Monday, May 25, 2009

ROCK ONNNNNN.............

என்னுடைய 23வது வயது வரை சினிமா இல்லாத சனிக்கிழமையை நினைத்துக் கூட பார்த்தது இல்லை, ஏன் இரண்டு படங்கள் கூட பார்த்து உண்டு. யார் கண் வைச்சாங்களோ.. அதுக்கு அப்புறம் இந்த 19 வருசத்துல மொத்தம் நான் பார்த்த படங்களே 4 அல்லது 5. அதுவும் கடைசியா நான் எப்போ தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன்னு எனக்கே நினைவில்லை.

இன்னைக்கு என் பழைய அலுவலக நண்பனும் அவன் அம்மாவும், சொல்லாமல் கொள்ளாமல் ஒரு தியேட்டருக்கு கடத்தீட்டு போனாங்க...சினிமானு சொன்னா நான் வரமாட்டேனு..ஷாப்பிங்க போலாம்னு பொய் சொல்லி...'ராக் ஆன்' என்ற இந்தி படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து அழைச்சுட்டு போனாங்க. தியேட்டர் காலியா இருந்துச்சு..இதுக்கு எதுக்கு ரிசர்வ் பண்ணாங்கன்னு தெரியலை... தி்யேட்டர்ல 2 1/2 மணி நேரம் உட்காருவதே கஷ்டம்...அதுவும் கூட்டமே இல்லாத படத்துக்கு கூப்டுட்டு வந்து இம்சை பண்றாங்களேனு எரிச்சல்... தியேட்டரில் ஜில்லுனு ஏசி...உள்ளே நுழைஞ்ச உடனே, மனதில் ஏதோ ஒரு குதூகலம்....அந்த சூழல்.... ட்ஜிட்டல் சவுண்ட்...படம் பார்க்க வந்திருந்த காதல் ஜோடிகளின் சிரிப்பு, கல்லூரி மாணவர்களின் கலாட்டா மனசுக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது.

பழைய நினைவுகள், தோழிகளுடன் கோவை கே ஜி தியேட்டரில் கூத்தடித்த நாட்கள் சட்டென்று கண் முன்னே நடனம் ஆடின. சனிக்கிழமை காலைக்காட்சி அல்லது மதியம் கண்டிப்பாக அங்கிருப்போம். ஸ்டடி ஹாலிடேஸ்களில்,எங்கள் க்ரூப் ஸ்டடி பெரும்பாலும் கே ஜி தியேட்டரில் தான். டிக்கெட் இல்லாமல் திரும்பின நாட்களே இருக்காது. யாரையாவது பிடித்து படத்தை பார்த்துவிட்டு தான் வருவது. என்னை தவிர தோழிகள் எல்லோரும் தீவிர ரஜினி ரசிகைகள்...ரஜினி படத்தை ஓபனிங் ஷோ பார்ப்போம்னா...நாங்க அடிச்ச கூத்த கொஞ்சம் நினைச்சு பாருங்க...அது எல்லாம் ஒரு காலம்...ஹ்ம்ம்ம்ம்...

சரி Rock On..படத்தைப் பற்றி கொஞ்சம் பார்போம்...2008 ல் வெளிவந்த படம்...இப்படத்தின் தயாரிப்பாளர் 'தில் சாத்தா ஹை' புகழ் ஃபர்ஹான் அக்தர்.இவர் ஜாவேட் அக்தரின் (ஷபனா ஆஸ்மியின் கணவர்) முதல் மனைவியின் மகன். படத்தை இயக்கியவர் அபிஷேக் கபூர். பல விருதுகளைப் பெற்ற படம்.

ஏற்கனவே என் மனதில் ஓடிக்கொண்டிருந்த நினைவுகளுக்கு தீனி போட்டது படம். நம் சிறு வயது ஆசா பாசங்களை, சில காரணங்களினால் காலப்போக்கில் நாம் எவ்வாறு மறந்து போகிறோம் என்பது தான் கரு. நமக்கு நாமே சமாதானங்கள் கற்பித்துக்கொண்டு, காரணங்களை பட்டிலிட்டுக் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் போய் ஏற்றுக் கொள்கிறோம். இது ஒரு வகையில் நல்லதாக பட்டாலும், இன்று எனக்கு அமைந்தது போன்ற ஒரு நாளில்,ஒரு அனுபவத்தில், பழைய வாழ்க்கைக்கு மனது ஏங்காமல் இருப்பதில்லை. பெரிதாக ஏதும் இழக்கவில்லை என்றாலும், அந்த நினைவுகளுக்கு ஈடாக வேறு ஏதும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?....ம்ம்ம்ம்


படத்தில் நான்கு நண்பர்கள் ஆதித்யா (ஃபர்ஹான் அக்தர்), ஜோ (அர்ஜுன் ராம்பால்) ராப் மற்றும் கே.டி, மேஜிக் என்ற ராக் இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். திறமை இருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு போட்டியில் ஜெயித்து, அதன் பரிசாக நல்லதொரு வாய்ப்பு அமையும் பொழுது, ஆதிக்கும் ஜோவிற்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து நண்பர்கள் பிரிந்து விடுகிறார்கள். பத்து ஆண்டுகள் கடந்து செல்கின்றன.

ஆதி பெரும் பணக்காரனாகி விடுகிறான். அவனுக்கு தன் அலுவலக பணிகளைத் தவிர வேறொன்றும் பெரிதில்லை. சிரிப்பதை கூட மறந்து, மனைவி சாக்ஷியிடம் கூட தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல், இயந்திரத்தனமான வாழ்க்கயை வாழ்ந்து வருகிறான்.

ஜோ இசையை தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியாமல், வாழ்க்கையை வறுமையில் கழிக்கிறான். தன் குடும்ப தொழிலான மீன் வியாபரத்தை அவன் மனைவி கவனித்துக் கொள்கிறாள்.



அர்ஜுன் ராம்பால்


கேடி தன் தந்தையின் ஷோரூமை அக்கறை இல்லாமல் நிர்வாகம் செய்கிறான். ராப் மட்டும் சில விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

ஆதியின் மனைவிக்கு தன் கணவன் வாழ்க்கையில் எதையோ பரிகொடுத்தவனைப் போல இருப்பதாக படுகிறது. ஏதோச்சையாக அவள் கணவனின் இசை ஆர்வமும், அவனின் கடந்த கால வாழ்க்கையும் தெரிய வருகிறது. இசையை இப்படி வெறித்தனமாக ரசித்தவனா இன்று ஒரு ஜடம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று ஆச்சிரியப்படுகிறாள்.அவளின் முயற்சியால், ஆதிக்கு விருப்பம் இல்லாவிடினும், ஒரு சந்தர்பத்தில் மனம் மாறி, சில பல சம்பவங்களுக்குப் பின்னர் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.

பிரிந்த நண்பர்கள், 10 வருடங்கள் கழித்து ஒன்று சேரும் பொழுது அவர்களின் தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கூட படத்தில் ஆழமாக சித்தரிக்கப்ப
ட்டிருக்கிறது. 20 களில் நீண்ட கூந்தலுடன் இருந்த நண்பர்கள், இப்பொழுது ஜோவைத் தவிர மற்றவர்கள் ட்ரிம் செய்து கொள்கிறார்கள். ஜோ காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதை இது காட்டுகிறது. ராப்புக்கு தலை முடி வெகுவாக குறைந்திருப்பதை நண்பர்கள் கேலி செய்கிறார்கள். அதற்கு ராப், இப்போது இது தானே ஃபேஷன் என்று கூறி சிரிக்கிறான். வயதாகி விட்டது, முடி கொட்டிவிட்டது என்று ஒத்துக் கொள் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் முடி கொட்டுதல் வயதினால் அல்ல,புற்று நோய்க்கு அவன் எடுத்துக் கொண்டிருக்கும் கீமோ தெரபியினால் என்று பின்னர் தான் தெரியவருகிறது. அவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கொண்ட பின் இரண்டு மாதங்களில் ராப் இறந்து விடுகிறான். ஆதிக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு ராப் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மீண்டும் தங்கள் உயிரான இசையை வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கிறார்கள்.

சாதாரண கதை, ஆனால் அது சொல்லப்பட்டிருக்கும் விதம், அசத்தல். நடித்த ஒவ்வொரு நடிகரும் உணர்வு
ப் பூர்வமாக நடித்திருக்கிறார்கள். ஜோவாக நடித்த அர்ஜூன் ராம்பால்...ஆதியாக நடித்த ஃபரான் அக்தர்...நம் நடிகர்கள் இவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம். தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்தின் தன்மையை நன்றாக உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இதில் நடித்த நான்கு நடிகர்களுமே திறமையாக நடித்திருக்கிறார்கள். ஆதியின் மனைவியாக நடித்த ப்ரச்சி தேசாய், தன் சிறிய புன் சிரிப்பிலேயே அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டிவிடுகிறார்.

என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோவின்
மனைவியாக நடித்த சஹானா
கோஸ்வாமி. நசிருதீன் ஷா முதன்
முதலில் இயக்கிய படத்தில் அறிமுகமானவர். சர்வ சாதாரணமாக அலட்டல் இல்லாமல் நடித்து, கதாபாத்திரத்தின் உணர்வுகளை கலக்கலாக வெளிப்படுத்துகிறார்.

ஆதியின் மனைவி எடுக்கும் முயற்சி அவனுக்கு பிடிக்காமல் போகவே அவளை கடிந்து கொள்கிறான். பிரிந்து போன மனைவி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று மனைவியின் தோழியிடம் சொல்கிறான். அவள், அவன் மனைவி அவனின் சந்தோஷத்திற்காகவே செய்ததாக சொல்லும்போது, ஆதி சொல்கிறான்' எனக்கு யாரையும் சந்திப்பதில் விருப்பமில்லை...இன்னும் எத்தனை நாட்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வுகள் என் பின்னால் ஓடி வரும்' என்று கேட்கிறான், அதற்கு தோழி ''நீ அதைக் கண்டு ஓடும் வரை" என்கிறாள்.


நன்றாக எடுக்கப் பட்டிருக்கும் ஒரு படம். கண்டிப்பாக சிடி வாங்கி பாருங்கள்.

Monday, May 18, 2009

ஜெர்சி கர்ல்- Jersy Girl-திரைப்பார்வை


ஜெர்சி கர்ல்... திரைப்பட விமர்சகர்களால் பல் வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.

ஊடகத்துறையில் பிரபலமானஆலிவர் ட்விங்கி் (Ben Affleck) மனைவியை இழந்தவர்.
குழந்தை பேற்றின்போது மனைவி இறந்து விடுகிறார். மனைவி இழந்த துக்கத்தை மறக்க தன் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். பிறந்த குழந்தையின் மேலும் அக்கறையில்லை. ஆலிவரின் தந்தை ஊரில் இருந்து வந்து குழந்தையை பார்த்துக் கொள்கிறார். மகனின் இந்தப் போக்கை திருத்த நினைத்து, ஒரு நாள் தன் ஊருக்கு கிளம்பிவிடுகிறார். மனைவியை இழந்த துக்கம் ஒரு பக்கம் அழுது கொண்டே இருக்கும் குழந்தை ஒரு(மறு) பக்கம், இதனால் மிகுந்த மன அழுத்தம் அடைந்து அடுத்த நாள் பணி செய்யும் இடத்தில் பிரபல நடிகர் வில் ஸ்மித்தை அறைந்து விடுகிறார். அனைவருக்கும் எதிரில் இது நடந்ததால், வேலையை இழக்க நேரிடுகிறது. அதுமட்டுமில்லாமல் அனைத்து நிறுவனங்களும் இவரை பிளேக் லிஸ்ட் செய்து விடுகிறது. இதனால் ஆலிவரின் தந்தை இருக்குமிடமான நீயூ ஜெர்ஸ்சிக்கே குழந்தையுடன் சென்று விடுகிறார். குழந்தையை பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவதுடன் அதை முழுமனதுடன் நேர்த்தியாக செய்து வருகிறார்.

எவரும் அவருக்கு ஏற்ற வேலையை கொடுக்காத நிலையில், ஒரு அரசு நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். ஒரு நல்ல தந்தையாக இருப்பதை மட்டுமே மனதில் கொண்டு வேறு பெண்களை மனதிலும் நினைக்காமல், மனைவியின் நினைவுகளுனூடேயே 7 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில் அருகில் இருக்கும் ஒரு வீடியோ/சீடி கடை
யில் பணி புரியும் ஒரு பெண் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல தோழியாக இருந்து வருகிறார்.

ஒரு பொதுப்பணியில் சிலருக்கு ஆதரவாக பேசி அவர்களுக்கு நியாயம் வாங்கி கொடுத்த பின், தன் கடந்தகால பணி அவருக்கு நினைவு வருகிறது. மீண்டும் நீயூயார்க் நகரம் செல்ல முயற்சி செய்கிறார். பழைய நண்பர் ஒருவர் மூலம் ஒரு நிறுவனத்திடம் நேர்காணலுக்கான தேதியை குறிக்கிறார். இது தந்தைக்கோ, மகளுக்கோ தோழிக்கோ யாருக்கும் பிடிக்கவில்லை. நியூஜெர்சியை விட்டு போக மகளுக்கு விருப்பமில்லை. நேர்கானலுக்கு செல்ல வேண்டிய அதே நாளில் தான் பள்ளியில் குழந்தையுடன் ஒரு போட்டியில் தானும் பங்கேர்க்க வேண்டும். இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் குழந்தை அழுகிறாள். விவாதத்தில் உணர்ச்சிவசப்பட்டு, கோவத்தில், உன்னாலும் உன் அம்மாவாலும் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று கூறிவிடுகிறார்.

இந்த வார்த்தைகளை எதிர்பாக்காத குழந்தை அழுதபடி தன் அறைக்குள் சென்றுவிடுகிறாள். அடுத்த நாள் தன் தவறை உணர்ந்து குழந்தையிடம் மன்னிப்பு கேட்கும் இடத்தில் அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்குகிறது. தொழிலின் மேல் தந்தைக்கு இருக்கும் ஆர்வத்தினாலேயே அப்படி நடந்து கொண்டார் என்பதை உணர்ந்து, நியூயார்க் செல்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறாள்.

நியூயார்க் நகரில் நேர்காணலுக்காக காத்துக்கொண்டிருக்கும் போது 7 ஆண்டுகளுக்கு முன் இவர் அறைந்த வில் ஸ்மித்தை சந்திக்கிறார். ஆனால் வில் ஸ்மித்திற்கு இவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. பேச்சு குழந்தை குடும்பம் என்று செல்கிறது. இந்த உரையாடலில் குழந்தையின் மகிழ்ச்சியை விட இந்த உலகத்தில் வேறொன்றும் பெரிதில்லை என்று நம்புகிறார்.

உடனே
நேர்காணலை புறக்கணித்துவிட்டு தன் குழந்தையுடன் பள்ளியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரைகிறார். கடைசி நிமிடத்தில் மேடையில் தோன்றி குழந்தையை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்.

போட்டியில் வெற்றி பெற்ற பின் குழந்தை, தாத்தாவுடனே இருக்கப்போகிறோமா என்று கேட்க, ஆலிவரும் ஆமாம் என்கிறார்.

மகள்- " உனக்கு அந்த வேலை அவ்வளவு பிடித்தமான ஒன்றென்றால் அதை ஏன் ஏற்கவில்லை'.

ஆலிவர்-
எனக்கு அந்த வேலை பிடித்தமானது தான்.. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் வாழ்க்கையில் உனக்கு அப்பாவாக இருப்பதில் மட்டும் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்"

ஆலிவரின் இந்த பதில் தான் எனக்கு இந்த பதிவை எழுத தூண்டியது.


நியூயார்க் நகருக்கு தான் செல்லுவதாக மகன் கூறியதும்..தானும் அவர்கள் கூட வருவதாக ஆலிவரின் தந்தை கூறுவார். அந்த உரையாடல்..............

ஆலிவர்-அப்பா நீங்க கடைசி காலத்தில் தனியாக இருக்க விரும்பவீ்ங்கன்னு நினச்சேன்.

அப்பா - இருக்கலாம், அதே சமயம் நான் தனியாக சாக விரும்பவில்லை