Saturday, January 31, 2009

சாதர் தாக்னா- ஹரியானா மாநிலத்தின் ஒரு சமுதாய வழக்கம்


வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களின் அவல நிலையை முந்தைய எனது பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். கணவனை இழந்து, குடும்பத்தாராலும் கைவிடப்பட்டு, அன்றாட தேவைகளுக்கே கஷ்டப் பட்டு கொண்டிருப்பது ஒரு வகையான கொடுமை என்றால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கணவனை இழந்த சில பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேறொரு வகையான வதை.

ஒரு முறை சென்னை லயோலா கல்லூரியில் CNN IBN தொலைகாட்சியின், ராஜ்தீப் சர்தேசாய், நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது, "South India is more a conservative society than North India" என்ற தன் கருத்தை முன்வைத்து துவக்கினார். இந்த மனப்பான்மைதான் பெரும்பாலான வட இந்தியர்களுக்கு (வட இந்தியாவில் வாழும் அநேக தென் இந்தியர்களும் இதில் அடக்கம்) இருக்கிறதென்றால் அது மிகையில்லை. இந்த மக்களோடு மக்களாய் அன்றாடம் பழகி (பேருந்தில், கடைகன்னியில், அலுவலகங்களில்) வாழ்ந்து பார்த்தால் , ராஜ்தீப்பின் கருத்து சற்றும் உண்மையில்லை என்பது புரியும்.

தென்னிந்தியாவில், அதி முக்கியமாக தமிழ்நாட்டில் பெண்கள் நிச்சயமாக மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப் படுகிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அது இளம் பெண்களாக இருந்தாலு்ம் சரி, முதியவர்கள் என்றாலும் சரி. தமிழ்நாட்டிலும் சில பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அது சில இடங்களில் மட்டுமே என்று சொல்லலாம். சரி நான் இதை விவாதம் செய்ய வரவில்லை. அது இந்த பதிவின் நோக்கமும் இல்லை.

காலங்காலமாய் ஹரியானா மாநிலத்து கிராமங்களில் கணவனை இழந்த பெண்களின் மீது திணிக்கப்பட்டு வரும் சமுதாய பழக்கமான ‘சாதர் தாக்னா’ பற்றி நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், இதன் பின்னராவது ராஜ்தீப் போன்றோரின் கண் மூடித்தனமான கருத்துக்கள் சரியா என்பதை நீங்களே சொல்லுங்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்

சில மாதங்களுக்கு முன்னால் வட இந்திய பெண்கள் சிலரை ( பெண் பத்திரிகையாளர், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள், அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள்) கோவையில் நடந்த ஒரு கருந்தரங்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அரசு துறையில் பணி புரியும் ஒரு பெண் கணவனை இழந்தவர். முதலில் வருகிறேன் என்றவர், புறப்படுவதற்கு முந்தைய நாள் தன்னால் வரமுடியாது என்றும், அதற்கான காரணத்தை நேரில் சந்தித்து கூற விரும்புவதாகவும் கூறினார்.

இந்த இடத்தில் ‘சாதர் தாக்னா’ என்கிற பழக்கத்தை பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.' சாதர் தாக்னா' என்பது, ஹரியானா கிராமங்களில், இளம் வயதில் பெண்கள் கணவனை இழந்து விட்டால், கணவனின் சகோதரருடன் அந்தப் பெண்ணை வாழவைக்க செய்வது அந்த சமுதாயத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கம். அந்த நபர் பெரும்பாலும் திருமணம் ஆனவராகத்தான் இருப்பார். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரிவித்தாக வேண்டும். 'சாதர் தாக்னா " என்ற சடங்கை செய்து இப்படி வலுக்கட்டாயமாக கணவரின் சகோதரனுடன் சேர்ந்து வாழவைக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். உடனே காரணத்தை பட படவென்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நானும் ' சாதர் தாக்னாவில்' மாட்டிக் கொண்டேன். அதில் இருந்து தப்பிக்க என் பிறந்த வீட்டாரோடு சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

கணவனை இழந்த பெண்கள் மறு திருமணம் செய்து கொள்வது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இந்த வகை கட்டாயப்படுத்துதலை, அந்த வகை திருமணமாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இதில் அந்த நபருக்கு ஆண் வாரிசு இல்லாமல், கணவனை இழந்த பெண்ணுக்கு ஆண் வாரிசு இருந்து விட்டால்,இந்த கட்டாயப்படுத்தல் மேலும் அதிகமாகிறது. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை...ம்ம்ம்

கணவனை இழந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க, சமுதாயாத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பழக்கம் என்று இவர்கள் இதனை நியாயப்படுத்திகிறார்கள். இந்த வழக்கம் எப்படி தொடங்கியது என்று பார்த்தால், அந்தக்காலத்தில் கணவனை இழந்த, குழந்தை செல்வமில்லாமல் இருக்கும் பெண்களை, கணவனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் 'Levirate marriage' என்று கூறுவார்கள். இதை தென்னிந்தியாவிலும் சில இடங்களில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெண் வீட்டாரும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து பேசி எடுக்கப்படும் ஒரு முடிவு. பெரும்பாலும் பெண் வீட்டாரும், அந்தப் பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல விரும்புவதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ம்ம்ம்ம் இதில் பெண்ணின் விருப்பம் இருந்து விட்டால் இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பெரும்பாலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை யாரும் மதிப்பதில்லை. பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பழக்கம், இன்று உருமாறி பெண்களை அடிமை படுத்தவும், தன் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே சில ஆண்கள் பயன் படுத்திக் கொள்ளும் ஒரு பழக்கமாகி இருக்கிறது என்பது தான் உண்மை.

கணவனை இழந்த பெண்ணும் அவளுக்கு சேர வேண்டிய சொத்தும் எப்பொழுதும் அந்த வீட்டின் ஆண் மகனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.நான் மேலே குறிப்பிட்ட பெண் படித்து நல்ல வேலையில் இருப்பதால், தன் சொந்தக் காலில் நிற்க துணிவும் இருப்பதால், தன் விருப்பமின்மையை தெரிவித்து, வெளியே வந்துவிட்டார். இதனால் புகுந்த வீட்டாரின் வெறுப்பிற்கு ஆளான போதும், கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான ஹரியானா கிராம புறத்துப் பெண்கள் படிப்பறிவும், உலக அறிவும், சுய சிந்தனையும் அற்றவர்களாகவே, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எனது அனுபத்தில் நான் பார்த்த பெரும்பாலான வட இந்திய கிராம பெண்கள் சுய சிந்தனை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பிரதான தேவை பணம்,அது தரும் ஆடம்பரமான வாழ்க்கை முறை, அலங்கார சாதனங்கள், விலை உயர்ந்த உடைகள், காலனி முதற்கொண்டு எல்லாவற்றிலும் படோபகாரம் தெரியவேண்டும். இதை வஞ்சனை இல்லாமல் இந்த ஆண்கள் கொடுத்து விடுகிறார்கள். என் நான்காண்டு வட இந்திய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும் இதுதான்.

ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு இவர்களே காரணம் என்று பல சமயம் நினைக்கத்தோன்றுகிறது. கணவனுக்கென ஒரு விரதம் (கர்வா சவுத்), அண்ணன் தம்பிகளுக்கென ஒரு விரதம் (பாய் தூஜ், ராக்கி) இது போக மருமகன் நன்றாக இருக்க வேண்டுமென்று சில சமுதாயத்தாரின் விரதம். இது கட்டாயமாக எல்லாப் பெண்களும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள். இல்லையென்றால் அவள் குடும்பத்திற்கே லாயக்கற்றவள் என்கிற முத்திரை குத்தப்படுவாள்.இந்த பூஜைகளையும், விரதங்களையும், ஆடம்பரத்தையும் தாண்டி இவர்களின் சிந்தனை செல்வதில்லை. அதற்கான சூழலும் கிராம புறங்களில் இல்லை.

இன்றும் பெண் கல்வியென்பது வட மாநில கிராமங்களில் அதிசயமான ஒன்றாகவே இருந்து வருவது அதிர்ச்சியளிக்கும் நிஜம். இந்தப் பகுதி மக்களின் கண்ணோட்டமும் சுயநல போக்கும் பல சமயங்களில் எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் இன்னும் இவர்கள் அடைபட்டு கிடைக்கிறார்கள் என்பதே உண்மை..

நம் எளிமையும், சகிப்புத்தன்மையும் ராஜ்தீப் போன்றோருக்கு நம்மை conservative ஆக காட்டுகிறது. உண்மையான பெண் அடிமைத்தனம் என்ன என்பதை வட மாநிலங்களில் வந்து வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.ம்ம்ம்ம்... தென்மாநிலங்கள் இந்த விஷயத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு சொல்லாமல் விடுவதில்லை. இது குறித்து இன்னும் விரிவாக எழுதிட முயல்கிறேன்.

இப்படி ஒரு முற்போக்கு சமுதாயத்தை ஏற்படுத்தி கொடுத்த பாரதி, பெரியார், போன்ற சமூக புரட்சியாளர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதை களங்கமில்லாமல் வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

Monday, January 26, 2009

தெருவோர நிஜங்கள்......

முன் குறிப்பு- Slum Dog Millionaire னு ஒரு படம்... எல்லாரும் கேள்விபட்டிருப்பீங்க.. உலக அளவில் சிறப்பான விருதுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு படம்... பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படிருக்கிறது...இந்திய மண்ணில் இருக்கும் சேரிகளின் உண்மை நிலைமையை எடுத்து சொல்லும் ஒரு நல்ல முயற்சி..

ஆனால் நம்மில் சிலர், தாங்கள் மட்டுமே
இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஜென்மங்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏதோ இல்லாத ஒன்றை சொல்லியிருப்பதாக குதிக்கிறார்கள். இந்திய நிலைமையை சொல்லி காசாக்கும் முயற்சி இது என்று நினைப்பவர்கள் சிலர்....ஒரு பிரிடிஷ்காரன் வந்து நம் நாட்டின் நிலைமையை சொல்ல அனுமதிக்க கூடாது என்றெல்லாம் பிரச்சினையை கிளப்புகின்றனர்.

சேரிகளில் இந்த நிலைமை இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா இவர்களால்??.. இல்லை அப்படி இருந்தால் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய பேசும் இவர்கள் ஏதாவது செய்யப் போகிறார்காளா???... கோவமும் ஆதங்கமும் தலைக்கு ஏறுகிறது.... இதில் தில்லி வாழ் மக்களை சொல்லவே வேண்டாம்.... கெட்டு குட்டிச்சுவரான கலாச்சாரம், உணர்வுகளை ஒதுக்கி படோபகார வாழ்க்கையில் லயித்துப்போயிருக்கும் திமிர் பிடித்த அயோக்கியர்கள்....

இந்த பதிவு இந்தப் படத்தை பற்றியதில்லை... ஆனால் இந்தப் படத்தில் வரும் சிறார்களைப் போல தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாபாத்திரங்கள் பற்றியது.


ஒவ்வொரு முறை தில்லி ரயில் நிறுத்தத்தில் ரயில் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்களை உறுத்தும் சில காட்சிகள். அங்கு குப்பை பொறுக்கும் குழந்தைகள், நாம் அசுத்தம் செய்த ரயில் பெட்டியை சுத்தம் செய்து அதற்கு காசு கேட்கும் பாலகர்கள், சுத்தம் செய்ய வரும் போது குப்பையை கால்களால் இந்தக் குழந்தைகளின் மீதே தள்ளிவிட்டு, அவர்கள் காசு கேட்டால் விரட்டி அடிக்கும் இறக்கமில்லா பெண் ஜென்மங்கள்....பிச்சை எடுக்கும் வயது வந்த பெண்களின் கிழிந்த ஆடைகளினூடே பார்த்து கண்களால் கற்பழிக்கும் காமப் பார்வைகள், ....ம்ம்ம்ம்... இதில் எதுவுமே பாதிக்காமல் கர்மமே கண்ணாயிரமாய் பழைய பாட்டில்களை சேகரித்துக் கொண்டும், பாக்கு பாக்கெட் சரங்களை விற்றுக் கொண்டும், பிச்சை எடுத்துக் கொண்டும் இருக்கும் என்னற்ற குழந்தைகளை பார்க்கும் போது மனது சில நிமிடங்களேனும் நொறுங்காமல் போகாது.


இவ்வாறு தெருவில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் தான் அதிகம். ஒரு வேளை உணவிற்காக செய்யக் கூடாத வேலைகளை செய்து, குழந்தை பருவம் என்ற ஒன்றை நினைவில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் வயதிற்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாத பெரியவர்களின் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இல்லை... வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களின் உலகத்தில் போட்டி போட்டு வாழ பழகிக்கொள்ளும் இவர்களுக்கு, குழந்தை பருவத்திற்கே உண்டான பிரத்யேக குணாதிசியங்கள் அறவே இல்லாமல் போய்விடுகிறது என்பது தான் கொடுமை.

இந்தக் குழந்தைகள் ஏரியா தாதாக்களாலும், ரவுடிகளாலும் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தைகளும் விதிவிலக்கில்லை. ஓரினச்சேர்க்கை இளைஞர்களால் இந்தச் சிறுவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு ஓரினச்சேர்க்கை உணர்வுகள் பெரும்பாலும் இருப்பதில்லையென்றாலும், பணத்திற்காக அதையும் செய்ய தயங்குவதில்லை. நாளடைவில் இவர்களுக்கும் இதுவே பிடித்து விடுகிறது. முடிந்தால் இதைப் பற்றி இன்னொரு தனிப்பதிவு போடுகிறேன்.

தில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம். ராஜஸ்தான், பீஹார், கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து பிழைக்க வந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம். இவர்களில், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருப்பார்கள். குழந்தைகள் பிச்சை எடுப்பது, ரோட்டோரத்தில் இருக்கும் பழைய பாட்டில் பேப்பர் போன்றவற்றை சேகரிப்பது, சிக்னலில் பொருட்களை விற்பது போன்ற வேலைகளை செய்து நாளொன்றுக்கு 100ல் இருந்து 150 வரை சம்பாதிக்கிறார்கள்.

தெருவில் வாழந்தாலும் இவர்களுக்கும் லட்சியங்கள், ஆசைகள், கனவுகள் உண்டு. ஒரு சின்ன மூலதனத்தை போட்டு, அதை சில நிமிடங்களுக்கே தெருவில் சந்திக்கும் மக்களிடம் விற்று காசாக்கும் திறமை கொண்ட இவர்களுக்கு கல்வியறிவும், நல்வழிகாட்டுதலும் அமைந்துவிட்டால்??... ம்ம்ம் இதை உணர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கென்று மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேறி இருக்கும் குழந்தைகளும் உண்டு.

ரோஹித் என்னும் 13 வயது அழகான பாலகன். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவன், 2 வருடம் முன்பு அப்பா அடித்தற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவன். இன்று தில்லி ரயில்வே நிறுத்ததில் தேங்காய் கீற்றுகளை விற்று நாளொன்றிற்கு 150 ல் இருந்து 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறான்.ரோஹித்துக்கு டாக்டர் ஆகி இவனைப் போன்ற ஆதரவில்லா குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா?... ம்ம்ம்ம்.. மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த குழந்தைகளுக்கென்று துவங்கி இருக்கும் வங்கி. பட்டர்ஃப்ளை என்ற தொண்டு நிறுவனத்தின் கண்கானிப்பில் இருக்கும் இந்த வங்கிக்கு தில்லியில் 12 கிளைகளும், சுமார் 2000 குழந்தைகள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த வங்கிகள் இந்தக் குழந்தைகளாலேயே பராமரிக்கப் படுகிறது. 6 மாதத்திற்கொரு முறை இவர்களே ஒரு மேளாளரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம், ஃபோர்னோகிராபியின் மூலம் ஈட்டிய பணம், திருட்டு வழியில் ஈட்டிய பணம், போதை பொருட்கள் விற்று ஈட்டிய பணம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பல குழந்தைகள் இது போல தீய வழியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். தங்கள் நண்பர்களை நல்வழிப் படுத்த இவர்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று.

தினமும் மாலையில் வங்கியில் இருக்கும் பணம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியில் தொண்டு நிறுவன கண்கானிப்பாளரால் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த சேமிப்பு பழக்கத்தினால், புகைபிடித்தல், அடிக்கடி சினிமாவுக்கு செலவு செய்தல், குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கவழக்கங்கள் குறைந்திருப்பதாக இக்குழந்தைகளே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

படிப்பு பிடிக்காமல் விட்டை விட்டு ஓடிவந்த அஜய்க்கு மேனேஜர் வேலை மிகவும் பிடித்தமான வேலை. உடையை அழகாக 'டக்கின்' செய்து, சர்டில் மேல் பட்டனை போட்டு, தலையை கோதி, ஒரு எக்ஸக்யூடிவ் ரேஞ்சுக்கு ஸ்டைலாக "கவுண்டரில்" அவன் உட்கார்ந்து இருக்கும் அழகே தனி. ..:-)))...புதியதாக வரும் கஸ்டமர்களின் பெயரை கேட்பதும், அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்து சொல்வதும், கறாராக நடந்து கொள்வதும்....பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.

இந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பொறுப்புணர்ச்சி. தினமும் பணத்தை சரியாக கணக்கு பார்த்து வாங்கி, 'கஸ்டமர்களின்' பாஸ் புத்தகத்தில் வரவு வைத்து, அதை தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்து, தங்களைப் போன்று கஷ்டப்பட்டு பணம் ஈட்டும் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற இவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாற நாம் உளமாற வாழ்த்துவோம்.

இவர்களைப் போல தெருவில் வாழ்ந்து் 'சலாம்பாலக் ட்ரஸ்டால்' வழிகாட்டப்பட்டு, இன்று ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகியிறுக்கும் விக்கி என்ற இளைஞனைப் பற்றி அடுத்த பதிவில் போர்போம்.