Sunday, December 10, 2006

மனித உரிமை நாள்


வறுமையால் செத்துக்கொண்டிருக்கும் சக மனிதனை காப்பாற்ற செலவு செய்யும் பணத்தைவிட எதிராளி நாட்டின் படைவீரனை கொல்ல அதிக பணத்தை செலவு செய்யும் உலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...


மனித வளத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருக்கும் முக்கிய காரணி
வறுமை.


வறுமையின் கொடுமையால் பாலியல் தொழிலில் குழந்தைகள்...கொடுமையின் உச்சம்


இன்று மனித உரிமை நாள்.


எல்லா வகையான மனித உரிமை மீறலுக்கும் அடிப்படை காரணி வறுமை.


1996 ஐ முதற்கொண்டு 2015 ஐ இலக்காக நிர்னயித்து, தலை விரித்து ஆடும் வறுமையை பாதியாக குறைக்க உலக நாடுகள் உறுதி எடுத்திருக்கின்றன. இதற்கான முயற்சிகளும் திட்டங்களும் நடந்து கொண்டிருந்தாலும், இது எந்த அளவுக்கு போதுமானதாக இருக்கிறதென்று நம் கண் முன்னே நடக்கும் மனித உரிமை மீறல்களை பார்த்தாலே நமக்கு புரியும்..

Saturday, December 09, 2006

கடவுள்

Place your mouse on the E below and drag to the U.

E ven though you can't see Him, GOD i s there for yoU

Tuesday, December 05, 2006

வாழ்க்கை இதோ இதோ.....


Email Forward ல வந்தது


How to Live Life

Be Calm...Quiet...Tranquil


Bloom Often as often as you Can
Stay close to your Family
Explore the family around you
Enjoy the rlaxing rhythm of Waves
Watch the Moon rise
Spread the Wings and Take Off of Your Own
Then enjoy the comfort of comming home again
Life is Short


Enjoy these Little Pleasures

Friday, December 01, 2006

Stop AIDS, Keep the promise


உடம்பில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மனிதனை பல் வேறு இன்னல்களுக்கு ஆளாக்கும் உயிர்கொல்லி நோய் இவ்வுலகில் பிறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. பின்னாளில் எய்ட்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த நோய், மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, ஒரு நாட்டின் வளர்ச்சித்திட்டத்தில் பங்கு பெறும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சவாலாக இருந்து வருகிறது. இன்று உலகில் 39.5 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் 95% பேர் வளரும் நாடுகளில் இருப்பவர்கள். இவர்களில் சரி பாதிபேர் 25 வயதிலேயே எச்ஐவி பாதிப்பிக்கு ஆளாகி.. பிறகு எய்ட்ஸ் என்னும் பல வித சந்தர்ப்ப வாத நோய்களின் பாதிப்பால் 35 வயதில் இறந்து போகிறார்கள்.
இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப்படுள்ளனர் என்று UNAIDS நிருவனம் கூறுகிறது. இதில் 37 சதவீதம் பேர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்தியாவில், தமிழ் நாட்டில் தான் எச்ஐவியால் பாதிக்கபட்டவர்கள் அதிமாக இருக்கிறார்கள்

1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் ஒன்றாம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாக வைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்ற வருடம் முதற்கொண்டு 2010 வரை ' Stop AIDS, Keep the promise' என்னும் கருப்பொருளே அனைத்து நடவடிக்கைகளுக்கும் மையமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டள்ளது.சமுதாயத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எச்ஐவி தடுப்பு பணியில் இருக்கும் கடமையை நினைவு கூறும் விதமாக இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில கடமைகள்...

எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களையும், ஆதாரமான செய்திகளையும் தெரிந்துகொள்ளுதல்.

எச்ஐவி தாக்கிய சக மனிதர்கள் குறித்து இந்த சமூகம் ஏற்படுத்தும் கறைகளயும் ஒதுக்குதலையும் மாற்ற நம்மால் இயன்றதை செய்தல்.

உரிமைகள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுதல்

எய்ட்ஸ் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள சமுதாயத்தையும் சமூக கருத்துக்களையும் அறவே அகற்ற நம்மால் இயன்ற வரை பாடுதல்.

எச்ஐவி தடுப்புப் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளல்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை விட ஆதரவு தேவை. அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்து அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியானதொரு வாழ்வை அளித்தல்.
நம் அனைவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது...
தமிழ்நாட்டில் எச் ஐவி/ எய்ட்ஸ்
3.4 லட்சம் பேர் பாதிக்கப்படுள்ளார்கள்... ஆனால் ஆவணங்களில் 1.2 லட்சம் பேரே பட்டியலில் உள்ளனர். தமிழ்நாட்டின் பங்கு இதில அதிகமாக தெரிந்தாலும், இதற்கு காரணம், இங்கு முறையாக நடக்கும் surveillance system, திறமயான முறையில் நடத்தப்படும் விழிப்புணர்ச்சி நடவ்டிக்கைகள், மேலும் நேர்மையான முறையில் கொண்டு செல்லப்படும் பொது சுகாதார திட்டங்கள்.
இந்த வகையில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக கருதப்படுகிறது.

Monday, November 27, 2006

கர்வா ச்ச்வுத் அன்னைக்கு நம்ம சவுத்:-)

கர்வா ச்சவுத் பற்றி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த கர்வா ச்சவுத் அன்னைக்கு நம்ம சவுத் பெண்கள் (என்னையும் சேர்த்து தான்) பண்ண ஒரு கூத்த சொல்றேன்.

கர்வா ச்சவுத் பத்தி எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள். கணவன் நல்லா இருக்கனும்னு கார்திக் மாசத்தின் நாளாவது நாள் பெண்கள் விரதம் அனுசரிச்சு, பல வித பலகாரங்கள் பண்ணி, தங்களை நல்லா அலங்கரிச்சு, பூஜை எல்லாம் செய்து கொண்டாடற நாள். தமிழ்நாட்டில கடைபிடிக்கும் வரலக்ஷ்மி பூஜை, காரடையான் நோன்பு மாதிரி தான். கர்வா னா சின்ன மண் பானை. ச்ச்வுத் னா 4 (chaar-4). சின்ன அலங்கரிங்கப்பட்ட மண் சட்டியில பெண்கள் உபயோகப் படுத்தும் பொட்டு, வளையல், சிலர் ரிப்பன்,, இப்ப எல்லாம் லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ், ஐ லைனர் எல்லாம் போட்டு மற்ற பெண்களுக்கு கொடுப்பாங்க. மதியம், வயசில பெரியவங்க யாராவது கர்வா ச்சவுத் கதைய சொல்ல, அதை மத்தவங்க சுத்தி உட்கார்ந்து கேட்கிறது வழக்கம்.

நம்ம வீட்டுக்கு கீழ வீட்டுல ஒரு பஞ்சாபி குடும்பம் இருக்கு. அங்க ஒரு பாட்டி,நம்ம மேல ஒரே லவ்வோ லவ்வு. அன்பு காட்றதிலேயும், அதட்றதுலேயும், ஆதரவு காட்டுறதலேயும், பக்கத்தில மாமியார் இல்லாத குறைய தீர்துட்டு இருக்காங்க.. :-))

போன கர்வா ச்சவுத்துக்கே என்னையும் விரதம் இருக்க சொல்லி வற்புறுத்தல். ஆனா நான் இருக்கலை. பூஜையில மட்டும் கலந்திட்டேன். இந்த முறை விடமாட்டேன்னு ஒரே நச்சு பண்ணி விரதம் இருக்க வச்சாங்க.. பக்கத்தில காரைக்குடியை சேர்ந்த பெண்ணையும், பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணையும் சேர்த்து விரதம் அனுசரிக்க வச்சுட்டாங்க. இதுல காரைக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 3 மாசம் தான் ஆகியிருக்கு. அதனால அந்த பெண் ரொம்ப sincereஆ விரதம் இருந்து பாட்டி கிட்ட என்ன எல்லாம் பண்ணனும்னு கேட்டு ஒரே களேபரம்.

பூஜை எல்லாம் முடிஞ்சு, பரிசு எல்லாம் பரிமாறினதுக்கு அப்புறம் தான் climax. பூஜைக்கு அப்புறம் விரதத்த முடிக்க நிலாவ சல்லடை வழியா பார்த்து, கணவன் கால்ல விழுந்து கும்பிடனும். இது எல்லாம் நமக்கு ஆகுற காரியமா... அங்க இருந்த வடஇந்திய பெண்கள் லைன்னா கால்ல விழுந்து கும்பிட்டாச்சு.. நாங்க மட்டும் நின்னுட்டு இருந்தோம்... புதுப்பெண்.. 'இது எல்லாம் நாங்க பண்ணமாட்டோம். எங்களுக்கு பழக்கமில்லைனு சொல்லீட்டு ஒடீருச்சு... அப்புறம் நம்ம ஆளு, பாட்டி கிட்ட, "பாட்டி இன்னைக்கு ஒரு நாளைக்கு அவங்கள எங்க கால்ல விழ வச்சுறுவீங்க.... அதுக்கப்புறம்?...எதுக்கு ரிஸ்க்..., இது எல்லாம் வேண்டாம்னு ஜோக் அடிச்சு..எங்களை காப்பாத்தீட்டார்.பாட்டி அப்ப என்னை ஒரு லுக்கு விட்டது பாருங்க..மறக்க முடியாது...அந்தப்பக்கம் திரும்பிட்டேன்..

அதுக்கப்புறம் பாட்டு பாடற டைம்...அப்ப நம்ம புது மாப்பிள்ளை என்கிட்ட வந்து, "என்னங்க! நீங்களாவது அவள அந்த பாட்ட பாட வேனாம்னு சொல்லாம பேசாம உக்கார்ந்துட்டு இருக்கீங்க, எல்லாரும் plan பண்ணிதான் பண்றீங்களா, மானம் போகப் போகுது விளையாடாதீங்கன்னு சொல்லீட்டு போயிட்டார்..மேலும் அவர் அவகிட்டே பாடவேண்டாம்னு சொல்லி பார்த்தார். அவ காதில போட்டுக்கலை...நான் கண்டிப்பா பாடியே ஆவேன்னு ஒரே பிடிவாதம்.... அப்படி என்ன பாட்டு பாட போறான்னு கேக்க ஆவலா இருந்தோம். அப்புறம் அது பாடுச்சு பாருங்க பாட்டு.. 'வசீகரா' ன்னு ஆரம்பிச்சு நிறுத்தவே இல்லை... தமிழ்ல தான் பாடுச்சு...இருந்தாலும் இந்த பாட்டு இந்தியிலேயும் இருக்கிறதுனால பாட்டிய தவிர மத்தவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருச்சு...எல்லாருக்கு ஒரே சிரிப்பு..நல்ல வேளை பாட்டிக்கு சினிமா பாட்ட பத்தி ஒன்னும் தெரியாததுனால தப்பிச்சோம்...

புதுமாப்பிள்ளைக்கு வெக்கம், தர்மசங்கடம் எல்லாம்... அடுத்த நாள் அந்த பெண், "இது அவங்களுக்கான பூஜை தானே, அதனால தான் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பாட்ட பாடினேன்" சொல்லி ஒரே சந்தோஷ மழை....

ஹ்ம்ம்ம்..எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி.. மறக்க முடியாத சம்பவம்...

இதுல மற்றொரு பெண் பாடின பாட்ட நீங்களும் கேட்கனும்...எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. 'காந்தான்' படத்தில நூத்தன் பாடற பாட்டு... (நம்ம பாழும் பழமும் படம் தான், தங்கத்தில ஒரு குறையிருந்தாலும் பாட்டு..) இந்தியில லதா மங்கேஷ்கரின் காந்தக்குரல் தான் இந்த பாட்டுக்கு முத்தாரம்.

நீங்களும் கீழ இருக்க சுட்டிய க்ளிக்கி கேட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு...

Tuesday, November 21, 2006

சில நேரங்கள்...சில மனிதர்கள்

இன்னைக்கு எச்ஐவி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைக்கிற மாதிரி நிதியுதவி வேற எந்த சமுதாய பணிகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனா இது நியாயமா பாதிக்கப்பட்டவங்களுக்குப் போய்ச் சேருதாங்கறது சர்ச்சைக்குரிய விஷயம்.

கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி, National Professional Social Workers Association ம் அமெரிக்க தூதரகமும் இணைந்து அகில அளவில HIV/AIDS குறித்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. MSW படிச்சவங்க எல்லாரும் சேர்ந்து தொடங்கின இந்த அசோசியன்ல நானும் ஒரு நாம்கே வாஸ்தா மெம்பர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில இருக்கும் ஒரு பேராசிரியர், நான் மற்றும் இப்ப நான் ஈடுபட்டிறுக்கிற ஒரு திட்டத்தில (Project Prathibha- Engaging Women of Faith) இருக்கும் partners எல்லாரும் சேர்ந்து இந்த கருத்தரங்க்கில ஒரு பேப்பர் பிரசன்ட் பண்ணோம்.

மத நல்லிணகத்த (Inter Faith Concept) அடிப்படையா வச்சு செயல்படுத்துற இந்த திட்டத்தின் நோக்கம் ,ஆன்மீகத் தொண்டில் தம்மை அர்பணித்த பெண்கள், அவர்கள் எந்த மதமாய் இருந்தாலும் சரி அவங்க மூலமா எச்ஐவி பற்றிய விழிப்புணர்வ ஏற்படுத்திறதுதான். சமுதாயத்தில இருக்கிற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகள் அதிகபட்ச வெற்றியை அடைய முடியும். இத கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


அமிர்தானந்தமாயி, பிரம்மகுமாரிகள், பஹாய், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், ஆர்ய சமாஜ், இந்து, சமண மதப்பெண்கள், Gandhi Peace Foundation ல இருக்கிற பெண்கள் என, எல்லாரும் ஆதரவா இருக்காங்க. UNICEF உதவியுடன் சுமார் 500 பெண்களுக்கு அவங்க நடத்திற பிரார்த்தனை கூட்டத்தில HIV பற்றிய விழிப்புணர்வ ஏற்படுத்த பயிற்சி கொடுக்க திட்டம்.இந்த திட்டம் ஆசியாவிலேயே இது வரைக்கும் யாரும் செயல் படுத்தாத திட்டம்.

கிறிஸ்தவ மதத்திலுருந்து சர்ச் ஆப் நார்த் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண், அவங்களா விருப்பபட்டு வர்ரேன்னு சொல்ல அவங்க பேச்சுத்திறனை பற்றி அறிந்து அவங்களையும் சேர்த்தோம்.அவங்க பேர் பதிவு செஞ்ச அடுத்த நாளே கருத்தரங்க ஒருங்கினைப்பாளர் என்ன கூப்பிட்டு, 'சர்ச் ஆப் நார்த் இந்தியா' பெண்ணுக்கு அவ்வளவு அனுபவம் இல்லை வேறயாராவது சேர்த்துக்குங்கன்னு சொல்ல, நான் அடுத்த நாள் சொல்றேன்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது ஒருங்கினைபாளரும் அவரோட இருக்கும் மற்றவர்களும் கத்தோலிக்கர்கள்,சர்ச் ஆப் நார்த் இந்தியாவோ பிரோட்டஸ்டான்ட் பிரிவ சேர்ந்ததுன்னு.

பேசப்போற விஷயமே மத நல்லிணகத்த அடிப்படையா வெச்சு செயல்படுத்தும் ஒரு திட்டத்தை பற்றி. அதனாலேயே எங்களுக்கு இந்த அழைப்பும் விடப்பட்டது. ஆனா அழைப்பு விடுத்த அவங்களே இப்படி ஒரு பிரச்சனைய ஏற்படுத்துனது அதிர்ச்சியா இருந்தது.ஆனா கடைசியில அந்த பெண் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால அவருக்கு பதிலா Catholic Bishop Conference ல களப்பணியாளரா இருக்கும் திரு.ஜேம்ஸ் என்பவரை சேர்த்தோம். மறுபடியும் ஒருங்கினப்பாளரின் தலையீடு. புதுசா குழுவில சேர்ந்தவர் களப்பணியாளர் தான் அவருக்கு எல்லாம் கருத்தரங்கில பேச அனுமதி கொடுக்க முடியாதுன்னு சொல்ல,நான் முடிவா அவர் தான் பேசுவார்னு சொல்லீட்டேன். பேசறதுல ஏதாவது தப்பு இருந்தா கேள்வி பதில் பகுதியில பார்த்துக்கலாம்னு அடிச்சு விட்டேன்.

HIV/AIDS தடுப்பு பணியில களப்பணியாளர்களின் அனுபவப் பகிர்தல் தான் ரொம்ப முக்கியம். இந்த கோணத்தில பார்க்காம முதுநிலை பட்டம், டாக்டர் பட்டம் வாங்கினவுங்க தான் பேசனும்னு சொல்றத எங்களால ஏத்துக்க முடியலை.மற்ற தலைப்புகளுக்கு அவர் சொல்றது சரியாக இருக்கலாம். ஆனா எச்ஐவி எய்ட்ஸ் பற்றி பேச களப்பணியாளர் கண்டிப்பா வேனும்னு சொல்லி புரிய வச்சோம்.மேலும் பேசப் போற விஷயத்திலேயும் அவர் அவரோட (கத்தோலிக்கர்களின்) கருத்துக்களை சேர்த்துக்க சொல்லி வற்புறுத்தினார். ஆணுறை பற்றி பேசக் கூடாது, ஓரிணச்சேர்க்கையை பற்றி பேசக்கூடாதுன்னு பல கட்டுப்பாடுகள் போட்டார். நாங்க எதையும் ஏத்துகலை. இது எல்லாம் இல்லாம எய்ட்ஸ் பற்றி பேச முடியாதுன்னு சொல்லி கருத்தரங்கத்தில சந்திக்கலாம்னு ஒரே போடா போட்டேன்.

பதட்டத்தோட கருத்தரங்கில பேசி முடிச்சோம்.ஆனா எதிர் பார்த்ததை விட சிறப்பாவே வந்துச்சு. நிறைய கேள்விகள். களப்பணியாளர் தான் பார்வையாளர்களின் பல சந்தேகங்கள தீர்த்து வச்சார்.3 நாள் நடந்த இந்த கருத்தரங்கில எங்க presentation தான் சிறப்பா இருந்துச்சுன்னு அறிவிச்சப்போ..ஹம்ம்ம்.. ஒரு மாசமா இருந்த பதட்டம் எல்லாம் போயே போச்.....பின்ன இருக்காதா, வாழ்க்கையில முதல் முறையா முதல் பரிசு வாங்கியிருக்கேனே.. :-))) ... களப்பணியாளருக்கு சிறப்பு பரிசும் கொடுத்தாங்க. . ஒரு பெரிய பெரு மூச்சு விட்டுட்டு, தாமஸ போய் பார்த்து நாலு வார்த்தை கேக்கனும்னு தேடினேன். ஆள் தட்டுப்படவே இல்லை.


மற்ற சமுதாய பணிகளை விட எய்ட்ஸ் தடுப்பு பணிகள், அனுபவ பகிர்தல மையமா வச்சு,பாதிக்கபட்டவங்களின் ஈடுபாட்டோட செயல்படுத்தினாதான் அந்த முயற்சி முழுமை அடையும். எச்ஐவியால பாதிக்கபட்டவங்களை கருத்தரங்கில சேர்த்துக்கறதுக்கும் அவர் அனுமதி தரலை.உண்மையா அர்ப்பணிப்புடன் திட்டங்ளை செயல் படுத்தீட்டு வர எத்தனையோ நிறுவனங்கள் நிதி உதவி கிடைக்காம, தத்தளிச்சுட்டு இருக்கு. எயிட்ஸ் நோய் பாதிப்பு காரணமா பெற்றோரை இழந்த சிறார்கள், கணவனை இழந்த பெண்கள் என, மருத்துவ செலவு செய்ய முடியாம அவதிபடறவுங்க ஏராளம்.


ஆனா வருடா வருடம் இத்தன அமர்களத்தோட கருத்தரங்கம் நடத்துரவுங்க குறைந்தபட்சம் பாதிக்கபட்டவங்களையும் கலந்துக்க வச்சு அவர்களின் எதிர்பார்பையும், இன்னல்களையும் பகிர்ந்துக்கவாவது அனுமதிக்கலாம். இந்த கருத்திரங்க்கின் நோக்கம் அல்லது கருத்திரங்கின் மூலமா அவங்க எதிர்பார்க்கும் output end result என்னன்னு யாருக்கும் தெரியலை.


MSW பாடதிட்டத்தில HIV சம்பந்தமான பகுதிகளை சேர்ப்பதை பற்றி விவாதிப்பது தான் எங்கள் நோக்கம் அடிச்சு விட்டார் தாமஸ். அதுக்கு இவ்ளோவ் செலவுபண்ணி அகில இந்திய அளவில கருத்தரங்கு நடத்தனுமா?, தேவையில்லையேஅனுபவம் மிக்க பேராசிரியர்கள் பத்து பேர கூப்பிட்டு ஒரு அறையில, கலந்துரையாடல்ல முடிச்சிருக்கலாமே. எச்ஐவி கருத்தரங்கம்னு பேரு வச்சாதான் நிதி வரும். அது தான் உண்மை.அதுக்காக நிதிய வாங்கி நாட்டில மூலை முடுக்கில இருக்கவங்கள எல்லாம் கூப்டு 5 ஸ்டார் ஓட்டல்ல தங்கும் வசதி கொடுத்து தில்லிய சுத்திக் காமிச்சுட்டு இருக்காங்க.


இதைவிட கேவலம் வேறெதுவும் இருக்கமுடியாது.

Saturday, November 11, 2006

திருநெல்வேலி குசும்பு and Monkey Matters

இங்க எங்க கல்லூரியில திருநெல்வேலிகாரர் ஒருத்தர் ஆயுர்வேதத்தில எதோ ஆராய்ச்சி பண்ணீட்டு இருக்கார். வயசில மூத்தவர்,ரொம்ப நகைச்சுவையா பேசுவார். கிண்டலும் கேலியுமா அவர் பேசறது இங்க ரொம்ப பிரபலம். அதுவும் இந்த சர்தார்ஜி மற்றும் பீஹாரீஸ் சிக்கினா அவருக்கு கொண்டாட்டம்தான். மனுசன் யார பத்தியும் எத பத்தியும், கவலப்படாம பின்னி எடுத்துருவார்.

போன செவ்வாய்கிழமை, விரிவுரையாளர் ஒருத்தர் வேகமா எங்கிட்ட வந்து "இருந்தாலும் சீதாராமன் ரொம்ப கின்டல் பன்றார். சொல்லி வைய்ங்க" னு சொலீட்டு, விவரம் எதுவும் சொல்லாம கோவமா சாமியாடிட்டு போய்ட்டார்.ஆஹா நம்ம ஆள் எதோ வாயடிச்சிருபார்னு தோனிச்சு. உடனே அவர ஃபோன்ல கூப்ட்டு "சார் ஜீதெந்தர் கோவமா போறார், என்ன ஆச்சுன்னு" கேட்டேன். அதுக்கு அவர் சாகவாசமா"அந்த பய அங்குட்டு வந்து சொல்றத எங்கிடயே சொல்லாம்ல...முட்டாப் பய' னார். அப்பிடி என்னதான் சொன்னீங்கன்னு கேட்டேன். எல்லாம் Monkey Matters தான், வேற ஒன்னும் இல்லைன்னு சொலீட்டு ஃபோன வைச்சிட்டார். எனக்கோ ஒன்னும் புரியலை, இருந்தாலும் நமக்கு எதுக்கு வம்புன்னு அந்த விரிவுரையாளர்ட்ட நான் ஒன்னும் கேட்டுக்கலை.

ஆனா நம்ம ஆளு விடுவாரா?.. அடுத்த நாள் மீண்டும் போன் பண்ணி என்ன சொன்னான் அந்த மடையன் னு கேட்டார். சார் உங்க விளையாட்டுக்கு நான் வரலை ...அவர்ட்ட நான் ஒன்னும் கேக்கலைனேன்.

அது எப்படி உன்ன விட முடியும். இன்னைக்கு பேப்பர்ரல முதல் பக்கத்தில நியூஸ் படின்னார்.

தில்லியில குரங்குகள் அட்டகாசம் பற்றி போட்டிருந்தாங்க. படிச்சியானு கேடுட்டு " இன்னைக்கு என் கார் சர்வீசுக்கு விட்டுருந்தேன். இந்த பயல என் கூட கொஞ்சம் மினிஸ்ட்ரி வரைக்கும் வர முடியுமானு கேட்டா, எனக்கு வேலை இருக்குனு சொல்றான். அப்பிடி என்னதான் வேலை செய்றான்னு பார்த்தா பொழுதன்னிக்கும் ஸ்டூண்ட்ஸ் கிட்ட கடலை போடுட்டு இருக்கான்.

இது என்ன சார் அநியாயம், வர்ரதும் வராததும் அவர் விருப்பம்தானேன்னு சொன்னேன்.நான் போறதே அவன் டிபார்ட்மெட்ன்ட் வேலையாதான்,அதான் டென்ஷன்ல அப்பிடி சொன்னேன்,அதுவும் அவன் சம்சாரத்துக்கு முன்னாடி தான் சொன்னேன். அவளுக்கு நான் அப்படி சொன்னதுல ஒரே சந்தோஷம். நீ வேனா அவகிட்ட கேட்டுப்பார்னு வேற பெருமை பேசினார். ஜிதேந்தர் மனைவி பெங்காலி. ஜீதெந்தர் பஞ்சாபி. அதானால அந்த பொண்ண நம்ம ஆளு அவர் கட்சியில சேர்த்துட்டு அலும்பு பண்ணீட்டு இருக்கார்.

தில்லியில குரங்குகள் அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தியானதுனால, அரசு ஒரு முறை 300 குரங்குகளை பிடிச்சு மத்தியப்பிரதேசத்துல இருக்குற காட்டுக்கு அனுபிச்சாங்க. இப்ப மீண்டும் குரங்குகளின் எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தியானதுனால, மத்தியப்பிரதேசத்துக்கு குரங்குகளை அனுப்ப சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. ஆனா மத்தியப்பிரதேச அரசாங்கமும், வனத்துறை அதிகாரிங்களும் தில்லி குரங்குகள் ரொம்ப லொல்லு பன்னுதுக, சமாளிக்க முடியலைனு அதுனால குரங்குகளை அனுப்பவேண்டாம்னு சொல்லிட்டாங்க.

சரி நம்ம ஆள் இதுக்கு என்ன சொன்னார்னு பார்போம்.அந்த விரிவுரையாளர் வரலைன்னு சொன்னதுனால இவர் கோவத்தில அவர் கிட்ட " யோவ், அதான் மத்தியப்பிரதேச அரசாங்கம் தில்லி குரங்குகள வேண்டாம்னு சொலீடுச்சில்ல, அதனால நீ தைரியமா வெளியே வரலாம், உன்னை யாரும் பிடிக்க மாட்டாங்கன்னு சொல்லி வெறுப்பேத்தியிருக்கார். பாவம் அந்த மனுசன் நொந்து போய்ட்டார். நம்ம ஆள பத்தி எல்லார்க்கும் தெரிஞ்சதுனால இவரும் நேர்ல ஒன்னும் காட்டிக்கில.. சிரிச்சுட்டே பேசாம இருந்து இருந்துட்டு இங்க வந்து புலம்பீட்டு போய்ட்டார்.

ஆனா இங்க இந்த குரங்கு தொந்தரவு ரொம்ப ஜாஸ்தி தான் (படத்த பார்த்தா தெரியும்). ராமாயணப் போர்ல வாணரப் படைகள் வர்ர மாதிரி படை படையா வருதுக. இப்ப மத்தியப்பிரதேச அரசாங்கம் வேண்டாம்னு சொன்னதுனால குரங்குகள தெஜிகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்களாம். குரங்குகள் எண்ணிக்கை அதிகம் ஆனதுனால எல்லா மாநில அரசையும் குரங்குகளை தத்து எடுத்துக்க சொல்லி கேட்டுட்டு இருக்காங்க. ஆனா தில்லி குரங்குகளை தத்து எடுக்க எந்த மாநில அரசும் முன் வரலை.

:-))))

Monday, November 06, 2006

தவிக்கும் தலித்துகள்


ஊர்புறங்களில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளின் தாக்கமோ,வலியோ நம்மைப்போன்ற பெரும்பாலான நகரவாசிகளுக்கு தெரிவதில்லை.ஒருசில தலித்துகளின் வெற்றியையும்,முன்னேற்றங்களையும் மட்டுமே அறிந்திருக்கும் நாம் பெரும்பாலானவர்களின் நிஜத்தை எளிதாக மறந்துவிடுகிறோம் என்பதுதான் உண்மை.அரசு மற்றும் உடகங்களினால் இவர்களது துயரங்கள் வெளிஉலகிற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான் கொடுமமயின் உச்சம்.பல இடங்களில் இன்றைக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே தொடர்வதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?.

பீஹார் 'போஜ்பூர்' மாவட்டத்தில், தலித் வகுப்பைச் சேர்ந்த 60 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரான சுகர் ராம் என்கிற பஞ்சாயத்து தலைவர், நாற்காலியில்' உட்கார்ந்து ஊர் கூட்டத்தை நடத்தியதற்காகவே தாக்கப்பட்டுள்ளார்.வறுமைக் கோட்டிற்கு கீழிருக்கும் ஊர்மக்களின் பட்டியலை சரிபார்ப்பதற்காக நடந்த கூட்டத்தில், உயர் சாதியை சேர்ந்த சிலர், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த்த சுகர் ராமை வாய்க்கு வந்த படி "சாலா! துசத் ஹோகர் குர்சி பர் பைடேகா?... ( என்ன தைரியமிருந்தால் தலித் வகுப்பை சேர்ந்த நீ நாற்காலியில் உட்காருவாய்?.. ) பேசி, அடித்தும் இருக்கிறார்கள்.இது பற்றி போலீசில் புகார் கொடுத்தபோது புகாரை மட்டும் வாங்கிக்கொண்டு, FIR பதிவு செய்ய மறுத்து விட்டனர் அங்கு இருந்த அதிகாரிகள்.

மொத்தமுள்ள 2100 வோட்டில் 475 வோட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ள போதும், பஞ்சாய்த்து போர்டில் உயர்சாதியினரே அதிகம் இருப்பதால் தனக்கு அங்கு பாதுகாப்பில்லை என்கிறார் சுகர்ராம். ஆனால் இந்த தாக்குதலை நியாயப்படுத்த மேல் சாதியினர், 'வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மக்களின் பட்டியலில் உயர் சாதியினரை சேர்க்க மறுத்ததினால்தான் அடித்தோம்' என்று கதை கட்டுகின்றனர்.

நாடெங்கும் நாள்தோறும் இதுமாதிரியான எத்தனையோ அடக்குமுறைகளும், அவமானங்களும் நடந்துவருவது வேதனையானது.இதைத் தடுக்க அரசோ,அல்லது தலித் மக்களின் காவலர்கள் எனக்கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளோ உருப்படியாக எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல் வெறும் வார்த்தைஜாலங்களினால் ஓட்டு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.காலம்காலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இச்சமூகத்திற்கு என்று தான் விடிவு காலம் வருமோ தெரியவில்லை.

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இத்தகைய இழிசெயல்கள் தொடர்வது ஒவ்வொரு இந்தியனுக்குமே அவமானமில்லையா?.தாயகத்திற்கு ஒன்று என்றால் எவ்வித பாகுபாடின்றி தோளோடு தோள் நிற்கும் இந்தியர்கள் தன் சக மனிதன் மீது அக்கறையின்றி இருப்பது வேதனையானது.ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளும் சமுதாயத்தை உருவாக்க அம்பேத்கார்களும், பெரியார்களும் வந்துதான் நமக்கு உணர்த்த வேண்டுமென்பதில்லை.நீங்களும் நானும் சேர்ந்தாலே செய்யமுடியும்.

செய்யவேண்டும்.

Sunday, October 01, 2006

Growing Old....

''அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்''
மருத்துவ துறையின் முன்னேற்றத்தாலும், ஆராய்ச்சியின் பயனாகவும், மனிதனின் ஆயுட்காலம் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. முப்பது களில் 32 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் இன்று 64 ஆக உயர்ந்திருப்பது, இந்த நூற்றான்டின் ஒரு சாதனை. ஆனால் ஆயுட்காலம் அதிகரித்தால் மட்டும் போதுமா?
இந்த அவசர உலகத்தில, வேலை வாய்ப்பு, குழந்தைகளின் படிப்பு, வசதி வாய்ப்பு போன்ற காரணங்களால சொந்த ஊர விட்டு, அப்பா அம்மாவ விட்டு வேற ஒரு இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் நம்மில் பல பேருக்கு இருக்கு. புதிய சூழ்நிலையில நாம செய்யற சில compromises அவங்ககளால செய்ய முடியறது இல்லை.ஒரே ஊர்ல இருந்தாலும், குறைந்து கொண்டே இருக்கும் சகிப்புத்தன்மை இன்னிக்கு பல முதியோர் இல்லங்கள வளர்த்திருக்கு.
இங்க நான் ஒரு உண்மை சம்பவத்த சொல்றேன்..
ரவி, அவங்க வீட்ல ஒரே பிள்ளை. எங்களுக்கு தெரிந்து அவர் அவரோட அப்பாகிட்ட பேசினது இல்லை. அப்பாக்கு அளவுக்கு அதிகமான முன் கோபம். அம்மா ஒரு பள்ளியில் ஆசிரியை. நல்ல வசதியான குடும்பமானதால, அவங்க அம்மாக்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் இல்லை. ரவிய நல்லா கவனிச்சகனும்னு வேலைய ராஜினமா பண்ணீட்டு வீட்ல இருக்க ஆரம்பிசாங்க. ரவி படிப்ப முடிச்சுட்டு Oreital Insurance ல வேலைக்கு சேர்ந்தார். திருமணம் செய்துட்டு அப்பா அம்மாவோட நல்லா இருந்தார். சென்றமுறை கோவையில வேலை நிமித்தமா ஒரு முதியோர் இல்லத்துக்கு போக வேண்டி இருந்துச்சு. நல்ல வசதியானவங்க இருக்கும்,முதியோர் இல்லம். அங்க ரவியோட அம்மாவ பார்த்தேன். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. "சரிபட்டு வரலை அதனால நானா ஒதுங்கிடேன்னு" சொன்னாங்க.. இங்க எனக்கு எந்த குறையும் இல்லைனும் சொன்னாங்க. இவங்களுக்கே இந்த நிலமைன்னா பேச்சு வார்த்தையே இல்லாம இருந்த அவங்க அப்பா எங்க இருக்கார்னு கேட்டேன்..அதற்கு அந்த தாய்,அவர் ரவி கூட தான் இருக்கார்னு சொன்னாங்க.. அவர் எல்லாத்தையும் சகிச்சுப்பார்.. என்னால முடியாது.. அதனால....இங்க வந்துடேன்னாங்க. என்னால நம்ப முடியலை..
எப்படியாவது ரவியவும் அவங்க அப்பாவையும் பார்கனும்னு அங்க போனேன்..ரவிய பார்த்து, எண்ணண்னா இது அம்மா அங்க இருகாங்க..நல்லாவா இருக்குன்னு கேட்டேன்... வாம்மா தாயே! நீ தான் பாக்கி, இத கேக்குறதுக்குதான் டெல்லியிலிருந்து வந்தியான்னு சலிச்சுட்டு..அம்மா கிட்டே எத்தனையோ சொல்லி பார்த்தேன்.. கேக்கலை னார்.. அவங்க அப்பாவ பார்க்க பயந்திட்டே அவர் அறைக்கு போனேன்.. அவர் சொன்னது தான் இன்னும் என் மசைல அப்பிடியே இருக்கு.. சின்ன வயசில அவனுக்கு அப்பாவா இருந்து நான் ஒன்னும் செய்யலை.. இப்ப பேரக் குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல தாத்தாவா இருக்க ஆசை படறேன்... சில சங்கடங்கள் இருந்தாலும் அது எல்லாம் நான் பெரிசு பண்ண விரும்பலைன்னார்.. அறியா வயசில என்னை அவன் சகிச்சுட்டான்...இந்த வயசில நான் அனுசரிச்சு போகலைன்னா,நான் இருந்து பிரயோஜனம் இல்லைன்னார்.. நல்ல மருமக, துரு துருன்னு பேரக்குழந்த்தைகள்..இது எல்லாத்தையும் விடவா நம்ம கோவமும் பிடிவாதமும் முக்கியம்?..ஆனா சாந்தாக்கு (ரவியின் அம்மா) நாம இத்தன பண்ணோம் நம்ம பேச்சு கேக்கமாடேங்கறான்னு ஒரு கோவம்... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.. அவ நிம்மதியா இருக்கா.. இருக்கட்டும்னு சொன்னார்.. 15 வருடத்திற்கு முன்ன இவர் கிட்ட நாங்க எல்லாம் பேச கூட பயந்துப்போம்.. அவரா இவர்னு ஆச்சிரியமா இருந்துச்சு... இப்பவும் ரவியும் அப்பாவும் அவ்வளவா பேசிக்கிறது இல்லை..ஆனா இரண்டு பேருக்கும் பாசம், பரிவு, மரியாதை இருகுங்கிறத உண்ர்ந்தேன்
ரவி, அவங்க அம்மா, இரண்டு பேர் கிட்டேயும் சகிப்புத்தன்மை இல்லை... பிள்ளைகள் பெரியவர்களான பின் வீட்டு பொறுப்ப அவங்ககிட்ட கொடுக்க சில பெற்றோருக்கு மனசு வருவதில்லை.. பிள்ளைகள், நில புலன்,வீட்டு பொறுப்பு என்று, எல்லாத்து மேலேயும் ஒரு possessiviness.
பிள்ளைகளும் ஒரு முடிவு எடுக்கும்போது மரியாதைக்காகவாவது பெரியவர்களை கேட்கவேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தால் அவர்களும் தாங்கள் தனிமை படுத்தப்பட்டதாக நினைக்க மாட்டார்கள்
இது எல்லாம் இன்னைக்கு எதுக்குன்னு கேக்கறீங்களா
முதியோர்கள் தினம்
Age does not protect some one from love,
but love to some extent protects us from age

Saturday, September 23, 2006

எல்லாரும் படிக்கனும்னா,...

ஒரு பள்ளியில் ஆசிரியருக்காக குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
கடந்த சில ஆண்டுகளில் நம் நாடு கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை கண்டிறிருக்கிறது. இதில் முக்கியமான முன்னேற்றம் என்று சொன்னால், தொடக்கப் பள்ளியில் சேர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது தான். 6-14 வயதுடைய சுமார் 200 மில்லியன் குழந்தைகளில் 80% குழந்தைகள் ஏதாவது ஒரு கல்வி முறையில் (விதிமுறையான-formal அல்லது முறைசாரா-non-formal education) சேர்ந்து படித்து வருகிறார்கள்.

அனால் ஒரு முழுமையான கல்வி தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று கல்வியின் தரம் வேண்டிய அளவு உயரவும் இல்லை, முழுமையாக கடைநிலை மக்களை போய் சேரவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தையும் நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாக அரசு மேற்கொள்ளும் பல் வேறு திட்டங்கள் பயனில்லாமல் போகிறது.

குழந்தைகளின் சேர்க்கை தொடக்க கல்வியில் அதிகரித்திருந்தாலும், இவர்களில் 52% பேருக்கு, 8 ஆம் வகுப்பிற்கு பின்னர் படிப்பை ஏதாவது ஒரு காரணத்தினால் தொடரமுடியாமல் போகிறது. மீதம் இருக்கும் 48% குழந்தைகளின் attendance rate சராசரியாக 75% தான். அரசின் கணக்கெடுப்புப்படி 5ஆம் வகுப்பு வரை தேறும் மாணவர்களில் 28% பேர் தான் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். மற்றவர்களின் கல்வி தரம் கவலை அளிக்ககூடியதாகவே இருக்கிறது. தொண்டு நிறுவணம் ஒன்று மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் மூலம் 7-14 வயதிற்கு உற்பட்ட மாணவர்களில் 35% பேருக்கு பாடத்தில் ஒரு சாதாரண பத்தியை கூட படிக்க முடிவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இத்தனை நிதி ஒதுக்கீடு செய்து, திடங்கள் வகுத்து, அதில் இத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று மார் தட்டி என்ன பயன்.

நம் கல்வியின் தரம் திருப்தியாய் இல்லாததற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வகுப்பில் அளவுக்கு அதிகமான மாணவர்களும் ஆசிரியர் பற்றாக்குறையும் முக்கியமான காரணங்கள்.நம் நாட்டின் சராசரி ஆசிரியர் மாணவன் விகிதம் 40:1 ஆக இருந்தாலும், பீஹார் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 84:1 ஆகவே இருக்கிறது. பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்தாலும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது சில பள்ளிகள்.14% தொடக்க பள்ளிகளும் 3% உயர் தொடக்க பள்ளிகளும் ஒரே ஒரு ஆசிரியிராலேயே நிர்வகித்து நடத்தப்பட்டு வருகிறது.சராசரியாக 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமே பல பள்ளிகள் இயங்கி வருகிறது.இதிலிருந்து அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை. உலக வங்கியும், ஹார்வர்ட் பல்கலைகழகமும் சேர்ந்து நடத்திய ஒரு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, 3700 ( அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி சென்று சோதனை செய்த போது, 20ல் இருந்து 25 சதவீத ஆசிரியர்கள்களே பள்ளியில் இருந்திருக்கிறார்கள். அப்படியே பள்ளிக்கு வந்தாலும், வந்தவர்களில் 20% பேர் பாடம் எடுப்பதில்லையாம்.இதை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

அடிப்படை வசதிகளான குடி தண்ணீர், கழிப்பறைகள் போன்றவை சில பள்ளிகளுக்கு இன்னும் ஒரு கணவாகவே இருந்து வருகிறது. 16% பள்ளிகளில் குடி தண்ணீர் வசதி கூட இல்லாமல் இயங்கி வருகிறது. 51% கழிப்பறைகள் இல்லாமல் இருக்கின்றன. மற்றொரு உண்மை 7% பள்ளிகள் கரும்பலகை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல.

இது போல வசதியின்மை காரணிகளாக இருந்தாலும் போதிய பயிற்சி பெறாத ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் அடிக்க கையில் குச்சியுடன் திரியும் ஆசிரியர்களை நாம் பார்கிறோம்.32% ஆசிரியர்கள் போதிய பயிற்சி இல்லாமலே ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். அடிப்படை பயிற்சி இல்லாத இவர்களிடம் தரமான கற்பித்தலை எவ்வாறு நாம் எதிர்பார்க்கமுடியும்?. உண்மையில் நல்ல திறமையும் ஆர்வமும் உள்ள பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரேமாதிரியான, விறுவிறுப்பில்லாத கற்பித்தல் மாணவர்களை படிப்பில் ஆர்வமில்லாமல் செய்துவிடுகிறது.செயற்திறனும் பயனும் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணலாம்
கல்வித்துறை நிர்வாகத்தில் நிலவும் பொறுபற்ற தன்மை,அலட்சியம் ஆகியவை மாறவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், தகுதியும் ஆர்வமும் மிக்க இளைஞர்களை கொண்டு திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் இந்தியாவின் கல்வித்தறம் உலக அளவில் முதன்மை பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Monday, September 18, 2006

தில்லி புத்தக கண்காட்சி-- :((

தலைநகர் புத்தக கண்காட்சின்னு தலைப்பு பார்த்துட்டு எதோ நான் பெருசா புத்தங்கள வாங்கி அத பத்தி எழுதுறேன்னு நினச்சுட்டு படிக்கறவங்க.. மன்னிச்சுடுங்க...நான் எனக்கு நடந்த ஒரு சோகக்கதைய சொல்லனும்.. எல்லாரும் புத்தகத்த வாங்குனா,, நான் வம்ப விலை குடுத்த வாங்கினேன்..

எல்லாரும் தான் புத்தக கண்காட்சிக்கு போறாங்க , நாமளும் போய் பாத்து, அத பத்தி தமிழ்மணத்துல எழுதனும்னு நினச்சுட்டு சனிக்கிழமை தூக்கத்த தியாகம் செஞ்சுட்டு போனேங்க...(புத்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கான்னு கேக்காதீங்க). .. நான் என் பெண், மற்றும் என் colleague ஒரு பஞ்சாபி பெண் மூனு பேரும் காலை 10 மணிக்கு எல்லாம் பிரகதி மைதானத்துக்கு போய்டோம்.
எங்க கல்லூரியின் புத்தக வெளியீட்டு துறையும் ஒரு ஸ்டால் போட்டிருந்தாங்க, அங்க தாங்க முதல்ல போனேன் .அங்க போனா பாஸ் நின்னுட்டிருந்தார் ..என்னையும் 'May I Help You' card குத்திக்க சொல்லி, கொஞ்ச நேரம் நிக்கவெச்சுட்டார். அது கூட பரவாயில்லைங்க. அவர் போனதும் எஸ்கேப் ஆயிட்டோம்.

அப்ப தாங்க வந்த்துச்சு வம்பு.கூட வேலை செய்யிற சக தோழியோட பெண்ண பார்த்தேன். +2 படிக்கிறா... 'aunty நான் சும்மா வந்தேன். எனக்கு கொஞ்சம் புக்ஸ் பிடிச்சிருக்கு.ஆனா பணம் கொண்டுவரலை.நீங்க குடுங்க aunty, நாளைக்கு அம்மாகிட்ட வாங்கிகோங்களேன்னா. சனிக்கிழமை அவ பிறந்த நாள் வேற . ஆசப்பட்டு கேக்குறான்னு பிறந்தநாள் பரிசா 500 ரூபாய்க்கு புக்ஸ் வாங்கிக்கோனு சொல்லி, ஒரே 1000 ரூபாய் நோட்டா இருந்த்தால, வா நானும் வர்ரேன்னு சொன்னேன். அவ, இல்லை நானே வாங்கிக்குறேன். அது next hall ல இருக்கு.நீங்க இருங்க நான் போய் வாங்கீட்டு வரேன்னு சொலீட்டு பணத்த வாங்கீட்டுபோய்ட்டா. நாங்க பக்கத்துல இருக்கிற சின்மையா மிஷன் ஸ்டால பார்துட்டு, புதுச்சேரியில இருந்து ஒரு நிருவனம் ஸ்டால்ல இருந்தவங்க கூட சந்தோசமா கொஞ்ச நேரம் தமிழ பேசீட்டு, அவளுக்காக காத்துட்டு இருந்தோம். ஒரு மணி நேரம் களிச்சு வந்தாங்க அந்த பொண்ணு.. 800 ரூபாய்க்கு வாங்கிட்டேன் aunty.. sorry னா..பரவாயில்லை... என்ன புக்ஸ் வாங்கினேன்னு கேட்டேன். Creative Writing in English then, வேற கொஞ்சம் புக்ஸ், அது என் பிரென்ட்ஸ் கிட்டே இருக்கு, நாளைக்கு சொல்றேன். லேட்டாயிடுச்சுன்னு சொல்லீட்டு, ஒடியே போய்ட்டா.
கூட இருந்த தோழி 'எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு, இவ என்னமோ பண்ணி இருக்கான்னு' புதுசா ஒரு குண்ட தூக்கி போட்டா. என் பெண் வேற 'அவள பத்தி எனக்கு தான தெரியும்னு' ஒத்து ஊதுனா.பேசாம் இருங்க ரெண்டு பேரும்னு சொல்லி அடக்கி வச்சேன்.

சொன்ன மாதிரி அவ அம்மா கிட்டேயிருந்து போன்.என்ன நீ இப்பிடியெல்லாம் புக்ஸ் வாங்கி குடுத்து இருக்கே, இது தான் நீ குடுக்குற 'Sex education" ஆ ன்னு சொல்லி ஏக வசனம் பேச ஆரம்பிச்சுட்டா... எனக்கு ஒன்னும் புரியலை...அப்புறம் தான் தெறிஞ்சது.. 800 ரூபாய்க்கு ரெண்டு மூனு புக்ஸ் தான் நல்லதா வாங்கி இருக்கா.மத்ததெல்லாம் ஏதோ ரொமான்ஸ் புத்தங்கள வாங்கீட்டு போய்யிருக்கா.. ..ஷிட்னி ஷெல்டன் மட்டும் இல்லாம..அவ வாங்கினதுல ஒரு sample சொல்றேன் பாருங்க.. ' Secret Desires and Fantasies' னு ஒரு புத்தகம். அந்த புத்தகத்த தொடக்கூட எனக்கு கஷ்டமா இருக்குன்னு அழாத குறையா சொன்னா அவங்க அம்மா.மத்ததெல்லாம் பெயர் சொல்லகூட லாயகில்லாத புத்தங்கள். பிறகு நான் சொன்னேன் நான் அவ கூட போகலைன்னு. அந்த பெண் அவ அம்மா கிட்டே 'aunty வாங்கி Birthday present ஆ குடுத்தாங்கன்னு' சொல்லி இருக்கா.
பிறகு என் தோழி எப்படியாவது திருப்பி குடுத்துடுன்னு சொல்ல.. எங்க கல்லூரி ஸ்டால் இருக்கிறதுனால ஏதாவது பண்ணலாம்னு நினச்சுட்டு போனேன். ஆனா அங்க ஆண்கள் தான் இருப்பாங்க. இத போய் அவங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு கஷ்டமா இருந்துச்சு. தைரியத்த வரவச்சிட்டு போனா அங்க மறுபடியும் பாஸ்.. வேற வினையே வேண்டாம்.. பெருசுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.அவர் ரிடையர்ட் மேஜர் ஜெனரல். ஜாடை காமிச்சி ஒருத்தர வெளிய வர சொல்லி எப்படியோ விஷயத்த சொன்னோம். ஒரு மாதிரி சிரிச்சுட்டு சரி நாளைக்கு கொண்டுவாங்க மாத்திக்கலாம்னான். அய்யா ராசா நீ நல்லா இருக்கனும்னு வாழ்த்திட்டு வந்தேன்.

இருந்த காச அவகிட்டே குடுத்துட்டு கடைசியில சில Games CD யும் பெண்ணுக்கு ஏதோ Core Physics புத்தகத்த மட்டும் வாங்கீட்டு வந்த்துட்டோம். என் அலுவலக தோழி இந்த கூத்த மெனக்கெட்டு மத்தவங்களுக்கு போன் பண்ணி சொல்லி.. இப்ப office frends எல்லோரும் aunty எனக்கும் பர்த்டேவருதுன்னு போன் பண்ணீட்டு இருக்காங்க.

இது தேவையாங்க எனக்கு. சனிக்கிழமை கொஞ்ச நேரம் டீவி பார்த்தமா தூங்கினமான்னு இல்லாம.. இது தான் எனக்கும் புத்தகத்துக்கும் ரொம்ப தூஊஊஊஊரம்...

Tuesday, September 12, 2006

தில்லியும் நானும் தமிழும்

தலைநகர் தில்லிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு, என்னத்த சொல்ல நான் இன்னும் இந்த சூழ்நிலைக்கு முழுசா மாறல. இதுல எனக்கு பெருசா வருத்தமில்லை. ரொம்பவே சந்தோசம்னு வேணுன்னா சொல்லிக்கலாம். தனியா ஒரு பெண் இங்கு வந்து குப்பகொட்றது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு தெரிஞ்சும், கிடைச்ச வாய்ப்பை நழுவவிட மனசில்லாம, 'தில்லியில் இல்லாத தமிழர்களா'ன்னு நினைச்சுதான் இங்கன வந்தேன். வந்தப்புறம்தான் தெரிஞ்சது, தலைநகரத் தமிழர்கள் எந்த அளவுக்கு உதவியா(?) இருக்காங்கன்னு.. ஏறத்தாழ ஒரு வருஷம் தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை..

சரி, இப்ப தில்லித் தமிழர்களின் தமிழ்மொழி பற்றை மட்டும் இங்க அலசுவோம்.

பஸ்சுல போறப்போ இறங்க வேண்டிய இடம் தெரியாம, தமிழர்னு தெரிஞ்சு உதவி கேட்டா, பதில் ஒன்னு ஆங்கிலத்துல வரும் இல்லைன்னா இந்தியில சொல்லுவாங்க.... நமக்கு வர்ற ஆத்துரத்துல நல்லா நாலு போடலாமுன்னு தோணும். தாய்மையும் ஊர்பாசம் ஒன்னா தலைதூக்கி தொலையட்டும்னு விட்டுற சொல்லும். ஆனா என் பொண்ணு இப்படியான சந்தர்பங்கள்ள தமிழ்ல எதாவது விவகாரமா திட்னப்புறம் அந்தபக்கம் reaction தமிழ்ல வரும்.

நம்மள மாதிரி புதுசா இறக்குமதி ஆகறவங்கள ஏளனமா பார்க்கிறதும்,முகத்தை திருப்பிக்கறதும் இங்க ரொம்ப சகஜம். நம்மை தெரியாவங்கதான் இப்படின்னா, கல்லூரியில வேலை செய்யிற சகதமிழர்கள் அதைவிட ஒரு படி மேலே, "ஐயோ எதுக்கு இங்க எல்லாம் வந்தீங்க.இங்க adjust பன்றது ரொம்ப கஷ்டம்.. அதுவும் நம்ம ஊர்ல வளர்ந்து பொண்ணுக இந்த cultureக்கு ஒத்து வரமாட்டாங்க."இங்க இருக்குற பொண்ணுக எல்லாம் ரொம்ப modern and stylish. கோயமுத்தூர்ல இருந்துட்டு இங்க எப்படி?...(கோவைய இவங்க பார்த்ததுருக்க கூட வாய்ப்பில்லை)எதுக்கு வீணா ரிஸ்க் எடுக்குறே, வேண்டாம்..... பொண்ண இங்க கூட்டீட்டு வரவேண்டாம்னு" ஒரே brain washing.. இந்த CBSE Syllabus படிக்கிறதும் கஷ்டம்.. பேசாம உங்க ஊரிலேயே எதாவது ஹாஸ்டலில் விட்டுறுன்னு" ஆளாளுக்கு advice வேறு.. எதோ நம்ம மேல ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி..


இதையெல்லாம் என் பெண்ணிடம் சொல்லப்போக அவளும் முதல்ல பயந்துட்டா!.. அனால் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே அவள் சொன்னது எனக்கு வியப்பா இருந்துச்சு.."என்னம்மா எந்த subject லேயும் யாருக்கும் basics கூட தெரியவில்லை.. இதுக்கு போயி நீ அந்த அலட்டு அலட்டுனே".,எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இத்தனைக்கும் அந்த பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு,நம்ம ஊரின் கல்வித்தரம் பத்தி பெருமயா உணர்ந்த தருணம் அது.

இந்த பதிவ எழுத ஆரம்பிச்ச பின் நடந்த Intresting matter ஒன்ணு.. என் பொண்ணு வகுப்பில ஒரு தமிழ் பெண்... இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்.. school prayer ல ஒவ்வொரு வாரமும், ஒரு வகுப்பு பிரார்த்தனை பாடல் பாடவேண்டும்.. இந்த 'நலம் விரும்பி' யாருக்கும் தெரியாமல் வகுப்பு ஆசிரியிரிடம் போய் இன்றைக்கு, என் பெண்ணோட பேர் சொல்லி , 'இவ இன்னைக்கு Prayer Song பாடுவான்னு' சொல்ல, அதையும் அறிவிச்சுட்டாங்க. அந்த நலம் விரும்பியும் சக மாணவிகளும் சேர்ந்து இவ முகம் போற போக்க பார்த்து சிரிச்சுட்டு இருந்திருக்காங்க.. இவ உடனே சமாளிச்சுட்டு, நாங்க கோவை நிறுவணத்துல எப்போதும் பாடற பாட்டு நினைவுக்க வர மேடையேறி பாடி முடிசுட்டா.. அந்த பாட்டு இதோ

''அன்பே தெய்வம்
அறிவே தெய்வம்
ஆணந்தமே தெய்வம்
பண்பே தெய்வம்
பரிவே தெய்வம்
பணியே நம் தெய்வம்
நற் பணியே நம் தெய்வம்''

இதுல இரண்டு வரிகள் மறந்துட்டாலும் ஒரு வழியா பாடி முடிச்சுட்டா. இதுல என்னனா, ஒவ்வொறு வரியும் பாடி முடிச்ச பின்.. மாணவர்களையும் ஆசிரியர்களையும் சேர்ந்து பாட சொல்லி இருக்கா..இதற்கு முடிந்த அளவுக்கு ஆங்கில விளக்கமும் கொடுத்துட்டு வந்துட்டா,
நம்ம நலம் விரும்பி மூச்சு விடலை அதுக்கு அப்புறம்..

மற்ற மாநிலத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும் அவங்க மொழியிலேயே பேசுறாங்க... ஆனா நம்ம தமிழ் மக்கள் தான் பந்தா.. இங்க இருக்கிற "தமிழ்த்தாயெல்லாம்" அவங்க குழந்தைகள் இந்தி சரியா படிக்கலைன்னு தவிக்குற தவிப்பிருக்கே...அவங்களை பார்த்தா ஹிந்தித்தாய் ஆணந்தக்கண்ணீர் விட்டு கேவிகேவி அழுவா. அத்தனை சுவாரசியமான காட்சி அது....அதே குழந்தைகளுக்கு நம்ம தாய்மொழியான தமிழ் ஏழுத படிக்க வரலைன்னு இவங்க வருத்தப்படாதப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கு.

எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழிக் கல்வியென்பது அவர்களது வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதுனு உளவியல் வல்லுனர்களினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கு. அனா இங்க தாய் மொழில பேசறதே கஷ்டம்னு நினைக்கறவங்க கிட்டே எங்க போய் தாய் மொழிய படிக்க சொல்றது. இதுல குழந்தைகளை சொல்லி தப்பு இல்லை.. வேறு வழி இல்லை அவர்கள் பள்ளியில் இந்தியில தான் பேசனும்..அனால் குறைந்தபட்சம் வீட்ல தமிழில் பேசினா அவர்களுக்கும் ஒரு மொழிப்பற்று வரும்..தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது (அல்லது பார்ப்பதாகச் சொல்வது) கூட கேவலம் என்று நினைப்பவர்கள் இக்குழந்தைகள்..

ஓரு முறை எய்ட்ஸ் விழிப்புணர்வில மதத் தலைவர்களை ஈடுபடுத்துற ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொலைபேசினேன்.. அந்தப் பக்கம் இருந்த பெண்.." are you a tamilian?" னு கேட்டா...நான் எப்படி கண்டுகண்டுபடிச்சீங்கன்னு கேட்டதற்கு.."from your pronounciation" என்றார்.. தமிழர்கள் பேசும் ஆங்கிலம் தனியா தெரியுமாம்..அரைகுறை ஆங்கிலம் தெரிந்த அந்தப் பெண் சென்னையை சேர்ந்தவர்.. 10 வருடமாக அங்கு வேலை பார்க்கிறாள்.. நேரில் சென்றபோது தான் விஷயம் தெரிந்தது..அப்ப கூட அவள் தமிழில பேசல..இந்தியில் தான் பேசினா..நான் பிடிவாதமா தமிழில பேச அவளும் பிடிவாதமா இந்தியில பேச.. நல்ல காமெடி... நமக்கு பொறுமை இல்ல அதுக்கு மேல பேச "எனக்கு இந்தி தெரியாது.. உங்க பாஸ பார்க்கனும்.. நீங்க சொல்ல நினச்சத அவர்கிட்டே சொல்லுங்க, நான் அவர்கிட்டே ஆங்கிலத்துல பேசிக்குறேன்" னு சொல்ல..பயந்துட்டா.. அப்புறம் வருது அழகான தமிழ்..

பொதிகை தொலைகாட்சியில் உலக தமிழர்களை பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிகிழமையும் இரவில் ஒளிபரப்பாகிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. பல தலை முறைகளாக அங்கு இருக்கும் தமிழர்கள் தமிழை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வம், நம் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கும் பண்பு, மனம் நெகிழச்செய்கிறது. அவர்கள் நடை, உடை ,வாழ்க்கை முறை வீட்டின் அமைப்பு எதுவும் மாறவில்லை. 3 , 4 தலை முறைகளாக வெளிநாட்டில் இருப்பவர்களா இவர்கள் என வியப்படையச் செய்கிறது அவர்களின் மாறாத பண்பாடு.

வரலக்ஷ்மி விரதம் எல்லாம் போட்டி போட்டுகொண்டு கும்பிடுகிறார்கள்.. அதிலும் innovation எல்லாம் பண்ணி...எல்லாவற்றிலும் ஒருவரை விட ஒருவர் மிஞ்சவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. ஆனால் அதே போட்டி தாய்மொழி கற்பதிலும் இருந்தால் நன்றாக இருக்கும்..."தாய் எவ்வளவு முக்கியமோ அது போலவே தாய்மொழி மிகவும் அவசியம்" என்பதை புரிய வைத்தால் போதும்...குழந்தைகள் தமிழை பக்தியுடனும் சிரத்தையுடனும் படிக்க ஆரம்பிப்பார்கள்

தமிழைத் தமிழனே புறக்கணிக்கும் அவல நிலை மாறும்...

Tuesday, August 22, 2006

பொறியில் சிக்கிய.....பெண்கள்


நண்பர்களே!...நன்றாய் சாய்ந்து உட்காருங்கள், நான் சொல்வதை நிதானமாய் உள்வாங்கி யோசியுங்கள்...ஏதோ காரணமாய் ரத்தப் பரிசோதனை செய்யும் உங்களுக்கு HIV தாக்கியிரூப்பதாய் உறுதி செய்கிறார்கள், அக்கணத்தில் உங்களின் மனநிலையை கவனமாய் பரிசீலியுங்கள்.

இனி,அதே மனநிலையுடன் தொடர்ந்து படியுங்கள், இந்த நிமிடம் வரை வாயில்லாப் பூச்சியாய், வெளியுலகம் தெரியாதவளாய், இளம் தாயாய், கணவனே கண்கண்ட தெய்வமாய், வீட்டைத் தாண்டாத கூட்டுப் புழுவாய் தன் கணவனின் நடத்தையால் உயிர் கொல்லிநோயைச் சுமக்கும் எண்ணிலடங்கா சகோதரிகளை நினைத்துப் பாருங்கள். தாய்மைப் பூரிப்புடன் பரிசோதனைக்கு மருத்துவமனையில் காலடி வைக்கும் போதுதான் பெரும்பாலான பெண்கள் இந்த அவலத்தை அறிகிறார்கள். தாங்குமா அந்தப் பெண்மனம்? . இந்தியாவில் HIV ஆல் பாதிக்கப் பட்ட பெண்களில் பெரும்பாலோனோர் திருமணம் ஆன, கணவனிடம் மட்டுமே உடலுறவு வைத்துக் கொண்டிருக்கும் குடும்ப பெண்கள்.

எச்ஐவி +ve என இனங்காணப் பட்டபின் வாழ்வின் ஒவ்வொருநாளும் அவளுக்கு எத்தனை கொடுரமானதாய் இருக்கும் என்பதை உள்வாங்கிப் பாருங்கள். இப்பெண்கள் மீண்டு எழ வழிவகை செய்யவேண்டியது யார் கடமை...அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கலையும், அவதூறுகளையும் களைய வேண்டியது யார்கடமை? தயவு செய்து அடுத்தவரையோ, அரசாங்கத்தையோ கைகாட்டாதீர்கள். செய்வதறியாது திக்கித் திணறி விழிபிதுங்கி நிற்கும் அந்தச் சகோதரிகளின் கண்ணீர் துடைத்து, கனிவு முகம் காட்டி,அனைத்து ஆதரவாய் வாழ்வின் எஞ்சிய காலத்தை தன்னம்பிக்கையோடும் தவிப்பில்லாமலும் செய்யவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா....

இத்தோடு நம் பணி முடிகிறதா?...நிச்சயமாய் இல்லை, ஆதரவாய் தோளோடு தோள் நிற்பது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு சக மனிதனுக்கு இந்த நோய் அண்டாமல் அணுகாமலிருக்கத் தேவையான விழிப்புணர்வையும் அடிப்படை அறிவையும் வழங்குதல் நமது அடுத்த இலக்காய் கடமையை இருக்கவேண்டும். என்னுடைய அனுபவத்தில் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் மனத்தின்மையை கண்டு அசந்து போயிருக்கிறேன்.

தங்களின் இந்த நிலை மற்றவர்களுக்கு வரக்ககூடாது என்கிற சமுதாய நோக்குடன், எச்ஐவி பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த குழுவாக கூடி செயல்பட்டு வருகிறார்கள். கோவையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் ஒரு சுய உதவிக்குழு அமைத்து தங்களுக்கென ஒரு வருமானத்தையும் ஈட்டிக்கொண்டு , விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வருகிறார்கள். சுய உதவிக்குழுவின் மூலம் கேபிள் டிவி இணைப்பை எடுத்து நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் குழு ஒன்று கேபிள் டிவி நடத்தி வருவது இங்குதான்.

வாழ்வின் விளிம்பில் நிற்கும் இவர்களில் பலர் கவுன்சிலிங் பிரிவில் டிப்ளமா படித்து அரசு மருத்துவமனைகளில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்கள். எச்ஐவி கிருமி இவர்களை தாக்கிய பின்னரே இவர்கள் இந்த கவுன்சிலிங் பயிற்சியை மேற்கொண்டார்கள்.இதில் முதன்மையானவர் என் தோழி, மீனாட்சி ( வயது 26). காலம் சிதைத்த தன் கணவுகளை பொருட்படுத்தாது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுவரும் மீனாட்சி ஒரு சராசரி கிராமத்துப்பெண். கணவன் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னர் கவுன்சலிங் பயிற்சி பெற்று, பாதிக்கபட்ட பெண்களுக்காக சுய உதவிக் குழுவை தொடங்கி,கேபிள் டீவி இனைப்பை நடத்தி வருகிறார்.இவரின் மிகப்பெரிய பலம் இவருடைய பெற்றோர், உறவினர்கள் மற்றும் நன்பர்கள்.இந்த ஆதரவு அவரை சொந்தக்காலில் நிற்க ஊக்குவித்தது. திரு.விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகிற்கு அறிமுகமானார்.அசாத்திய துணிச்சலும் நம்பிக்கையும் உடையவர்.அவருக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்வதில் ஈடுபாடு காட்டி வருகிறார். சென்ற முறை மீனாட்சி தில்லிக்கு வந்து இருந்த போது மதத்லைவர் ஒருவர் முன் அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். இந்தக் குழுவில் இருக்கும் கணவனை இழந்த சில பெண்கள் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும்,அதற்கு மதத் தலைவர்களின் ஆதரவு வேண்டும் எனவும் வேண்டினார். எவ்வளவு நல்ல விஷயம்...

இந்த நேரத்தில் இன்னொன்றும் கூற விறும்புகிறேன்.எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களோ, மருத்துவ துறையை சேர்ந்தவர்களோதான் செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக மதத்தலைவர்களும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை பெரும்பாலும் வழி தவறியவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் நினைப்பதால் மதத்தலைவர்களின் குறிக்கீடு இங்கே அதிகம் தேவை படுகிறது. கிருஸ்துவ பாதிரியார்களும், புத்தமத தலைவர்களும் இதில் ஆற்றும் பணி மகத்தானது.எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் எங்கள்குழு (தொண்டு நிறுவணங்களைச் சேர்ந்தவர்கள்) ஆசியாவிலேயே முதல் முறையாக பெண் மதத்தலைவர்களை ஒன்று சேர்த்து, சில அனுகு முறைகளை கையாண்டு வருகிறோம். "பிரதிபா" (பிரகாசமான ஒளி) என்று இந்த திட்டத்துக்கு (Project) பெயரிட்டு இதன் மூலம் பெண் மதத்தலைவர்களை ஒன்றினைத்து, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதில் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதற்கான ஆதரவு, எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கிறது. இந்தக் குழுவில் மீனாட்சி ஆரம்பித்த 'Society for Postive Mother's Network' ம் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை மீனாட்சியும் நானும் கோவையில் ஒரு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எய்ட்ஸ்சுக்கு முடிவு மரணம் தான் என்று பேசிக்கொண்டிருந்த என்னிடம் 'ஒரு நிமிடம்' என்று கூறி விட்டு," அக்கா! எய்ட்ஸ்னா மரணம் மரணம்...னு சொல்றீங்களே.. எல்லாருக்கும் முடிவு மரணம் தானே.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களிடம், பயம் வேண்டாம், நீங்கள் இன்னும் நீன்ட காலம் வாழலாம் என்று ஆலோசனை கூறும் நீங்களே,எய்ட்ஸ்க்கு முடிவு மரணம் என்று முரண்பாடாக கூறுகிறீர்களே" என்றாள். எய்ட்ஸால் பாதிக்க பட்ட அவர் அருகில் இருக்கும் போது நான் அவ்வாறு கூறியது சரி அல்ல என்று பின்புதான் உணர்ந்தேன். மேலும் இது போல 'Negative Messages' எந்த வித பயனும் தராது என்பதும் உண்மை.

எச்ஐவியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தில்லியில் 'National School of Drama (NSD)' ஒரு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதும் இருந்து பாதிக்கபட்ட பலர் இந்த முகாமில் பங்கேற்றனர்.விழிப்புணர்வு பிரச்சாரங்களில் சில கலை நுனுக்கங்களை புகுத்தி, எவ்வாறு இச்செய்திகள் மக்களை சென்றடைய செய்யலாம் என்று பயிற்சி அளித்தார்கள். பாடல், நாடகம், ஒவியம், போன்றவைகளில் எளிதான சில பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கபட்டது. பயிற்சி நடைபெற்ற 10 நாட்களும் மறக்கமுடியாதவை. இறுதி நாள் அன்று இவர்கள் தங்களின் ஆசைகளை பகிர்ந்து கொண்டார்கள். லக்நோவில் இருந்து வந்து கலந்து கொண்ட ஒரு பெண் மற்றவர்களை விட துடிப்பாக, மகிழ்சியாக காணப்பட்டார். அவர் தன் ஆசையை சொல்ல எழுந்து நின்று, சிறிது நேரம் சிரித்துக் கொண்டும், என்ன சொல்ல என்று அருகில் இருந்த தன் தோழியிடம் கேட்டுக்கொண்டும் இருந்தார். அப்போது தன் 5 வயது மகள் (எச்ஐவியால் பாதிக்கப்படவில்லை) உள்ளே ஓடி வரவே, கண்களில் நீர் கொட்ட பேச வார்த்தை இல்லாமல் குழந்தையை அனைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுத காட்சி நான் நொறுங்கிப் போன தருணங்களுள் ஒன்று.

இங்கு மேலே படத்தில் இருப்பவரை பற்றி நீங்கள் பத்திரிக்கை செய்திகளில் படித்திருப்பீர்கள். இவர் தான் ஜனாபி கோஸ்வாமி. வடகிழக்கு மாநிலமான அஸாமை சேர்ந்த இவர், 1996 ஆம் ஆண்டு, தான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தைரியமாக கூறிய முதல் பெண்மனி. திருமணம் நடந்து இரண்டே ஆண்டுகளில் கணவனை இழந்தார். திருமணத்திற்கு முன்பே இவர் கணவர் எச்ஐவியால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதை மறைத்து திருமணம் செய்துவைத்து விட்டனர். மேலும், கணவர் இறந்த பின்னர் இவரை வீட்டை விட்டும் துரத்தி விட்டனர். நீதி மன்றத்தின் உதவியுடன் இவரின் உடமைகளை திரும்ப பெற்றார். சென்ற சட்டமண்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால், அஸாமில் போட்டியிட்ட மற்ற போட்டியாளர்கள் ஜனாபியோடு சட்டமன்றத்தில் சேர்ந்தது உட்கார்ந்தால்,அவர்களுக்கும் எச்ஐவி பரவி விடும் என்று முட்டாள்தனமாக கூறி, தேர்தலில் போட்டியிட விடாமல் செய்து விட்டனர்.
சொன்னவர்களுக்கு தான் அறிவு இல்லை என்றால், இதை செவி கொடுத்து கேட்ட காங்கிரஸ்க்கு எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம், நிஜமான தவிப்பும் அதனைத் தொடரும் ஏக்கம் போக்கும் பரிவான வார்த்தைகளும்,நேசமான அரவணைப்பும் தான் அவர்களின் தனிமை உணர்வை தகர்க்கிறது. இந்த பாதிப்பினால் விதியின் சவாலை எதிர் கொள்ளும் இவர்கள், நம்பிக்கை நட்சத்திரங்கள்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோகம், கஷ்டம் என்று தளர்ந்து போய் உட்காராமல், மன அழுத்தம் பீடிக்க பட்டும் பின் அதிலிருந்து விடுதலையாகி நம்பிக்கையுடன் உண்மையான சமூகஅக்கறையுடன் வாழ்க்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அநேகம்....

பொதுவில் பெண்களுக்கு வாழும் திறனைப் பற்றிய அறிவும் புரிந்துணர்வும், முன்னைவிட இன்று அதிகமாக தேவைப்படுகிறது. நோய்களை பற்றிய அடிப்படை புரிதலும், தற்காப்பிற்கான அறிவையும், வசதிகளையும் கள்ளம் கபடமறியாத நம் சகோதரிகளிடம் கொண்டு சேர்ப்பது மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு மனிதத்தின் கடமையாகவே கருதுகிறேன்.

சற்றும் எதிர்பாராத வேளையில் வரும் ஆகக்கூடிய இடர்களை கலங்காமல் ஏன் தளராமல் எதிர்கொண்டு போராடி வெற்றிகொள்வது நம்மில் எத்தனை பேருக்கு சாத்தியம்?.வாய்கிழிய யுக்திகளை பற்றி யார்வேண்டுமானாலும் பேசலாம்.பேனாவை முறுக்கிக்கொண்டு பக்கம் பக்கமாய் அணுகுமுறைகளை எழுதிவைக்கலாம்.இவற்றால் சாமானியனுக்கு ஏதாகிலும் வெளிச்சம் கிட்டுமா....சிந்தியுங்கள். சாமானியக்கு சாகசங்களைச் சொல்லிக்கொடுத்துச் சாதனையாளனாக்க வேண்டாம்...குறைந்தபட்சம் அவன் அப்பாவித்தனமாய் எமாறாமலிருப்பதற்கான வித்தையையாவது சொல்லித்தரலாமே!

நீங்களும் செய்வீர்கள்தானே....செய்வீர்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது.

Thursday, August 17, 2006

நேசம் - நிஜம் - காதல்


மாலைப் பேருந்தில் வீட்டை நோக்கி, முன்னிருக்கை நடுத்தர வயது ஆசாமிகளின் பேச்சுவார்த்தை காதிலும் மனதிலும்...."நீ யாரையாவது லவ் பண்ணீருக்கியா?" அடுத்தவன் வெறுமையாய் சிரிக்க, "தப்பிச்சே" என்றான் கேட்டவன். திருமணங்களில் காதல்னா என்ன? அது எங்கே இருக்கு? எப்படி வருது? எங்க போய் முடியுது? ,கூழாங்கற்களாய் மனதில் சரிந்த கேள்விகளை நோக்கியதே இந்தப் பதிவு.

"எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருவது காதல்", சரி இந்த இலக்கணத்தோடான மனதை எங்கே தேடுவதாம்? அவன் என்னை மட்டுமே நேசிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பிலேயே இந்த காதல் இலக்கணம் பொய்த்து விடுகிறதே?.சில விஷயங்களை உணர்வுகளால் மட்டுமே அணுபவிக்கவும் கொண்டாடவும் முடியும் அந்த வகையில்தான் என்னுடைய காதல் சேர்த்தி என நினைக்கிறேன். வார்த்தைகள் பொய்த்துப் போய் நினைவுகளும் நிஜங்களும் என்னைக் கொண்டாடும் உணர்வுகள்தான் காதலாய் இருக்க முடியுமோ?

கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் எல்லாம் தங்கள் இனையை காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு சரியாக இருக்க முடியும்?. என் பார்வையில் எல்லா தம்பதியரிடமும் காமம் மிகுந்திருக்கும் அளவிற்கு காதல் மிகுந்திருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.எனக்குத் தெரிந்து சமுதாய நிர்பந்தங்களுக்காய் குடும்ப கட்டுக்குள் உழலும் தம்பதியர்தான் பெரும்பான்மையினர்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் திருமணத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.எதிர்பார்ப்புகளுடன் கூடிய திருமண உறவில் இந்தக் காதலின் விளைவுகள் எத்தகையது? ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோளும், அதைக் கொடுக்கும் பக்குவமும் இல்லாத போதுதான் அதன் விளைவுகள் குடும்ப கட்டமைப்பை மீறி பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து வரை எதிரொலிக்கிறது.
வெற்றிகளைக் சேர்ந்து கொண்டாடத் தெரிந்த தம்பதியர் தோல்வியென வரும் போது தோளோடு தோள் நின்று எதிர்கொள்ளாது ஒருவரை ஒருவர் காயப்படுத்தி காதலையும் குடும்பத்தையும் தெரிந்தே அழிப்பது வேதனையான வேதனை.

பொருளாதார தேவைகளுக்கு இருவரும் போராடும் குடும்பங்களில் ஆண்களை விட பெண்களுக்கே தன் இனையின் ஆதரவும், அங்கீகாரமும், அருகாமையும் அதிகமாய் தேவைப்ப்டுகிறது.ஏனெனில் பொருளாதார பங்களிப்பையும் தாண்டி பெண்களின் பங்கு குடும்ப நிர்வாகம் முதல் குழந்தை வளர்ப்பு வரை நீள்வதை யாரும் மறுக்கமுடியாது.சகிப்புத்தன்மை, பரஸ்பர அங்கீகாரம், ஒத்த முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சினைகளை ஒரு சேர எதிர்கொள்ளும் நம்பகத்தன்மை இத்தனையும் தருவது காதல்தானே!

இதெல்லாம் தன் இனையிடம் கிடைக்காமல் ஏமாற்றமும், இயலாமையும் சூழ புழுங்கும் ஆனோ பெண்ணோ வெளியில் சின்னதாய் ஒரு ஆறுதல் கிடைத்தாலும் கொம்பினைச் சுற்றும் கொடியாய் பற்றிக் கொள்வது இயல்புதானே! பிறகு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால் யாருக்கு பயன்? இதை தவிர்க்க ஒரே வழி, உங்கள் இனையை ஆதரிப்பதுதான். எல்லா வகையிலும்.
திருமணமாவர்களே உங்கள் காதலைக் கொண்டாடுங்கள்.

உன்மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ...


"மங்கயராய் பிறப்பதற்கே......- பஞ்சாபில் கொடூரம்




Of woman are we born, of woman conceived,
To woman engaged, to woman married.
Woman we befriend, by woman do civilizations continue.
When a woman dies, a woman is sought for.
It is through woman that order is maintained.
Then why call her inferior from whom
all great ones are born?
Woman is born of woman;
None is born but of woman.

-குரு நானக்


நதிகளை பெண் தெய்வங்களாக வழிபட்டு பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் நம் நாட்டில், ஐந்து ஆறுகள் ஓடுவதாலேயே பஞ்சாப் என்ற பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் மனதை உலுக்கும் ஒரு சம்பவம்.நேற்றய Times of India நாளிதலில் வந்த செய்தி என்னை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரத்தில், ஒரு கிணற்றில் கலைக்கபட்ட பெண் சிசு கருக்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நர்ஸிங் ஹோமுக்கு பின்புறம் இருந்த ஒரு கிணற்றிலிருந்து கருகலைப்பு செய்யப்பட்ட 15 கருக்களை எடுத்திருக்கிறார்கள். (The Tribune என்னும் நாளிதள் இதையே 100 என்கிறது).

ஆண் பெண் விகிதாசார வேறுபாடு அதிகம் உள்ள மாநிலங்கலில் ஒன்று பஞ்சாப் மாநிலம் (1000:762)(tamilnadu 1000:920).இந்தியாவோட அதிக பணக்கார மாநிலமான பஞ்சாபில், பெண் சிசு கொலையை தங்கள் மத தர்மத்துக்கும் நம்பிக்கைகும் எதிராக கருதும் சீக்கியிர்களிடைய தான் இது நடந்திருக்கிறது. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் இந்த கொடுமையை செய்து வருகிறார்கள்.

சரி செய்தியை பார்போம். மேலே குறிப்பிட்ட நர்ஸிங் ஹோமில் வேலை பார்த்து வந்த ஒரு தாய் (dai) எதோ ஒரு காரணத்தால் வேலையை விட்டு துரத்தப்படிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் பேரில், நேரில் சென்று பார்த்த மாநில சுகாதார அதிகாரிகள் கருகலைப்பு செய்த 15 கருக்கள் கிணற்றில் இருந்ததாக கூறுகிறார்கள். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 35 கருக்கலைப்பு செய்து அதை இந்த கிணற்றில் வீசியிருக்கிறார்கள். சாஹிப் நர்ஸ்சிங் ஹோம் என்னும் அந்த மருத்தவமனை, டாக்டர்.ப்ரீத்தம் சிங் மற்றும் அவரது மனைவி டாக்டர். அமர்ஜித் கெளர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினர் அங்கு சென்று கருக்கலைப்புக்கு பயன் படுத்தப்பட்ட சாதனங்கள், மருந்ததுகள் ஆகியவைகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த மருத்துவமனைக்கு, கருக்கலைப்பு செய்ய சட்டப்படி அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.

THE PRE-NATAL DIAGNOSTIC TECHNIQUES (REGULATION AND PREVENTION OF MISUSE) ACT என்று ஒரு கடுமையான சட்டம் அமலில் இருந்து வருகிறது.சட்டம் கடுமையானதாக இருந்தாலும் மிக பலவீனமாகத்தான் இது அமுல் படுத்தபடுகிறது. இந்த சட்டத்தின் படி, அரசால் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட மருத்தவமனைகளுக்கு தான் கருகலைப்பு சாதனங்களை விற்க வேண்டும். ஆனால் இந்த சாதனங்களை உற்பத்தி செய்பவர்கள் இந்த சட்டத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஸ்கேன் மூலம் குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது சட்டப்படி குற்றம் என்றாலும், இங்கு இருக்கும் மருத்துவர்கள் மிகவும் புத்திசாலிகள். நேரடியாக சொல்லாமல் அவர்கள் சில code words மூலம் எப்படியாவது குழந்தை ஆணா பெண்ணா என்பதை கூறிவிடுவார்கள். இதோ அவர்கள் உபயோகப்படுத்தும் சில வாக்கியங்கள், ஆணாக இருந்தால் " your baby is fine and will play football" பெண்ணாக இருந்தால் "you are in the pink of health" அல்லது "your child is like a doll".

பெருகி வரும் பெண் சிசு கொலையின் தீவிரத்தை உணர்ந்த சீக்கிய மத குருக்கள் விளிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடு பட்டு வருகிறார்கள்.இது போல பெண் சிசுக்களை அழிப்பவர்களை
"குடிமார்" (Kudimaar)என்று அழைக்கும் வழக்கம் சீக்கிய மத வழக்கத்திலேயே இருந்து வருகிறது. பெண் சிசுவை அழிக்கும் செயல் மத கொள்கைக்கு எதிரானது என்று தெரிந்து இருந்தும் பல சீக்கிய பெண்களே இந்த கொடுமையை செய்து வருகிறார்கள்.

வடமாநிலங்களில் தான் பென் சிசுவதை அதிகமாக காணப்படுகிறது. அனால் வடமாநிலங்கலில் இருப்பவர்களோ தென்மாநிலங்கள் இன்னும் "socially conservative" ஆக இருப்பதாக கூறிக்கொண்டு திரிகிறார்கள்.CNNIBN தொலைக்காட்சியில் தேர்தலின் போது நடந்த ஒரு கலந்துரையாடலில் சர்தேசாய் இப்படி ஒரு கருத்தை சொன்னார். அதுவும் இந்த கலந்துரையாடல் சென்னை லயலோ கல்லூரியில் நடை பெற்றுக் கொண்டிருந்த்தது. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும்
கலாச்சாரத்தை மறந்து ஆட்டம் போடுவதும், ஆண் குழந்தை பெற்றால் தான் ஒரு பெண் குடும்ப வாழ்க்கைக்கு தகுதி உடையவள் ஆகிறாள் என்று பெரும் படிப்பு படித்தவர்களே (?)கருதுவது தான் இவர்களை பொருத்தவரை நாகரீகம். (இங்க ரொம்ப நாளா இருந்து வரும் சில தமிழர்கள் கூட நம்ம தமிழ்நாட்டை பத்தி இப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க. இந்த கொடுமையை எங்க போய் சொல்ல.. அப்ப வரும் பாருங்க கோபம்...ஹ்ம்ம்..)

அரசாங்கம் செய்யும் விழிப்புணர்வு முயற்சிகளை கடைநிலையிலுள்ள மக்கள் வரை சென்றடைந்தாலும் மேல் குடி மக்களிடையேயும் இந்த பாவச் செயல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்றால் ,இதற்கான மூல காரணத்தை அலசி அராய்ந்து அதற்கான தீர்வு காணவேண்டும். சமுதாயத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும், அரசியல் வாதிகள் உட்பட அனவருக்கும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தவேண்டும்.


Doctors are selling their soul for greed.

Friday, June 23, 2006

படம் காட்றேன் வாங்க!






இந்த மூன்று படங்களும் உங்களுக்கு எதை உணர்த்துகிறது.கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

மங்கை