இப்படித்தான் தோன்றியது நேற்று ஒரு செய்தியை பார்த்த பின். மனிதம் இல்லாத உலகில், மனிதர்களை நம்பி பிறக்கும் குழந்தைகள் படும் கஷ்டங்களை பார்த்தால், பிறக்காமல் இருப்பது நன்று என்று தோன்றுகிறது. பணம், அதிகாரம், நாகரீக போதையில் மயங்கி கிடக்கும் மனிதனை முதலில் தெளிய வைத்துவிட்டு பின் படைக்கும் தொழிலை பாரும் கடவுளே.
நாளுக்கு நாள் மனிதனுக்கு தேவைகளும், ஆசைகளும் அதை அடைய வாய்ப்புகளும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. எந்த விலை கொடுத்தாகினும், எந்த பாவத்தினை செய்தாகினும் இந்த வசதி வாய்ப்பினை அனுபவிக்க அவன் சிறிதும் யோசிப்பதில்லை. ஆண் ,பெண் இரண்டுபேருமே இதில் சலைத்தவர்கள் இல்லை.
அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இது போல உணர்ந்த போதெல்லாம் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் தவறியதில்லை... அதனால் இதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று வட மாநிலங்களில் அநேக வீட்டில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் பத்தில் இருந்து பதினைந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். அதுவும் பெண் குழந்தைகள். பட்டினி சாவில் இருந்து தப்பிக்க இவர்களின் பெற்றோர்கள் இவர்களை அனுப்பி வைத்து விட்டு, வருடக் கணக்கில் இவர்கள் என்ன ஆனார்கள் என்று எட்டிப் பார்ப்பது இல்லை. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அதிகம்.
நேற்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி.12 வயது சிறுமி ஒருத்தி, கை, கால் விரல்கள் எல்லாம் அடி வாங்கி அடி வாங்கி கருப்பாக மாறி, நசுங்கி, காயப்பட்டு...அய்யோ என்று எனக்கு அலற தோன்றியது. மேலும், எனக்கு சொல்லவே கஷ்டமாக இருக்கிறது...அந்த வீட்டில் இருந்த ........ (அவர்களை என்ன சொல்லி குறிப்பிடுவது என்று தெரியவில்லை) அந்த பிஞ்சின் கண்ணத்தில் இஸ்திரி பெட்டியை வைத்து அழுத்தி.....கண்கள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை..அடி வாங்கி வாங்கி அநத அளவிற்கு வீங்கி இருந்தது.. ...உடம்பு பூராவும் காயப்ங்கள்..தீப்புண்கள்..வாய்விட்டு அழுதே விட்டேன்.
மிருகங்கள் கூட அவைகளுக்கு ஏதாவது ஆபத்து வரும்பொழுது தான் தாக்கும். ஆனால் இவர்கள்?....அப்படி என்ன பெரிய தவறை அந்த குழந்தை செய்திருக்கப் போகிறது? மற்றொரு குழந்தைக்கும் இதே போல நேர்ந்த கொடுமையை சொல்லி காவல் நிலையத்தில் அழுத காட்சி, எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.ஏதோ ஒரு தொண்டு நிறுவணம் தலையிட்டு அந்த குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறது.
இந்த உலகத்தில் தூய்மை என்ற சொல்லுக்கு பொருள் என்னை கேட்டால் குழந்தைகள் என்று தான் சொல்லத்தோன்றும். கள்ளங்கபடமின்றி, வெளிப்படையாக பேசி, யாராயிருந்தாலும் அதிகமாக ஆராய்ச்சி செய்யாமல் எளிதாக நம்பி, உண்மையாக நேசித்து, சிரிப்பை மட்டுமே விரும்பும் ஒரு அற்புத பருவம். ஆனால் இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இந்த பருவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதும் நம்மால் தானே?.
இந்த அற்புதத்தை நாம் எந்த அளவிற்கு பாதுகாத்து, ரசித்து வருகிறோம் என்பது நம் மனசாட்சிக்கு தெரியும். பணம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு இன்று மனிதன் ஆடும் ஆட்டம்.....ஹ்ம்ம்ம்.
வறுமையின் கொடுமையிலிருந்து மீள இன்று இக்குழந்தைகள் எந்த வேலை செய்யவும் தயங்குவதில்லை என்பது நாம் அறிந்த உண்மை. தான் பெற்ற குழந்தை ஒழுக்கத்தின் சின்னமாக வாழவேண்டும் ஆசை படும் அதே மனிதன் தான் தன் பாலியல் இச்சையை இன்னொரு குழந்தையிடம் பணத்தை காண்பித்து தீர்த்துக் கொள்கிறான்.
பெற்றோர்களாலும் ஆபத்து, பள்ளியில் ஆசிரியர்களாலும் தொல்லை, சரி உழைத்து வாழலாம் என்றால் இந்த மனித மிருகங்களின் கொடுமை, வெளியே சமுதாயத்திலும் பாதகர்கள்,பாலியல் துன்புறுத்தல்கள்.எங்கே தான் இவர்களுக்கு பாதுகாப்பு?
குழந்தைப் பருவமும், கனவுகளும், ஆசைகளும் எல்லாக் குழந்தைகளுக்கும் பொது தானே?... இவர்களுக்கு ஏக்கம் இருக்கதா?..தாயின் அன்பையும், தந்தையின் அரவணைப்பையும் நினைத்து ஏங்காதா இவர்களின் மனம்.?..
செய்தியை முழுவதுமாக பார்க்க முடியாமல் போனதால், அலுவலக தோழி ஒருத்திக்கு தொலைபேசியில் கேட்டால், ''எதற்கு நீ இந்த அளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறாய்..பாவம் தான்..ஆனால் நாம் என்ன செய்ய முடியும்.... தனியாக இருக்கும் போது இது போல செய்திகளை பார்த்து 'உன் நிம்மதியை' கெடுத்துக் கொள்ளாதே'' என்று சொல்லி, தன் "ஆள்" சேட்டில், இவள் ஐடியை 'பிளாக்' செய்து விட்டு வேறு பெண்ணுடன் சேட் செய்வதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டாள். மற்றொருவரிடன் பகிர்ந்து கொண்டபோது..."நீ இது போல செய்திகளைப் பற்றி பேசி பேசி 'இன்ஹேலர்' செலவைத்தான் அதிகப் படுத்தப் போகிறாய்' என்றார். ஹ்ம்ம்
அவ்வளவுதானா?...நம்மால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் முடியாவிட்டாலும், அந்த குழந்தைகளுக்காக ஒரு நிமிடமேனும் நம் மனம் வருந்தக்கூடாதா? இதைப் பற்றி பேசக்கூட நமக்கு விருப்பம் இல்லையே.... ஹ்ம்ம். இது போன்ற வன்செயல்களுக்கு ஆளான பின், மன உளைச்சலின் காரணமாக அவர்கள் பொறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிப்பார்கள் என்று நாம் எவ்வாறு எதிர் பார்க்கமுடியும்?. நாளை இந்த குழந்தைகள் வாழ்க்கையில் தோற்றால், அந்த தோல்வி அவர்களுக்கு இல்லை, நமக்கு தான்.
இந்த குழந்தைப் பருவம் என்ற 'அற்புதத்தை' பாதுகாப்பது நம்மால் முடிந்த ஒன்று தானே?.... குறைந்தபட்சம் அதை அழிக்காமலாவது இருக்கலாம் அல்லவா?. தூக்க முடியா பாரத்தை இன்றைய குழந்தைகள் சுமக்கின்றன.
மீண்டும் ஒரு வேண்டுகோள்.... முடிந்தால், இந்தியாவில் உள்ள அன்பர்கள் தங்கள் வாகனங்களில், '1098' என்ற 'Child help line' எண்ணை ஒரு ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக் கெதிரான குற்றங்கள் நொடிக்கு ஒன்று நடப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. நீங்கள் செய்யும் இந்த உதவி சிக்கலில் இருக்கும் ஒரு குழந்தைக்கு உபயோகமாக இருக்கலாம் நன்பர்களே. இந்த எண்ணை எந்த குழந்தையிடமாவது சொல்ல வேண்டும் என்றால்..பத்து, ஒன்பது எட்டு (1098) என்று சொன்னால், அவர்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
நான் பார்த்த அந்த காட்சியை பார்த்தவர்கள் கண்டிப்பாக சில நாட்களுக்கு சாப்பிடவோ தூங்கவோ முடியாது..ஹ்ம்ம்