Saturday, February 24, 2007

சுயநலம்......


ரெண்டு நாளா இந்த குழப்பம், மன உளைச்சல். நேத்து மதுரா பிண்ணூட்டத்தில சொன்னதுக்கு அப்புறம்தான் இது இப்ப பதிவா வெளிய வருது. எதுவும் மனசில இருக்குற வரைக்கும் தானே. அதனால இப்ப கொட்டீடறேன்.

//நான் முழுமையான சுயநலவாதி. நான் அடுத்தவருக்கு உதவுவது என்றாவது நான் கஷ்டப்படும்போது யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கே//

இது தான் மதுரா சொன்னது.

நாம ஆதரவு இழந்தவங்களுக்கு உதவி செய்யறோம். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள்னு எல்லாருக்கும். திடீர்னு ஒரு நாள் போய் செய்யறமா?. செய்யறவங்க இருக்காங்க. இல்லைனு சொல்லலை. நம்மில் நிறைய பேர் நம்ம பிறந்த நாளுக்கு, திருமண நாளுக்குன்னு போய் உதவி பண்ணி புண்ணியத்த தேடிக்குறோம். இதுல நிஜமாவே உதவி மனப்பான்மை இருக்காங்க?...உடனே கேக்கலாம்..உதவி செய்யலாம்னு தோன்றதுனால ஏதாவது ஒரு நாள தேர்ந்தெடுக்கனும். அது ஏன் நமக்கு திருப்தி தர்ர நாளா இருக்க கூடாதுன்னு..ஹ்ம்ம்ம்....அது தாங்க எந்த ஒரு செயல்லேயும் நமக்கு என்ன லாபம் இருக்குன்னு பார்க்கிறோம். சரி அது அவங்கவங்க சொந்த விஷயம்....செய்வது வெளியே தெரியாமல் செய்யறவுங்க நிறைய பேர் இருக்காங்க. நான் நிறைய இடத்துல பார்த்ததுனால சொல்றேன்.

கல்லூரியில் இருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மானேசர்னு ஒரு கிராமத்துக்கு எதோ முக்கியமான நிகழ்ச்சி, கண்டிப்பா வரணும்னு உத்தரவு போட்டு கூட்டிட்டு போனாங்க. காலையில 7 மணிக்கெல்லாம் அங்க போயிட்டோம். கிராமத்து மக்கள் எல்லாம் ஷேமியானா எல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணி யிருந்தாங்க. என்ன விழா, எதுக்காக இந்த பதட்டம்னு ஒன்னும் சொல்லலை. 10 மணிக்கு கப்பல் மாதிரி ஒரு கார்ல ஒரு அம்மிணியும், அய்யாவும் வந்தாங்க. சேர்மனின் ஒன்னு விட்ட சித்தப்பாவோட, தம்பியோட மனைவிக்கு..... இப்படி எதோ சொன்னாங்க. காரில் இருந்து இனிப்பு பொட்டலங்களும், வேட்டி, சேலையும் இறங்கிச்சு. அன்னைக்கு அம்மையாருக்கு பிறந்தநாளாம். கூட்டத்தில முதல்லேயே ஒரு 5 பேர செலக்ட் பண்ணி தனியா நிக்க வச்சிருந்தாங்க. அவங்களும் ரொம்ப அழகா அழங்கரிச்சுட்டு ரெடியா நின்னுட்டு இருந்தாங்க. அம்மையார் சேலையயும் இனிப்பு பொட்டலங்களையும் இந்த அஞ்சு பேருக்கு மட்டும் குடுத்து நமஸ்தம் பண்ணீட்டு, பத்து நிமிஷத்தில ச்சலேகய். மத்தவங்களுக்கு எங்கள குடுக்க சொல்றதுக்குதான் கூட்டிட்டு போயிருக்காங்க. முதல்லேயே சொன்னா வரமாட்டோம்னு, சஸ்பன்ஸ் எல்லாம் வச்சு..ஹ்ம்ம்ம்.... சண்டை போட்டோம். ஆனா இதுக்காக அங்க வந்திருந்த ஏழை மக்களை மனசில வச்சுட்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்தோம். அதில பாருங்க ஒரு 6 பேருக்கு கடைசியில எதுவும் இல்லை. மனசு ரொம்ப கஷ்டம் ஆயுடுச்சு. இதுல என்ன பிரயோஜனம். இவங்க 6 பேரும் ஏமாற்றம் அடைஞ்சு திரும்பி போறத நாங்க விரும்பலை. விழா ஏற்பாடு செய்த புண்ணியவான்கள் கண்டுக்கறமாதிரி தெரியலை. சரின்னு நாங்க 7, 8 பேர் இருந்தோம். எல்லாரும் சேர்ந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு போய் இனிப்பு பொட்டலங்கள் மட்டும் வாங்கீட்டு வந்து குடுத்தோம். இப்படி தான் பல இடங்களில நடக்குது.

நான் சொல்ல வந்த விஷயம். சோனிபட் போற வழியில சின்னதா ஒரு முதியோர் இல்லம். அங்க இருக்கும் முதியோர்கள் எல்லாரும் ஏழைகள், ஆதரவு இல்லாதவர்கள். ஒவ்வொரு முறையும் நினைப்பதுண்டு ஒரு நாளைக்கு அங்க இறங்கி அவர்களோடு கொஞ்சநேரம் இருக்க வேண்டும் என்று. ஆனா நேரமும், குளிரும் ஒத்து வரவில்லை. (இப்படி ஒரு சாக்கு) . கொஞ்ச நாளைக்கு முன்னால வேண்டியவரின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவரோட மன உளைச்சலை உணர்ந்திருந்தேன். கடவுள் கிட்டே வேண்டீட்டேன். ஆனா இந்த விரதம் இருந்து பேரம் பேசுறது நண்பருக்கு பிடிக்காதுங்கறதுனால அவருக்கு தெரியாம கூட நான் அத செய்ய விரும்பலை. அன்னைக்கு கார்ல இத நினச்சுட்டே போய்ட்டு இருந்தேன்.. அந்த முதியோர் இல்லம் பக்கத்தில போனதும், கார கொஞ்ச நேரம் நிறுத்த சொல்லி, அந்த இல்லதுக்கு போய் அவர்களோடு கொஞ்ச நேரம் பேசீட்டு வந்தேன். முதிலிலேயே அங்க போற திட்டம் இல்லாததால் ஒன்னும் வாங்கீட்டு போகலை. பக்கதிலேயும் ஒன்னும் கிடைக்கல. அப்புறம் அடுத்த நாள் போன போது அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து குடுத்தோம். என்னோட தோழியும் நானும் சேர்ந்து. உங்க ஆசீர்வாதம் வேனும்னு சொன்னதும் புறப்படும் போது எதோ ஒரு பிரார்தனை பாடல் பாடினாங்க.... மனசுக்கு நிறைவா இருந்துச்சு, உச்சி முகர்ந்து ஒவ்வொருத்தரும் முத்தம் குடுத்து எங்கள நெகிழ வச்சுட்டாங்க. கண் கலங்கி நின்னோம். ஒரு பாட்டி கிட்ட சொன்னேன் எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்க ஆசீர்வாதமும் பிரார்தனையும் ஒருத்தருக்கு உதவும்னு நம்பிக்கை இருக்குன்னு சொன்னேன். நான் சார்ந்திருக்கும் துறையில இது போல இடத்துக்கு அடிக்கடி போயிருக்கேன்.. ஆனா அப்ப எல்லாம் இல்லாத ஒரு உணர்வு, அன்னைக்கு.

அதுக்கு அப்புறம் அங்க போக முடியலை. நான்கு நாட்களுக்கு முன்னால அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு தகவல் வந்தது. அருகில் இருந்தாலாவது ஆறுதலா இருக்கும். இத்தனை தொலைவுல இருக்குறுதுனால பயம், பதட்டம், பக்கத்தில இருக்க முடியலைனு ஒரு ஆதங்கம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததுனால மறுபடியும் அந்த முதியோர் இல்லம் நியாபகம் வந்துச்சு.

எத்தனை சுயநலம்!!..

ஆனா இந்த முறை நான் போகவில்லை. போக மனம் வரவில்லை. உண்மையாகவே அவங்களுக்கு உதவனும்னு நோக்கம் இருக்கானு தெரியலை.. தெரியலை என்ன...இல்லை.

இத தெரிஞ்சு செய்யற தப்புன்னு சொல்ல வரலை. மனதுக்கு நிறைவா இருக்குன்னு சில காரியங்கள் செய்யறோம். ஆனா அதற்கான பின்னனி, நோக்கம் என்னன்னு நாம யோசிக்கிறமானு தெரியலை.

நம்ம துளசி, சென்னைல இருக்குற ஹோப் பவுன்டேசன்கு உதவி பண்றாங்க. இங்க வரும்போதெல்லாம் அங்க போயிட்டு வர்ரதாவும் சொன்னாங்க. எந்த வித நோக்கமும் இல்லாம உதவி செய்யனும்னு செய்யறவுங்க நம்மிடையே ரொம்ப ரொம்ப குறைச்சல்.

நான் உங்களில் யாரையும் இதுல சேர்க்கலை....என்னோட நேற்றைய பதிவில மதுராவின் பின்னூட்டத்த படிச்சுட்டு, ஏற்கனவே இந்த எண்ணங்கள் எனக்குள்ள இருந்ததுனால, குறைந்தபட்சம் அத நேர்மையா ஒத்துகனும்னு தான் இந்த பதிவு.

29 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிரார்த்தனை பாடல்களைப் பாடினார்கள் அப்படின்னு படிச்சு அடுத்த வரி படிக்கும் போது ஒன்னுமே எழுத்துக்கள் தெரியலை கலங்கலா இருக்கு.(கண் கலங்கிருச்சு)

கடவுளைக்கூட அப்படித்தான் நான் கும்பிடறது இப்பல்லாம்.நல்ல பக்தியான பொண்ணு அப்படின்னசொல்லி கட்டிகிட்டு வந்தவங்களே சந்தேகப்படற அளவு..தேவைன்னா தான் கடவுள்கிட்ட ஓடறது. நான் ஒத்துக்கிறேன் நானும் சுயநலவாதிதான்.
இப்படி இருக்க கூடாது தான். தன்னிச்சையா இது நடக்குது.
ஹோட்டல் வாசலில் பிச்சை போடுவோம் ச..நம்ம சாப்பிட போறப்ப அப்படின்னு குற்ற உணர்ச்சி..
போங்க சொன்ன மாதிரியே மன உளைச்சல் குடுத்துட்டீங்க. முயற்சி செய்யறேன் சுயநலமா இல்லாம உதவி செய்ய.இதானே மருந்து.

பொன்ஸ்~~Poorna said...

சுயநலமில்லாம உதவி செய்ய முடியும்னு நம்பறீங்களா மங்கை? ஏதாவது சுயநலம் இருக்கத் தானே செய்யும்?

இப்போ, இது மாதிரி ஒருத்தருக்கு உதவறோம் என்பதை வெளியில் சொல்லிச் செய்வதைக் கூட, அப்படிச் சொல்லிக் கொள்வதற்காக செய்வதாக நான் நினைத்ததுண்டு. இப்படி எல்லாம் செய்யுறோம்னு சொல்லும் போது, அது வீட்டுக்குள்ளயே சொன்னால் கூட, அப்படிச் சொல்லிக் கொள்வதின் மூலமாக, ஒரு சின்ன உயரத்தை நாம அடைவதாக, ஒரு சின்ன அங்கீகாரத்தை நாம் எதிர்பார்ப்பதாக தோன்றுவதுண்டு.. இது பற்றி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்னது வேற மாதிரி இருந்தது:

அப்படியான உதவிகளை நாம் செய்வதை ஒரு பெரிய ரகசியமாக வைக்க வேண்டிய விஷயமா நினைப்பது கூட இயல்புக்கு மாறான ஒன்றாக நாம் அதை நினைக்கிறோம்னு பொருள். அப்படி இயல்புக்கு மாறா ஏன் நினைக்கணும். "நேத்தி கோயிலுக்குப் போனேன்", "இன்னிக்கு இந்த இடத்தில் சாப்பிட்டேன்" என்கிறது மாதிரி இயல்பான ஒரு நிகழ்வாவே நாம் உதவுவதையும் நினைத்தால், அதில் சுயநலம் மாதிரி விசயங்கள் இல்லாமல் போய்விடலாம்.

இவங்களுக்குக் கொடுப்பதால் ஒரு நிம்மதி வருது; போகிற வழிக்குப் புண்ணியம் எப்படிப் பேசினாலும், அது ஒரு சுயநலம் தானே? நமக்கு நாளைக்கு நல்லது நடக்கும், அதனால் நாம இன்னிக்கு நல்லது செய்யுறோம் என்பதான நினைப்பே சுயநலம் மாதிரி தான் தோணுது....

ம்ம்ம்.. உஷா ஒரு இடத்தில் சொல்லி இருப்பாங்க : "சமூகம் எங்களுக்கு அளித்ததில் ஒரு பகுதியை நாங்கள் சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கிறோம்" - இது ஒரு சமூகக் கடமைன்னு சொல்லும் போது, ஓரளவுக்கு ஒத்துவருது. நமக்குத் தந்ததற்காக, நாம் திருப்பித் தருவது என்ற பொருளில் ஒரு வியாபாரம் மாதிரி தோன்றினாலும், அதில் கூட ஒரு சுயநலம் தெரிந்தாலும், கொடுக்கல் வாங்கல் இல்லாமல் என்னதான் இருக்கு?! அதுவும் ஒரு விதமான இயல்பாகத் தான் ஆகிட்டிருக்கு இப்போ..

ரொம்ப பேசிட்டனோ...

மங்கை said...

லட்சுமி , பொன்ஸ்

நன்றி

தவிர்க்க முடியாம நடக்கறது தான் இதெல்லாம்...மன உலைச்சல் தேவையில்லை லட்சுமி...பொன்ஸ் சொன்னப்புறம்..எப்படி இருந்தாலும் அதுக்கு பின்னாடி ஒரு சுயநலம் இருக்கும்னு தோனுது...

பொன்ஸ்..உதவி எந்த விதத்தில வேனா இருக்கலாம் இல்லங்க... இதோ இப்ப உஷா வோட ஒரு கருத்த சொன்னீங்களே, அது கூட எனக்கு ஒரு உதவியாதான் இருக்கு..

அன்புக்கு பதில் அன்பு காட்றது வியாபரமாதான் படுது...ம்ம்ம்ம்.. இது எல்லாம் இயல்பா நடக்கறது தான்

பொன்ஸ்..பேசுங்க பேசுங்க..நம்ம வீடெல்லாம் அமைதியா இருக்கும்..நம்ம ராஜ்ஜியம் தான்..:-))

மாசிலா said...

வணக்கம் மங்கை.
இன்றைக்கு நான் படிக்க ஆரம்பித்த முதல் பதிவு உங்களுடையதுதான். ஏன் படித்தோம் என கேள்வி கேட்க செய்துவிட்டீர்களே! உங்களுடை மனக்குழப்பம் எனக்கும் ஒட்டிக்கொண்டது போல் தோன்றுகிறது. [ஒரு வேளை இதைத்தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா? :-) ]

நிற்க,

உங்கள் மனது இந்த அளவு பாதிக்கப்பட்டு இருப்பதிலிருந்து மதுரா சொன்னதற்கும் உங்கள் மன நிலைக்கும் எதுவும் ஒத்துபட்டு வரவில்லை என உறுதியாக தெரிகிறது.

ஒரு வேளை அவர் தன் மன நிலையை உங்களிடம் குடி வைக்க ஆசைபட்டாரோ? தன்னைப்போலவே மற்றவர்களையும் ஆக்க முயற்சிக்கிறாரோ? தான் மட்டும் சுயநலவாதியாக இல்லாமல் மற்றவர்களையும் தன் கூட சேர்த்துக்கொள்ள துணை தேடுகிறாரோ? அல்லது மற்றவர்களை அமுக்கி, தான் உயர்ந்தவர் என ஆக்க நினைபபவரோ? சக பதிவரை குறை சொல்ல வரவில்லை. இருந்தாலும் ஒருசிலர் தான் செய்வதறியாது திடுதிப்பென்று எதையாவது செய்துவிடுவர். அது மற்றவர்களை மனதளவில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்த கூடும் என்கிற சுய சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமலே இதை செய்து வைப்பார்கள். அதற்காக அவர்களை சாடவும் முடியாது.

பறவைகள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மனிதர்களும் அதே போல்தானே!

மதுரா சொன்னதை மறந்து விடுங்கள்.
நீங்கள் நம்பிக்கையுடன் செயல் படுங்கள்.

மாசிலா.

VSK said...

பதிவைப் படித்த போது, எங்கே மதுரா முடிந்து மக்கை வந்தாங்கன்னு புரியலை.

இருந்தாலும் ஒண்ணு புரிஞ்சது.

உதவி பண்றதைப் பத்தி ரோம்பவே குழம்பிப் போயிருக்கீங்கன்னு.

உதவின்னு ஒண்ணுமே கிடையாதுங்க.

எல்லாமெ உங்க மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.

இது இன்னிக்கு நீங்க நினைச்சதாவும் இருக்கலாம்.
இல்லியா... உங்களோட இயல்பன குணமாவும் இருக்கலாம்.

அப்படியே செஞ்சுகிட்டு போங்க!

அடுத்த நாள் இதைப் பத்தின நினைவை மறந்திடுங்க!

வாழ்க்கை சுகமா இருக்கும்!

வர்ட்டா!

பொன்ஸ்~~Poorna said...

மாசிலா,
இந்தப் பதிவை படித்த போது மதுரா எந்த விதத்திலும் மங்கையைக் குழப்பியதாகத் தெரியவில்லை. அதிலும் நம்பிக்கை குன்ற வைத்ததாக தோன்றவே இல்லை..

குழப்பங்கள் ஏதுமில்லாமல் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் யோசிக்காமல் மேலோட்டமாகவே வாழ்கிறவர்கள் என்று தான் தோன்றுகிறது. யோசிக்கத் தொடங்காதீர்கள் என்று சொல்வது நியாயமாகத் தோன்றவில்லை..

மங்கை said...

மாசிலா

மதுரா சொன்னதில் தப்பில்லை..அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.. அவர் கருத்தா அவரோட சொந்த அனுபவமா இல்லை பொதுவா சொல்றாங்களானு நாம் அலச வேண்டியது இல்லை.. அவர் சொன்னது நேர்மை...

அது தான் முதலிலேயே சொல்லிட்டேனே.. ஏற்கனவே நான் இத பத்தி நினச்சுட்டு இருந்தேனு... என்னோட நோக்கமும் யாரையும் குழப்பவோ, மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோ அல்ல... என்னோட அனுபவத்த பகிர்ந்திட்டேன்..அவ்வளவே

ஒரு வேளை அம்மா அருகில இல்லைங்கற ஆதங்கம் எல்லாம் சேர்ந்து இப்படி நினைக்க செய்யுதானு தெரியலை...

மதுராவின் பின்னூட்டம் நான் இந்த பதிவ எழுத தூண்டுகோளாக இருந்துச்சே தவிற...என் மனக் கஷ்டத்திற்கில்லை

நன்றி மாசிலா...SK சொன்ன மாதிரி இந்த பதிவு, மங்கை, மதுரா எல்லாம் மறந்துடுங்க..:-))...

மங்கை said...

நன்றி SK

குழப்பம் எல்லாம் இல்லை..
நாளைக்கே நான் இது போல செய்யலாம்...எந்த வித பிரதி பலனும் இல்லாமல் செய்ய முடிவதில்லை என்று தான் சொல்கிறேன்...அந்த நொடியில் ஏற்பட்ட இந்த எண்ணம், அப்படியெ மனசில நின்னுறுச்சு....

மங்கை said...

ஆஹா...

அதிசியமா ஒரு பதிவு போட்டா..இப்படி ஆயிருச்சே.. மக்களே...நான் நார்மலா நல்லா இருக்கேன்...இங்க வெய்யில் வர்ரதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும்

மாசிலா said...

மங்கை,
குழந்தையையும் கில்லிவிட்டுவிட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறீரா?
பலே பலே!
நல்ல முயற்சிதான்!
எங்களை எல்லாம் இப்படி குழப்பி இருக்கிறீரே,
இதற்கு என்ன பதில்?
தப்பித்து போக விடமாட்டோம்!
ஒழுங்காக எங்களுடன் மனநோய் வடுதியில் வந்து தங்கிவிடுங்கள்.
இல்லையென்றால் பின்னூட்டம் இடுவதை நிறுத்தவேஏஏஏஏஏ மாட்டோம்!
:-)))

பங்காளி... said...

கலாய்க்காம ஒரு பின்னூட்டம் போடுவோம்னு பார்த்தா அது அந்த ப்ளாக்கருக்கே புடிக்கலை போல....நான் என்ன பன்றது மங்கை.

சரி இன்னொரு சான்ஸ் கொடுப்போம்...இதுலயும் வொர்க்கவுட் ஆகலைன்னா அடுத்து கலாய்ச்சிற வேண்டியதுதான்....ஹி..ஹி..

எரிகிற விளக்கினை பராமரிக்க நியமிக்கப்பட்ட குருடனின் மன நிலையில் எழுதப்பட்ட பதிவு....

ஒரு வகையில் நாம் எல்லோருமே அந்த மனநிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...என்பதுதான் உண்மை.

மங்கை said...

அடடா...
மாசிலா ரொம்ப குழப்பிட்டனோ... இதுக்கு தான் பதிவே போடாம இருந்தது...:-))

இதுல நீங்க வேற ஏற்கனெவே 'அங்க'
இருப்பவர் போல தெரியுது.. பாருங்க மாசிலா இது நான் சொல்லலை..நீங்க தான் சொல்லி இருக்கீங்க...

\\ஒழுங்காக எங்களுடன் மனநோய் வடுதியில் வந்து தங்கிவிடுங்கள்\\

சரி சரி..யாரெல்லாம் வர்ராங்கன்னு பார்க்கலாம் என்னோட..ஒரு நல்ல இடமா பாருங்க ஊட்டி, கொடைனு
:-))
புண்ணியமா போகும்

தமிழ்நதி said...

முகமறியாதவர்களிடம் கூட கருணையோடு நடந்துகொள்ளத் தூண்டும் தருணங்கள் அற்புதமானவை! பொன்ஸ் சொல்லியிருப்பதுபோல மற்றவர்களிடம் 'பறை'தட்டிக்கொள்வதற்காகச் செய்யும் குணம் பெரும்பான்மையோரிடம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதைச் சொல்லிக்காட்டிய அடுத்த நொடியே அது வியாபாரமாகிவிடுகிறது. ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்துக்கொண்டதாகிவிடுகிறது. மற்றவர்களுக்குத் தெரியாமல் ஒரு சிறு உதவி செய்தாலும் ஏற்படும் நிறைவு இருக்கிறதே... அப்போதுதான் எம்மை நாமே மதிக்க ஆரம்பிக்கிறோம். சத்தமிடாமல் நல்லது செய்யும்போது மெலிதாக ஒரு அழுகை வரும். அதுதான் கடவுள். அதுதான் அன்பு. நாம் அப்படி அடிக்கடி அழவேண்டும்.

மங்கை said...

இதுல பிளாக்கர் என்ன பண்ணும் பங்காளி..பாவம் அத ஏன் இழுக்கரீங்க

நான் உங்க கலாய்புக்கு பழகிப் போனவள் தானே..ஹ்ம்ம்ம்

மாசிலா said...

மங்கை//இதுல நீங்க வேற ஏற்கனெவே 'அங்க'
இருப்பவர் போல தெரியுது.. பாருங்க மாசிலா இது நான் சொல்லலை..நீங்க தான் சொல்லி இருக்கீங்க...// உங்கள் பதிவை படிக்குமுன் அப்படி :-))).
படித்த பின் :-((( இப்படி.

நீங்களோ அப்பவும் இப்பவும் :-)))))))))))))))))) இப்படி.
------------------------------------------------



ஒருவருக்கு உதவி செய்யும்போது அதில் ஒருவித அதீத மன நிறைவு, ஆனந்தம், மகழ்ச்சி ஏற்படவேண்டும். ஆனால், அதற்கு பதில் கைமாறு கிடைக்குமா என்கிற நினைவில் நம் உள் மனதில் ஓர் வெற்று இடத்தை உருவாக்கி கொண்டால், அந்த இடத்தை நிறப்பும்வரை எதையோ இழந்த மாதிரி இருப்போம். அடுத்தவர்கள் நமக்கு செய்யும் ஒவ்வொரு செய்கைகளிலும் இதை தேடுவோம். பிறதி பலண் பாராமல் செய்வதே நன்று.

மங்கை said...

///சத்தமிடாமல் நல்லது செய்யும்போது மெலிதாக ஒரு அழுகை வரும். அதுதான் கடவுள். அதுதான் அன்பு. நாம் அப்படி அடிக்கடி அழவேண்டும்///

ஹ்ம்ம்..உண்மை தமிழ்நதி

மாசிலா said...

///சத்தமிடாமல் நல்லது செய்யும்போது மெலிதாக ஒரு அழுகை வரும். அதுதான் கடவுள். அதுதான் அன்பு. நாம் அப்படி அடிக்கடி அழவேண்டும்///

அய்யய்யோ!
என்னது அழனுமா?
என்ன விட்டுடுங்க!!!
நான் இந்த ஆட்டத்துக்கு வரல!!!!
எஸ்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎப்......
:-)

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

கடலில் வீணாகச் சேரும் நீரைப்போல திருப்பதி உண்டியலில் கோடிகோடியாகக் கொட்டும் முட்டாள்கள்கூட தம்பட்டம் அடித்துக்கொள்ளும்போது மக்களுக்கு பயனுள்ளவிதமாக செலவழிக்கும் நாம் சொல்லிக்கொள்வதில் தப்பேதுமில்லை.

கமலஹாசன் உடல் உறுப்புதானம் செய்வதை பத்திரிக்கையில் படித்த பலருக்கும் உறுப்புதானம் செய்வதில் பயம் நீங்கியது.. எஸ்.வி.சேகர் ஐம்பது முறைக்கும் மேலாக ரத்த தானம் செய்திருக்கிறார் என்பதைப் படிக்கும்போது ரத்ததானம் செய்வதில் விழிப்புணர்ச்சி வந்துள்ளது என்பது உண்மை.

வறியவர்களுக்கு உதவும்போது ஆர்ப்பாட்டமில்லாமல் செய்தால் போதும். நாம் செய்த உதவியால், நமக்கு கிடைத்த மனநிம்மதி, உதவி அடைந்தவர்களின் மகிழ்ச்சி, போன்றவற்றை மற்றவர்களிடம் சொல்லுவதன்மூலம் அவர்களுக்கும் அந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதில் என்ன தவறு?

இருப்பவர் இல்லாதவர்களுக்கு கொடுப்பது சுயநலம் இல்லை... வாங்குபவர் தான் மனம்வருந்த வேண்டுமே தவிர கொடுப்பவர் குழம்ப வேண்டியதில்லை.

பத்மா அர்விந்த் said...

பொன்ஸ்: //குழப்பங்கள் ஏதுமில்லாமல் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் யோசிக்காமல் மேலோட்டமாகவே வாழ்கிறவர்கள் என்று தான் தோன்றுகிறது// குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு ஏற்கெனவே ஒரு தீர்ம்னானத்துக்கு வந்த காரணமும் இருக்கலாம்.
உதவ வேண்டும் என்ற ஆசை வளர்வதே தவறு. நாம் உதவ வேண்டும் என்றால் அந்த உதவியை பெற இன்னும் மக்கள் ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக முடியும். கொடை வள்ளலாக வேண்டுமானால், கையேந்து ஏழைகள் நிலை மாறாமல் இருக்க வேண்டும். இதை தாண்டி எல்லாரும் எல்லாமாக இருக்கும் நிலை வேண்டும்.

உதவி என்று எதுவும் இல்லை. நமக்கு தெரிந்த வழிகளை இன்னொருவருக்கு சொல்லுவது, நாம் ஒருவரிடம் இருந்து பெற்றதை இன்னொருவருக்கு தருவது என்ற கைமாற்றாகவே வாழ்க்கை. இன்னொருவரிடம் இருந்து எனக்கு திருப்பி வரும் என்றில்லை, புண்னியத்தில் நம்பிக்கையும் இல்லை.

ஒரு சமயம் என் மகனின் நண்பன் வீட்டுக்கு ஸ்லீப் ஓவர் போயிருந்தான். கிட்டதட்ட 100 ஏக்கர் நிலம் உள்ள வீடு, மாடும் கோழியுமாய் பெரிய பண்ணை வீடு இங்கே நியுஜெர்ஸியில். திரும்பும் போது என்னிடம் கேட்டன், இவர்களுக்கு ஏன் இத்தனை பெரிய விடு? பரம்பரை பணமாக இருக்கும். அதெப்படி பரம்பரையாக வர முடியும்? தாத்தா கலம் முதல் பணக்காரர்களாக இருந்திருப்பார்கள். நாம் இப்போது உழைத்து நல்ல நிலையில் இருப்பதை போல. ஆனாலும் உலகம் தோன்றீய பொது எல்லாம் சமாக இருந்திருக்க வேண்டும்தானே, மனிதர்கள் உருவானபோது, அப்போது எப்படி ஒருவர் பணம் படைத்தவராகவும் இன்னொருவர் இல்லாமலும் இருக்க முடியும் என்று. முடிவில்லாமல் பேசிக்கொண்டே வந்தோம். அதே போல தான் உதவுபவர்களும், உதவி பெறுபவர்களும்.குழப்பமாய் இருந்தால் நீக்கிவிடவும்.

ramachandranusha(உஷா) said...

நான் சொல்ல விரும்பியதை பத்மா சொல்லிவிட்டார். எனக்கு கடவுள் நம்பிக்கையும் இல்லை, பாவ
புண்ணியம், அடுத்த பிறவி இவைகளிலும் அறவே நம்பிக்கையில்லை. நம்மால் முடிந்ததை பிறருக்கு உதவுவது கடமை அவ்வளவே!. பணம், காசு கொடுப்பது மட்டும் உதவி இல்லை,
இதைத் தவிர நிறைய உதவிகள் உண்டு. என்ன ஒன்று இவனு/ளுக்கு வேறு வேலை இல்லை,
பெரிய மதர்தெரசா/ காந்தி என்று நினைப்பு போன்ற சொல்லடிகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் பழகியதும், கடவுளைக் கண்டேன் என்று கண்ணீர் எல்லாம் வராது :-)
இது சமீபத்தில் செல்லி என்ற பதிவர் எடுத்துப் போட்ட ஒளவையின் பாடல்.

சித்திரமுங் கைப்பழக்கம்; செந்தமிழு நாப்பழக்கம்;
வைத்த்தொரு கல்வி மனப் பழக்கம்;- நித்தம்
நடையும் நடைப்பழக்கம்; நட்புந் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

Anonymous said...

அய்யோ என்ன எழுதிறதுன்னு தெரியலையே :) ...

மங்கை ஒரு உண்மை காண்கிறேன் இந்த பதிவில், நீங்க நிஜமாவே நிறைய முயற்சிகள் எடுத்து உங்கள் உலகில் நல்ல மாற்றங்களை உருவாக்குகிறீர்கள். உங்களிடமிருந்து விரியும் உலகில் மனிதம் செயல் ருபமாய் அடிக்கடி வெளிப்படுகிறது. நான் மனிதத்தை பத்தி பேசுறதுதான் ஜாஸ்தியோன்னு இருக்கு. என் உலகில் இன்னும் அது ஒரு எண்ணமாகவே இருக்கிறது சில நேரங்களில்.

உங்கள் எண்ணங்கள், சுய பரிசோதனை மிகவும் ஆழமானது, அதில் உள்ள அழகில் உங்கள் தனித்துவம் அருமையாய் வெளிப்படுகிறது!

பின்னூட்ட வந்தவர்களும் ஆழமாய் பல வாதங்கள் சேர்த்து இந்த பதிவுக்கு இன்னும் மெருகேற்றுது.

மாசிலா உங்கள் வாதம் எனக்கு புரிகிறது. வேறென்ன சொல்ல! அவ்வளவுதான்! நீங்க, "மதுரா மாசிலா இல்ல"ன்றீங்க. ஓ.கே. அக்ரீட்.

மங்கை மதுரத்தை நீங்கள் வளர்த்தது போல் நான் வளர்க்கவில்லையேன்னு ஏங்க வச்சிட்டீங்க!

சிவபாலன் said...

மங்கை,

+ குத்து

உள்ளேன் அய்யா ( அக்கா!?) என சொல்ல வந்தேன்!

வருகிறேன்!

நன்றி

VSK said...

உலகம் தோன்றிய போது எதுவும் இல்லை!

எல்லாமும் இருந்தது!

மனிதனுக்கு மூளையைக் கொடுத்தது இறைவன்...அல்லது இயற்கை!

அதை பயன்படுத்தி, நல்லதாகவோ, கெடுதலாகவோ செய்தது இந்த மூளை படைத்த மனிதன் தான்!

இதே மூளையைக் கொண்டு நல்லன செய்தால் நலமே விளையும்!

அழுகையும் வராது!
:))

மங்கை said...

கவுதமன்

வெளியே சொல்லிக்கொள்வதை விட, செய்யவேண்டும் என்று என் எண்ணத்தில் தான் எனக்கு குழப்பம்.. ஹ்ம்ம்ம்...

கருதுக்களுக்கு நன்றி கவுதமன்..

மங்கை said...

பத்மா, உஷா, மதுரா, சிவபாலன், SK,
நன்றி..

மதுரா நீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லைங்க...இந்த மாதிரி எண்ணங்கள் மனசில அப்பப்ப ஓடினாலும் எழுதனும்னு தோனினது இல்லை....நமக்கு தெரிஞ்ச விஷயத்த பத்தி மட்டும் எழுதீடறது...
இது என்னமோ எழுதீட்டேன்..
அவ்வளவு தான் சொல்ல தோனுது...
ஹ்ம்ம்ம்

லக்கிலுக் said...

தாங்கலடா சாமி :-(

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அன்புன்னா என்ன? ஏன் உதவணும்? என் உதவுறோம் என்பன மிக அடிப்படையான கேள்விகள். விடை காணுவது கடினம். வர்ற விடை நமக்கு பிடிக்காததாகவும் இருக்கலாம். நிறைய அடிப்படை விசயங்களை தொட்டு எழுதுறீங்க..வாழ்த்துக்கள்

மாசிலா said...

அய்யய்யோ!
உள்ள வரலாமா?
அய்யய்யோ வேணாம்
நான் வர்ரேன்
ஜூஊஊஊஊஊஊஉட்!!!!
:-)

மாசிலா said...

போன முறை வந்து உரு தெரியாம வெளியே வந்தேன்.
இப்போ எப்படி நிலவரம்?
:-)