Thursday, February 21, 2008

காதலுக்கு காணிக்கை-மயக்கமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.

வாணிஸ்ரீ என்றாலே நினனவுக்கு வரும் இரு படங்கள், வாணி ராணி மற்றும் வசந்தமாளிகை. மிக அழகாக இருப்பார் இந்தப் படத்தில். இந்தப் பாடலில் மாளிகையும், அவரது உடையும், முகத்தில் காட்டும் உணர்வுகளும், ம்ம்ம்..ரசியுங்கள்

ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே


பெண்:கற்பனையில் வரும் கதைகளிலேநான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா

ஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட

பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூசை செய்து வர

பெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்தவண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)



Monday, February 18, 2008

ஆலோலம் பாடும் பச்சைக் கிளிகள்..

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி

நாயகனுக்கும் நாயகிக்கும் நட்பும் இல்லாத காதலும் இல்லாமல், ஒருவரின் மேல் ஒருவருக்கு மரியாதை. நாயகி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஓடக்காரனான நாயகன் பேச்சு வழக்கில் சொல்லித்தரும் பாட்டு.

நடிகர் திலத்திற்கும் நடிகையர் திலத்திற்குமே உண்டான பிசிரில்லாத நடிப்புடன் கூடிய பாடல் .
எனக்கு பிடித்த வரிகள்....

//தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக //
//பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக //

பாடலைக் கேட்டால், நாமும் ஓடத்தில் போவதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் கவிதை வரிகளும் இசையும்.

டி.எம்.எஸ்:ம்ம்ம் ஹம் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து,
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
டி.எம்.எஸ்:ம்ஹம், காற்று இல்லே காத்து
சுசீலா :தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
சுசீலா :அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
டி.எம்.எஸ் & சுசீலா: சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:செவ்வாழைத் தோட்டமும், தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சுசீலா :தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
டி.எம்.எஸ் & சுசீலா: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு.
எம்.எஸ்: ஓஓஓஓஓஓ
சுசீலா : ஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்:பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
சுசீலா : பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
டி.எம்.எஸ் & சுசீலா:சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு.
எம்.எஸ்:நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
டி.எம்.எஸ் & சுசீலா:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும், பூவாச்சும் வருமென்று, மீனாட்சி சொன்னதும் நமக்காக மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்தும்

Tuesday, February 12, 2008

வலிகளை பகிர்தலின் அவசியம்

உடன்கட்டை ஏறியவளே பதிவிரதையாகவும், அவளுக்கே மோட்சத்திற்கான டிக்கெட் என்கிற கப்ஸாவெல்லாம் இன்றைக்கு எடுபடாதுதான்.ஆனால் கணவனை இழந்த பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்வினைகள் இன்றைக்கும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆத்திரமூட்டுவதாகவுமே இருக்கிறது.

நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், பாமர மக்களிடையே மிகுதியாக காணமுடிகிறது

இந்துக்களின் புண்ணிய பூமியாக கருதப்படும், மதுரா, பிருந்தாவனம், வாரணாசி ஆகிய இடங்களில் மட்டும் 20,000த்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், தங்கள் உறவுகளால் ஒதுக்கப்பட்டு இங்குள்ள கோவில்களிலும் ஆசிரமங்களிலும் அரை வயிறு சோற்றிற்காக தஞ்சமடைந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் இத்தகைய நிலமை இல்லை என்று தான் நினைக்கிறேன்.

மேற்குவங்கம்,பீஹார் போன்ற மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் இருக்க வேண்டிய இடம் பிருந்தாவனம் அல்லது மதுராதான் என்று காலங்காலமாய் வேரூன்றியிருக்கும் சிந்தனை போக்கு, சமுதாய சட்டமாய் மாறி இந்த அபலை பெண்கள், வேறு வழியின்றி அவர்களாகவே இந்த சன்னியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.


இந்த பெண்களில் பெரும்பாலானோர் கோவில்களில் பஜனை பாட்டுக்கள் பாடி அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சுய சார்பில்லாத பெண்களே பெரிதும் இத்தகைய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பஜனைப் பாடல்கள் பாட கூடியிருக்கும் பெண்கள்

பெரும்பாலான இல்லங்கள் சில உள்ளூர் தொழில் அதிபர்களின் சொற்ப ஆதரவில் நடத்தப் பட்டு வருகிறது. ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சமடைந்திருக்கும் இப் பெண்கள், இங்கு வந்த பிறகாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால், ம்ம்ம்ம்..அதுவும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பெண்களின் எண்ணிக்கையால் அத்தனை பேருக்கும் இருக்க இல்லங்களிலும் இடம் இல்லை.

பிருந்தாவனத்திலும், மதுராவிலும் உள்ள இது போன்ற இல்லங்களிலும், கோவில்களிலும் வாழும் பெண்களுக்கு (17 வயது இளம் பெண் முதல் 80 வயது பாட்டி வரை) ஏற்படும் பாலியல் ரீதியான கொடுமைகள்... ஹ்ம்ம்.. என்ன சொல்ல... இல்லத்தை நடத்த பணம் தேவை படுவதால் இந்தப் பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மேலும், மேலிடத்து 'ஆதரவு' வேண்டும் என்றால், கோவில் பண்டிதர், லோக்கல் போலீஸ், அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் வாதிகளையும் திருப்திப் படுத்த வேண்டும்.

ஒரு வேளை இந்தப் பெண்கள் கர்ப்பம் அடைந்து விட்டால் பாதுகாப்பான முறையில் கருவை கலைக்க இவர்களிடம் வசதியில்லை. மருத்துவச்சி யிடமோ, நாட்டு மருத்துவரிடமோ தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், கைனகாலஜிகல் பிரச்சனைகள் மற்றும் பால்வினை நோய் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம், இவர்களில் பலர் எச்ஐவி ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கில்ட் ஆஃப் சர்வீஸ் நடத்தி வரும் இல்லத்தைப் போல ஒரு சில இல்லங்களே மனித நேயத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் வழி வழியாக வரும் 'வெள்ளை சேலை' கலாச்சாரம் இங்கு இல்லை. இங்கு பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமாணத்தில் இந்த இல்லம் நடந்தப் படுகிறது. பெரும்பாலும் வயதானவர்களே இருப்பத்தால், இவர்களைப் பார்த்துக்கொள்ள, இவர்களில் படித்தவர்களுக்கு, செவிலியர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகிறது. இவர்கள் மற்ற இல்லங்களில் இருக்கும் வயதான பெண்மணிகளுக்கு முடியாத போது கவனித்துக் கொள்கிறார்கள்.



இந்த ஆசிரமத்தை நிர்வாகித்து வரும் மோகினி கிரி ஆசரமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன்.

இங்கு நடக்கும் அவலங்களை படமாக தீபா மேத்தா 'வாட்டர்' என்ற படத்தின் மூலம் எடுத்துக் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம். படப்பிடிப்பு எடுக்க விடாமல் அவரைத் துரத்தி அடித்தனர் அங்கு இருந்த அதிகாரிகளும், மத வாதிகளும். அதனால் படப்பிடிப்பு இலங்கையில் தான் நடந்தது.

நடிகர் திலகத்தின் சகோதாரரின் மகன் தரன் தயாரித்த படமும் (White Rainbow) இந்த கொடுமைகளை எடுத்துக்காட்டுகிறது. அவரையும் படம் எடுக்க விடாமல் விரட்டி விட்டனர். பிறகு பிருந்தாவனம் போலவே சென்னையில் செட் போட்டு எடுத்தாராம்.

White Rainbow படத்தில் இருந்து ஒரு காட்சி

பெண்ணின் மகத்துவத்தை பற்றி வாய்கிழிய பேசும் மதவாதிகளோ அல்லது ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளுக்கோ இவர்கள் மீது எந்த அக்கறையோ, கருணையோ இல்லையென்பதுதான் உண்மை.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்....தாயாய், தமக்கையாய்,மகளாய் சீராட்டி பாராட்டப்பட்ட இவர்கள் கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக இப்படி ஓரங்கட்டப்படுவது எத்தனை கொடுமை. இதை படிக்கும் நீங்கள் யாராவது உங்கள் வீட்டு பெண்களுக்கு இத்தகைய கொடுமையை செய்ய முன் வருவீர்களா?

இத்தகைய சமூக அவலத்திற்கு நிச்சயமாக குறைவான கல்வியறிவும், சக மனிதனின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத மனப்போக்குகளே காரணமாயிருக்க முடியும்.

தன் துனையை இழந்த ஆனோ பெண்ணோ ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை, அவர்களின் இழப்பின் வலியினை நிச்சயமாய் மற்றவர்களால் தீர்த்துவிட முடியாது, ஆனால் பகிர்ந்து கொள்வதன் மூலம் சக மனிதனாய் நமது இருப்பினை அவர்களுக்கு உணர்த்தலாம். இந்த வலி என்றேனும் ஒரு நாள் நம் எல்லோருக்கும் வரலாம்....இதை மறந்துவிடக் கூடாது.

Saturday, February 09, 2008

கலைந்திடும் கனவுகள்

இசைஞானியையும், கவி அரசரையும் இனைத்த பாடல்.

கண்ணதாசனைத் தவிற வேறு யாரால் இந்த வரிகளை எழுத முடியும்

படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர் : ஜானகி


வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)


அலையில் ஆடும் காகிதம்

அதிலும் என்ன காவியம்

நிலையில்லாத மனிதர்கள்

அவர்க்குள் என்ன உறவுகள்

உள்ளம்

என்றும்

ஒன்று

அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)



தேரில் ஏறும் முன்னரே

தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேளை திருவுளம்

நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா

உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

Friday, February 01, 2008

முதல் முறையா நான் ஓடிப்போன கதை

என்ன கொடுமை..ஓடிப்போனது இல்லாம முதல் முறையா வேறயா.. அப்ப எத்தனை முறை இது நடந்ததுன்னு தோனுமே?...அது இப்பவே சொல்லிட்டா எப்படி. பதிவ படிங்க.

ஆறு வருஷம் முன்னால லக்னோவுல ஒரு கருத்தரங்குக்கு போலாம்னு அலுவலக தோழிகள் 4 பேர் ஆசைப்பட்டோம். கருத்தரங்குல ஆசை இருக்கோ இல்லையோ ஊர விட்டு தூரமா போய், ஒரு வாரத்துக்கு சுத்தலாம்னு ஆசை தானுங்க. எப்படியோ வீட்ல நச்சி ட்ரெயின் டிக்கட் 25 நாட்களுக்கு முன்னாடியே வாங்கியாச்சு. லக்னோ போறோம், லக்னோ போறோம்னு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டாதது தான் பாக்கி.

ஆனா பாருங்க சென்னைல இருந்த எங்க பிராஜக்ட் ஹெட்டுக்கு மூக்குல வேர்த்துடுச்சு. நாங்க என்னைக்கு புறப்படனுமோ அதுக்கு அடுத்த நாள் வரைக்கும் 8 நாட்களுக்கு மதுரையில ஒரு கலந்துரையாடல், எல்லாரும் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டார். நாங்களும் இல்லாத ஸ்டன்ட் எல்லாம் பண்ணி பார்த்தோம். ஹூம்..ஒன்னும் நடக்கலை.

நாங்களும் விடுவதா இல்லை. ஒரு நாள் லேட்டானாலும் பரவாயில்லை மதுரையில் இருந்து சென்னை போய் அங்க இருந்து லக்னோ ட்ரெயின் பிடிச்சுக்கலாம்னு ப்ளான். இது இன்னும் த்ரில்லிங்க. அப்ப வீட்டுக்கு 15 நாளுக்கு மட்டம்னு ஒரே சந்தோஷம். மதுரைல இருந்தும் 3 பசங்க அதே கருத்தரங்குக்கு வர்ரதா இருந்துச்சு.

மதுரையில கடைசி நாள் அன்னைக்கு கொஞ்சம் சீக்கிறமே புரப்படறோம்னு எங்க ப்ரொபசர் கிட்ட சொல்லிட்டோம். மதுரையில் இருந்து எங்களோட வர்ர பசங்களை சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுக்க சொல்லி கவுன்டவுன் ஆரம்பம் ஆச்சு. இந்த பசங்க காலையிலேயே போறவுங்க. ஆனா நாங்க விடுவமா.. மவனே போனீங்கன்னா பாருங்கன்னு மிரட்டி எங்களோட இருக்க வச்சுட்டோம்ல.

6 மணிக்கு பஸ்...ஆனா 5.30 ஆகியும் எங்களை விடற மாதிரி தெரியலை. கேக்கவும் பயம். அப்படி கேட்டாலும் ஏன் முதலிலேயே சொல்லலைன்னு திட்டுவிழும். விதியை நொந்துட்டு பேசாம உக்கார்ந்துட்டு இருந்தோம். 5.50 க்கு ட்ராவல் ஏஜென்சியில இருந்து ஃபோன். ''பதினைஞ்சு நிமிஷம் லேட்டாகும். ப்ளீஸ் இருங்க''ன்னு கெஞ்சி ஆறு மணிக்கு ஓட்டமா ஓடினோம். 6.20 க்கு போய் சேர்ந்து, பஸ்ல இருந்தவுங்க முறைச்ச முறைப்ப கண்டுக்காம உக்கார்ந்தோம்.

பஸ் போகுது, போகுது, போகுது போயிட்டே இருக்கு, வழியில போற மாட்டு வண்டி மாடெல்லாம் எங்களை திரும்பி பார்த்து சைடு சிரிப்பு சிரிச்சுட்டு போகுது. காலையில 5.55 க்கு சென்னை சென்ட்ரல்ல இருந்து ட்ரெயின். இப்படி ஓரு ஓட்டை பஸ்ல டிக்கெட் எடுத்துட்டாங்களேன்னு பசங்களை திட்டுன திட்டுல அவங்களுக்கு திருச்சி வந்ததும் இறங்கி ஓடீறலாம்னு ஆயிருச்சு.

சென்னை சென்ட்ரல் போய் சேரும் போது 6 மணி. 8 ஆவது பிளாட்பாரத்துல இருந்து ரப்தி சாகர் எக்ஸ்ப்ரெஸ் புறப்படத்தயாராக இருக்கிறதுன்னு அறிவிப்ப கேக்குது...ஓட்டமா ஓடினோம்...ஓடினோம்...வாழ்க்கையில அப்படி ஒரு ஓட்டம் ஓடி இருக்க மட்டோம். பிளாட்பாரதுக்குள்ள நுழையறோம், கண்ணு முன்னாடியே ட்ரெயின் போயிட்டு இருக்கு. பி.டி.உஷா ரேஞ்சுக்கு ஓடிப்பார்த்தோம். ஆனா ட்ரெயின் ஜெயிச்சுடுச்சு.

2 மாசமா பந்தா விட்டு, கடைசியில ட்ரெயின கோட்டை விட்டுட்டோம்னு ஊர்ல போய் சொன்னா எப்படி இருக்கும். இனி என்ன பண்ண? நடங்க அடுத்த ப்ளாட்பார்ம்ல கோவை எக்ஸ்ப்ரெஸ் நிக்குது ஏறி ஊர் போய் சேரலாம்னு சொன்னா, அதுல ஒருத்தி அதெல்லாம் முடியாது, நான் இன்னைக்கு லக்னோ போயே தான் ஆகனும்னு கீழ விழுந்து புரண்டு அழாத குறையா ஆட்டம்.

என்னமோ பண்ணுங்கன்னு அக்கடான்னு நான் உக்கார்ந்துட்டேன். இந்த டென்ஷன், அழைச்சல், ஓட்டத்துல பயங்கர வீசிங் நமக்கு. போய் தகவல் மையத்துல விசாரிச்சு சாயந்திரம் 7 மணிக்கு ஜான்சிக்கு ஒரு ட்ரெயின் இருக்குன்னு, இந்த டிக்கெட்ட கேன்சல் பண்ணி (ஏதோ கொஞ்ச பணமாவது வருமே) அந்த ட்ரெயினுக்கு டிக்கெட் எடுத்தாங்க. அதுக்கு அப்புறம் தான் அந்த ஆட்டக்காரி ஆட்டத்தை நிறுத்தினா.

ஜான்சிக்கு போய் அங்க இருந்து வேற ட்ரெயின் லக்னோக்கு. இந்த ட்ரெயினுக்கும் அந்த ட்ரெயினுக்கும் 45 நிமிஷம் தான் வித்தியாசம். இது சரியான நேரத்துல போய் சேரலைன்னா என்ன பண்ண?... ''ஜான்சி போயிட்டா அப்புறம் லக்னோ போறது சுலபம்'' னு ஆட்டக்காரி ரொம்ப தெம்பா சொல்ல, நான் கேட்டேன்..''ஓ உணக்கு அந்த அளவுக்கு பரிச்சியமான ஊரா'' அதுக்கு அவ, ''யாருக்கு தெரியும், சும்மா ஒரு அனுமானம் தான்".. தேவையா எனக்கு....ம்ம்ம்

மேல போய் ரெஸ்ட் ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தோம். வீட்டுக்கும் ஃபோன் பண்ண முடியாது( பண்ண விடலை). சொன்னா 'மவளே மரியாதையா கோயமுத்தூர்க்கு வந்து சேர்'னு சொல்வாங்க.

சாயந்திரம் 7 மணிக்கு ஒரு வழியா ட்ரெயின்ல உக்கார்ந்தாச்சு. அடுத்த நாள் ராத்திரி 9 மணிக்கு ஜான்சி போய் சேரும். 9.45 மணிக்கு லக்னோ ட்ரெயின். எல்லாரும் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். எனக்கு எப்பவும் போல டென்ஷன். ட்ரெயின் போய் சேருமான்னு. ''ஏதாவது பேசுனேனா கீழ தள்ளி விட்ருவோம்'னு மிரட்டுனதுல, திருவிழாவுல காணாம போனவ மாதிரி முழிச்சுட்டு உக்கார்ந்துட்டு இருந்தேன்.

9 மணி ஆயிருச்சு. ஆனா ட்ரெயின் இன்னும் எங்கேயோ நடுக்காட்டுல போயிட்டு இருக்கு. ட்ரெயின் போற மாதிரி என் மனசும் பட படன்னு அடிக்குது. இனி வாட்ச பார்க்க கூடாதுன்னு என்னை கட்டுப் படுத்தீட்டூ உக்கார்ந்துட்டு இருந்தேன். என்னை தவிர யாருக்கும் பதட்டம் இல்லை. உலகம் உருண்டை தானே, எங்க சுத்துனாலும் ஊர் போய் சேர்ந்துறலாம்னு தத்துவம் வேற.

ஜான்ஸி ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும் தான் வாட்ச பார்த்தேன். மணி பத்து. அடப்பாவிகளா அந்த ட்ரெயின் போயிருக்குமே...குளிர்ல என்னை இந்த பாடு படுத்தறீங்களேன்னு திட்டீட்டே ப்ளாட்பாரத்துல இறங்குனா... 'ஹேய் எங்க அந்தப்பக்கம் இறங்குறே..இந்தப்பக்கம் வான்னு, எதிர்ப்பக்கம் இருக்குற கதவு வழியா ஒவ்வொன்னும் ஜங்கு ஜங்குன்னு குதிக்குதுக. ஏன்னு கேட்டா அந்த ட்ரெயினும் லேட்டா தான் வந்துருக்கு..ப்ளாட்பாரம் பாலத்துமேல ஏறிப்போனா லேட் ஆயிடும், வா இப்படியே போயிடலாம்னு என்னோட லக்கேஜ் எல்லாம் அவங்களே எடுத்துட்டு தண்டவாளத்தை தாண்டி ஓடறாங்க. லாங்க ஜம்ப், ஹை ஜம்ப் வீராங்கனைகள் எல்லாம் தோத்துப் போகனும்.

ஒரு வழியா லக்னோ ட்ரெயின்ல ஏறி உக்கார்ந்தாச்சு. அப்புறம் பாருங்க இவ்வளவு ஓடி வந்து, ட்ரெயின் அதுக்கு அப்புறமும் 30 நிமிஷம் கழிச்சு தான் போச்சு.

இதுல முக்கியமான விஷயம், நான் லக்னோ ட்ரெயின கோட்டை விட்டதும், இப்படி ஓடுனதும் இது வரைக்கும் வூட்ல யாருக்கும் தெரியாது..:-))