என்ன கொடுமை..ஓடிப்போனது இல்லாம முதல் முறையா வேறயா.. அப்ப எத்தனை முறை இது நடந்ததுன்னு தோனுமே?...அது இப்பவே சொல்லிட்டா எப்படி. பதிவ படிங்க.
ஆறு வருஷம் முன்னால லக்னோவுல ஒரு கருத்தரங்குக்கு போலாம்னு அலுவலக தோழிகள் 4 பேர் ஆசைப்பட்டோம். கருத்தரங்குல ஆசை இருக்கோ இல்லையோ ஊர விட்டு தூரமா போய், ஒரு வாரத்துக்கு சுத்தலாம்னு ஆசை தானுங்க. எப்படியோ வீட்ல நச்சி ட்ரெயின் டிக்கட் 25 நாட்களுக்கு முன்னாடியே வாங்கியாச்சு. லக்னோ போறோம், லக்னோ போறோம்னு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டாதது தான் பாக்கி.
ஆனா பாருங்க சென்னைல இருந்த எங்க பிராஜக்ட் ஹெட்டுக்கு மூக்குல வேர்த்துடுச்சு. நாங்க என்னைக்கு புறப்படனுமோ அதுக்கு அடுத்த நாள் வரைக்கும் 8 நாட்களுக்கு மதுரையில ஒரு கலந்துரையாடல், எல்லாரும் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டார். நாங்களும் இல்லாத ஸ்டன்ட் எல்லாம் பண்ணி பார்த்தோம். ஹூம்..ஒன்னும் நடக்கலை.
நாங்களும் விடுவதா இல்லை. ஒரு நாள் லேட்டானாலும் பரவாயில்லை மதுரையில் இருந்து சென்னை போய் அங்க இருந்து லக்னோ ட்ரெயின் பிடிச்சுக்கலாம்னு ப்ளான். இது இன்னும் த்ரில்லிங்க. அப்ப வீட்டுக்கு 15 நாளுக்கு மட்டம்னு ஒரே சந்தோஷம். மதுரைல இருந்தும் 3 பசங்க அதே கருத்தரங்குக்கு வர்ரதா இருந்துச்சு.
மதுரையில கடைசி நாள் அன்னைக்கு கொஞ்சம் சீக்கிறமே புரப்படறோம்னு எங்க ப்ரொபசர் கிட்ட சொல்லிட்டோம். மதுரையில் இருந்து எங்களோட வர்ர பசங்களை சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுக்க சொல்லி கவுன்டவுன் ஆரம்பம் ஆச்சு. இந்த பசங்க காலையிலேயே போறவுங்க. ஆனா நாங்க விடுவமா.. மவனே போனீங்கன்னா பாருங்கன்னு மிரட்டி எங்களோட இருக்க வச்சுட்டோம்ல.
6 மணிக்கு பஸ்...ஆனா 5.30 ஆகியும் எங்களை விடற மாதிரி தெரியலை. கேக்கவும் பயம். அப்படி கேட்டாலும் ஏன் முதலிலேயே சொல்லலைன்னு திட்டுவிழும். விதியை நொந்துட்டு பேசாம உக்கார்ந்துட்டு இருந்தோம். 5.50 க்கு ட்ராவல் ஏஜென்சியில இருந்து ஃபோன். ''பதினைஞ்சு நிமிஷம் லேட்டாகும். ப்ளீஸ் இருங்க''ன்னு கெஞ்சி ஆறு மணிக்கு ஓட்டமா ஓடினோம். 6.20 க்கு போய் சேர்ந்து, பஸ்ல இருந்தவுங்க முறைச்ச முறைப்ப கண்டுக்காம உக்கார்ந்தோம்.
பஸ் போகுது, போகுது, போகுது போயிட்டே இருக்கு, வழியில போற மாட்டு வண்டி மாடெல்லாம் எங்களை திரும்பி பார்த்து சைடு சிரிப்பு சிரிச்சுட்டு போகுது. காலையில 5.55 க்கு சென்னை சென்ட்ரல்ல இருந்து ட்ரெயின். இப்படி ஓரு ஓட்டை பஸ்ல டிக்கெட் எடுத்துட்டாங்களேன்னு பசங்களை திட்டுன திட்டுல அவங்களுக்கு திருச்சி வந்ததும் இறங்கி ஓடீறலாம்னு ஆயிருச்சு.
சென்னை சென்ட்ரல் போய் சேரும் போது 6 மணி. 8 ஆவது பிளாட்பாரத்துல இருந்து ரப்தி சாகர் எக்ஸ்ப்ரெஸ் புறப்படத்தயாராக இருக்கிறதுன்னு அறிவிப்ப கேக்குது...ஓட்டமா ஓடினோம்...ஓடினோம்...வாழ்க்கையில அப்படி ஒரு ஓட்டம் ஓடி இருக்க மட்டோம். பிளாட்பாரதுக்குள்ள நுழையறோம், கண்ணு முன்னாடியே ட்ரெயின் போயிட்டு இருக்கு. பி.டி.உஷா ரேஞ்சுக்கு ஓடிப்பார்த்தோம். ஆனா ட்ரெயின் ஜெயிச்சுடுச்சு.
2 மாசமா பந்தா விட்டு, கடைசியில ட்ரெயின கோட்டை விட்டுட்டோம்னு ஊர்ல போய் சொன்னா எப்படி இருக்கும். இனி என்ன பண்ண? நடங்க அடுத்த ப்ளாட்பார்ம்ல கோவை எக்ஸ்ப்ரெஸ் நிக்குது ஏறி ஊர் போய் சேரலாம்னு சொன்னா, அதுல ஒருத்தி அதெல்லாம் முடியாது, நான் இன்னைக்கு லக்னோ போயே தான் ஆகனும்னு கீழ விழுந்து புரண்டு அழாத குறையா ஆட்டம்.
என்னமோ பண்ணுங்கன்னு அக்கடான்னு நான் உக்கார்ந்துட்டேன். இந்த டென்ஷன், அழைச்சல், ஓட்டத்துல பயங்கர வீசிங் நமக்கு. போய் தகவல் மையத்துல விசாரிச்சு சாயந்திரம் 7 மணிக்கு ஜான்சிக்கு ஒரு ட்ரெயின் இருக்குன்னு, இந்த டிக்கெட்ட கேன்சல் பண்ணி (ஏதோ கொஞ்ச பணமாவது வருமே) அந்த ட்ரெயினுக்கு டிக்கெட் எடுத்தாங்க. அதுக்கு அப்புறம் தான் அந்த ஆட்டக்காரி ஆட்டத்தை நிறுத்தினா.
ஜான்சிக்கு போய் அங்க இருந்து வேற ட்ரெயின் லக்னோக்கு. இந்த ட்ரெயினுக்கும் அந்த ட்ரெயினுக்கும் 45 நிமிஷம் தான் வித்தியாசம். இது சரியான நேரத்துல போய் சேரலைன்னா என்ன பண்ண?... ''ஜான்சி போயிட்டா அப்புறம் லக்னோ போறது சுலபம்'' னு ஆட்டக்காரி ரொம்ப தெம்பா சொல்ல, நான் கேட்டேன்..''ஓ உணக்கு அந்த அளவுக்கு பரிச்சியமான ஊரா'' அதுக்கு அவ, ''யாருக்கு தெரியும், சும்மா ஒரு அனுமானம் தான்".. தேவையா எனக்கு....ம்ம்ம்
மேல போய் ரெஸ்ட் ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தோம். வீட்டுக்கும் ஃபோன் பண்ண முடியாது( பண்ண விடலை). சொன்னா 'மவளே மரியாதையா கோயமுத்தூர்க்கு வந்து சேர்'னு சொல்வாங்க.
சாயந்திரம் 7 மணிக்கு ஒரு வழியா ட்ரெயின்ல உக்கார்ந்தாச்சு. அடுத்த நாள் ராத்திரி 9 மணிக்கு ஜான்சி போய் சேரும். 9.45 மணிக்கு லக்னோ ட்ரெயின். எல்லாரும் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். எனக்கு எப்பவும் போல டென்ஷன். ட்ரெயின் போய் சேருமான்னு. ''ஏதாவது பேசுனேனா கீழ தள்ளி விட்ருவோம்'னு மிரட்டுனதுல, திருவிழாவுல காணாம போனவ மாதிரி முழிச்சுட்டு உக்கார்ந்துட்டு இருந்தேன்.
9 மணி ஆயிருச்சு. ஆனா ட்ரெயின் இன்னும் எங்கேயோ நடுக்காட்டுல போயிட்டு இருக்கு. ட்ரெயின் போற மாதிரி என் மனசும் பட படன்னு அடிக்குது. இனி வாட்ச பார்க்க கூடாதுன்னு என்னை கட்டுப் படுத்தீட்டூ உக்கார்ந்துட்டு இருந்தேன். என்னை தவிர யாருக்கும் பதட்டம் இல்லை. உலகம் உருண்டை தானே, எங்க சுத்துனாலும் ஊர் போய் சேர்ந்துறலாம்னு தத்துவம் வேற.
ஜான்ஸி ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும் தான் வாட்ச பார்த்தேன். மணி பத்து. அடப்பாவிகளா அந்த ட்ரெயின் போயிருக்குமே...குளிர்ல என்னை இந்த பாடு படுத்தறீங்களேன்னு திட்டீட்டே ப்ளாட்பாரத்துல இறங்குனா... 'ஹேய் எங்க அந்தப்பக்கம் இறங்குறே..இந்தப்பக்கம் வான்னு, எதிர்ப்பக்கம் இருக்குற கதவு வழியா ஒவ்வொன்னும் ஜங்கு ஜங்குன்னு குதிக்குதுக. ஏன்னு கேட்டா அந்த ட்ரெயினும் லேட்டா தான் வந்துருக்கு..ப்ளாட்பாரம் பாலத்துமேல ஏறிப்போனா லேட் ஆயிடும், வா இப்படியே போயிடலாம்னு என்னோட லக்கேஜ் எல்லாம் அவங்களே எடுத்துட்டு தண்டவாளத்தை தாண்டி ஓடறாங்க. லாங்க ஜம்ப், ஹை ஜம்ப் வீராங்கனைகள் எல்லாம் தோத்துப் போகனும்.
ஒரு வழியா லக்னோ ட்ரெயின்ல ஏறி உக்கார்ந்தாச்சு. அப்புறம் பாருங்க இவ்வளவு ஓடி வந்து, ட்ரெயின் அதுக்கு அப்புறமும் 30 நிமிஷம் கழிச்சு தான் போச்சு.
இதுல முக்கியமான விஷயம், நான் லக்னோ ட்ரெயின கோட்டை விட்டதும், இப்படி ஓடுனதும் இது வரைக்கும் வூட்ல யாருக்கும் தெரியாது..:-))