Thursday, September 30, 2010

இனி ஒரு விதி செய்வோம்.....


மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.அதன் சாரம் இதுதான்...
 
ஆந்திரா, அஸாம், பீஹார், தில்லி, கோவா, கேரளா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா,, மிசோரம், ராஜஸ்தான், உத்திரபிரேதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பதின்மூன்று மாநிலங்களில் உள்ள ஐந்து முதல் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட  12,477 குழந்தைகளிடையே நடத்திய ஆய்வில் 66.8% குழந்தைகள் உடல் சார்ந்த வன்முறையினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிற்து. மேலும் 55% குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலே சொன்ன 12,477 குழந்தைகளில் 2317 குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் என போகிறது அந்த ஆய்வறிக்கை.

எதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளில் 66.8 விழுக்காட்டினர் உடலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது வேதனையான நிதர்சனம்,இம்மாதிரியான அத்து மீறல்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எத்தகைய எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதை சொல்லித்தான் யாரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.உலகத்தில் இந்தியாவில்தான் தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம், நம்மிடம் இருக்கும் கணக்கின் படி இந்தியாவில் 18 மில்லியன் குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கின்றனர்.இந்தவகையில் உலகில் நாம்தான் முதலிடம்...

இந்த நிதர்சனங்கள் இப்படியிருக்க...இப்படியும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதானிருக்கிறது...








Thursday, September 09, 2010

பயணம், அனுபவம், உணர்வு

கடலூர் மாவட்டம் மடவபள்ளி கிராமம், நகரத்து நாகரீக பாதிப்புகள் ஏதுவும் இல்லாத அழகிய கடற்கரை கிராமம். ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தில் சின்னாபின்னமான கிராமங்களில் ஒன்று. பெரிதான அடிப்படை வசதிகள் எட்டிப் பார்க்காத இந்த கிராமத்தில், கல்வி அறக் கட்டளை ஒன்று முற்றிலும் இலவசமான அதே நேரத்தில் தரமான கல்வியினை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறது.


இந்த பள்ளியின் செயல்பாடுகளை ஆய்ந்து மேம்படுத்தும் பணி தொடர்பாக கடந்த இரு தினங்களாய் இங்கே முகாமிட்டிருக்கிறேன்.பள்ளியில் இருந்து 5 நிமிடம் நடந்தால், ஒரு பக்கம் முந்திரி தோப்பும், மறுபக்கம் கடலும், கண்ணைக் கவரும் இயற்கைப் பேரழகு திரும்பிய பக்கம் எல்லாம் கொட்டிக் கிடக்கிறது.

வழக்கம் போல காலையில், குழந்தைகளின் பிஞ்சுக் குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளி துவங்கியது. எப்பொழுது கேட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ரசித்து பாடி மனம் லேசாவதை அனுபவிப்பேன். ஆனால் ஏனோ இன்று தமிழ்த்தாய் வாழ்த்தின் போதும் கொடிப்பாட்டின் போதும் அந்த குழந்தைகளின் குரல் மனதை பிசைந்தது. ஆழிப்பேரலையின் கோர தாண்டவமும்,அப்பாவிகளின் கதறலும்,வேதனையுமான காட்சிகளே கண் முன்னால் வந்து போனது.


மாலையில் தனியே கடற்கரையில் நிறைய நேரம் உட்கார்ந்திருந்தேன்.. அங்கே என்னைத் தவிர வேறு யாரும் தென்படவில்லை... எனக்கே எனக்கான இடமாக தெரிந்தது.....அலைகளில் காலை வைத்து கட்டுமரத்தில் உட்கார்ந்து இருந்தேன்....அமைதியாக கரையை வந்து தொட்டுப் போகும் இந்த அலைகளா பொங்கி வந்தது? இந்தக்கடலா அழிவைத்தந்தது?...

இந்த அனுபவம் தந்த உணர்வுகளைப் பற்றி நிறைய சொல்லவேண்டும், எழுத வேண்டும் என்று தோணுகிறது....இந்த பயணம் முடிந்த பின்னால் அதை முயற்சிக்கிறேன்...ம்ம்ம்ம்ம்