Wednesday, December 01, 2010

உலக எய்ட்ஸ் தினம் 2010


இன்று உலக எய்ட்ஸ் தினம்.மருத்துவ உலகத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் நோய். முற்றிலுமாய் தீர்த்திடும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படா விட்டாலும், நோயின் தன்மையோடு போராடி நோயாளியின் வாழ் நாளை நீட்டிக்கச் செய்யும் மருந்துகள் இப்போது சந்தையில் வந்து விட்டன.இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது முழு மூச்சுடன் செயல் படுத்தப் பட்டு வருகிறது.

விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இந்த நோயின் தாக்குதலில் இருந்து எளிதாக தப்பி விட முடியும்.உலகலாவிய அளவில் இந்த விழிப்புணர்வு என்பது பல கட்டங்களாய் செயல் படுத்தப் பட்டிருக்கிறது.தடுப்பு முறைகள்,  சிகிச்சை முறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள், மருந்துகள், மறுவாழ்வு, என பல கூறுகளை உள்ளடக்கியது இந்த விழிப்புணர்வு திட்டம்.

உலகம் முழுவதும் திசெம்பர் முதல் தேதியன்று, உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தியலை மையமாக கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதை அந்த ஆண்டு முழுவதும் பிரசாரங்கள், நடவடிக்கைகள், முடிவுகள், கலந்துரையாடல், கருத்தரங்குகள் என பல கட்டங்களாக செயல் படுத்துகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்தியல் ”மனித உரிமை மற்றும் அனைவருக்குமான திட்டங்கள் ”.

பாலியல் தொழிலாளிகள், திருநங்கையர், மற்றும் ஓரினச் சேர்கையாளர்களை இச்சமூகம் தீண்டத்தகாதவர்களைப் போல அணுகுகிறது. இதனால் பல இடங்களில் இவர்களின் அடிப்படை மனித உரிமை கூட மறுக்கப்படுகிறது என்பது வேதனையான உண்மை. அத்தகைய மனப் போக்கினை அறவே வேரறுக்க வேண்டிய எல்லோருக்கும் எல்லாமும் பொதுவானது என்கிற கருத்தியலே இந்த ஆண்டு வலியுறுத்தப்படுகிறது.

இனி கொஞ்சம் சொந்த கதை...

இந்தியா முழுமைக்கும் எய்ட்ஸ் தொடர்பான திட்டங்களை வகுத்து அவற்றின் செயல்பாடுகளை நெறிப் படுத்தி மேற்பார்வையிடும்அரசுத் துறையில் அங்கம் வகித்தவள் என்ற வகையில் மற்றவர்களை விட நிதர்சனங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.எனது முந்தைய பதிவுகளில் எனது அனுபவங்களையும், ஆதங்கத்தினையும் சமயத்தில் ஆத்திரத்தையும் பதிந்திருக்கிறேன்.

இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்.பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி அவர்களூக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு பல நாட்கள் இறுக்கமாய் வீடு போயிருக்கிறேன்.

இந்த பதிவின் இடது பக்கத்தில் ஒரு அழகிய குழந்தையின் படத்தினை பார்க்கலாம்.பலரும் அது நானாகவோ அல்லது என் குழந்தையாகவோ இருக்கலாம் என நினைத்திருக்க கூடும். யாரோ ஒருவரின் கவனக்குறைவால், பொறுப்பின்மையால் பிறந்த பிஞ்சு இவள்.இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி.இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டம் என்பது தனியொரு அமைப்பையோ, அரசாங்கத்தையோ சேர்ந்தது அல்ல என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் இந்த நோயினை தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வினையும், பாதிக்கப் பட்டவனுக்கு உறுதுனையாக நிற்கும் மனப்பாங்கினையும் கொள்ள வேண்டும்.

இந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

33 comments:

டுபாக்கூர் பதிவர் said...

நல்ல சிந்தனை, தொடரட்டும் உங்கள் பயணம். சக மனிதனை மதிக்கும் மனப் பாங்கினை வளர்த்திடுவோம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு. ஒவ்வொரு தனிமனிதனும் யோசிக்க வேண்டிய விஷயம். பகிர்வுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்//

இன்றும் உங்கள் தளத்தில் இருந்து எல்லாரையும் பார்வையால் சொல்லிக்கிட்டிருக்கா ..

Chitra said...

இந்த பதிவின் இடது பக்கத்தில் ஒரு அழகிய குழந்தையின் படத்தினை பார்க்கலாம்.பலரும் அது நானாகவோ அல்லது என் குழந்தையாகவோ இருக்கலாம் என நினைத்திருக்க கூடும். யாரோ ஒருவரின் கவனக்குறைவால், பொறுப்பின்மையால் பிறந்த பிஞ்சு இவள்.இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி.இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்.


......மனதை கனக்க செய்து விட்டீர்கள். எண்ணிப்பார்க்கவே, மனம் பதறுகிறது.

......உங்கள் மேல் வைத்து இருக்கும் மதிப்பு, இன்னும் உயருகிறது. உங்களின் பணி தொடரட்டும். நல்ல விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு, நன்றிங்க.

சென்ஷி said...

//
இந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.//

உறுதிமொழி கொள்கின்றேன்.

இளங்கோ said...

//இந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.//
YES.

கோபிநாத் said...

\\இந்த நாளில் அதற்காக உறுதியினை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.//

உறுதிமொழி கொள்கின்றேன்.

ADHI VENKAT said...

விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு. நானும் உறுதிமொழி ஏற்கின்றேன்.

தமிழ் அமுதன் said...

அந்த குழந்தை பற்றிய செய்தி ஒரு சிறிய அதிர்வை உண்டாக்கிவிட்டது..!

உங்கள் சேவை தொடரட்டும்..!

Thekkikattan|தெகா said...

இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்//

கிட்டத்தட்ட இருபது வருடங்கள், கேட்கவே மலைப்பாக இருக்கிறது. எத்தனை நேசமும், ஏற்றுக்கொள்ளும் மனத் துணிவும் இருந்தால் இந்த துறையில் பங்காற்றிக் கொண்டிருப்பீர்கள். Salute your noble path...

அந்த ப்ரோஃபைல் படம் நிறைய பேருக்கு இப்போதான் யாருன்னு தெரிஞ்சிருக்கும். இந்த தருணத்தில் அறிவித்தமை நன்று!

மங்கை said...

டூ பா...வெங்கட்..லட்சுமி

ஆம் அந்த குழந்தையின் பார்வை நம்மை பார்த்து கேள்வி கேட்பது போல தான் இருக்கும்

நன்றி..:)

மங்கை said...

சித்ரா..சென்ஷி..கோபி நன்றி..

முதல் வருகைக்கு ந்ன்றி இளங்கோ

நன்றி கோவை2தில்லி

நன்றி அமுதன்

ஆஹா தெகா...பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு...:).. அவ்வளவெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை..நன்றி..:)

சுந்தரா said...

விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

அந்தக் குழந்தையைப்பற்றிய செய்தி மனதைக் கனமாக்கிவிட்டது.

உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்!

குட்டிப்பையா|Kutipaiya said...

//இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி//

:( :( மிகக் கொடுமை மங்கை!!

எல்லாரும் யோசிக்கணும்!!

மங்கை said...

முதல் வருகைக்கு நன்றி சுந்தரா.. நல்ல பெயர்...:)

முதல் வருகைக்கு நன்றி சீதா..:)

தேவன் மாயம் said...

சமூக அக்கறையுடன் எழுதியிருக்கும் உங்களுக்கு என் வணக்கம்!

a said...

நல்லதோர் பகிர்வு.

பூங்குழலி said...

//இன்று இந்த குழந்தை உயிரோடு இல்லை.எய்ட்ஸ் பலிவாங்கிய பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளில் இவளும் ஒருத்தி//

இதனால் பாதிக்கப்படும் பெண்களும் குழந்தைகளும் படும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல .... சிந்தனையைத் தூண்டும் பதிவு

வின்சென்ட். said...

"இவளின் மரணத்தை கண்ணெதிரில் பார்த்தவள் நான்.இனியொரு குழந்தைக்கு இத்தகைய நிலை வரவிடக் கூடாது என்கிற உறுதியை பார்வையால் உணர்த்தியதவள்."

மனதை பாதித்த வரிகள். தொடரட்டும் உங்கள் சமூக அக்கறையுடன் கூடிய பயணம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

பெருமையாக இருக்கு உங்கள் சேவை..

உறுதி எடுப்போம்.

Unknown said...

//இந்த துறையில் பத்தொன்பது ஆண்டுகால பயணம்,பல ஆயிரம் முகங்கள்,அவர்களின் கதைகள், வேதனைகள், அதிர்ச்சிகள், வெறுமை, தனிமை,இயலாமை என எல்லா உணர்வுகளையும் சந்தித்த பயணம்.பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி அவர்களூக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு பல நாட்கள் இறுக்கமாய் வீடு போயிருக்கிறேன்.///

ithukku per thaan vilambaram... vilambara mogam..nadakkattum... ithukku iththanai jalra

எண்ணங்கள் 13189034291840215795 said...

vilambaram... vilambara mogam//


இருக்கட்டுமே .

புகழுக்காகவாவது நல்ல விஷயங்கள் நடக்கட்டுமே...

அவர்கள் புகழுக்காக போடவில்லை என்று எமக்கு புரியுது ஒரு மூன்றாவது நபராக..

அப்படியே இருந்தாலும் தவறில்லை..She deserves the praise....& she motivated the readers...

முடிஞ்சா வலையுலகில் இலவச காம சேவை செய்கிறவர்களிடம் சொல்லிப்பாருங்களேன்... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யா வாங்கய்யா.. ரமேஷய்யா.. இந்த மாதிரி நல்ல பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் உங்க்ளை பாராட்டாம இருக்கமுடியல..வந்து போனதுக்கு கமெண்ட்டும் போட்டு தமிழ்மணத்துல இப்பதிவை நாலு பேரு படிக்க வைக்கும் உங்கள் விளம்பரத்துக்கு (நெகட்டிவாஇருந்தாலும்) நன்றிங்க..:)

நிலாமதி said...

உங்களின் பணி தொடரட்டும். நல்ல விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு, நன்றி.

மங்கை said...

நண்பர்களுக்கு.நன்றி

ரமேஷ் உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி..:)

தொடர்ந்து வாங்க

Unknown said...

பர்வால்ல....உங்களுக்கு கூட சப்போர்ட் பண்ண ரெண்டு பேர் வந்துட்டாங்க. அப்புறமென்ன அவங்கிட்ட இருந்து கத்துக்கலாமே... முதல் முறையா எனக்கு பதில் வந்திருக்கு...வழமை போல வருவேன்அ

Thekkikattan|தெகா said...

ரமேஷு,

உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு சொன்னா வாய்க்கா வரப்பு தகராறை பஞ்சாயத்து கூட்டி தீர்த்து வைக்கலாம். நீரும் நிம்மதியா தூங்கி எழலாம்.

வெளிய வையப்பா பிராதை.

ரவி said...

உண்மையில் உங்களை காயப்படுத்திடவேண்டும் என்ற எண்ணத்தோடு வரும் நபர்களை புறக்கணிப்பதே சரியான தண்டனை மங்கை

கவிதா | Kavitha said...

தொடரட்டும் உங்கள் பயணம்.

உங்களின் எண்ணங்களை மனதில் வாங்கி உறுதிக்கொள்கிறேன்.. !

கவிதா | Kavitha said...

இந்த குழந்தை இப்போது இல்லை என்பது... :(

கோமதி அரசு said...

இந்த குழந்தை இப்போது இல்லை என்பதை நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாய் உள்ளது.

நல்ல பதிவு.

உங்கள் பணி நல்ல படியாக தொடர வாழ்த்துக்கள்!

Savithri Raghupathy said...

the site is also smudged...i think it has to be formatted. please reply for my earlier comment

தருமி said...

திண்டுக்கல் அருகே ஒருவர் இவர்களுக்காக கட்டிய காப்பகத்தை நேரில் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். ஒரு வீடு தான். மறக்க முடியாத ஓர் அனுபவம். கைக்குழந்தைகளையும் பார்த்தேன்.