Friday, December 10, 2010

பணம், பகட்டு, பக்தி

கொல்கொத்தா புராணம் தொடர்கிறது....

துர்கா பூசையை முன்னிட்டு பிரம்மாண்ட பந்தlல்களில் தற்காலிக வழிபாட்டு கூடங்கள் அமைக்கப் பட்டிருந்ததாக கூறியிருந்தேன்.  அவை ஒவ்வொன்றும் தனித்துவமான கருத்தியல் ஒன்றின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தன.இன்று அந்த பந்தல்கள் சிலவற்றின் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 
கொல்கத்தா அரசியலில் முக்கியமானவரான சுப்ரத்தோ முகர்ஜி என்பவரின் பந்தல் இது . உள்ளே தேவியின் பெரிய சிலையுடன், லஷ்மி, சரஸ்வதி, விநாயகர் மற்றும் முருகனின் சிலைகள், பகட்டான அலங்காரத்துடன் பளபளப்புடன் காட்சியளித்தது.
சுவற்றிலும், மேற்கூரைகளிலும்,  நுன்னிய கலைநயத்துடன் அழகிய  வேலைப் பாடுகள்,வரைபடங்கள், பெரிய பெரிய விளக்குகள். எதோ ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் நுழைந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது.

இந்தப் பந்தலுக்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறக்கேட்டோம்.  முக்கிய பிரமுகர்கள், அரசியவாதிகள், துர்கா பூஜையின் போது, இது போல பணத்தைக் கொட்டி பகட்டான பெரிய பெரிய பந்தல்களை அவர்கள் பேரில் அமைக்கிறார்கள். வருடா வருடம்  இவர்கள் அமைக்கும் பந்தல்களை வேடிக்கை பார்க்க திரளான கூட்டம் வருகிறதாம்.

மேலே சொன்ன பந்தலுக்கு பக்கத்தில்தான் கீழே நீங்கள் பார்க்கும் இந்தப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதிக பணம் செலவு செய்யப்படா விடினும், நுணுக்கமான கைவேலைப் பாட்டிலும், கலைநயத்திலும் சிறந்த தரத்துடன்                அமைக்கபட்டிருந்தது. உள்ளே மரவேலைபாடுகளுடன், அளவிலே சின்னதாக இருந்தாலும் பளிச்சென்றிருந்தது.                                                                                                                                                                     
               
தாகூரின் சிலையை முன்னால் நிறுத்தி  அவரின் படைப்புகளை ஓவியமாக தீட்டி அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல். தாகூர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மற்ற கலைஞர்களின் ஓவியங்களும் இங்கே இடம் பெற்றிருந்தது.

பாரம்பர்ய கட்டிடகலையை அடிப்படையாக கொண்டு அத்தனை ஆடம்பரமில்லாத எளிமையான தோற்றத்துடன் கூடிய ஒரு பந்தல்


மேலே படத்தில் இருப்பது போலத்தான் முந்தைய காலத்தில் துர்கா பூசையின் போது சிலைகள் இது போலவே வடிவமைக்கப்பட்டனவாம்.


வங்க மொழியின் புகழ்பெற்ற எழுத்தார்கள், கவிஞ்சர்களின் படைப்புகள், வங்க இலக்கியம் ஆகியவைகளை பெருமையாக எடுத்துக்காட்டுகிறது இந்தப்பந்தல் அற்புதமான ஒரு வடிவமைப்பு.





 

கீழே நீங்கள் பார்ப்பது இரயில்வே அமைச்சர் செல்வி. மம்தா பேனர்ஜியின் யோசனையில் வடிவமைக்கப்ப்ட பந்தலாம் இது. மாடர் ஆர்ட் போல் இருக்கும் இந்த தேவியின் சிலையைப் பாருங்கள்.


 நான்கு பக்கமும் வண்ணமயமாக காட்சியளித்த இந்த பந்தலில் மற்ற பந்தல்களில் காணப்பட்ட  மக்கள் கூட்டம் இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

இந்த பந்தல்கள் ஒரு வகையில் நமது திருவிழா பொருட்காட்சி அரங்கங்களையே நினைவு படுத்தியது. உண்மையைச் சொல்வதானால் இந்த பந்தல்களில் பணமும், பகட்டுமே மிஞ்சியிருந்தது. பக்தி இரண்டாம் பட்சமாகவே இருந்தது நெருடலாய் இருந்தது. மேலே ஒரு படத்தில் பூசாரி ஒருவரைப் பார்க்கலாம்...பார்க்கவவே பாவமாக இருந்தார்..இவ்வளவு பகட்டாக நடக்கும் ஒரு நிகழ்வில், வருமையில் வாடும் இவரை கண்டு கொள்பவர்கள் யாரும் இல்லை

கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம். பெரியாரை ஒரு சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் என்கிற வகையில் ரொம்பவே பிடிக்கும். தமிழகத்தில் பெண்கள் சமூக மேம்பாடு கண்டதற்கு அவர் மட்டுமே காரணம் என தீவிரமாய் நம்புகிறவள் நான்.ஆனால் அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் நான் உடன் படுவதில்லை....கொல்கொத்தா அனுபவம்  ஒன்றிற்கு பிறகு பெரியார் கடவுள் மறுப்பில் உறைந்திருந்த உண்மை உறைத்தது.

அந்த அனுபவம்...அடுத்த பதிவில்



Wednesday, December 01, 2010

உலக எய்ட்ஸ் தினம் 2010


இன்று உலக எய்ட்ஸ் தினம்.மருத்துவ உலகத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நோய். முற்றிலுமாய் தீர்த்திடும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படா விட்டாலும், நோயின் தன்மையோடு போராடி நோயாளியின் வாழ் நாளை நீட்டிக்கச் செய்யும் மருந்துகள் இப்போது சந்தையில் வந்து விட்டன.இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது முழு மூச்சுடன் செயல் படுத்தப் பட்டு வருகிறது.

விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இந்த நோயின் தாக்குதலில் இருந்து எளிதாக தப்பி விட முடியும்.உலகலாவிய அளவில் இந்த விழிப்புணர்வு என்பது பல கட்டங்களாய் செயல் படுத்தப் பட்டிருக்கிறது.தடுப்பு முறைகள்,  சிகிச்சை முறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள், மருந்துகள், மறுவாழ்வு, என பல கூறுகளை உள்ளடக்கியது இந்த விழிப்புணர்வு திட்டம்.

உலகம் முழுவதும் திசெம்பர் முதல் தேதியன்று, உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தியலை மையமாக கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதை அந்த ஆண்டு முழுவதும் பிரசாரங்கள், நடவடிக்கைகள், முடிவுகள், கலந்துரையாடல், கருத்தரங்குகள் என பல கட்டங்களாக செயல் படுத்துகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்தியல் ”மனித உரிமை மற்றும் அனைவருக்குமான திட்டங்கள் ”.

பாலியல் தொழிலாளிகள், திருநங்கையர், மற்றும் ஓரினச் சேர்கையாளர்களை இச்சமூகம் தீண்டத்தகாதவர்களைப் போல அணுகுகிறது. இதனால் பல இடங்களில் இவர்களின் அடிப்படை மனித உரிமை கூட மறுக்கப்படுகிறது என்பது வேதனையான உண்மை. அத்தகைய மனப் போக்கினை அறவே வேரறுக்க வேண்டிய எல்லோருக்கும் எல்லாமும் பொதுவானது என்கிற கருத்தியலே இந்த ஆண்டு வலியுறுத்தப்படுகிறது.

இனி கொஞ்சம் சொந்த கதை...

இந்தியா முழுமைக்கும் எய்ட்ஸ் தொடர்பான திட்டங்களை வகுத்து அவற்றின் செயல்பாடுகளை நெறிப் படுத்தி மேற்பார்வையிடும்அரசுத் துறையில் அங்கம் வகித்தவள் என்ற வகையில் மற்றவர்களை விட நிதர்சனங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.எனது முந்தைய பதிவுகளில் எனது அனுபவங்களையும், ஆதங்கத்தினையும் சமயத்தில் ஆத்திரத்தையும் பதிந்திருக்கிறேன்.

இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்.பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி அவர்களூக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு பல நாட்கள் இறுக்கமாய் வீடு போயிருக்கிறேன்.

இந்த பதிவின் இடது பக்கத்தில் ஒரு அழகிய குழந்தையின் படத்தினை பார்க்கலாம்.பலரும் அது நானாகவோ அல்லது என் குழந்தையாகவோ இருக்கலாம் என நினைத்திருக்க கூடும். யாரோ ஒருவரின் கவனக்குறைவால், பொறுப்பின்மையால் பிறந்த பிஞ்சு இவள்.இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி.இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டம் என்பது தனியொரு அமைப்பையோ, அரசாங்கத்தையோ சேர்ந்தது அல்ல என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் இந்த நோயினை தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வினையும், பாதிக்கப் பட்டவனுக்கு உறுதுனையாக நிற்கும் மனப்பாங்கினையும் கொள்ள வேண்டும்.

இந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

Monday, November 29, 2010

கங்கையில் ஒர் கலை நிகழ்ச்சி

துர்கா பூசை கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகெங்கும் உள்ள வங்காளிகள் ஊருக்கு வருகின்றனர்.இவர்களைப் போலவே நாடெங்கிலும் இருந்து எங்களைப் போல ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த சமயத்தில் வருகின்றனர். இவர்களை கவரும் வகையில் அரசின் சுற்றுலாத்துறை பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. நகரின் இயல்பான கொண்டாட்டங்களின் ஊடே சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் பிரத்யேக கேளிக்கைகள்,கலை விழாக்கள் இங்கே மிகப் பிரசித்தம். குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னரே இதற்கான முன்பதிவுகள் எல்லாம் முடிவடைந்து விடுகின்றன.



இந்த வகையில் சுற்றுலாத் துறை அகண்ட கங்கை நதியின் நடுவில் ஏற்பாடு செய்திருந்த கலைவிழா ஒன்றில் பங்கெடுக்க முடிவு செய்து அதற்கான பதிவுச் சீட்டினை மூன்று மாதங்களுக்கு முனன்ரே முன்பதிவு செய்திருந்தோம். மற்றவர்கள் எப்படியோ நான் மிகவும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தேன்.
 
 சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் படகில் அமர்ந்து கொண்டு இன்னொரு படகில் நடக்கும் நடன நிகழ்சியை பார்ப்பதுதான் திட்டம்.ஆறு மணிக்கெல்லாம் படகுத் துறையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர், ஆனால் மூன்று மணியில் இருந்து மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையில் நிகழ்சி சாத்தியமாகுமா என்ற நினைப்பில் ரொம்பவே பதட்டத்தில் இருந்தேன். யார் செய்த புண்ணியமோ ஆறு மணிக்கெல்லாம் மழை சுத்தமாய் நின்று விட்டது.

ஒரு வழியாய் ஆறு மணி வாக்கில் ஒரு படகில் ஏறி நாங்கள் அமர வேண்டிய பெரிய படகுக்கு பயணமானோம். பெரிய படகு அதே மாதிரியான இன்னொரு படகுடன் சேர்த்து கட்டப் பட்டிருந்தது. ஒன்றில் நாங்கள் உட்கார்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். மற்றதில் இசைக் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தது. அங்கேயும் பெரிய துர்கா தேவியின் சிலை, பூஜை சாமாச்சாரங்கள் என கரையில் காணப்படும் அதே திருவிழா உற்சாகம் நிறைக்கப் பட்டிருந்தது.படகின் மேல் தளத்தில் நாங்கள் உட்கார வைக்கப் பட்டோம்.மெல்ல இருள் சூழ கரையில் விளக்குகள் உயிர்த்தெழ ஒளி ஓவியமாய் கொல்கொத்தா மிளிர ஆரம்பித்தது. பெரிய நதியின் நடுவே படகில், மெல்லிய குளிரை சுமந்த காற்றின் உரசலில் எதிரில் மிளிர்ந்த ஒளி ஜாலம் தந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. 


படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.வேறெதையும் நினைக்காமல் இந்த எகாந்தமான படகு பயணத்தை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் இருந்தேன்.நகரின் பரபரப்பு ஓசைகளிள் இருந்து விலகி, இருளின் ஆளுமையை முழுமையாய் அனுமதித்து, ஈரக்காற்றின் குளுமையை உள்வாங்கி எல்லாம் எனக்கு புதிதாகவும், ப்ரியமானதாகவும் இருந்தது. 
 இப்படியே பயணித்துக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமே என்று கூடத் தோன்றியது.இதற்குள் படகு புகழ்பெற்ற ஹௌரா பாலத்தை நெருங்கி இருந்தது. இந்த சமயத்தில் கூட கட்டியிருந்த படகில் இசைக் கச்சேரி ஆரம்பம் ஆகியது.வங்காள மொழி பாடல்கள் பாடினர். அநேகமாய் அவை நாட்டுப் புற பாடல்களாய் இருக்க வேண்டும். இந்த சமயத்தில் எதிரில் வர்ண விளக்குகளுடன் நாட்டிய மேடை போல வடிவமைக்கப் பட்ட மேல் தளத்துடன் படகு ஒன்று எதிர் வந்தது. அதுதான் நாங்கள் காண  இருக்கும் கலை நிகழ்ச்சிக்கான படகு. எங்கள் படகு அந்த படகை சுற்றி  சுற்றி வந்தது.

துர்கா பூஜை பற்றிய முன்னுரையுடன் நாட்டியம் தொடங்கியது. முதல் நாட்டியம் யா தேவி ஸர்வபூதேஷு என்ற தேவி ஸ்துதிக்கு அழகிய இளம் வங்காளப் பெண்களும், ஆண்களும் நிஜமான உற்சாகத்துடன் ஆடினர்.ஆண்களை  விட ஆடிய பெண்கள் கம்பீரமாக ஆடியதைப் போல எனக்கு தோன்றியது. அவர்களின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அதற்குப் பின்னர் பல வாங்காள நாட்டுப்புற பாடல்களுக்கும், பாப் இசைக்கும். பாரம்பரிய உடை அணிந்து ஆடினார்கள். நாட்டியம் நடந்து கொண்டிருக்கும் போதே இரவு சாப்பாடு பரிமாரப்பட்டது.அசைவ உணவும், சைவ உணவும் பரிமாறப்பட்டது. கங்கை நதியின் நடுவில் படகில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தது எனக்கு நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.அனுபவித்து பார்க்கவேண்டிய ஒரு காட்சி அமைப்பு.

Monday, November 22, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-II


வங்காளத்துக்கும், துர்கா பூஜைக்கும் இடையே உள்ள தொடர்பாக வங்காளிகள் கூறும் புராணக் கதை இதுதான்....

தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இதைத் தொடர்ந்து இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு சிவன் கோரதாண்டவம் ஆடினாராம். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தாராம். அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய  ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதப் படுகிறது.

பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்காபூஜையாக கொண்டாடப் படுகிறது. சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் பதினாறு சக்தி பீடங்கள் வங்காளத்தில் இருப்பதாகவும் கூறக் கேட்டேன்.சக்தி வழிபாடு என்பது வங்காளிகளின் வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அங்கமாகவே இருக்கிறது.

                                                                                          
தற்காலிக வழிபாட்டுக் கூடங்களில் 
அமைக்கப் பட்டிருக்கும் துர்கையின் சிலைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாகவும், சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப் பட்டிருக்கிறது. அன்னையின் முகத்தில் தவழும் உணர்ச்சியினை இன்னதென தெளிவாக கூற இயலாதவகையில் கலவையான உணர்வுகளை தருகிறது.எல்லாராலும் துர்கையின் சிலையினை செய்திட முடியாதென கூறுகிறார்கள்.இந்த சிலைகளை செய்வதற்கென விசேடமான சிற்பிகள் இருக்கிறார்களாம்.துர்கையின் சிலையோடு கூடவே, விநாயகர், கார்திகேயன், லக்ஷ்மி சரஸ்வதி ஆகியோரின் சிலைகளையும் அமைத்திருக்கின்றனர்.

நவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கை போன்ற ஒன்றில் பார்லி விதைகள் விதைக்கப்பட்டு, பாத்தாவது நாளில் அது முளைகட்டி வளர்ந்த பிறகு, விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் அருளுடன் கூடிய பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஊரெங்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் இந்த இசை கருவியை வாசிக்கும் பொழுது மனமும் உடலும் ஒரு வித பரவசம் அடைவது உண்மை.இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் விசேட கவனத்துடன் தயாரிக்கப் பட்டு பூசையில் படைக்கப் பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.முதல் நாள் குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாள் கன்னியின் அம்சமாகவும், மூன்றாம் நாள் பேரிளம் பெண்ணின் அம்சம் என தொடர்கிறது வழிபாடுகள்.கடைசி நாளான மஹாநவமியில் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.

இப்படி மாய்ந்து மாய்ந்து பெண்களைக் கொண்டாடும் இதே ஊரில்தான் பெண்களை போகப் பொருளாய் கருதி சீரழிக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.பெண் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிற்து.ஒரு பக்கம் பெண்குழந்தைகளை தெய்வமாய் பூஜித்து கொண்டிருக்கையில்  மறுபக்கம் ஈவிரக்கமில்லாமல் அத்தகைய குழந்தைகளை பாலியல் இச்சைக்கு பலியாக்குவது வேதனையான வேதனை..

(பதிவின் நீளம் கருதி பயண அனுபவங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்)

Thursday, November 18, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-1

நான் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிற்கு பயணம் செய்திருந்தாலும், இப்போது சொல்ல வரும் இந்த பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. இது வரையில் பயணங்கள் பெரும்பாலும் துறை சார்ந்த அலுவலக பயணமாகவே இருந்திருக்கிறது. முதல்முறையாக உற்றார் உறவினர் சூழ அமைந்த இந்தப் பயணம் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.இந்திய நாட்டின் இந்தப் பகுதி எப்பொழுதும் ஏதாவது ஒர் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு பகுதி. பெரிதாக மற்றவர்களால் சுற்றி பார்க்கப்படாத ஒரு பகுதி.  கோவையில் இருந்து கொல்கொத்தாவிற்கு, அதுவும் ஒரு திருவிழாவில் பங்கேற்க...

ஆம், துர்கா பூஜை என பிரபலமாய் கொண்டாடப் படும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளத்தான் இந்த பயணம்.உணர்வு ரீதியாக நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பயணம் இது. எனது தந்தையார் தேசிய கவி, தாகூரின் மிகப் பெரிய ரசிகர். அந்த கலைஞனின் பெயரையே அண்ணனுக்கு வைத்து, தாகூரின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை பெண் பிள்ளைகளுக்கு வைத்தார். ''ரக்தகரபி'' தந்த மயக்கத்தில் அதில் வரும் நாயகியின் பெயரைத்தான் எனக்கு சூட்டியிருக்கிறார்.என் தந்தையார் மிகவும் நேசித்த ஒரு கலைஞனின் மண்ணிற்கு, அவன் உருவாக்கிய பாத்திரங்கள் உலவிய அந்த மண்ணிற்கு போகிறேன் என்கிற பரவசமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பயணம் இது.

நூற்றாண்டுகளை கடந்த கட்டிடங்கள், குறுகலான நெரிசல் மிகுந்த காங்கிரீட் சாலைகள், குறுக்கும் நெடுக்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ட்ராம் வண்டிகள், மஞ்சள் நிற அம்பாஸிடர் டாக்சிகள்,ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் நகரின் நடுவே அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அகண்ட கங்கை


என  பழமை பூசிய முகத்துடன் வரவேற்றது கொல்கத்தா.சட்டெனெ இருபது வருடங்கள் பின்னோக்கி போய்விட்டதைப் போல ஒரு உணர்வு தோன்றியதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
 
திரும்புகிற பக்கமெல்லாம் வண்ண வண்ண விளக்குகள், விதவிதமான வீதியோர சிற்றுண்டிச் சாலைகள், சிவப்பு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிற பருத்திப் புடவையுடுத்திய, பெரிய கண்களும் பளிச்சென பொட்டும் வைத்த அழகிய பெங்காலி பெண்கள்.ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்த தற்காலிக வழிபாட்டு கூடங்கள்,அவற்றில் அமைக்கப் பட்டிருந்த வண்ண வண்ண தோரணங்கள்,ஆர்பாட்டமான இசை,பாடல்,ஆடல்கள் என திருவிழா களைகட்ட வயதெல்லாம் மறந்து சிறுமியாய் மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.


 இந்த தற்காலிக வழிபாட்டு கூடங்களைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு செலவு செய்து அலங்கரித்து வைத்திருந்தனர்.தங்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தினை பறைசாற்றும் விதமாக சில வழிபாட்டு கூடங்களில் பணம் தண்ணீராக இறைக்கப் பட்டிருந்தது. பல இடங்களில் அலங்கார செலவுகள் மட்டுமே கோடிகளை தாண்டியிருப்பதாக கூறக் கேட்டேன்.ஒவ்வொரு வழிபாட்டுக் கூடமும் ஒரு கருத்தியலை(Theme) அடிப்படையாக கொண்டு வடிவமைத்திருந்தனர்.தங்கள் பகுதி வழிபாட்டு கூடங்கள் குறித்த
பெருமையும்,அலட்டல்களும், பீற்றல்களும் மக்களிடம் வழிந்தோடியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் சில அரசியல் வாதிகளின் கூடாரங்களும் அடக்கம்.

நவராத்திரி நாடெங்கும் கொண்டாடப் பட்டாலும், வங்காளிகள் அளவுக்கு இத்தனை தீவிரமான கொண்டாட்டத்தை நாட்டின் மற்ற பகுதிகளில் காண இயலாது.இது அவர்களின் உணர்வுகளோடு கலந்த ஒரு விழாவாகவே கருதுகிறார்கள். ஒன்பது நாட்களும் புத்தாடை உடுத்தி, விதவிதமாய் பலகாரங்கள் செய்து விருந்து வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

இத்தனை தீவிரமான கொண்டாட்டங்களுக்கு பின்னால் புராண கதை ஒன்றையும் கூறுகிறார்கள். பதிவு நீளமாய் போகிறது எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Wednesday, November 17, 2010

காற்று வெளியிடைக் கண்ணம்மா

இதை விட ரொமாண்டிக்கான ஒரு பாடலை கேட்டதில்லை...

கண்ணம்மா கண்ணம்மா என்று உருகி உருகி காதலியை வர்ணித்து, இளமைத் துடிப்பு நிறைந்த பாரதி, காதலன் காதலியையும், காதலையும் நம் கண் முன்னே வைக்கிறார்.



காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா
ம்ம்ம்
கண்ணம்மா
ம்ம்ம்

கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்

Friday, October 15, 2010

நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவ்ள் இல்லை!

கடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக எனது வலைப் பதிவு ஹேக் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு முறையும் பதிவினை மீட்டெடுத்து விட்டேன். அந்த தொடர் முயற்சியாளருக்கு எனது வாழ்த்துக்களும், அனுதாபங்களும்....

வாழ்த்துக்கள், வெற்றிகரமாய் எனது வலைப் பதிவுக்குள் நுழைந்து என் பெயரில் விடை பெறுவதாக பதிவு போட்டதற்கு, அனுதாபங்கள் அவரின் பிறழ்ந்த மனநிலையை நினைத்து....வாழ்க்கை என்பது இந்த பதிவோடு முடிவதில்லை நண்பரே, இதைத் தாண்டியது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

ஒரு வலைப் பதிவினை முடக்குவதால் என்னை முடக்கிவிட முடியும் என நினைப்பதில் அபத்தமானது.எனக்கு இதை விட பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.எனவே நீங்கள் தொடர்ந்து முயற்சியுங்கள்....உங்களால் இந்த வ்லைப் பதிவினை முடக்கிட முடிந்தால் இன்னொரு வலைப் பதிவு தொடக்க எனக்கு நேரமாகாது, அதையும் முடக்குங்கள்....நான் போய்க் கொண்டே இருப்பேன், நீங்கள் என் பின்னால் நாய்க் குட்டி மாதிரி தொடர்ந்து ஓடிவரலாம். அதுல் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை....

ஏனெனில் நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவள் இல்லை.

Monday, October 11, 2010

kasme vade pyar wafa @ கனவு காணும் வாழ்க்கை யாவும்

மனோஜ் குமார் இயக்கத்தில் 1967 ல் வெளியாகிய இந்தப் படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட். மேலும் பல பல விருதுகளை பெற்றது இந்த படம். 

அப்பா சொல்லுவார், அந்த கால கட்டதில் பிறந்த குழந்தைகளுக்கு பிரான் என்று பெயர் கூட வைக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு கொடுமையான வில்லனாக கொடிகட்டி பறந்தவர் பிரான்.  முதல் முதலாக வில்லன் கதாபாத்திரத்தை விட்டு இந்த படத்தில்தான் அவர் ஒரு பாஸிடிவ் ரோல் செய்திருக்கிறார்.

பிரானின் அசாத்திய நடிப்புத் திறமை இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது, கமாரின் வரிகள், மன்னா தே இன் குரல், கல்யான்ஜி ஆனந்த ஜீ யின் இசை.. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதை அள்ளிச் செல்லும். 

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத்த்து....



---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடல் அச்சு அசலாய் தமிழ் பாடல் ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகிறதல்லவா....இவை இரண்டும் வேறு வேறு கால கட்டத்தில் எடுக்கப் பட்ட படங்கள்....கல்யாண்ஜியின் அனுமதியோடு இளையாராஜா இந்த மெட்டினை பயன்படுத்தியதாக கேள்வி..... 


Sunday, October 03, 2010

ரசித்ததோர் தருணம்


உன் கனிவில் அந்த குழைவில்
காட்டும் அன்பில் அரவணைப்பில்
கவனமாய் ஊட்டிய அன்னத்தில்
ரசித்துச் செய்து விட்ட அலங்காரத்தில்
ஆசையாய் அழுந்தத் தந்த முத்தத்தில்
உயிர்த்தெழுகிறது அந்த பொம்மை

ஒரு நிகழ்வு ஏற்படுத்தும் உணர்வை அதன் தன்மை மாறாமல் கவிதை வடிவமாகக் கொடுப்பதற்கு எல்லோராலும் முடியாது. கடலூர் பள்ளியின் மேற்பார்வையின் போது எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டதென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கவித்துமான படைப்புகளை தருபவர்கள் அதையே அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

வகுப்பறையில் ஒரு குழந்தை, பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த  கணத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்வை, கவிதையாய் நடந்த அந்த நிகழ்வை எழுத்தாக்கியிருக்கிறேன். அவ்வளவே!


Thursday, September 30, 2010

இனி ஒரு விதி செய்வோம்.....


மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.அதன் சாரம் இதுதான்...
 
ஆந்திரா, அஸாம், பீஹார், தில்லி, கோவா, கேரளா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா,, மிசோரம், ராஜஸ்தான், உத்திரபிரேதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பதின்மூன்று மாநிலங்களில் உள்ள ஐந்து முதல் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட  12,477 குழந்தைகளிடையே நடத்திய ஆய்வில் 66.8% குழந்தைகள் உடல் சார்ந்த வன்முறையினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிற்து. மேலும் 55% குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலே சொன்ன 12,477 குழந்தைகளில் 2317 குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் என போகிறது அந்த ஆய்வறிக்கை.

எதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளில் 66.8 விழுக்காட்டினர் உடலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது வேதனையான நிதர்சனம்,இம்மாதிரியான அத்து மீறல்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எத்தகைய எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதை சொல்லித்தான் யாரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.உலகத்தில் இந்தியாவில்தான் தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம், நம்மிடம் இருக்கும் கணக்கின் படி இந்தியாவில் 18 மில்லியன் குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கின்றனர்.இந்தவகையில் உலகில் நாம்தான் முதலிடம்...

இந்த நிதர்சனங்கள் இப்படியிருக்க...இப்படியும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதானிருக்கிறது...








Thursday, September 09, 2010

பயணம், அனுபவம், உணர்வு

கடலூர் மாவட்டம் மடவபள்ளி கிராமம், நகரத்து நாகரீக பாதிப்புகள் ஏதுவும் இல்லாத அழகிய கடற்கரை கிராமம். ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தில் சின்னாபின்னமான கிராமங்களில் ஒன்று. பெரிதான அடிப்படை வசதிகள் எட்டிப் பார்க்காத இந்த கிராமத்தில், கல்வி அறக் கட்டளை ஒன்று முற்றிலும் இலவசமான அதே நேரத்தில் தரமான கல்வியினை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறது.


இந்த பள்ளியின் செயல்பாடுகளை ஆய்ந்து மேம்படுத்தும் பணி தொடர்பாக கடந்த இரு தினங்களாய் இங்கே முகாமிட்டிருக்கிறேன்.பள்ளியில் இருந்து 5 நிமிடம் நடந்தால், ஒரு பக்கம் முந்திரி தோப்பும், மறுபக்கம் கடலும், கண்ணைக் கவரும் இயற்கைப் பேரழகு திரும்பிய பக்கம் எல்லாம் கொட்டிக் கிடக்கிறது.

வழக்கம் போல காலையில், குழந்தைகளின் பிஞ்சுக் குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளி துவங்கியது. எப்பொழுது கேட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ரசித்து பாடி மனம் லேசாவதை அனுபவிப்பேன். ஆனால் ஏனோ இன்று தமிழ்த்தாய் வாழ்த்தின் போதும் கொடிப்பாட்டின் போதும் அந்த குழந்தைகளின் குரல் மனதை பிசைந்தது. ஆழிப்பேரலையின் கோர தாண்டவமும்,அப்பாவிகளின் கதறலும்,வேதனையுமான காட்சிகளே கண் முன்னால் வந்து போனது.


மாலையில் தனியே கடற்கரையில் நிறைய நேரம் உட்கார்ந்திருந்தேன்.. அங்கே என்னைத் தவிர வேறு யாரும் தென்படவில்லை... எனக்கே எனக்கான இடமாக தெரிந்தது.....அலைகளில் காலை வைத்து கட்டுமரத்தில் உட்கார்ந்து இருந்தேன்....அமைதியாக கரையை வந்து தொட்டுப் போகும் இந்த அலைகளா பொங்கி வந்தது? இந்தக்கடலா அழிவைத்தந்தது?...

இந்த அனுபவம் தந்த உணர்வுகளைப் பற்றி நிறைய சொல்லவேண்டும், எழுத வேண்டும் என்று தோணுகிறது....இந்த பயணம் முடிந்த பின்னால் அதை முயற்சிக்கிறேன்...ம்ம்ம்ம்ம்


Sunday, August 15, 2010

உறக்கம் கலைவோம்....

சுதந்திரம்   வந்து 63 வருடம் முடிந்து இன்று அறுபத்தி நாலில் அடியெடுத்து   வைக்கிறோம்.  சாதனைகள், உயரங்கள், உற்சாகமாய் வெளிச்சம் போட்டு காட்டி   பெருமித  முகங்கள், வாழ்த்துக்கள், நாளைய கனவுகள் பற்றி உரக்க பேசி  சந்தோஷப்   படுகிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது பார்ப்பதற்கும்,    கேட்பதற்கும்.


இந்த   இடத்தில் ஒரு பழைய சம்பவம். வருடம் 1923, சேரன்மாதேவியில் உள்ள  வா.வே.சு   அய்யர் அவர்களின் ஆசிரமம் அல்லது குருகுலம். இதற்கு பொருளுதவி  செய்து   வந்தது அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் அமைப்பு. தந்தை  பெரியார்   அப்போது அதில் செயலாளர். குருகுலத்தில் ஒரு பழக்கம் தீவிரமாக   கடைபிடிக்கப்  பட்டது. அவர் சார்ந்த சமூகத்தவருக்கு ஒரு பந்தியும்,   மற்றவர்களுக்கு ஒரு  பந்தியுமாய் உணவு வழங்கப் படும். இதை அறிந்த பெரியார்   கொதித்தெழுந்து  எதிர்த்தார். காந்தியடிகளின் காதுக்கும் கூட செய்தி  போனது,  ஒன்றும்  நடக்கவில்லை. வெறுத்துப் போன பெரியார் பதவியை தூக்கி  எறிந்து  விட்டு  வந்தார்.


87 வருடங்கள் ஓடிப் போய்  விட்டது. நமது  சிந்தனைகள் செயல்களில் கூட  பெரிய அளவில் மாற்றம்  வந்திருக்கிறது.அறுபத்தி  மூணு ஆண்டு சுதந்திரம்  நமக்கு தடையில்லாத பேச்சு  மற்றும் எழுத்து  சுதந்திரத்தை கொட்டிக்  கொடுத்திருப்பதனால் புதிய  சிந்தனைகளினால் எல்லா  துறைகளிலும் மிளிர்ந்து  கொண்டிருக்கிறோம்.  இப்படித்தானே எல்லா பக்கமும்  சொல்லிக்  கொண்டிருக்கின்றோம். ஆனால் சமூக நீதி  மற்றும் சாதிய உணர்வுகளில்...?


சமீபத்தில்  உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்கிவரும் அறக்கட்டளை  ஒன்றின் பள்ளி நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் வாய்ப்பு வந்தது. அந்த பள்ளியில்  சீருடையில் இருந்து,  புத்தகம்,  மதிய உணவு உட்பட  அனைத்தையும்  அறக் கட்டளை இலவசமாய்  வழங்குகிறது. 

பொருளாதார ரீதியில் பின் தங்கிய அந்த பகுதி மக்களுக்கு அதை எத்தனை பெரிய உதவி  என்பதை அறிந்து  மகிழ்ச்சி அடைந்தேன். ஆசிரியர்களும்  ஊழியர்களும்  குழந்தைகளை அக்கறையுடனும் கவனித்துகொண்டு முழுஈடுப்பாட்டுடன்  இருப்பதை  பார்த்து எனக்குள் திருப்தியும், நிம்மதியும் ஆன ஒரு  உணர்வும் ஏற்பட்டது. அந்த சூழலில் என் மனதிற்கு  உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிட்டியது  என்பது உண்மை.


மதியம்   குழந்தைகளோடு நானும் உணவருந்திக் கொண்டிருந்த போது சில குழந்தைகள்    மட்டும் தாங்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்திருந்ததை கவனித்தேன். அத்தருணத்தில் அது எனக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.  ஆனால் அந்த குழந்தைகளில் சிலர் பள்ளியில் தரப்படும் உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்பதையும் கவனித்தேன். இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்செயலாய் அந்த ஊர்காரர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்த மதிய உணவு பற்றி அவர் கூறியபோதுதான் வீட்டில் இருந்து உணவு கொண்டுவரும் செயலின் பிண்ணனி புரிந்தது.


ஒடுக்கப்பட்ட   சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும், மேல் ஜாதி என தங்களை  நினைத்துக்   கொள்வோரின் குழந்தைகளுக்கும் ஒரே தட்டில் உணவு  பரிமாறப்படுவதால், மேல்ஜாதி   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான உணவினை  தனியே கொடுத்தனுப்புகின்றனர்   என்றார் அவர்.


 தீண்டாமை!, சொல்வதற்கே வெட்கமாய்த்தான்   இருக்கிறது. அறுபத்தி நாலு ஆண்டு  சுதந்திரத்திற்குப் பின்னரும் நகர்புறம்   தாண்டிய அந்த பகுதி மக்களின்  எண்ணங்களும் பார்வையும் என்னவோ இன்னமும்   அபப்டியே தான் இருக்கின்றன. எத்தனை  பெரியார்கள் வந்தென்ன?, போயென்ன?


 எட்டாக்கனியாக   இருக்கும் கல்வியை எளிதாக்க யாரோ ஒரு நற்சிந்தனையாளர்  தேவையின்   அடிப்படையில் மகத்தான சேவையினை செய்து வந்தால் அதிலும் நம் சாதிய  ஒடுக்கு முறை புத்தியை காட்டி பிரிவினையை உண்டு பண்ணும் நம் சமூகத்தை என்ன  வென்று   சொல்வது. சீரான சமூக பழக்கவழக்கங்களை  இலக்காக்கி மனிதனை மனிதனாக   மதிக்கும்  நாகரீகத்தை வளர்க்கும் ஒரே இடம் பள்ளி தான்.  மதிப்பீடுகளில்   சாதியும்  மதமும் வரக்கூடாது என்பதை வலியுறுத்தவும்  ஒழுக்கத்தையும்   சகிப்புத்தன்மையும் வளர்க்கவும் வகுப்பறையே ஏதுவான இடம். 


அக்குழந்தைகள்   கண்டிப்பாக தங்கள் பெற்றோர்களை காரணம் கேட்டிருப்பார்கள் எதற்காக  தாங்கள்   மட்டும் பள்ளியில் சாப்பிடக்கூடாது என கேட்காமல்  இருக்கப்போவதில்லை.   அப்பெற்றோர்களும் உண்மையான காரணத்தை பெருமிதத்துடன்  சொல்லாமல்   இருக்கப்போவதில்லை. இது எந்த வகையான ஒரு தாக்கத்தை, எண் ஓட்டத்தை அந்த  பிஞ்சின்   மனதில் ஏற்படுத்தும்?


குழந்தைகளுக்குள் எந்தவித   வேறுபாடுகளும் இல்லை. பள்ளியில் சாப்பிடும்  தட்டில் கூட தீண்டாமையை   கடைபிடிக்கும் இப்பெற்றோகளுக்கு அல்லவா கல்வி  தேவைப்படுகிறது. ஒருவரின்   இருப்பை கேவலப்படுத்தி சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி என்னோடு சரிசமமாக உட்கார்ந்து   உணவருந்தும் தகுதி உணக்கில்லை என்பதை  முகத்தில் அறைந்து சொல்வது   அவனுக்குள் எப்பேர்பட்ட காயத்தை ஏற்படுத்தும்.  அந்த இடத்தில் நம்மை வைத்து   மனசாட்சியோடு சிந்தனை செய்தால் மட்டுமே அந்த வலி  புரியும். நிராகரிப்பின் வலியை   அனுபவித்தால் ஒழிய புரியாது.ம்ம்ம்ம்


மாணவர்கள் வீட்டில்   இருந்து கொண்டுவரும் உணவை சகமாணவர்களுடன் பகிர்ந்து ஒன்றாக  உண்ண   வேண்டும் என வலியுறுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.ஐந்தில் வளையாத உடல் மட்டும் அல்ல எண்ணங்களும் ஐம்பதில் வளையாது. விதை ஒன்று    போட்டால் செடி ஒன்று முளைக்காது. விதைகளை அனைத்துச்செல்லும் விருட்சங்களாக    வளர்ப்பது நம் கையில் தானிருக்கிறது.


1924 ல் குருகுலத்தில்   நடந்த அந்த பிரிவினைச் சார்ந்த செயலானது ஒரு குறிப்பிட்ட உயர்  சமூகத்தார் மற்ற    சமூகத்தார் அனைவரின் மீதும் ஏவிய ஒடுக்குமுறை. இன்றைக்கு பெரியார் மாதிரியான சமூக புரட்சியாளர்கள் மீட்டுத் தந்த சமூக நீதியின் நீட்சியாக மேலே வந்த பிற சமூகத்தினர் தனக்கும் கீழான சமூகத்தவன் என மற்ற சமூகத்தினர் மீது அதே வன்முறையினை  நிகழ்த்துகின்றனர். குப்பனும் சுப்பனுமாக வீரம் இழந்து மானம் இழந்து அடிமைப்பட்டு கிடந்தவர்கள் கொஞ்சம் வசதியும், வாய்ப்பும்  வந்தவுடன்  கடந்த காலத்தை மறந்து, சாதீய போதையில் சக மனிதனை மனிதனாக மதிக்க மறுக்கின்றனர்.
  
ஆளப்பிறந்தவர்கள்    என்று கூறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து  நமக்கு பெரியார்  விடுதலை   வாங்கிக் கொடுத்துவிட்டார். இருப்பினும் அதே ஒடுக்குமுறை உணர்வு  அரசியல்,   கல்வி, பொருளாதாரத்தில் தங்களின் ஆட்சியே இருக்கவேண்டும் என்ற  சுயநல  உணர்வு அடுத்த தட்டு மக்களின் மனத்தில் ஆழமாகப்  பதிந்து விட்டது. 87  வருடங்களுக்கு   பின்னரும் நாம் இதே குறுகிய எண்ண வட்டத்தில் தான்  சுழன்றுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் பெரியார் மாதிரியான மகாத்மாவிற்கு நாம் இழைக்கும் துரோகம், இதற்காக அனைவருமே வெட்கப் பட வேண்டும்.

சாதீய  கட்டமைப்புகள்,பேதங்கள்,  தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என   சாதியத்தின் பெயரால்  மக்களைப்  பிரித்து ஒதுக்கும் கொடுமையை இன்னும்  எத்தனை நாட்களுக்கு சகித்துக்   கொண்டிருக்கப்போகிறோம்.விடுதலை கொண்டாட்டங்கள் என்பது நமது எண்ணம், செயல், சிந்தனைகளின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து பெருமையடைவதாக இருக்கவேண்டும். இந்த நாளிலாவது அதற்கான உறுதி மொழியினை ஏற்றிடுவோம். சக மனிதனை சாதியின் பெயரால் அவதூறு செய்வதை ஒழித்திடுவோம்

 பிற்சேர்க்கை - பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசிகொண்டிருந்த போது அவர், "அவ்வாறு தனியாக உணவு கொண்டு வருவதை நாங்கள் ஆதரிப்பது இல்லை. சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கும்போது வீட்டில் இருந்து கொண்டுவருவார்கள். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சநதிப்பில் இந்தப் பிரச்சனை வராமல் இருப்பதில்லை. பள்ளியின் கொள்கைக்கும் கட்டுப்பாடிற்கும் கட்டுப்பட்டால் மட்டுமே குழந்தைகளை சேர்த்துக்கொள்வது' என்றார்

Saturday, August 07, 2010

கண்ணாடிப் பெண்...


கனவு நினைவு நிம்மதி மகிழ்ச்சி
தேவைகள் தடைகள் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
பயம் பதட்டம் கவலை வலி
இன்னும் எத்தனையோ வரட்டும்
பகிர்ந்து கொள்ளவும் பாதியாக்கவும்
மௌனம் நிறைத்த அவளின் இதமான அழுத்தம்
ரயில் பயணத்தில் நொடி நேரம் தோன்றி
மறையும் காட்சிகளாய் கடந்திட வைத்த
அவளின் பார்வை
இத்தனைக்கும் கண்ணாடியில் மட்டுமே அவளை...


Tuesday, August 03, 2010

வெளிச்சம்....


ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்..
என் சுயநினைவை கிழித்துக்கொண்டு ச்சோவென பெய்கிறது மழை
முகத்தில் அறைகிறது காற்று

மழையும் நிற்கப் போவதில்லை..
இந்த காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???
கைகளை கேடயமாக்கி சுருண்டு கொள்கிறேன்
இந்த இரவு விடியாமலே போய்விட்டால்???
அறையெங்கும் அவநம்பிக்கைகள்

இறுதி நிமிடங்களில் இரவு - அதைக்
கிழிக்கும் ஒளிக்கீற்று வரவேண்டும்
சூரியனை மிரட்டலாம்தான்...எடுபடுமா?
அவநம்பிக்கைகள் மீது வெறுப்பு படர்கிறது

கருப்பையின் கதகதப்பிற்கு ஏங்கிக்கிடக்கிறேன்
மழைச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது
கண்ணுக்குள் கருமை நிறைந்திருக்கிறது
இந்த கருமைக்குள் தொலைந்து விடுவேனோ...

நிசப்தத்தை கிழிக்கும் என் எண்ணங்களின் கூக்குரல்
வெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்
அதிர்ந்து எழுகிறேன், மெல்லிய வெளிச்சம் அறையெங்கும்..

நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்...



Monday, May 24, 2010

கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் !

தனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடும்
மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் உடந்தையாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..

மருந்துகளின் உற்பத்திச் செலவு என்று பார்த்தால் மிகக் குறைவாகவே ஆகிறது.ஆனால் அதற்கு பின் நடக்கும் சந்தைப் படுத்தும் ஆடம்பரங்கள், ஆராய்ச்சிகள், லாப நோக்கு போன்ற காரணிகள் தான் விலையை உச்சானிக் கொம்பில் கொண்டு போய் விடுகிறது. சமீப ஆண்டுகளில் மருந்து கம்பெனிகளின் அதீத வளர்ச்சியும் அவர்கள் எடுக்கும் லாபமும் இதற்கு சான்று.



ஒரு உதாரணத்திற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன் படும் Atenolol என்ற மருந்து, தற்போது ஒரு அட்டை 20 அல்லது 25 ரூபாயில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதே மருந்தினை உலக சுகாதார மையத்தின் தரக்கட்டுப்பாடுகளின் படி தயாரித்து ரூபாய் 5 க்கு ஒரு நிறுவனம் தன்னால் இயன்ற வரை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இது எப்படி சாத்தியம்? யார் அவர்கள்? அவர்களின் பின்புலம் என்ன?, அதைப் பற்றி சொல்லவே இந்த பதிவு.


லோகாஸ்ட் (Low Cost Standard Therapeutics) என்ற அந்த தனியார் டிரஸ்ட் பரோடாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை, மிக மிக குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் சில எளிய முறைகளை பின்பற்றி அதே உலக தரத்துடன் கூடிய மருந்துகளை விற்று வருகிறது.
குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மருந்துகள் போய் சேருகின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் டிப்போக்கள் உள்ளன. கேள்விப்படாத கிராமங்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் இந்த மருந்துகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மருந்து கடைகளில் இதை விற்க ஒப்புதல் பெற்று, மருத்துவர்களிடமும் ஏழை நோயாளிகளுக்கு இதையே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர்.
இதை ஒரு தவமாக செய்து வரும் இவர்கள், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் தொழிளார்களுக்கு நல்ல கூலியையும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்க ஒரு அம்சம். எல்லா செலவும் போக இவர்களுக்கு 10% நிகர லாபம் நிற்கிறதாம். அப்படி இருக்கையில் நம் தனியார் நிறுவனங்கள் பார்க்கும் லாபம்?.........ம்ம்ம்ம்

இதைத்தவிர, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் லோகாயத் மெடிக்கல் சென்டர் என்ற ஒரு ஆலோசனை மையத்தை புனேவில் நிறுவி இருக்கிறார்கள். இந்த மையத்தின் பணியை கேட்டால் இப்படி கூட நம் நாட்டில் நடக்கிறதா என்று ஆச்சிரியப் பட வைக்கிறது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும் இந்த மையம், மருந்து பரிந்துரைத் தாளுடன் வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றிய ஆலோசனை வழங்கி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், லோகாஸ்ட் மருந்துகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகிறது.
மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும் முன்னர், நோய் பற்றியும், உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மையம்.

மாஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் மொபைல் க்ளீனிக்குகள் அமைத்து 5 அல்லது 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி லோகாஸ்ட் மருந்துகளை வழங்கி வருகிறார்கள்.
இந்தியா மீது படை எடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சில உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தயாரித்து வழங்கி வருவதில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருந்து வருகிறதென்றால் மிகையில்லை.

இதைப் படிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தார் இவர்களின் சேவையினை தமிழகத்திலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த பதிவினை இட்டதன் பலனை அடைந்ததாக நினைப்பேன்.
(http://www.locostindia.com )

Wednesday, April 21, 2010

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

நிர்பந்தங்கள் அற்ற நேசங்களை நினைவில் கொண்டு....இதோ இந்த பாடல்




இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
வசந்த்தின் மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

Saturday, April 17, 2010

'துஜ் சே நாராஸ் நஹி ஜிந்தகி'

1983 ல் வெளி வந்த மாசூம் படத்தில் அனைத்து பாடல்களும் நெஞ்சை உருக்குபவை. சேகர் கபூர் முதன் முதலில் இந்தியில் இயக்கிய படம். தமிழில் பிரபு, அமலா மற்றும் சரிதா நடித்து வெளிவந்தது. மனதை தட்டி எழுப்பும் குல்சாரின் வரிகளை கொண்டது.

இந்தப் படத்தில் வரும் 'துஜ்சே நாராஸ் நஹி ஜிந்தகி' என்ற பாடலை ஜி டீவி யில் நடந்த சரிகமப நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த அமானத் அலி பாடினார். இந்த போட்டி நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன.

கீழே உள்ள வீடியோ படத்தில் அனூப் கோஷல் பாடியது.

மேலே உள்ள வீடியோ போட்டியில் அமானத் அலி பாடியது.

சிலர் பாடும் போது காதுகள் வழியே இறங்கி இதயத்தை உலுக்குகிற மாதிரி ஓர் உணர்வு ஏற்படும். ஏதொ ஒரு சக்தி நம்மை இழுத்து உட்கார வைக்கும். இந்த இளைஞன் பாடியதை கேட்ட போது நானும் இதை தான் உணர்ந்தேன். பாடல் வரிகளும், அவன் பாடிய விதமும், வெளிபடுத்திய உணர்ச்சிகளும் மனதை பிசையாமல் இல்லை. கண்ணில் கண்ணீரை வரவழைக்கும்.


அரங்கில் இருந்தவர்கள் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கூறி மூன்று தடவை பாடவைத்தனர். எத்தனை முறை கேட்டாலும் அதே உணர்வை ஏற்படுத்தும் குரல்.

இரண்டையும் கேட்டு பாருங்கள்...அமானத்தின் குரல் ஏற்படுத்தும் ஜாலம் புரியும்







tujhase naaraaz nahi zindagi, hairaan hoon main
o hairaan hoon main
tere masoom savalon se pareshaan hooN main
o pareshaan hoon main

jeene ke liye socha hi na tha, dard sambhalane honge
muskuraoon to, muskurane ke karz utaarne honge
muskuraoon kabhi to lagata hai
jaise hontonn pe karz rakhaa hai
tujhase ...

aaj agar bhar ayi hai, boondein baras jaayengi
kal kya pata inke liye aakhen taras jayengi
jaane kahan gum kahan khoya
ek aansu chhupake rakha tha
tujhase ...

zindagi tere gum ne hamain rishte naye samajhaye
mile jo hamain dhoop main mile chhaanv ke thande saaye

o tujhase ..

Monday, March 22, 2010

Catch them young..?????

மேல் நிலை பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை பாலியல் அறிவினை கற்பிக்க முயற்சிகள் நடந்ததும் அப்போது வந்த எதிர்ப்புகளும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

உளவியல் மட்டும் சமூகவியலாளர்கள் நீண்ட விவாதம் மற்றும் அராய்ச்சிக்குப் பின்னரே இந்த வளர் இளம் பருவ கல்விக்கான தேவையின் அவசியத்தை உறுதி செய்து செயல்படுத்த முடிவெடுத்தனர்.
நமது குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழியினையும் ஒரு பயிற்சி வகுப்பாக தொகுத்து இறுதி செய்தனர். இது முழுக்க நமது கலாச்சாரம் சமுதாய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே திட்டமிடப்பட்டது.

மேற்கூறிய வளர் இளம் பருவ கல்வி என்பது அந்த பருவத்திற்கே உரிய உடல் கூறு, பொதுவான ஆரோக்கியம் பாலுணர்வு சிந்தனைகள், உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள், தவறான பழக்கங்கள், செயல்கள்,தீர்மானங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் தொடர்ச்சியாக பதின்ம பருவத்தில் உடலுறவும், கர்ப்பம் தரித்தலும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த கல்வி எடுத்து கூறுகிறது. இத்தனை விசாலமான பார்வையுடன் திட்டமிட்ட போதும், வழக்கம் போல நம் கலாச்சார காவலர்கள் அலறி அடித்து ஓடு வந்து அதை முழுமையாக நிறைவேற்ற விடாமல் வெற்றிகரமாக நிறுத்தி விட்டனர்.

சரி இது இப்படி இருக்க நான் சமீபத்தில் படித்த ஒரு தெய்தி, இது டூ மச், த்ரீமச்னு நினைக்கத் தோன்றியது. மேற்கூறிய விழிப்புணர்வு கல்வியி்ல் ஆணுறை பற்றிய குறிப்பும் இடம் பெறுகிறது. மறுக்கவில்லை. ஆனால் இப்ப இந்த பதிவில் சொல்ல வந்த விஷயம் என்னன்னா சுவிட்சர்லாந்தில், காண்டம் தயாரிக்கும்
நிறுவனம் ஒன்று, உலகில் முதன்முறையாக 12 வயது சிறுவர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய காண்டங்களைத் அறிமுகப் படுத்தியிருக்கிறது.

நான் 15 ஆண்டு காலமாக ஊர் ஊராக சென்று ஆணுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவள் தான். இருந்தாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, ஒரே அடியாக இது தேவையில்லாத ஒன்று என்று ஒதுக்கவும் முடியவில்லை.

இதற்கு அந்த நிறுவனம் கொடுக்கும் விளக்கம், "சிறுவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர்வதில்லை. அதன் விளைவுகள் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் உடல் உறவு வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆனால், அது அவர்கள் பிரச்சனை என்று நினைக்கிறார்கள்".


இங்கிலாந்தில் 12 லிருந்து 14 வயது சிறுவர்கள் இப்போது உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது, இதனால் டீன் ஏஜ் கர்ப்பமும், முறையற்ற கருக்கலைப்பும் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களை முன் நிறுத்தி சிறிய அளவிலான காண்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் டீன் கர்ப்பம், பாலியல் நோய்கள் போன்றவை அதிகரித்து உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.
இந்த நிலவரத்தை மனதில் கொண்டு அந்த அரசு சி-கார்ட் என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வைத்து தானியங்கி காண்டம் இயந்திரங்களில் காண்டங்களை எடுத்துக் கொள்ளலாம். மத அமைப்புகள் இதை பலமாக எதிர்த்து வருகின்றன.


ஆராய்ச்சி முடிவுகள் ஏற்படுத்தும் தேவைகளினால் அரசும் மற்ற நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அடிப்படை ஒழுக்கம் வாழ்க்கை குறித்த பொறுப்புணர்ச்சியும், சரியான கண்ணோட்டமும் இளைஞர்களுக்குள் வளர செய்வதே இந்த பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் என்பது என் கருத்து.

Monday, March 08, 2010

விருட்சங்களுக்கு வாழ்த்துக்கள்



குஜராத் மாநிலம் பாவ்நகர் ரயில்நிலையத்தில் மற்ற எந்த இடத்திலும் காண இயலாத ஒரு காட்சியை காணலாம். பொதுவாக லக்கேஜ்களை தூக்க ஆண்கள் தான் சிவப்பு நிற சட்டை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பாவ்நகர் ரயில்நிலையத்தில் லக்கேஜ்களை தூக்க சிவப்பு நிற ஆடையில் பெண்களை பார்க்கலாம். சுமார் முப்பது பெண்கள் இங்கு கூலி வேலை பார்க்கிறார்கள். சிலர் தலைமுறை தலைமுறையாக இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


ஒரு நூற்றாண்டிற்கு முன்பு இந்த பகுதியை ஆண்டு வந்த ராஜா மஹாரானா கிருஷ்ன பிரதாப் சிங், பெண் போர்ட்டர்களை நியமித்து பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அது இப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் போது, அந்த அரசனையும் பெண்களையும் வாழ்த்த தோன்றுகிறது.


முன்னோர்கள் போட்ட நம்பிக்கை என்ற விதை இன்று விருட்சமாக பெண்களான எங்களுக்குள் வளர்ந்து நிற்கிறது
.

பெண்களின் உழைப்பிற்கும் உணர்வுகளுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுப்போம்.

உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

Wednesday, March 03, 2010

போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா


ஆன்மீகத்தில் தேடல், பசி, தாகம்,ஈரவெங்காயம் எல்லாம் அதிகரிச்சு போயிருச்சு.. இதுக்குன்னு ஒரு கூட்டம் சுத்தீட்டே இருக்கு..யாரு புதுசா காவி கட்டீட்டு வருவாங்கன்னு... புரியாத பாஷையில பேசுற ஆளாக்கு கிராக்கி ஜாஸ்தி..

யோகா, தியானத்தை சொல்லி குடுக்கறதுக்கு நல்ல மனுஷங்க எவ்வளோ பேர் இருக்காங்க..அவங்க கிட்ட போங்கய்யா..

ஆன்மீகத்தை ஊர் ஊரா, வீதி வீதியா கூவி விக்க ஆரம்பிச்சுட்டாங்க...அது தரம் பிரித்து வாங்க நமக்கு பத்தாது...

அதுனால.. போங்க போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க..(டேங்ஸ் வடிவேலு)...நாலு வார்த்தை நல்ல வார்த்தை சொல்லி வளர்த்துங்க.. அது போதும்...


(படத்துல காஸ்ட்யூம் பாருங்க..ஹ்ம்ம்ம்)

Tuesday, January 05, 2010

கருணைக் கொலை-ஒரு உணர்வுப் போராட்டம்


கருணைக் கொலை பற்றி யோசிக்கவோ பேசவோ சந்தர்ப்பங்கள் எழும் போதெல்லாம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் யாவும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காதவைகளாகவே இருந்திருக்கின்றன. அது கருணை கொலைக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, எதிராக இருந்தாலும் சரி, சம்பந்தப் பட்ட உயிர் பிரிவதாலோ, வாழ்வதாலோ நமக்கு நேரடியாக எந்த விதமான இழப்போ லாபமோ இருந்ததில்லை. (எனக்கு இருந்ததில்லை என்று வைத்துக் கொள்வோம்). அதனாலேயே அதைப்பற்றி பேசும்போதெல்லாம் சுலபமாக கருத்தை சொல்ல முடிந்திருக்கிறது. அதுவே நாம் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதை சமீபத்தில் உணர முடிந்தது.

நான் பேசுவது என் 10 வயது ஜூலியை பற்றியது. 15 நாட்களுக்கு முன்பு உடல் நிலை குன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளானது. நடக்க முடியவில்லை, உணவு உட்கொள்ளவில்லை, சிறுநீர் கழியவில்லை, மூச்சு விடுவதில் சிரமம், இப்படி பல பிரச்சனைகள். அழைத்தால் அன்புடன் வால் மட்டும் லேசாக ஆடும். தினமும் மருத்துவமனைக்கு சென்று 250மி.லி. க்ளூகோஸ் ஏற்றி வந்தோம்.அது மட்டுமே அதுக்கு உணவாக இருந்தது. 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்பும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையில் குடும்பத்தில் இந்த 10 நாட்களில் வெவ்வேறு விஷேசங்கள். ஜூலியை இந்நிலையில் விட்டு விட்டு போக மனம் வரவில்லை. இது வரை நம்மை சுற்றி சுற்றி வந்து நட்பு பாராட்டிய அந்த உணர்வுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதனால் ஓரிரண்டு இடத்திற்கு போக முடியாததன் காரணத்தை சொன்ன போது, ஒரு 'நாய்க்கு' நான் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "எத்தன நாள் தான் இதே காரணத்தை சொல்லீட்டு இருப்பே, பேசாம மெர்சி கில்லிங்க் பண்ணீட்டு அடுத்த வேலையை பார்" என்று அறிவுரைகள். இவ்வளவு வதைப்படும் ஒரு உயிரை கருணைக் கொலை செய்வது தவறில்லை என்பது அவர்கள் வாதம். ஐந்து ஆறு மணி நேரம் ஜூலி பட்ட கஷ்டத்தை பார்த்த போது. ஒரு வேளை அவர்கள் சொல்வது சரியோ என்றுகூட பட்டது. எது நடந்தாலும் சரி, அது சீக்கிரம் நடக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்.

16 ஆம் தேதி மதியம் நிலைமை மிகவும் மோசமானது. இனி சிகிச்சை கொடுத்து பலன் இல்லை என்று தெரிந்து விட்டது. அந்த முடியாத நிலையிலும், 4 முறை அழைத்தால், ஐந்தாவது முறை வாலை ஆட்டும். உயிருடனும் உணர்வுகளுடனும் கிடக்கும் அந்த ஜீவனை, ஜீவன் இல்லாமல் ஆக்க என்னால் முடியவில்லை. மனதில் ஏதோ ஒரு சிறிய நம்பிக்கை. வாலை ஆட்டும் போதெல்லாம், இதோ நம் அழைத்தால் வாலை ஆட்டுகிறது, நாளை எழுந்து விடும் என்ற நம்பிக்கை. ஆனால் நேரம் ஆக ஆக அதுவும் நின்று போனது. சுமார் 10 மணிக்கு மகள் சிறிது தண்ணீர் விட்டதும், அடுத்த நிமிடம் உயிர் பிரிந்தது.

சிக்கலை மட்டுமே சந்தித்து வந்த நாட்களில் இதே ஜூலி தான் எங்களுக்கு ஆதரவாக இருந்ததென்றால் மிகையில்லை. உறவுகள் ஒதுக்கிய அந்த கால கட்டத்தில், நம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு தோழியாகத் தான் இருந்தாள். நாளெல்லாம் அலைந்து திரிந்து களைத்துப்போய் வீடு வந்து சேர்ந்தால், ஓடி வந்து, சின்ன சின்ன முனகலுடன் காலைச் சுற்றும் அந்த அன்பை வாழ்நாளில் மறக்க முடியாது.