Monday, November 29, 2010

கங்கையில் ஒர் கலை நிகழ்ச்சி

துர்கா பூசை கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகெங்கும் உள்ள வங்காளிகள் ஊருக்கு வருகின்றனர்.இவர்களைப் போலவே நாடெங்கிலும் இருந்து எங்களைப் போல ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த சமயத்தில் வருகின்றனர். இவர்களை கவரும் வகையில் அரசின் சுற்றுலாத்துறை பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது. நகரின் இயல்பான கொண்டாட்டங்களின் ஊடே சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் பிரத்யேக கேளிக்கைகள்,கலை விழாக்கள் இங்கே மிகப் பிரசித்தம். குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னரே இதற்கான முன்பதிவுகள் எல்லாம் முடிவடைந்து விடுகின்றன.



இந்த வகையில் சுற்றுலாத் துறை அகண்ட கங்கை நதியின் நடுவில் ஏற்பாடு செய்திருந்த கலைவிழா ஒன்றில் பங்கெடுக்க முடிவு செய்து அதற்கான பதிவுச் சீட்டினை மூன்று மாதங்களுக்கு முனன்ரே முன்பதிவு செய்திருந்தோம். மற்றவர்கள் எப்படியோ நான் மிகவும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தேன்.
 
 சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் படகில் அமர்ந்து கொண்டு இன்னொரு படகில் நடக்கும் நடன நிகழ்சியை பார்ப்பதுதான் திட்டம்.ஆறு மணிக்கெல்லாம் படகுத் துறையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர், ஆனால் மூன்று மணியில் இருந்து மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையில் நிகழ்சி சாத்தியமாகுமா என்ற நினைப்பில் ரொம்பவே பதட்டத்தில் இருந்தேன். யார் செய்த புண்ணியமோ ஆறு மணிக்கெல்லாம் மழை சுத்தமாய் நின்று விட்டது.

ஒரு வழியாய் ஆறு மணி வாக்கில் ஒரு படகில் ஏறி நாங்கள் அமர வேண்டிய பெரிய படகுக்கு பயணமானோம். பெரிய படகு அதே மாதிரியான இன்னொரு படகுடன் சேர்த்து கட்டப் பட்டிருந்தது. ஒன்றில் நாங்கள் உட்கார்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். மற்றதில் இசைக் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராய் இருந்தது. அங்கேயும் பெரிய துர்கா தேவியின் சிலை, பூஜை சாமாச்சாரங்கள் என கரையில் காணப்படும் அதே திருவிழா உற்சாகம் நிறைக்கப் பட்டிருந்தது.படகின் மேல் தளத்தில் நாங்கள் உட்கார வைக்கப் பட்டோம்.மெல்ல இருள் சூழ கரையில் விளக்குகள் உயிர்த்தெழ ஒளி ஓவியமாய் கொல்கொத்தா மிளிர ஆரம்பித்தது. பெரிய நதியின் நடுவே படகில், மெல்லிய குளிரை சுமந்த காற்றின் உரசலில் எதிரில் மிளிர்ந்த ஒளி ஜாலம் தந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. 


படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.வேறெதையும் நினைக்காமல் இந்த எகாந்தமான படகு பயணத்தை முழுவதுமாய் அனுபவிக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் இருந்தேன்.நகரின் பரபரப்பு ஓசைகளிள் இருந்து விலகி, இருளின் ஆளுமையை முழுமையாய் அனுமதித்து, ஈரக்காற்றின் குளுமையை உள்வாங்கி எல்லாம் எனக்கு புதிதாகவும், ப்ரியமானதாகவும் இருந்தது. 
 இப்படியே பயணித்துக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமே என்று கூடத் தோன்றியது.இதற்குள் படகு புகழ்பெற்ற ஹௌரா பாலத்தை நெருங்கி இருந்தது. இந்த சமயத்தில் கூட கட்டியிருந்த படகில் இசைக் கச்சேரி ஆரம்பம் ஆகியது.வங்காள மொழி பாடல்கள் பாடினர். அநேகமாய் அவை நாட்டுப் புற பாடல்களாய் இருக்க வேண்டும். இந்த சமயத்தில் எதிரில் வர்ண விளக்குகளுடன் நாட்டிய மேடை போல வடிவமைக்கப் பட்ட மேல் தளத்துடன் படகு ஒன்று எதிர் வந்தது. அதுதான் நாங்கள் காண  இருக்கும் கலை நிகழ்ச்சிக்கான படகு. எங்கள் படகு அந்த படகை சுற்றி  சுற்றி வந்தது.

துர்கா பூஜை பற்றிய முன்னுரையுடன் நாட்டியம் தொடங்கியது. முதல் நாட்டியம் யா தேவி ஸர்வபூதேஷு என்ற தேவி ஸ்துதிக்கு அழகிய இளம் வங்காளப் பெண்களும், ஆண்களும் நிஜமான உற்சாகத்துடன் ஆடினர்.ஆண்களை  விட ஆடிய பெண்கள் கம்பீரமாக ஆடியதைப் போல எனக்கு தோன்றியது. அவர்களின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.அதற்குப் பின்னர் பல வாங்காள நாட்டுப்புற பாடல்களுக்கும், பாப் இசைக்கும். பாரம்பரிய உடை அணிந்து ஆடினார்கள். நாட்டியம் நடந்து கொண்டிருக்கும் போதே இரவு சாப்பாடு பரிமாரப்பட்டது.அசைவ உணவும், சைவ உணவும் பரிமாறப்பட்டது. கங்கை நதியின் நடுவில் படகில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தது எனக்கு நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.அனுபவித்து பார்க்கவேண்டிய ஒரு காட்சி அமைப்பு.

Monday, November 22, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-II


வங்காளத்துக்கும், துர்கா பூஜைக்கும் இடையே உள்ள தொடர்பாக வங்காளிகள் கூறும் புராணக் கதை இதுதான்....

தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இதைத் தொடர்ந்து இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு சிவன் கோரதாண்டவம் ஆடினாராம். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தாராம். அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய  ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதப் படுகிறது.

பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்காபூஜையாக கொண்டாடப் படுகிறது. சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் பதினாறு சக்தி பீடங்கள் வங்காளத்தில் இருப்பதாகவும் கூறக் கேட்டேன்.சக்தி வழிபாடு என்பது வங்காளிகளின் வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அங்கமாகவே இருக்கிறது.

                                                                                          
தற்காலிக வழிபாட்டுக் கூடங்களில் 
அமைக்கப் பட்டிருக்கும் துர்கையின் சிலைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாகவும், சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப் பட்டிருக்கிறது. அன்னையின் முகத்தில் தவழும் உணர்ச்சியினை இன்னதென தெளிவாக கூற இயலாதவகையில் கலவையான உணர்வுகளை தருகிறது.எல்லாராலும் துர்கையின் சிலையினை செய்திட முடியாதென கூறுகிறார்கள்.இந்த சிலைகளை செய்வதற்கென விசேடமான சிற்பிகள் இருக்கிறார்களாம்.துர்கையின் சிலையோடு கூடவே, விநாயகர், கார்திகேயன், லக்ஷ்மி சரஸ்வதி ஆகியோரின் சிலைகளையும் அமைத்திருக்கின்றனர்.

நவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கை போன்ற ஒன்றில் பார்லி விதைகள் விதைக்கப்பட்டு, பாத்தாவது நாளில் அது முளைகட்டி வளர்ந்த பிறகு, விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் அருளுடன் கூடிய பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஊரெங்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் இந்த இசை கருவியை வாசிக்கும் பொழுது மனமும் உடலும் ஒரு வித பரவசம் அடைவது உண்மை.இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் விசேட கவனத்துடன் தயாரிக்கப் பட்டு பூசையில் படைக்கப் பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.முதல் நாள் குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாள் கன்னியின் அம்சமாகவும், மூன்றாம் நாள் பேரிளம் பெண்ணின் அம்சம் என தொடர்கிறது வழிபாடுகள்.கடைசி நாளான மஹாநவமியில் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.

இப்படி மாய்ந்து மாய்ந்து பெண்களைக் கொண்டாடும் இதே ஊரில்தான் பெண்களை போகப் பொருளாய் கருதி சீரழிக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.பெண் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிற்து.ஒரு பக்கம் பெண்குழந்தைகளை தெய்வமாய் பூஜித்து கொண்டிருக்கையில்  மறுபக்கம் ஈவிரக்கமில்லாமல் அத்தகைய குழந்தைகளை பாலியல் இச்சைக்கு பலியாக்குவது வேதனையான வேதனை..

(பதிவின் நீளம் கருதி பயண அனுபவங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்)

Thursday, November 18, 2010

கொல்கத்தா துர்கா பூஜை...நான்-1

நான் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிற்கு பயணம் செய்திருந்தாலும், இப்போது சொல்ல வரும் இந்த பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. இது வரையில் பயணங்கள் பெரும்பாலும் துறை சார்ந்த அலுவலக பயணமாகவே இருந்திருக்கிறது. முதல்முறையாக உற்றார் உறவினர் சூழ அமைந்த இந்தப் பயணம் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.இந்திய நாட்டின் இந்தப் பகுதி எப்பொழுதும் ஏதாவது ஒர் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு பகுதி. பெரிதாக மற்றவர்களால் சுற்றி பார்க்கப்படாத ஒரு பகுதி.  கோவையில் இருந்து கொல்கொத்தாவிற்கு, அதுவும் ஒரு திருவிழாவில் பங்கேற்க...

ஆம், துர்கா பூஜை என பிரபலமாய் கொண்டாடப் படும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளத்தான் இந்த பயணம்.உணர்வு ரீதியாக நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு பயணம் இது. எனது தந்தையார் தேசிய கவி, தாகூரின் மிகப் பெரிய ரசிகர். அந்த கலைஞனின் பெயரையே அண்ணனுக்கு வைத்து, தாகூரின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை பெண் பிள்ளைகளுக்கு வைத்தார். ''ரக்தகரபி'' தந்த மயக்கத்தில் அதில் வரும் நாயகியின் பெயரைத்தான் எனக்கு சூட்டியிருக்கிறார்.என் தந்தையார் மிகவும் நேசித்த ஒரு கலைஞனின் மண்ணிற்கு, அவன் உருவாக்கிய பாத்திரங்கள் உலவிய அந்த மண்ணிற்கு போகிறேன் என்கிற பரவசமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பயணம் இது.

நூற்றாண்டுகளை கடந்த கட்டிடங்கள், குறுகலான நெரிசல் மிகுந்த காங்கிரீட் சாலைகள், குறுக்கும் நெடுக்குமாய் நகர்ந்து கொண்டிருக்கும் ட்ராம் வண்டிகள், மஞ்சள் நிற அம்பாஸிடர் டாக்சிகள்,ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் நகரின் நடுவே அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அகண்ட கங்கை


என  பழமை பூசிய முகத்துடன் வரவேற்றது கொல்கத்தா.சட்டெனெ இருபது வருடங்கள் பின்னோக்கி போய்விட்டதைப் போல ஒரு உணர்வு தோன்றியதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
 
திரும்புகிற பக்கமெல்லாம் வண்ண வண்ண விளக்குகள், விதவிதமான வீதியோர சிற்றுண்டிச் சாலைகள், சிவப்பு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிற பருத்திப் புடவையுடுத்திய, பெரிய கண்களும் பளிச்சென பொட்டும் வைத்த அழகிய பெங்காலி பெண்கள்.ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்த தற்காலிக வழிபாட்டு கூடங்கள்,அவற்றில் அமைக்கப் பட்டிருந்த வண்ண வண்ண தோரணங்கள்,ஆர்பாட்டமான இசை,பாடல்,ஆடல்கள் என திருவிழா களைகட்ட வயதெல்லாம் மறந்து சிறுமியாய் மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.


 இந்த தற்காலிக வழிபாட்டு கூடங்களைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு செலவு செய்து அலங்கரித்து வைத்திருந்தனர்.தங்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தினை பறைசாற்றும் விதமாக சில வழிபாட்டு கூடங்களில் பணம் தண்ணீராக இறைக்கப் பட்டிருந்தது. பல இடங்களில் அலங்கார செலவுகள் மட்டுமே கோடிகளை தாண்டியிருப்பதாக கூறக் கேட்டேன்.ஒவ்வொரு வழிபாட்டுக் கூடமும் ஒரு கருத்தியலை(Theme) அடிப்படையாக கொண்டு வடிவமைத்திருந்தனர்.தங்கள் பகுதி வழிபாட்டு கூடங்கள் குறித்த
பெருமையும்,அலட்டல்களும், பீற்றல்களும் மக்களிடம் வழிந்தோடியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் சில அரசியல் வாதிகளின் கூடாரங்களும் அடக்கம்.

நவராத்திரி நாடெங்கும் கொண்டாடப் பட்டாலும், வங்காளிகள் அளவுக்கு இத்தனை தீவிரமான கொண்டாட்டத்தை நாட்டின் மற்ற பகுதிகளில் காண இயலாது.இது அவர்களின் உணர்வுகளோடு கலந்த ஒரு விழாவாகவே கருதுகிறார்கள். ஒன்பது நாட்களும் புத்தாடை உடுத்தி, விதவிதமாய் பலகாரங்கள் செய்து விருந்து வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

இத்தனை தீவிரமான கொண்டாட்டங்களுக்கு பின்னால் புராண கதை ஒன்றையும் கூறுகிறார்கள். பதிவு நீளமாய் போகிறது எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Wednesday, November 17, 2010

காற்று வெளியிடைக் கண்ணம்மா

இதை விட ரொமாண்டிக்கான ஒரு பாடலை கேட்டதில்லை...

கண்ணம்மா கண்ணம்மா என்று உருகி உருகி காதலியை வர்ணித்து, இளமைத் துடிப்பு நிறைந்த பாரதி, காதலன் காதலியையும், காதலையும் நம் கண் முன்னே வைக்கிறார்.



காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா
ம்ம்ம்
கண்ணம்மா
ம்ம்ம்

கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்