்கு சென்று மக்களை நேரில் சந்தித்து நடந்ததை தெரிந்து கொண்டவர்.

மற்றொரு முக்கிய நபர் காங்கோ நாட்டை சேர்ந்த டாக்டர். டெனிஸ் முக்வெஜ். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களின் நலத்திற்காக ஒரு மருத்துவமனை நிறுவி தொண்டாற்றி வருபவர். இவரின் மருத்துவமனைக்கு இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் நாளொன்றிற்கு 10 பேர் வந்து போகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்து இலவசமாக சிகிச்சையும் அளித்து வருகிறார்.


ஜமாய்க்கா நாட்டில் மனித உரிமைக்காக போராடும் டாக்டர். கேரொலின் கோம்ஸ் க்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவர் Jamaicans for Justice என்ற அமைப்பின் மூலம் ஜமாய்க்கா நாட்டில் நடக்கும் மனித உரிமை அத்து மீறல்களுக்கு எதிராக அரும்பணியாற்றி வருகிறார்.


ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற நிறுவனமும் இந்த ஆண்டு கவுரவிக்கப் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனம் உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்து, சில ஆக்கப்பூர்வமான பரிந்துறைகளை செய்து வருகிறது. மேலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை நிறுவ காரணமாக இருந்ததும் இந்நிறுவனம் தான்.

எல்லாம் சரி. உலக அளவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை மறுப்பதிற்கில்லை என்றாலும் நாளுக்கு நாள் இந்த மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். வருடா வருடம் பெரிய அளவில், உலகம் முழுவதும் இந்த நாள் வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுவ தென்னமோ உண்மை. வாய் கிழிய பேசும் தலைவர்கள், அரசியல் ஆலோசகர்கள், சட்ட நிபுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என இந்நாளில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சொல்பவர்கள் ஏராளம். ஆனால் இந்த கருத்து பரிமாற்றங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்) ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறைக் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர் என கூறியிருக்கிறது. ரவுடிகள் என்கெளவுன்ட்ரில் கொல்லப்படுவது சாதாரணமாகி வரும் இந்நாளில் அவர்களை உருவாக்குபவர்களை என்ன செய்ய முடிந்திருக்கிறது நம்மால். கொல்லப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள், தாதாக்கள் என்ற காரணத்தால் அவர்களின் மரணமும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் நம்முள்ளே எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் உண்மைதானே. இது போல செயல்பாடுகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், வீர பதக்கமும் கொடுத்து, மறுநாளே பெரிய வெற்றி விழாக்கள் கொண்டாடும் ஆட்சிகளையும் நாம் பார்த்துவிட்டோமே.

அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொல்லுவது மற்றறொரு முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பது என் எண்ணம். திறைமறைவில் இருக்கும் சில பெரும்புள்ளிகளும் காவல் துறையும் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு நாடகம்.


இந்தச் சாவுகளில் எங்கே இருக்கிறது நீதியும் கெளரவுமும்.....ம்ம்ம்ம்

வாழ்க ஜனநாயகம்..!

Monday, December 01, 2008

உலக எய்ட்ஸ் தினம் 2008

Support World AIDS Day

சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் முதலிய வேறுபாடுகளை அறவே தவிர்த்திடுவோம்.... உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை

தெரிந்து தெளிவடைவோம்

தெளிவடைந்து கைகொடுப்போம்

நாம் கோரும் உரிமைகளை அனைவருக்கும் அளிப்போம்..

கோவையில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தங்களுக்கென ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

Sunday, October 19, 2008

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர முடியவில்லை. அப்படி அவர்களின் நிலையில் என்னை வைத்து பார்க்க, நிஜத்தில் அனுபவிக்க ஒரு வாய்ப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணங்கள், அனுபவங்கள். இந்த அனுபவம் மூலம் என் பணி சார்ந்த எண்ணங்களை இன்னும் பட்டைத் தீட்டிகொள்ள முடிந்தது.

இன்று வரை இந்நோயை ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமாகத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் சமுதாய, பொருளாதார, உளவியல் கூறுகள் சம்பந்தப் பட்டிருப்பதை உணர மறுக்கிறோம். மருத்துவமனைகளில், சமுதாயத்தில், தொழில் செய்யும் இடங்களில் பல அவமானங்களை பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொள்கிறார்கள். இதை பற்றி பேசுவதும், அச்சச்சோ என்று உச்சு கொட்டுவதும் எவ்வளவு சுலபமாக வேலை என்பதை இப்பொழுது உணர்கிறேன். (அதாவது என்னைப் போல இந்தத் துறையில் இருப்பவர்களை மட்டுமே சொல்கிறேன்). இந்த பரிதாபம் காட்டுதல் எந்த வகையில் அவர்களுக்கு இது நாள் வரையில் உபயோகமாக இருந்திருக்கிறது, என்றால், இங்கு எழுதுவதால், சில வலை நண்பர்கள் நேராக சென்று
மீனாட்சி போன்றவர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

இது தவிர கொள்கையளவிலும் சில மாற்றங்கள் தேவை. அதை தொடர்ந்து சம்பந்தப் பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கண்ணோட்டத்திலும் மாற்றம் வரவேண்டும். அவ்வாறு சில மாற்றங்களை கொண்டு வர சமீபத்திய அனுபவம் எனக்கும் என் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வாய்ப்பாக கிடைத்தது. இந்த அனுபவம் என் சொந்த முயற்சியால் கிடைத்த ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் உண்மையிலே பெருமை அடைகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொண்ட முயற்சியும் கிடைத்த அனுபவமும் அப்படி.

தில்லியில் உள்ள அரசு மருத்துவனைகளில் இயங்கி வரும் ஒருங்கினைந்த எச்ஐவி சோதனை மற்றும் ஆலோசனை மையங்கள், (Integrated Counselling and Testing Centres) எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்களை மிக மோசமாக நடத்துவதாக சில பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டன. அதனால் தில்லியில் உள்ள அனைத்து தன்னார்வ சோதனை மையங்களுக்கும் ஒரே நாளில் எந்த முன்னறிவுப்புமின்றி சென்று பார்த்து வர அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் படி குழுவிற்கு 5 பேர் என 7 குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. நான் இருந்த குழுவிற்கு தென் தில்லி பக்கம் உள்ள 7 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டது.

முதலில் சென்ற மருத்துவமனையில் நாங்கள் இருப்பதுனாலோ என்னமோ எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆலோசனைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய சொல்லி விட்டு அடுத்த மருத்துவமனைக்கு சென்றோம்

அடுத்த மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால், உண்மையை கண்டுபிடிக்க வேறு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசித்தோம். நான் ஒரு யோசனை கூறினேன். நம்மில் யாராவது இரண்டு பேர் எச்ஐவி ஆலோசனைக்காக செல்வதைப் போல சென்று பார்க்கலாம் என்றேன் (Mock patient). சொன்னது தான் தாமதம் எல்லாரும் என்னை ஒரு எதிரியை பார்ப்பதைப் போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதே சமயம் யாரும் அவ்வாறு செல்ல முன்வரவும் இல்லை. ஏனென்றால் ஆலோசனைக்காக சென்றால் முதலில் காத்திருக்கவேண்டும். காத்திருக்கும் போது வேறு யாராவது நம்மை பார்க்க வாய்பிருக்கிறது. இது அவர்கள் 'ஊராம்'. அதனால் அவர்கள் பெயர் கெட்டு விடுமாம். இது தானா பிரச்சனை, சரி, நான் தானே யோசனை கூறினேன் நானே செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் காரை விட்டு இறங்கினேன்.

முதலில் ஆலோசனை மையம் எங்கிருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். இதற்கும் ஒரு மருத்துவமனை விதி இருக்கிறது. எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்கள் மற்றவர்களை கேட்க சங்கடப்படுவார்கள். அதனால் மருத்துவமனை நிர்வாகம் தகுந்த வழிகாட்டி பலகைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால் விசாரித்தே செல்ல வேண்டியிருந்தது. ஒரு வழியாக கண்டுபிடித்து ஆலோசனை மையத்தினுள் நுழைந்தேன். நான் சென்ற போது எனக்கு முன்னால் 8 பேர் இருந்தார்கள். ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இருக்கட்டும் என்று 'பெஞ்சில்' அமர்ந்து கொண்டேன்.

முதல் 10 / 15 நிமிடங்கள் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நண்பர்களே, அதற்குப் பிறகு காத்திருந்த ஒரு மணி நேரம் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. மிகப்பெரிய அனுபவம். வெராண்டாவில் சென்றவர்கள் என்னை பார்த்த பார்வை,பொது மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஒரு பார்வை திரும்பி பார்க்காமல் போகவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அப்படி சந்தேகப்பட்டு ஆலோசனைக்காக வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது. பாதிக்கப்பட்டவராக நடித்துக் கொண்டிருக்கும் நமக்கு, டெஸ்ட் ரிசல்ட் பற்றிய கவலையில்லை. ஆனால் அவர்களுக்கு???...ம்ம்ம்ம்ம்.

இதனிடையே காரில் காத்துக் கொண்டிருந்த என் அலுவலக சகாக்கள், சமோசா வாங்கிட்டு வரவா, மிராண்டா வாங்கிட்டு வரவா என்று கைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் பதட்டம் தான். இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை, நாங்கள் வருகிறோம், ஆலோசகரிடம் பேசலாம் என்று மீண்டும் ஆரம்பித்தனர். ஒன்றும் வேண்டாம் நேரம் ஆகும் காத்திருங்கள் என்று கூறிவிட்டு அமர்ந்திருந்தேன்.

அருகில் ஒரு பெண் கலவர முகத்துடன் அமர்ந்திருந்தாள். என்னாலும் முகத்தை சகஜமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. உண்மையிலேயே எனக்கும் அடி வயிற்றில் ஏதோ பிரட்டிக் கொண்டுதானிருந்தது. மெதுவாக அருகில் வந்து 'நீங்களும் டெஸ்ட் செய்யத்தான் வந்தீங்களா". நான் எற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தின் உண்மை நிலையை உணர ஆரம்பித்தேன். "ஆமா, நானும் டெஸ்டுக்காகத் தான் வந்திருக்கேன்' என்றேன். என் உடையையும் என்னையும் மேலும் கீழும் பார்த்தாள். " ஏன்?, எப்படி?" என்றாள்.. அதாவது நான் எதற்காக டெஸ்டு செய்ய விரும்புகிறேன், எப்படி இந்த நோய்க்கு ஆளானேன் என்பதை விசாரித்தாள். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் வந்துவிட்டேன். ஆனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள இயலவில்லை. கொஞ்சம் மெளனமாக இருந்தேன். அந்தப் பெண், தன் கணவர் ஒரு லாரி ஓட்டுனர் என்றும், கணவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்த பின்னர், நேற்று வந்து டெஸ்டுக்காக இரத்தம் கொடுத்துவிட்டு சென்றதாகவும், இன்று ரிசல்ட் கிடைக்கும் என்றும் கூறினாள். அவளின் மனநிலையை உணர முடிந்தது.

என் மெளனத்தை பார்த்து" பரவாயில்லை, சொல்லுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்றாள்'. நான் சொன்னேன், " எப்படி என்று தெரியவில்லை, மருத்துவர் இங்கு அனுப்பினார்" என்றேன். ரொம்ப புத்திசாலி என்று எனக்குள் நினைப்பு. உடனே அந்தப் பெண், " உங்கள் கணவர் அடிக்கடி வெளியூர் செல்பவரா" என்றார். ஆஹா இது என்னடா வம்பு, நாம் மேற்கொள்ளும் நடிப்பில் பாவம் கணவரை ஏன் இழுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் மேல் தவறில்லை. நியாயமான கேள்வி தான் கேட்டாள். நான் 'இல்லை' என்றேன். காரணத்தை சொல்ல விரும்பாதவள் போல முகத்தை திருப்பிக் கொண்டேன். நடிப்பதற்கே இப்படியென்றால்... ம்ம்ம்
என் முறை வந்ததும் உள்ளே சென்றேன். ஆலோசகரும் அவரின் சகாக்களும் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தனர். என்னைப் பார்த்ததும் அந்த அறையே அமைதியானது. நான் தனியாக பேச விரும்பவதாக கூறினேன்.

அதற்கான வசதி இங்கில்லை, இப்படியே பேசுங்க என்றார். நான் "டெஸ்ட் செய்ய வந்தேன்" என்றேன்.

"உங்களைப் பார்த்தா படித்து ஏதோ நல்ல வேலையில் இருப்பவர் மாதிரி இருக்கு?" என்றார். நான் 'ஆமாம்" என்றேன்.

"சரி ஏன் டெஸ்ட் எடுக்க விரும்பறீங்க" என்றார். 'சந்தேகம் தான்' என்றேன். உண்மையில் காலுக்கடியில் பூமி என்னை விழுங்கவதைப் போல இருந்தது.

"எச்ஐவி பற்றி தெரியுமா" என்றார்.நான் "தெரியாது சொல்லுங்கள்" என்றேன்.-எச்ஐவி பற்றிய அனைத்து தகவல்களையும் அவர் கொடுக்க வேண்டும். அவரோ எச்ஐவி ஏதோ தகாத உறவின் மூலமாக மட்டுமே வருவதைப் போல தகவல்களை அடுக்கிக் கொண்டு போனார். "தகாத உறவு" என்ற வார்த்தையை ஆலோசகர் உபயோகப்படுத்தக் கூடாது. பாதுகாப்பில்லாத உறவல்லாமல் வேறு வழியுலும் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதை கூற ஆலோசகர் மறந்துவிட்டார்.

என் பெயர், முகவரி, வயது, திருமண உறவு போன்ற தகவல்களை எழுத முற்பட்டார். நான் அதெல்லாம் பிறகு தருகிறேன், முதலில் டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். "வந்தது எச்ஐவி டெஸ்டுக்கு, இதுல என்ன இரகசியம் வேண்டி இருக்கு". இதை சொன்னது ஆலோசகர் அல்லாத வேறொருவர்.

பிறகு இரத்தம் எடுக்கப்பட்டது. அவ்வளவு தான் ஆலோசனை. டெஸ்ட் பாஸிடிவ் என்றால் என்ன, நெகடிவ் என்றால் என்ன என்பதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.எந்த வித ஆதரவான ஆலோசனையும் வழங்கப்படவில்லை.
"அவ்வளவு தானா வேறு ஏதாவது நீங்க சொல்லணுமா" என்று கேட்டேன். "வேற என்ன போய்ட்டு நாளைக்கு வாங்க...உங்க 'லக்' எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றார். எத்தனை பொறுப்பில்லாத பேச்சு!!!. அருகில் இருந்தவர்.."க்யா ஆப் மதராசி ஹே கயா" என்றார். நான் ' ஆமாம்" என்று சொன்னதும், " தமிழ்நாட் மே எச்ஐவி ஜாதா பட்தா ஜாராஹாஹே" (தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது) . நான் ஒன்றும் பேசவில்லை.

இதற்குள் என் அலுவலக நண்பர்கள் பொறுமை இழந்து அங்கு வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். ஆலோசகர் அசடு வழிந்து " மேடத்தை பார்த்ததும் நினச்சேன், அப்படி இருக்காதுன்னு" என்று அந்தர் பல்டி அடித்தார்.

"எப்படி" இருக்காதுன்னு நினச்சீங்க? படிச்சவங்க படிக்காதவங்கன்னு இந்த நோய்க்கு பேதம் வேற இருக்கா?. ஆலோசகர், "இல்லை மேடம் இருந்தாலும்...பார்த்தா தெரியும் இல்லை?"

"இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்க கூடாதுங்குறது தானே நாம் முதலில் மனதில் வைத்துக் கொள்ளவேண்டியது. எப்படி இருந்தாலும் நீங்க நடந்துட்ட முறை சரியில்லையே. படித்தவர்களிடமே இப்படி நடந்துட்டா, படிக்காத பாமரர்களிடம் உங்களின் நடத்தை எப்படி இருக்கும்!! "

இல்ல மேடம்...தினமும் 100 பேர் வராங்க...அதுனால சில சமயம் இது மாதிரி ஆயிடுது. இப்படி பல நியாயங்களை சொல்லி தன் தரப்பு வாதங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

'Unconditional Postive Regard" என்று உளவியலில் சொல்வார்கள். இது தான் எந்த ஒரு ஆலோசகருக்கும் தாரக மந்திரம். அவரிடம் உதவி கேட்டு வருபவர்களின் மேல் நிபந்தனை இல்லாத மரியாதையும் non-judgemental ஆட்டிட்யூடும் தேவை. ஆலோசகர் மட்டுமல்ல மற்ற மருத்துவ ஊழியர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏன், நாமே இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


இந்த இடத்தில் நான் மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.
அலோசகர்கள் தரப்பு வாதங்களையும் நாம் ஒரேயடியாக ஒதுக்க முடியாது. முதுகலை பட்டதாரிகளான இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 6 அல்லது 7 ஆயிரம் ரூபாய். அவர்களின் சமுதாய, குடும்ப பொறுப்புகளையும் அதிகாரிகள் நினைவில் கொள்ளவேண்டும். எச்ஐவி குறித்த எந்த ஒரு திட்டத்தையும் வகுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அடிப்படை. அதை சரிவர தொகுத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆலோசகர்களிடம் இருக்கிறது. அவர்கள் பணி புரியும் சூழல், அன்றாடம் சந்திக்க வேண்டிய மக்கள், தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அதுவே ஒரு பெரிய வேலை..அத்தனை ரெஜிஸ்டர்கள் இருக்கிறது), என பல பொறுப்புகள். பொறுப்புகள் அதிகமாகும் போது அதற்கேற்ற சன்மானத்தை எதிர்பார்ப்பது நியாயம் தானே. எது எப்படி இருந்தாலும் அவர்களின் செயலை இங்கு நியாயப்படுத்த முடியாது.

பாதிக்கப்பட்டவளாக நான் நடித்த அந்த 1 மணி நேரம் எனக்குள் ஓடின எண்ணங்களை இங்கு சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இது போல எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் ஏராளம். ஆலோசனைக்காக வருவது முதல் தொடர்ந்து சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஒரு அனுபவம் காத்திருக்கும். வீட்டில், தொழில் புரியும் இடத்தில், பொதுவாழ்வில், நண்பர்கள் மத்தியில் என அவர்கள் பல எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வேறு எந்த நோய்க்கும் இல்லாத ஒன்றாக, இந்நோய் வாய்ப்பட்டவர்கள் சமுதாய, பொருளாதார, உளவியல் மற்றும் மருத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் ஓரளவிற்காவது மாற்றம் வரவேண்டுமென்றால் கொள்கை மாற்றங்களுடன் எண்ணமாற்றங்களும் வரவேண்டும். சகமனிதன் சுதந்திரம் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.


பாதிக்கப்பட்டவர்களின் சமுதாய வாழ்க்கையில், அவர்களின் ஒழுக்கம் மீதான பொறுப்பில்லா விமர்சனங்கள், கருத்துக்களாக கண்ணோட்டங்களாக இவர்கள் மீது விழுந்து, அவமரியாதையையும், தாழ்மையுணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 'பண்பு ', 'பண்பாடு' போன்ற வார்த்தைகளை பாலியல் தொடர்பான செயல்களுக்கு மட்டுமே உபயோகிக்காமல், சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கே தயங்கும் நாம் அதற்கான நியாயமான காரணங்களை மனதில் நிறுத்தியே அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளலாம் அல்லவா?. ...ம்ம்ம்..

Friday, October 03, 2008

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில் இந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சிலருக்கு சில மருத்துவ காரணங்களினாலும் (estrogen and progesteron குறைவினால்) உளவியல் காரணங்களினாலும் அதுவே மிகப் பெரிய மன அழுத்ததை கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை. இந்த மன அழுத்தம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டி விடும் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

'போஸ்ட்பார்டம் ஸைக்கோசிஸ்' (Postpartum Psychosis) என்று அழைக்கப்படும் இந்த வகையான மன அழுத்தம் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?. பேறுகாலத்திற்குப் பின் சில பெண்களுக்கு சில பல காரணங்களினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.

ஒன்று சாதாரண மன உளைச்சலுடன் ( postpartum depression) கூடிய மன அழுத்தம். மற்றொன்று, இந்த சாதாரண மன உளைச்சல் அதிகமாகி, அதன் விளைவாக ஏற்படும் போஸ்ட்பார்டம் ஸைக்காசிஸ் என்கிற மன நோய். இந்நோய் மகப்பேற்றிற்குப் பின், ஆயிரம் பெண்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படுகிறது. இந்த மன நோயால் பாதிக்கப்படும் பெண்களில் ஐந்து சதவீதம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தலாவது சம்பவம் நடந்தது 1989ல். எங்கள் வீட்டு கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை பார்த்த பெண், கட்டிட மேஸ்திரியின் ஆசை வார்த்தையில் மயங்கி, கர்பமாகி பின் கருவை கலைத்து விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது. கணவன் இந்தப் பெண்ணை தினக்கூலிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட, அது வரை அவள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில நாட்களிலேயே கணவருக்கு இவரின் கடந்த கால வாழ்க்கை தெரிய வர, கர்பமாக இருந்தவள் மீது சந்தேகம் வந்து வயிற்றில் வளரும் குழந்தை தனது இல்லை என்று கூறி விட்டு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார்.

குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், கணவனையும் எந்த விதத்திலும் சமாதானம் செய்ய முடியவில்லை என்ற கவலை எல்லாம் சேர்ந்து அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. குழந்தை பிறந்தவுடன் அவரால் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தையை கவனிக்காமல் வெறுக்கத் தொடங்கிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், உறவுக்காரர்களும் அவமானப் படுத்தும் படியாக பேச ஆரம்பித்தவுடன் மிகுந்த மன அழுத்திற்கு ஆளாகி 'போஸ்ட்பார்டம் சைக்காசிஸ்' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டார்.

கணவரின் அன்போ பிறந்த வீட்டின் போதுமான ஆதரவோ இல்லை. வீட்டில் உள்ளவர்களோ இவளுக்கு பேய் பிடித்து விட்டது, சூனியம் வைத்து விட்டார்கள் என்று கூறி மாயாஜால வித்தைகள் தான் செய்தார்களே ஒழிய அவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை கொடுக்கவில்லை. மன நோய் தீவிரமாகி, ஆறு மாதம் கழித்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்ற வாரம் நடந்த மற்றொரு சம்பவம். உறவுக்காரப் பெண் ஒருவர் சொந்த மாமனையே திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்ததும், பெற்றோர்கள் உட்பட பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். முன்னோர்களில் பெரும்பாலானோர் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி தடுத்துப் பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை.

முதல் குழந்தை ஆரோக்கியமாகவே பிறந்தது. நான்கு மாதத்திற்கு முன்னர் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை அரோக்கியமாக இல்லை. குழந்தையின் உடலில் பல கோளாறுகள். உறவில் திருமணம் செய்து கொண்டது (Inbreeding) குழந்தையின் உடல் நிலைக்கு ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவர்கள் கூறியதும் இந்தப் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

வீட்டில் இருந்தவர்கள் அதே தாயத்தும், மந்திரிப்பதும் என இருந்திருக்கிறார்களே தவிர ஒரு மனநல நிபுனரிடம் ஆலோசனை கேட்கவில்லை. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப் பட வேண்டிய நிலையிலும், நோயின் தீவிரம் தெரியவில்லை. சரியான ஆலோசனை இல்லாமல், மன உளைச்சலை பகிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப ஒரே எண்ணங்களை மனதில் வளர்த்து, சென்ற வாரம் அந்த பெண், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததும் ஆடிப்போய் விட்டேன். தில்லியில் இருந்து ஒரு வருடம் முன்பு தான் கோவைக்கு இடம் மாறினார்.

இந்நோய்க்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில காரணங்கள்:
1)முதன்மை காரணம் பேறு காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம்.
2)குழந்தைப் பிறப்பிற்கு பின் பெண்களுக்கு தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் மன அழுத்தம்.
3) தான் தாயாக இருக்க தகுதியானவரா என்ற பயம்.
4) குழந்தை பிறந்த பின் ஏற்படும் செலவுகளை நினைத்து பயம்.
5) குழந்தையை பார்த்துக் கொள்வதினால் ஏற்படும் சலிப்பு, உடல் சோர்வு.

இந்த நோயினால் பாதிக்கப் பட்ட பெண்கள் பலர் மேலே கூறிய எண்ணங்களை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது.

கர்ப்பிணி / பிரசவித்த பெண்களின் மன அழுத்தம் என்பது இன்றும் உணரப்படாத ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வு படித்தவர்களிடையே கூட மிகக் குறைவு தான். கர்பகாலத்தில் சாதாரண மன அழுத்தம் 16%ல் இருந்து 20% பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பிருந்தாலும் அதற்கு தேவையான ஆலோசனை வழங்கப் படுவதில்லை. பெண்களும் தங்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வதில்லை.

மன நல நிபுணரை ஆலோசனைக்காக அணுகுவது என்பது இன்றும் நம்மிடையே ஒரு வித தயக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தின் பார்வை என்கிற போலியான கட்டமைப்புக்காய் தாங்களே தங்களின் மீது தேவையற்ற சுய தடைகளை விதித்துக் கொண்டு அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் சரியான தீர்வுகாணாமல், பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் மூட நம்பிக்கைகளை கட்டி அழுது கொண்டு இருக்கிறோம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்லி அழுவது.....

இதைப்படிக்கும் உங்களில் சிலரேனும் உங்களின் தங்கையோ, தமக்கையோ, தாரமோ இல்லை ஏன் உங்களின் சுற்றத்தில் ஒரு சக பெண்ணுக்கு இத்தகைய ஒரு நிலை வருமாயின் அங்கே தேவைப்படும் விழிப்புணர்வினை உருவாக்கிட உதவுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோளும், இந்த பதிவின் நோக்கமும்.

டாக்டரம்மாவுக்கு ஒரு வேண்டுகோள் - நான் சொல்லி இருக்கிற தகவல்கள் எந்த காலத்துலயோ பாடத்துல படிச்சது.... ஏதாவது தப்பு இருந்தாலோ, சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்கள் விட்டுப் போயிருந்தாலோ நீங்க சொல்லுங்க டாக்டரம்மா... நீங்க இன்னும் தெளிவா சொல்லலாம்..
மேலும் படிக்க...

Tuesday, September 30, 2008

டாக்டரம்மாவின் பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு....

தமிழ்மணம் நமக்கு வேண்டிய நேரத்துல தகராறு பண்ணும்.... இருக்குற வேலைகளுக்கு நடுவுல அவசியமான ஒரு விழிப்புணர்வு பதிவு போட்ட டாக்டரம்மாவால அதை தமிழ்மணத்துல இணைக்க முடியலை...:-(

சரி இப்பவாவது நாம உறுப்படியான ஒரு காரியம் பண்ணலாம்னு அவங்க பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு..

உடலுறுப்புகள் தானம் பற்றிய தெகிக்காட்டானின் பதிவுல எழுந்த கேள்விகளுக்கு அருமையா, எளிமையா ஒரு பதிவு போட்டிருக்காங்க...

டாக்டரம்மாவின் பதிவு இதோ
http://delphine-victoria.blogspot.com/2008/09/blog-post.html

Monday, August 11, 2008

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)

தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துரையாடலே சான்று.

தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .

கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.


சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.


எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.

அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.

உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)

என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...

அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)

அப்பா?

அவர் எங்கள விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்

அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..

குட்டிப்பாப்பாவ தூக்கணும், பார்த்துக்கணும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?

(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..
கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கன்னத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)

பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).

(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).

குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)

நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?

தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)

உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)

ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.

எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுறை உபயோகிச்சா வராதாம்.

உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)

அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)

நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)

நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)

நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.

உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)

தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..
நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)

இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.


இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.


எத்தனையோ திட்டங்கள், கோடி கோடியாய் பணம் எச்ஐவி தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டங்களினால் பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்களுக்கும், அதை செயல் படுத்துவர்களுக்கும் செலவு செய்யும் பணம் அதைவிட அதிகம்.


மறுபடியும் மறுபடியும் மரணத்தைப் பார்க்கும்போது வேதனையின் கடுமை குறைவதைப்போல, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவருக்கு எல்லாமே பழகிப் போவதைப் போலத்தான் இந்தச் சிறுமியின் கதையும். அதிகாரிகளுக்கு இது மற்றொரு 'கேஸ்'.


இந்தப் பதிவினை எழுதி முடித்த அடுத்த நாள் என் தோழி ஒருத்தி கோவையில் இருந்து தொலைபேசினாள். ஒரே பெண்...நல்ல வசதியான குடும்பம்...அந்த உரையாடலையும் படியுங்கள்.


நான் - ரொம்ப நாளா பேச முடியலை .. எப்படி இருக்கே?


தோழி- நல்லா இருக்கேன்...நானும் கட்டட வேலைய பார்த்துகறதுனால பேச முடியலை.


நான் - ஓ மறுபடியும் வீடு கட்டறியா?


தோழி- இல்லை.... அப்பா படுத்த படுக்கை ஆகிட்டார். எல்லாமே பெட்ல தான். வீட்டுக்குள்ள ஸ்மெல் வருது. இன்பெக்ஷன் ஆயிட்டா என்ன பண்ண. அதுனால தான் ஒரு அவுட் ஹவுஸ் கட்டினேன். அப்பா அங்க தான் இருக்கார்.


பெரிய வீடு, நான்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி தந்தையை பார்த்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வசதி...அவர் சேர்த்த சொத்துதானே.... இயற்கையாக இருக்க வேண்டிய பாசமும், கடமை உணர்வும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. எந்த சூழ்நிலை மனிதர்களை இப்படி மாற்றுகிறது? நடைமுறைக்கு ஒத்துவராத உணர்வுகளா இவை..?...என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.


நாம் செய்யும் செயல்களுக்கு மனதிற்குள்ளேயே நியாயம் கற்பித்து நம்மையே சமாதானம் செய்து கொள்வதை தவிர நாம் வேறு என்ன செய்கிறோம்.


இந்தக் குழந்தை நீடுழி வாழ வாழத்தி வணங்குவோம்

Sunday, August 03, 2008

எனக்கு A ன்னா AIDS தான்...:-))

வணக்கம் நண்பர்களே....நல்லா இருக்கீங்களா...


நானே என் பிளாக்குள்ள போய் பல மாதங்கள் ஆச்சு...:-)).

''ஏ ஃபார்'' டேக் எழுத சொல்லி லட்சுமி ஆர்டர் போட்டுறுக்காங்க... இதுக்கு முன்னால இது போல பல டேக்குகள் சுத்தி வந்தப்போ அதையும் இதையும் சொல்லி தப்பிச்சுட்டு இருந்தேன்... இந்த தடவை முத்தம்மணி இழுத்து விட்டுட்டாங்க...

சரி நாம அப்பப்ப மேய்ஞ்சுட்டு இருக்குற நில வலைத்தளங்களை சொல்லலாம்னு வந்திருக்கேன்...இதுல உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச வலைத்தளங்கள் இருக்கலாம்...கண்டுக்காதீங்க..நமக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்...

முதல்ல நம்ம துறைல இருந்தே ஆரம்பிக்கலாம்.

A - http://www.aidsinfo.nih.gov/ -எச்ஐவி பற்றிய தகவல்களை பெற
www.naco.nic.in - இந்தியாவில் எச்ஐவி தகவல் மையங்கள், பரிசோதனை மையங்கள் பற்றிய தகவல்களை அறிய.

B- http://buydominica.com/diabetes/diabeticfood.php -சக்கரை சத்து அதிகமாக உள்ளவர்களுக்கு சில இயற்கை மருத்துவம்.

http://www.betterphoto.com/gallery/dynoGall2.asp?catID=296- அழகான குழந்தைகள்/ பூக்கள் படங்கள்... மனசை லேசாக்க நான் அடிக்கடி போகும் தளம்... என் ஃபேவரிட் தளம்..:-))

C - http://www.chandamama.com/ - குழந்தைகளுக்கான கதைகள், பொது அறிவு, பயிற்சி போன்றவை. இதில் படங்களுடன் இராமாயணம் தமிழில்.


http://currentvacancy.blogspot.com/ - அரசு பணிகளில் காலி இடங்கள்/ walk-interview - தெரிந்தவர்களுக்கு சொல்லலாம். மிகவும் உபயோகமான தளம்

D-http://www.diethealthclub.com/- சத்தான உணவு வகைகள். ஒவ்வொரு நோய்க்கும் பிரத்தேயேக உணவு முறை.

E- http://www.englishpage.com/- ஆங்கில இலக்கணம். இந்த தளத்தில் இலக்கணப் பயிற்சியுடன் கூடிய சில பாடங்களைக் காணலாம்.

F- http://www.fatfreekitchen.com/ - அவசர சமையல் மற்றும் Fat free receipies

G - http://goidirectory.nic.in/ - ஒவ்வொரு துறையிலும் அரசு சார்ந்த நிறுவணங்கள், மற்றும் அரசு இனையதளங்கள்.

H-http://www.health.harvard.edu/press_releases/importance_of_sleep_and_health.htm
தூக்கம் எவ்வளவு தேவைங்கிறதும், சரியான தூக்கம் இல்லைன்னா என்ன பிரச்சனைகள் வரும்னு பாருங்க.

I - http://idioms.thefreedictionary.com/ - இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் அதிகமாக இந்த இடியம்ஸ் உபயோகிப்பதை பார்க்கலாம். இது ஒரு பேஷன். சிலர் பேசும் போது என்ன சொல்ல வராங்கன்னு தெரியாம முழிக்க வேண்டியிருக்கிறது . இதில பாருங்க அந்த சொற்றொடர்களும் அதற்கான விளக்கமும் இருக்கும். ஆங்கிலத்தில் அதிகமாக பேச வேண்டியவர்களுக்கு இது உபயோமாக இருக்கும்.

I - http://indiacollegefinder.com/ - இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் பற்றிய தகவல்கள், நுழைவுத்தேர்வு பற்றிய தகவல்கள். மிகவும் உபயோகமான தளம்.

J - http://www.jazzles.com/html/freempd.html - குட்டீஸ்க்கு ரைம்ஸ் போட்டு காட்டுங்க - அடியோ/வீடியோ - இதில் முக்கியமாக மீன் பாடல்கள்..அருமை

K- http://www.kidsknowit.com/educational-songs/index.php - கணக்கு, உயிரியல், வேதியல் மற்றும் வாழ்வியல் பாடங்கள் பாடல்கள் வடிவில்.

L: http://www.learnenglish.org.uk/ - ஆங்கிலம் பேசவும் எழுதவும் எளிதான பயிற்சிகள்.

M - http://www.medindia.net/medicalwebsite/index.asp : மருத்துவம் சார்ந்த அனைத்து தகவல்களும், வெவ்வேறு வலைத்தளங்கள் பற்றிய தகவல்கள்.

N- http://www.nlm.nih.gov/medlineplus/menshealth.html - ஆண்ளுக்கான சில மருத்துவ தகவல்கள், மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள்.

O - http://onlinebooks.library.upenn.edu/ - சில நல்ல புத்தங்கள் இலவசமாக.

P- http://www.2dplay.com/cricket/cricket-play.htm - பொழுது போக்கிற்கு கிரிக்கெட்.

Q-http://www.quickiqtest.net/ - உங்க IQ டெஸ்ட் பண்ணுங்களேன்.

R - http://ricedish.hosuronline.com/ - சாத வகைகள்

S - http://shyamradio.com/ - ஆன் லைன் ரேடியோ - தடையில்லாமல் பாட்டு கேட்க.

T - http://tourism.nic.in/ - சுற்றுலா பற்றிய தகவல்கள்..இதில் மற்ற மாநில சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை பெறலாம். தங்கும் இடங்களுக்கு ஆன்லைன் புக்கிங்கும் உண்டு.

U - http://www.usefultrivia.com/ - பொது அறிவு கேள்விகள்/ பயிற்சிகள்.

V - http://www.vidyapatha.com/distance_edu/websitelist.php - அஞ்சல் வழி கல்வி பற்றிய தகவல்கள்.

W - http://www.womenshealthguide.net/indian-diet/ - பெண்களின் உடல்நலம்

http://www.weather.com/ - தட்ப வெட்ப நிலையை அறிய.

X-Y - Z - என்னைக்கும் நாங்க கேள்வித்தாள்ல முழுசா முடிச்சதா சரித்திரம் இல்லை...இதுக்கு மேல நமக்கு மூளை இல்லை....அம்புட்டுதான் யோசிச்சு யோசிச்சு பார்த்து ஒன்னும் நியாகம் வரலை. சோம்பேறித்தனும் தான்.

நம்ம Y for Yatchan னுக்கு இந்த வேலை ரொம்ப சுலபம்... ஐயா வாங்க உங்க லிஸ்ட போடுங்க.

Friday, April 11, 2008

தலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்


திரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை வழி மறித்து அவர் ஓட்டி வந்த காரை பறிக்க முயற்சி செய்து, பின்பு முடியாமல் போகவே அவரை அடிவயிற்றில் சுட்டு விட்டு ஓடி விட்டனர். இது நடந்து அரைமணியில் இந்தப் பகுதிக்கு வெகு அருகிலேயே, 27 வயது பெண் ஒருவரிடம் எதற்காகவோ வாக்குவாதம் செய்து பின் அவரை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். இதை காவல் துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் சம்பவம் நடந்த உடனேயே காவல் துறையினர் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.

இதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை. பிறகு அந்த நிலையிலேயே அவர் காரை ஓட்டிக் கொண்டு போய் வீட்டை அடைந்து, வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அடிவயிற்றில் குண்டு பாய்ந்தும், உடல் பருமனாக இருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார். இதை அவரே சர்தார்ஜிகளுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு " என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது " என்று சொல்லி இருக்கிறார்.

குண்டுகாயம் பட்ட சர்தார்ஜியும், கொல்லப்பட்ட பெண்ணும் வழி மறித்தவர்களிடம் போராடியதால் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.


அதிக பலன்களைத் தராத விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த இந்த பகுதி மக்களிடம், இன்று கோடி கோடியாய் பணம். அதி வேக தொழில் வளர்ச்சிக்கும், விண்ணுயர்ந்த கோபுரங்களாய் நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் இந்த விவசாய நிலங்கள் இன்று விலை போய், இவர்களை திடீர் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.

இதில் இவர்களே சிலர் நில தரகர்களாகவும் இருப்பதால், தரகு தொழிலில் இருக்கும் பலத்த போட்டியினால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று, துப்பாக்கியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ள ஒருவரிடம் இருக்க வேண்டிய உரிமம் இன்று இங்கு சர்வ சாதாரணமாக கிடைத்து விடுகிறது. இதனால் தில்லியை சுற்றி உள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் இன்று வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குர்கான் பள்ளியில் தங்களுடன் படித்த மாணவனை ஒரு சின்ன பிரச்சனைக்காக சுட்டுக் கொன்றது குர்கான் தரகர்களின் குழந்தைகள் தான்.

Thursday, February 21, 2008

காதலுக்கு காணிக்கை-மயக்கமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.

வாணிஸ்ரீ என்றாலே நினனவுக்கு வரும் இரு படங்கள், வாணி ராணி மற்றும் வசந்தமாளிகை. மிக அழகாக இருப்பார் இந்தப் படத்தில். இந்தப் பாடலில் மாளிகையும், அவரது உடையும், முகத்தில் காட்டும் உணர்வுகளும், ம்ம்ம்..ரசியுங்கள்

ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே


பெண்:கற்பனையில் வரும் கதைகளிலேநான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா

ஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட

பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூசை செய்து வர

பெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்தவண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)



Monday, February 18, 2008

ஆலோலம் பாடும் பச்சைக் கிளிகள்..

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி

நாயகனுக்கும் நாயகிக்கும் நட்பும் இல்லாத காதலும் இல்லாமல், ஒருவரின் மேல் ஒருவருக்கு மரியாதை. நாயகி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஓடக்காரனான நாயகன் பேச்சு வழக்கில் சொல்லித்தரும் பாட்டு.

நடிகர் திலத்திற்கும் நடிகையர் திலத்திற்குமே உண்டான பிசிரில்லாத நடிப்புடன் கூடிய பாடல் .
எனக்கு பிடித்த வரிகள்....

//தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக //
//பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக //

பாடலைக் கேட்டால், நாமும் ஓடத்தில் போவதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் கவிதை வரிகளும் இசையும்.

டி.எம்.எஸ்:ம்ம்ம் ஹம் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து,
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
டி.எம்.எஸ்:ம்ஹம், காற்று இல்லே காத்து
சுசீலா :தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
சுசீலா :அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
டி.எம்.எஸ் & சுசீலா: சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:செவ்வாழைத் தோட்டமும், தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சுசீலா :தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
டி.எம்.எஸ் & சுசீலா: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு.
எம்.எஸ்: ஓஓஓஓஓஓ
சுசீலா : ஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்:பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
சுசீலா : பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
டி.எம்.எஸ் & சுசீலா:சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு.
எம்.எஸ்:நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
டி.எம்.எஸ் & சுசீலா:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும், பூவாச்சும் வருமென்று, மீனாட்சி சொன்னதும் நமக்காக மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்தும்

Tuesday, February 12, 2008

வலிகளை பகிர்தலின் அவசியம்

உடன்கட்டை ஏறியவளே பதிவிரதையாகவும், அவளுக்கே மோட்சத்திற்கான டிக்கெட் என்கிற கப்ஸாவெல்லாம் இன்றைக்கு எடுபடாதுதான்.ஆனால் கணவனை இழந்த பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்வினைகள் இன்றைக்கும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திரமூட்டுவதாகவுமே இருக்கிறது.

நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், பாமர மக்களிடையே மிகுதியாக காணமுடிகிறது

இந்துக்களின் புண்ணிய பூமியாக கருதப்படும், மதுரா, பிருந்தாவனம், வாரணாசி ஆகிய இடங்களில் மட்டும் 20,000த்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், தங்கள் உறவுகளால் ஒதுக்கப்பட்டு இங்குள்ள கோவில்களிலும் ஆசிரமங்களிலும் அரை வயிறு சோற்றிற்காக தஞ்சமடைந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் இத்தகைய நிலமை இல்லை என்று தான் நினைக்கிறேன்.

மேற்குவங்கம்,பீஹார் போன்ற மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் இருக்க வேண்டிய இடம் பிருந்தாவனம் அல்லது மதுராதான் என்று காலங்காலமாய் வேரூன்றியிருக்கும் சிந்தனை போக்கு, சமுதாய சட்டமாய் மாறி இந்த அபலை பெண்கள், வேறு வழியின்றி அவர்களாகவே இந்த சன்னியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.


இந்த பெண்களில் பெரும்பாலானோர் கோவில்களில் பஜனை பாட்டுக்கள் பாடி அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சுய சார்பில்லாத பெண்களே பெரிதும் இத்தகைய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பஜனைப் பாடல்கள் பாட கூடியிருக்கும் பெண்கள்

பெரும்பாலான இல்லங்கள் சில உள்ளூர் தொழில் அதிபர்களின் சொற்ப ஆதரவில் நடத்தப் பட்டு வருகிறது. ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சமடைந்திருக்கும் இப் பெண்கள், இங்கு வந்த பிறகாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால், ம்ம்ம்ம்..அதுவும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பெண்களின் எண்ணிக்கையால் அத்தனை பேருக்கும் இருக்க இல்லங்களிலும் இடம் இல்லை.

பிருந்தாவனத்திலும், மதுராவிலும் உள்ள இது போன்ற இல்லங்களிலும், கோவில்களிலும் வாழும் பெண்களுக்கு (17 வயது இளம் பெண் முதல் 80 வயது பாட்டி வரை) ஏற்படும் பாலியல் ரீதியான கொடுமைகள்... ஹ்ம்ம்.. என்ன சொல்ல... இல்லத்தை நடத்த பணம் தேவை படுவதால் இந்தப் பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மேலும், மேலிடத்து 'ஆதரவு' வேண்டும் என்றால், கோவில் பண்டிதர், லோக்கல் போலீஸ், அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் வாதிகளையும் திருப்திப் படுத்த வேண்டும்.

ஒரு வேளை இந்தப் பெண்கள் கர்ப்பம் அடைந்து விட்டால் பாதுகாப்பான முறையில் கருவை கலைக்க இவர்களிடம் வசதியில்லை. மருத்துவச்சி யிடமோ, நாட்டு மருத்துவரிடமோ தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், கைனகாலஜிகல் பிரச்சனைகள் மற்றும் பால்வினை நோய் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம், இவர்களில் பலர் எச்ஐவி ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கில்ட் ஆஃப் சர்வீஸ் நடத்தி வரும் இல்லத்தைப் போல ஒரு சில இல்லங்களே மனித நேயத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் வழி வழியாக வரும் 'வெள்ளை சேலை' கலாச்சாரம் இங்கு இல்லை. இங்கு பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமாணத்தில் இந்த இல்லம் நடந்தப் படுகிறது. பெரும்பாலும் வயதானவர்களே இருப்பத்தால், இவர்களைப் பார்த்துக்கொள்ள, இவர்களில் படித்தவர்களுக்கு, செவிலியர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகிறது. இவர்கள் மற்ற இல்லங்களில் இருக்கும் வயதான பெண்மணிகளுக்கு முடியாத போது கவனித்துக் கொள்கிறார்கள்.



இந்த ஆசிரமத்தை நிர்வாகித்து வரும் மோகினி கிரி ஆசரமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன்.

இங்கு நடக்கும் அவலங்களை படமாக தீபா மேத்தா 'வாட்டர்' என்ற படத்தின் மூலம் எடுத்துக் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம். படப்பிடிப்பு எடுக்க விடாமல் அவரைத் துரத்தி அடித்தனர் அங்கு இருந்த அதிகாரிகளும், மத வாதிகளும். அதனால் படப்பிடிப்பு இலங்கையில் தான் நடந்தது.

நடிகர் திலகத்தின் சகோதாரரின் மகன் தரன் தயாரித்த படமும் (White Rainbow) இந்த கொடுமைகளை எடுத்துக்காட்டுகிறது. அவரையும் படம் எடுக்க விடாமல் விரட்டி விட்டனர். பிறகு பிருந்தாவனம் போலவே சென்னையில் செட் போட்டு எடுத்தாராம்.

White Rainbow படத்தில் இருந்து ஒரு காட்சி

பெண்ணின் மகத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதவாதிகளோ அல்லது ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளுக்கோ இவர்கள் மீது எந்த அக்கறையோ, கருணையோ இல்லையென்பதுதான் உண்மை.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்....தாயாய், தமக்கையாய்,மகளாய் சீராட்டி பாராட்டப்பட்ட இவர்கள் கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக இப்படி ஓரங்கட்டப்படுவது எத்தனை கொடுமை. இதை படிக்கும் நீங்கள் யாராவது உங்கள் வீட்டு பெண்களுக்கு இத்தகைய கொடுமையை செய்ய முன் வருவீர்களா?

இத்தகைய சமூக அவலத்திற்கு நிச்சயமாக குறைவான கல்வியறிவும், சக மனிதனின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத மனப்போக்குகளே காரணமாயிருக்க முடியும்.

தன் துனையை இழந்த ஆனோ பெண்ணோ ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை, அவர்களின் இழப்பின் வலியினை நிச்சயமாய் மற்றவர்களால் தீர்த்துவிட முடியாது, ஆனால் பகிர்ந்து கொள்வதன் மூலம் சக மனிதனாய் நமது இருப்பினை அவர்களுக்கு உணர்த்தலாம். இந்த வலி என்றேனும் ஒரு நாள் நம் எல்லோருக்கும் வரலாம்....இதை மறந்துவிடக் கூடாது.

Saturday, February 09, 2008

கலைந்திடும் கனவுகள்

இசைஞானியையும், கவி அரசரையும் இனைத்த பாடல்.

கண்ணதாசனைத் தவிற வேறு யாரால் இந்த வரிகளை எழுத முடியும்

படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர் : ஜானகி


வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)


அலையில் ஆடும் காகிதம்

அதிலும் என்ன காவியம்

நிலையில்லாத மனிதர்கள்

அவர்க்குள் என்ன உறவுகள்

உள்ளம்

என்றும்

ஒன்று

அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)



தேரில் ஏறும் முன்னரே

தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேளை திருவுளம்

நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா

உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

Friday, February 01, 2008

முதல் முறையா நான் ஓடிப்போன கதை

என்ன கொடுமை..ஓடிப்போனது இல்லாம முதல் முறையா வேறயா.. அப்ப எத்தனை முறை இது நடந்ததுன்னு தோனுமே?...அது இப்பவே சொல்லிட்டா எப்படி. பதிவ படிங்க.

ஆறு வருஷம் முன்னால லக்னோவுல ஒரு கருத்தரங்குக்கு போலாம்னு அலுவலக தோழிகள் 4 பேர் ஆசைப்பட்டோம். கருத்தரங்குல ஆசை இருக்கோ இல்லையோ ஊர விட்டு தூரமா போய், ஒரு வாரத்துக்கு சுத்தலாம்னு ஆசை தானுங்க. எப்படியோ வீட்ல நச்சி ட்ரெயின் டிக்கட் 25 நாட்களுக்கு முன்னாடியே வாங்கியாச்சு. லக்னோ போறோம், லக்னோ போறோம்னு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டாதது தான் பாக்கி.

ஆனா பாருங்க சென்னைல இருந்த எங்க பிராஜக்ட் ஹெட்டுக்கு மூக்குல வேர்த்துடுச்சு. நாங்க என்னைக்கு புறப்படனுமோ அதுக்கு அடுத்த நாள் வரைக்கும் 8 நாட்களுக்கு மதுரையில ஒரு கலந்துரையாடல், எல்லாரும் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டார். நாங்களும் இல்லாத ஸ்டன்ட் எல்லாம் பண்ணி பார்த்தோம். ஹூம்..ஒன்னும் நடக்கலை.

நாங்களும் விடுவதா இல்லை. ஒரு நாள் லேட்டானாலும் பரவாயில்லை மதுரையில் இருந்து சென்னை போய் அங்க இருந்து லக்னோ ட்ரெயின் பிடிச்சுக்கலாம்னு ப்ளான். இது இன்னும் த்ரில்லிங்க. அப்ப வீட்டுக்கு 15 நாளுக்கு மட்டம்னு ஒரே சந்தோஷம். மதுரைல இருந்தும் 3 பசங்க அதே கருத்தரங்குக்கு வர்ரதா இருந்துச்சு.

மதுரையில கடைசி நாள் அன்னைக்கு கொஞ்சம் சீக்கிறமே புரப்படறோம்னு எங்க ப்ரொபசர் கிட்ட சொல்லிட்டோம். மதுரையில் இருந்து எங்களோட வர்ர பசங்களை சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுக்க சொல்லி கவுன்டவுன் ஆரம்பம் ஆச்சு. இந்த பசங்க காலையிலேயே போறவுங்க. ஆனா நாங்க விடுவமா.. மவனே போனீங்கன்னா பாருங்கன்னு மிரட்டி எங்களோட இருக்க வச்சுட்டோம்ல.

6 மணிக்கு பஸ்...ஆனா 5.30 ஆகியும் எங்களை விடற மாதிரி தெரியலை. கேக்கவும் பயம். அப்படி கேட்டாலும் ஏன் முதலிலேயே சொல்லலைன்னு திட்டுவிழும். விதியை நொந்துட்டு பேசாம உக்கார்ந்துட்டு இருந்தோம். 5.50 க்கு ட்ராவல் ஏஜென்சியில இருந்து ஃபோன். ''பதினைஞ்சு நிமிஷம் லேட்டாகும். ப்ளீஸ் இருங்க''ன்னு கெஞ்சி ஆறு மணிக்கு ஓட்டமா ஓடினோம். 6.20 க்கு போய் சேர்ந்து, பஸ்ல இருந்தவுங்க முறைச்ச முறைப்ப கண்டுக்காம உக்கார்ந்தோம்.

பஸ் போகுது, போகுது, போகுது போயிட்டே இருக்கு, வழியில போற மாட்டு வண்டி மாடெல்லாம் எங்களை திரும்பி பார்த்து சைடு சிரிப்பு சிரிச்சுட்டு போகுது. காலையில 5.55 க்கு சென்னை சென்ட்ரல்ல இருந்து ட்ரெயின். இப்படி ஓரு ஓட்டை பஸ்ல டிக்கெட் எடுத்துட்டாங்களேன்னு பசங்களை திட்டுன திட்டுல அவங்களுக்கு திருச்சி வந்ததும் இறங்கி ஓடீறலாம்னு ஆயிருச்சு.

சென்னை சென்ட்ரல் போய் சேரும் போது 6 மணி. 8 ஆவது பிளாட்பாரத்துல இருந்து ரப்தி சாகர் எக்ஸ்ப்ரெஸ் புறப்படத்தயாராக இருக்கிறதுன்னு அறிவிப்ப கேக்குது...ஓட்டமா ஓடினோம்...ஓடினோம்...வாழ்க்கையில அப்படி ஒரு ஓட்டம் ஓடி இருக்க மட்டோம். பிளாட்பாரதுக்குள்ள நுழையறோம், கண்ணு முன்னாடியே ட்ரெயின் போயிட்டு இருக்கு. பி.டி.உஷா ரேஞ்சுக்கு ஓடிப்பார்த்தோம். ஆனா ட்ரெயின் ஜெயிச்சுடுச்சு.

2 மாசமா பந்தா விட்டு, கடைசியில ட்ரெயின கோட்டை விட்டுட்டோம்னு ஊர்ல போய் சொன்னா எப்படி இருக்கும். இனி என்ன பண்ண? நடங்க அடுத்த ப்ளாட்பார்ம்ல கோவை எக்ஸ்ப்ரெஸ் நிக்குது ஏறி ஊர் போய் சேரலாம்னு சொன்னா, அதுல ஒருத்தி அதெல்லாம் முடியாது, நான் இன்னைக்கு லக்னோ போயே தான் ஆகனும்னு கீழ விழுந்து புரண்டு அழாத குறையா ஆட்டம்.

என்னமோ பண்ணுங்கன்னு அக்கடான்னு நான் உக்கார்ந்துட்டேன். இந்த டென்ஷன், அழைச்சல், ஓட்டத்துல பயங்கர வீசிங் நமக்கு. போய் தகவல் மையத்துல விசாரிச்சு சாயந்திரம் 7 மணிக்கு ஜான்சிக்கு ஒரு ட்ரெயின் இருக்குன்னு, இந்த டிக்கெட்ட கேன்சல் பண்ணி (ஏதோ கொஞ்ச பணமாவது வருமே) அந்த ட்ரெயினுக்கு டிக்கெட் எடுத்தாங்க. அதுக்கு அப்புறம் தான் அந்த ஆட்டக்காரி ஆட்டத்தை நிறுத்தினா.

ஜான்சிக்கு போய் அங்க இருந்து வேற ட்ரெயின் லக்னோக்கு. இந்த ட்ரெயினுக்கும் அந்த ட்ரெயினுக்கும் 45 நிமிஷம் தான் வித்தியாசம். இது சரியான நேரத்துல போய் சேரலைன்னா என்ன பண்ண?... ''ஜான்சி போயிட்டா அப்புறம் லக்னோ போறது சுலபம்'' னு ஆட்டக்காரி ரொம்ப தெம்பா சொல்ல, நான் கேட்டேன்..''ஓ உணக்கு அந்த அளவுக்கு பரிச்சியமான ஊரா'' அதுக்கு அவ, ''யாருக்கு தெரியும், சும்மா ஒரு அனுமானம் தான்".. தேவையா எனக்கு....ம்ம்ம்

மேல போய் ரெஸ்ட் ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தோம். வீட்டுக்கும் ஃபோன் பண்ண முடியாது( பண்ண விடலை). சொன்னா 'மவளே மரியாதையா கோயமுத்தூர்க்கு வந்து சேர்'னு சொல்வாங்க.

சாயந்திரம் 7 மணிக்கு ஒரு வழியா ட்ரெயின்ல உக்கார்ந்தாச்சு. அடுத்த நாள் ராத்திரி 9 மணிக்கு ஜான்சி போய் சேரும். 9.45 மணிக்கு லக்னோ ட்ரெயின். எல்லாரும் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். எனக்கு எப்பவும் போல டென்ஷன். ட்ரெயின் போய் சேருமான்னு. ''ஏதாவது பேசுனேனா கீழ தள்ளி விட்ருவோம்'னு மிரட்டுனதுல, திருவிழாவுல காணாம போனவ மாதிரி முழிச்சுட்டு உக்கார்ந்துட்டு இருந்தேன்.

9 மணி ஆயிருச்சு. ஆனா ட்ரெயின் இன்னும் எங்கேயோ நடுக்காட்டுல போயிட்டு இருக்கு. ட்ரெயின் போற மாதிரி என் மனசும் பட படன்னு அடிக்குது. இனி வாட்ச பார்க்க கூடாதுன்னு என்னை கட்டுப் படுத்தீட்டூ உக்கார்ந்துட்டு இருந்தேன். என்னை தவிர யாருக்கும் பதட்டம் இல்லை. உலகம் உருண்டை தானே, எங்க சுத்துனாலும் ஊர் போய் சேர்ந்துறலாம்னு தத்துவம் வேற.

ஜான்ஸி ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும் தான் வாட்ச பார்த்தேன். மணி பத்து. அடப்பாவிகளா அந்த ட்ரெயின் போயிருக்குமே...குளிர்ல என்னை இந்த பாடு படுத்தறீங்களேன்னு திட்டீட்டே ப்ளாட்பாரத்துல இறங்குனா... 'ஹேய் எங்க அந்தப்பக்கம் இறங்குறே..இந்தப்பக்கம் வான்னு, எதிர்ப்பக்கம் இருக்குற கதவு வழியா ஒவ்வொன்னும் ஜங்கு ஜங்குன்னு குதிக்குதுக. ஏன்னு கேட்டா அந்த ட்ரெயினும் லேட்டா தான் வந்துருக்கு..ப்ளாட்பாரம் பாலத்துமேல ஏறிப்போனா லேட் ஆயிடும், வா இப்படியே போயிடலாம்னு என்னோட லக்கேஜ் எல்லாம் அவங்களே எடுத்துட்டு தண்டவாளத்தை தாண்டி ஓடறாங்க. லாங்க ஜம்ப், ஹை ஜம்ப் வீராங்கனைகள் எல்லாம் தோத்துப் போகனும்.

ஒரு வழியா லக்னோ ட்ரெயின்ல ஏறி உக்கார்ந்தாச்சு. அப்புறம் பாருங்க இவ்வளவு ஓடி வந்து, ட்ரெயின் அதுக்கு அப்புறமும் 30 நிமிஷம் கழிச்சு தான் போச்சு.

இதுல முக்கியமான விஷயம், நான் லக்னோ ட்ரெயின கோட்டை விட்டதும், இப்படி ஓடுனதும் இது வரைக்கும் வூட்ல யாருக்கும் தெரியாது..:-))

Monday, January 28, 2008

குழந்தைகள் குழந்தைகள்தானே.....


கடந்த சனிக்கிழமை தில்லியிலுருந்து 50 கி மி தள்ளி இருக்கும் ஒரு காப்பகத்துக்கு சென்றிருந்தேன். வெகு நாட்களாக போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது. எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம். இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of St.Thomas the Apostle ஆல் நடத்தப் பட்டு வருகிறது.

அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய் வரவேற்றார்கள்.

அங்கு இருப்பவர்களிலேயே கடைக்குட்டியின் பெயர் அலோக், 4 வயதுதான். எச்ஐவி நோயாளியான அவன் அம்மா இவன் பிறந்த உடனே இறந்து போக, அப்பா இவனை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டு போய்விட்டார். இத்தனைக்கும் அவர் ஒரு கோவில் பூஜாரி. மனைவி எச்ஐவியால் இறந்து விட்ட போதும், தான் இந்த பரிசோதனை செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை அந்த தாய் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ, சரியான விவரம் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அலோக் பிறந்தவுடன் தாய் இறந்து விட, தந்தை மறுமணம் செய்து கொண்டார்.


ரெண்டாவது மனைவி பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்துக்கொள்வாள் என்று நினைப்பது இன்றைய சுயநலம் பீடித்த சூழ்நிலையில் மிகப்பெரிய மடத்தனம்.ஆதரவில்லாத அந்த பச்சை மண் இப்பொழுது காப்பகத்தில். அலோக்கின் உடம்பில் நோய் கிறுமியின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவனுக்கு ஏஆர்டி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் உட்கார பிடிக்காமல் ஓடி விளையாட துடித்தாலும், அதற்கு அவன் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. வீட்டில் எத்தனை மன உளைச்சலுக்கு தள்ளப் பட்டிருந்தால் இந்த 4 வயது பாலகன் வீட்டிற்கு போகவே பதறுவான். அப்பாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலே இல்லை.

ஹ்ம்ம்...கணவன் இறந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தையுடனும்,நோயுடனும், பழிச்சொல்லுடனும் ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இன்று ஏராளம். ஆனால் இங்கு.....ஹ்ம்ம்ம்...

மற்றறொருவன் சுஷில். 9 வயது. அம்மா, அப்பா இரண்டு பேரும் இறந்து போக, பாட்டியால் பார்த்துக் கொள்ள முடியாததால், இங்கே இருக்கிறான். இந்த நோய்க்கே உண்டான சில அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, உடம்பு வலி, சோர்வு போன்றவைகளால் தற்பொழுது அவதிப்படும் இவன், தனக்கு ஏதோ பெரும் வியாதி இருப்பதை தற்பொழுது உணர்ந்து வருகிறான். நாம் எங்கு சென்றாலும் அருகில் வந்து ஒட்டி உட்கார்ந்து கொள்ளும் இந்த குழந்தையின் மனதில் என்ன என்ன இருக்கிறதோ, அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது. அன்று அவர்களுடன் இருப்பதாக சொன்னதும், '' அப்போ நீங்க சமைத்து தாங்களேன்'' என்றனர் குழந்தைகள். சாம்பார், ரசம் என்று எங்கள் சமையல் செய்யவா என்று கேட்கவே, உடனே ஆளுக்கொரு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கல்யாண வீடு போல கலகலப்பாக இரண்டு மணி நேரத்தில் சமையல் வேலை முடிந்து, வெளியே, கட்டைகளை அடுக்கி, தீ மூட்டி, சுற்றி உட்கார்ந்து உணவருந்தியது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது.

அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில் ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால், அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும் பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை.

இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் என்னை புதைத்துக் கொண்டு தில்லி திரும்பினேன்...

Wednesday, January 16, 2008

பிடித்த பதிவுகள்-கண்மணியின் அழைப்புக்காக

நான் எழுதறதும், அதை நீங்க படிச்சு கருத்து சொல்றதே பெரிய விஷயம்னு நினச்சுட்டு இருக்கேன்...ஒன்றரை வருஷமா எழுதினாலும் மொத்தமே 67 பதிவுகள் தான் எழுதியிருக்கேன்...

அதுல பிடித்த பதிவுகளை சொல்ல அழைப்பு விடுத்த கண்மணிக்கு நன்றி.

சில பதிவுகள் ரொம்ப ஆர்வமா,ஈடுபாட்டோட எழுதுவோம்..... அப்படி திருப்தி அளித்த (எனக்கு) பதிவுகள்


1) Growing Old... - எப்பவும் பெரியவங்க கூட இருக்கனும்னு நினைப்பேன்.. கூட்டுக்குடும்பம்...மாமியார்...அம்மா...நாத்தனார்..ம்ம்ம்... உறவுகள் விட்டு தூரமா..(மனசளவுல இல்லை) இருக்கறப்போ... இன்னும் நிறைய ஒட்டுதல் வருது....ஒரு நாள் அம்மாவும் மாமியாரும் அடுத்தடுத்து கூப்டு தங்கள் தனிமையை சொல்லாம சொல்ல...அன்னைக்கு முதியோர்கள் தினமும்...இந்த பதிவ எழுதினேன்...

2) திருநெல்வேலி குசும்பு - எப்பவும் சீரியஸா எழுதறதுனால, லைட்டான பதிவுகளே நமக்கு வராதான்னு தோனும். பதிவுல சொன்ன சம்பவத்தை அப்படியே எழுத ஆரம்பிக்க...நல்லா இருந்த மாதிரி இருந்துச்சு....முதல் முறையா லைட்டான பதிவு எழுதுனதால இந்தப் பதிவும் பிடிச்சுப் போச்சு

3) அப்பா.. - அப்பாகிட்ட தான் ரொம்ப நெருக்கமா உணர்ந்திருக்கிறேன்.. அவர் இவ்வளோ சீக்கிறமா என்னை விட்டு போவார்னு எதிர்பார்க்கலை... என்னோட இன்றைய வளர்ச்சியை பார்த்தா அவரின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.....அவர் எனக்கு குடுத்த படிப்பும், அனுபவமும், நல்ல விதத்துல உபயோகப்படறதே அவருக்கு நான் செய்யும் மரியாதை.. அவரைப்பற்றி எழுத வாய்ப்பு கிடச்சதுனால இந்த பதிவும் பிடிக்கும்.

பின்னூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

நான் அழைப்பவர்கள்...

மலர்வனம் லக்ஷ்மி

டாக்டரம்மா....

சின்ன அம்மனி

Thursday, January 10, 2008

கண்டுபிடிச்சுட்டேன்...

மொக்கை போஸ்ட் எழுதனுமாம். லட்சுமி இத சொன்னப்போ நான் என்ன எழுதறதுன்னு கேட்டா, "அது தான் நேத்து போட்டீங்களே அது மாதிரி தான். சும்மா போடுங்க" னு சொல்ல.. ஓ அப்ப நாம நேத்து எழுதுனது மொக்கையா. அப்ப இதுக்கு முன்னாடி நாம எழுதனதுல எது இல்லாம் இதுல சேத்தின்னு நினச்சுட்டேன்.

யோசிக்காம எழுதுனா மொக்கை பதிவாம். ஒழுங்கா எழுதினாலே நாலு வரியில நாப்பது எழுத்துப்பிழை. இதுக்கு பெரிய மனசோட நம்ம கன் ஃபைட் காஞ்சனா பிழையே உன் பெயர் மங்கையானு ஒரு கேள்வி எல்லாம் கேட்டுட்டு போயிட்டாங்க. இதுக்கும் பதிவ நாலு தடவை படிச்சுட்டு பப்ளிஷ் பண்றப்பவே நம்ம அழகு இப்படி.

நாம என்னைக்கு யோசிச்சு பதிவு எழுதுனோம்னு நானும் யோசிச்சேன். ஹூம்...அப்படி ஒன்னு எழுதுனதா நியாபகத்துக்கு வரலை.

சரி. இந்த மொக்கை விளையாட்ட யாருங்க ஆரம்பிச்சது?

இதன் நோக்கம் என்னன்னு இந்த ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்... :-)))

நீங்க எழுதினது எல்லாமே இது வரைக்கும் மொக்கை தான்னு நம்ம ஒவ்வொருவரையும் நம்ம வாயாலேயே ஒத்துக்க வச்ச புண்ணியவான் வாழ்க. நாம எந்த அளவுக்கு நேர்மையானவங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும்.:-)))

பி-கு- இது நாள் வரைக்கும் கிடைக்காத முதல் பரிசு இப்ப எனக்குத்தான்.. என்ன சொல்றீங்க??..மொக்கை பதிவுல எழுத்துப் பிழை எல்லாம் கண்டுக்க கூடாது ஆமா...

Wednesday, January 09, 2008

நான் யார்?..யார்?..யார்?

தலைப்பு பார்த்துட்டு இவ என்ன பிலாசப்பி (கவுண்ட மனி ஸ்டைல் Philosophy ன் உச்சரிப்பு) பேச வந்துட்டானு திட்ட வந்துட்டீங்க இல்ல?. ..நோ டென்ஷன் ப்ளீஸ். நாம அந்த தப்பெல்லாம் பண்ண மாட்டோம். இது வேறு. நான் யாருன்னு தெரிஞ்சுக்க இமையமலையா போகனும்? நீங்க சொல்ல மாட்டீங்களாக்கும்.

சூப்பர் ஸ்டார் சில நாட்களுக்கு முன்னால தன்னை மராத்தின்னும் ஒத்துக மாட்டேங்குறாங்க, கன்னடக்காரர்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, தமிழன் அப்படின்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு ஒரே பீலிங்கஸ் விட்டார். நியாபகம் இருக்கா.?.. அது மாதிரி தானுங்க நானும் இப்ப ஒரெ ஃபீலிங்கஸ்ல இருக்கேன்.

இன்னைக்கு எங்க கல்லூரியில ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுக்கு வந்து இருந்த அசாம் காரர் ஒருத்தர்க்கு என்னை அறிமுகப் படுத்தினார் நம்ம குசும்பு சீதாராமன். அவர் பேர் டோர்ஜீ (Dorjee) . இவர் அறிமுகப் படுத்தினாலே ஏதாவது வில்லங்க புடிச்ச கேசா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். அதே மாதிரி தான் ஆச்சு.

சில கேள்விகளுக்கு ஒரு பதில் குடுக்க முடியாது. அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம்னு சொல்ல தோனும். ஆனா அப்படிப்பட்ட கேள்விகள் ஒரே சமயத்துலயா வரனும்.

பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின்னர் என் நெற்றியில் இருந்த விபூதிய காமிச்சு, "நீங்க தமிழா'' னார். தலைய ஆட்டி ஆமான்னு சொல்ல வாய திறக்குறதுக்கு முன்னால அவர் "இல்ல தெலுங்கா" னார். அதுக்கும் சிரிச்சுட்டே தலைய ஆட்டினேன். தமிழ்நாடா ஆந்திராவான்னு கேட்டிருந்தா தமிழ்நாடுன்னு சொல்லி இருப்பேன்.

தமிழா, தெலுங்கானு கேட்டதுனால, (என்னமோ ஹரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடுன்னு நினப்பு) ரெண்டுத்துக்கும் தலைய ஆட்டிட்டேன்

ஆனா அதுக்கு மேல ஒன்னும் சொல்லலை. அவர் எப்படி புரிஞ்சுட்டாரோ அப்படி இருக்கட்டும்னு சும்மா இருந்தேன். ஆனா மனுஷன் விடாம "அப்படின்னா" னார்.

நான் "அது அப்படித்தான்" அப்படின்னேன். அவர் உடனே "ஓ உங்க பெற்றோர்கள்ல ஒருத்தர் தெலுங்கு, இன்னொருத்தர் தமிழா'' னு ஒரு மகா கண்டு பிடிப்ப கண்டு பிடிச்சு கேட்டார்.

இதுக்கு மேல நாம வாய மூடீட்டி இருந்தா நல்லா இருக்காதுன்னு "நான் மற தமிழச்சி தான்.ஆனா என் தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டுல தெலுங்கு பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க" ன்னு சொன்னா, மனுஷனுக்கு பதில்ல திருப்தி இல்லை. சரி போகட்டும்னு விட்டார்.

இதோடு அவரோட கேள்விக்கனைகள் நிக்கலை. இதற்குள்ள இன்னொரு தமிழ் பெண்ணும் வந்து சேர்ந்தாள். ரெண்டு பேர்கிட்டேயும், 'நீங்க எந்த ஊர்' னார். சொன்னோம்.

நாங்க சொன்னதைக் கேட்டு குசும்பர் வந்து, '' ஏன்டீம்மா, புக்காத்த சொல்லப்படாதோ, ரெண்டு பேரும் பொறந்த ஊரையே சொல்றேளே '' -
கேட்டவர்க்கு தமிழகத்துல சென்னைய தவிர வேற எந்த ஊரும் தெரியாது. அப்புறம் எது சொன்னா என்ன. பிறகு சீதாராமனே "அவங்க ஊர் அது இல்லை" அப்படீன்னு எங்களோட 'புக்காத்த' சொல்ல, டோர்ஜீ என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

அடுத்து "எய்ட்ஸ்ல நீங்க திட்டப்பணியில இருக்கீங்களா இல்லை களப்பணியில இருக்கீங்களா' னார். இரண்டும் செய்ய வேண்டி இருப்பதால "ரெண்டும் தான்" னேன். இவ கிட்ட எதுக்கும் 'ஒரு' பதில் கிடைக்காது போலன்னு டோர்ஜீ இடத்தை காலி பண்ணிட்டார்.

அப்புறம் மதியம், நானும் என்னோடு இருந்த தமிழ் பெண்ணும் சாப்டுட்டு இருந்தோம். கையில தட்டை எடுத்துட்டு அன்புத்தொல்லை மீண்டும் பக்கத்துல வந்தார், "நீங்க சைவமா அசைவமா?" னு கேட்டார்.

தோழி வேனும்னே ' ரெண்டும் தான். நான் சைவமும் சாப்பிடுவேன் அசைவமும் சாப்பிடுவேன்" னு சொல்ல, டோர்ஜீ " You guys are too naughty" னு சிரிச்சுட்டே தப்பிச்சா போதும்னு ஒரே ஓட்டமா ஓடிட்டார்.