Tuesday, September 30, 2008
டாக்டரம்மாவின் பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு....
சரி இப்பவாவது நாம உறுப்படியான ஒரு காரியம் பண்ணலாம்னு அவங்க பதிவுக்கு லிங்க் குடுக்க இந்த பதிவு..
உடலுறுப்புகள் தானம் பற்றிய தெகிக்காட்டானின் பதிவுல எழுந்த கேள்விகளுக்கு அருமையா, எளிமையா ஒரு பதிவு போட்டிருக்காங்க...
டாக்டரம்மாவின் பதிவு இதோ
http://delphine-victoria.blogspot.com/2008/09/blog-post.html
Monday, August 11, 2008
பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)
தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .
கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.
சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.

எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.
அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.
உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)
என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...
அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)
அப்பா?
அவர் எங்கள விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்
அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..
குட்டிப்பாப்பாவ தூக்கணும், பார்த்துக்கணும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?
(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கன்னத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)
பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).
(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).
குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)
நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?
தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)
உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)
ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.
எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுறை உபயோகிச்சா வராதாம்.
உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)
அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)
நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)
நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)
நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.
உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)
தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)
இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.
எத்தனையோ திட்டங்கள், கோடி கோடியாய் பணம் எச்ஐவி தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டங்களினால் பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்களுக்கும், அதை செயல் படுத்துவர்களுக்கும் செலவு செய்யும் பணம் அதைவிட அதிகம்.
மறுபடியும் மறுபடியும் மரணத்தைப் பார்க்கும்போது வேதனையின் கடுமை குறைவதைப்போல, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவருக்கு எல்லாமே பழகிப் போவதைப் போலத்தான் இந்தச் சிறுமியின் கதையும். அதிகாரிகளுக்கு இது மற்றொரு 'கேஸ்'.
இந்தப் பதிவினை எழுதி முடித்த அடுத்த நாள் என் தோழி ஒருத்தி கோவையில் இருந்து தொலைபேசினாள். ஒரே பெண்...நல்ல வசதியான குடும்பம்...அந்த உரையாடலையும் படியுங்கள்.
நான் - ரொம்ப நாளா பேச முடியலை .. எப்படி இருக்கே?
தோழி- நல்லா இருக்கேன்...நானும் கட்டட வேலைய பார்த்துகறதுனால பேச முடியலை.
நான் - ஓ மறுபடியும் வீடு கட்டறியா?
தோழி- இல்லை.... அப்பா படுத்த படுக்கை ஆகிட்டார். எல்லாமே பெட்ல தான். வீட்டுக்குள்ள ஸ்மெல் வருது. இன்பெக்ஷன் ஆயிட்டா என்ன பண்ண. அதுனால தான் ஒரு அவுட் ஹவுஸ் கட்டினேன். அப்பா அங்க தான் இருக்கார்.
பெரிய வீடு, நான்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி தந்தையை பார்த்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வசதி...அவர் சேர்த்த சொத்துதானே.... இயற்கையாக இருக்க வேண்டிய பாசமும், கடமை உணர்வும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. எந்த சூழ்நிலை மனிதர்களை இப்படி மாற்றுகிறது? நடைமுறைக்கு ஒத்துவராத உணர்வுகளா இவை..?...என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.
நாம் செய்யும் செயல்களுக்கு மனதிற்குள்ளேயே நியாயம் கற்பித்து நம்மையே சமாதானம் செய்து கொள்வதை தவிர நாம் வேறு என்ன செய்கிறோம்.
இந்தக் குழந்தை நீடுழி வாழ வாழத்தி வணங்குவோம்
Sunday, August 03, 2008
எனக்கு A ன்னா AIDS தான்...:-))
நானே என் பிளாக்குள்ள போய் பல மாதங்கள் ஆச்சு...:-)).
''ஏ ஃபார்'' டேக் எழுத சொல்லி லட்சுமி ஆர்டர் போட்டுறுக்காங்க... இதுக்கு முன்னால இது போல பல டேக்குகள் சுத்தி வந்தப்போ அதையும் இதையும் சொல்லி தப்பிச்சுட்டு இருந்தேன்... இந்த தடவை முத்தம்மணி இழுத்து விட்டுட்டாங்க...
சரி நாம அப்பப்ப மேய்ஞ்சுட்டு இருக்குற நில வலைத்தளங்களை சொல்லலாம்னு வந்திருக்கேன்...இதுல உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச வலைத்தளங்கள் இருக்கலாம்...கண்டுக்காதீங்க..நமக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்...
முதல்ல நம்ம துறைல இருந்தே ஆரம்பிக்கலாம்.
A - http://www.aidsinfo.nih.gov/ -எச்ஐவி பற்றிய தகவல்களை பெற
www.naco.nic.in - இந்தியாவில் எச்ஐவி தகவல் மையங்கள், பரிசோதனை மையங்கள் பற்றிய தகவல்களை அறிய.
B- http://buydominica.com/diabetes/diabeticfood.php -சக்கரை சத்து அதிகமாக உள்ளவர்களுக்கு சில இயற்கை மருத்துவம்.
http://www.betterphoto.com/gallery/dynoGall2.asp?catID=296- அழகான குழந்தைகள்/ பூக்கள் படங்கள்... மனசை லேசாக்க நான் அடிக்கடி போகும் தளம்... என் ஃபேவரிட் தளம்..:-))
C - http://www.chandamama.com/ - குழந்தைகளுக்கான கதைகள், பொது அறிவு, பயிற்சி போன்றவை. இதில் படங்களுடன் இராமாயணம் தமிழில்.
http://currentvacancy.blogspot.com/ - அரசு பணிகளில் காலி இடங்கள்/ walk-interview - தெரிந்தவர்களுக்கு சொல்லலாம். மிகவும் உபயோகமான தளம்
D-http://www.diethealthclub.com/- சத்தான உணவு வகைகள். ஒவ்வொரு நோய்க்கும் பிரத்தேயேக உணவு முறை.
E- http://www.englishpage.com/- ஆங்கில இலக்கணம். இந்த தளத்தில் இலக்கணப் பயிற்சியுடன் கூடிய சில பாடங்களைக் காணலாம்.
F- http://www.fatfreekitchen.com/ - அவசர சமையல் மற்றும் Fat free receipies
G - http://goidirectory.nic.in/ - ஒவ்வொரு துறையிலும் அரசு சார்ந்த நிறுவணங்கள், மற்றும் அரசு இனையதளங்கள்.
H-http://www.health.harvard.edu/press_releases/importance_of_sleep_and_health.htm
தூக்கம் எவ்வளவு தேவைங்கிறதும், சரியான தூக்கம் இல்லைன்னா என்ன பிரச்சனைகள் வரும்னு பாருங்க.
I - http://idioms.thefreedictionary.com/ - இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் அதிகமாக இந்த இடியம்ஸ் உபயோகிப்பதை பார்க்கலாம். இது ஒரு பேஷன். சிலர் பேசும் போது என்ன சொல்ல வராங்கன்னு தெரியாம முழிக்க வேண்டியிருக்கிறது . இதில பாருங்க அந்த சொற்றொடர்களும் அதற்கான விளக்கமும் இருக்கும். ஆங்கிலத்தில் அதிகமாக பேச வேண்டியவர்களுக்கு இது உபயோமாக இருக்கும்.
I - http://indiacollegefinder.com/ - இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் பற்றிய தகவல்கள், நுழைவுத்தேர்வு பற்றிய தகவல்கள். மிகவும் உபயோகமான தளம்.
J - http://www.jazzles.com/html/freempd.html - குட்டீஸ்க்கு ரைம்ஸ் போட்டு காட்டுங்க - அடியோ/வீடியோ - இதில் முக்கியமாக மீன் பாடல்கள்..அருமை
K- http://www.kidsknowit.com/educational-songs/index.php - கணக்கு, உயிரியல், வேதியல் மற்றும் வாழ்வியல் பாடங்கள் பாடல்கள் வடிவில்.
L: http://www.learnenglish.org.uk/ - ஆங்கிலம் பேசவும் எழுதவும் எளிதான பயிற்சிகள்.
M - http://www.medindia.net/medicalwebsite/index.asp : மருத்துவம் சார்ந்த அனைத்து தகவல்களும், வெவ்வேறு வலைத்தளங்கள் பற்றிய தகவல்கள்.
N- http://www.nlm.nih.gov/medlineplus/menshealth.html - ஆண்ளுக்கான சில மருத்துவ தகவல்கள், மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள்.
O - http://onlinebooks.library.upenn.edu/ - சில நல்ல புத்தங்கள் இலவசமாக.
P- http://www.2dplay.com/cricket/cricket-play.htm - பொழுது போக்கிற்கு கிரிக்கெட்.
Q-http://www.quickiqtest.net/ - உங்க IQ டெஸ்ட் பண்ணுங்களேன்.
R - http://ricedish.hosuronline.com/ - சாத வகைகள்
S - http://shyamradio.com/ - ஆன் லைன் ரேடியோ - தடையில்லாமல் பாட்டு கேட்க.
T - http://tourism.nic.in/ - சுற்றுலா பற்றிய தகவல்கள்..இதில் மற்ற மாநில சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை பெறலாம். தங்கும் இடங்களுக்கு ஆன்லைன் புக்கிங்கும் உண்டு.
U - http://www.usefultrivia.com/ - பொது அறிவு கேள்விகள்/ பயிற்சிகள்.
V - http://www.vidyapatha.com/distance_edu/websitelist.php - அஞ்சல் வழி கல்வி பற்றிய தகவல்கள்.
W - http://www.womenshealthguide.net/indian-diet/ - பெண்களின் உடல்நலம்
http://www.weather.com/ - தட்ப வெட்ப நிலையை அறிய.
X-Y - Z - என்னைக்கும் நாங்க கேள்வித்தாள்ல முழுசா முடிச்சதா சரித்திரம் இல்லை...இதுக்கு மேல நமக்கு மூளை இல்லை....அம்புட்டுதான் யோசிச்சு யோசிச்சு பார்த்து ஒன்னும் நியாகம் வரலை. சோம்பேறித்தனும் தான்.
நம்ம Y for Yatchan னுக்கு இந்த வேலை ரொம்ப சுலபம்... ஐயா வாங்க உங்க லிஸ்ட போடுங்க.
Friday, April 11, 2008
தலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்

திரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை வழி மறித்து அவர் ஓட்டி வந்த காரை பறிக்க முயற்சி செய்து, பின்பு முடியாமல் போகவே அவரை அடிவயிற்றில் சுட்டு விட்டு ஓடி விட்டனர். இது நடந்து அரைமணியில் இந்தப் பகுதிக்கு வெகு அருகிலேயே, 27 வயது பெண் ஒருவரிடம் எதற்காகவோ வாக்குவாதம் செய்து பின் அவரை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். இதை காவல் துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் சம்பவம் நடந்த உடனேயே காவல் துறையினர் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.
இதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை. பிறகு அந்த நிலையிலேயே அவர் காரை ஓட்டிக் கொண்டு போய் வீட்டை அடைந்து, வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அடிவயிற்றில் குண்டு பாய்ந்தும், உடல் பருமனாக இருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார். இதை அவரே சர்தார்ஜிகளுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு " என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது " என்று சொல்லி இருக்கிறார்.
குண்டுகாயம் பட்ட சர்தார்ஜியும், கொல்லப்பட்ட பெண்ணும் வழி மறித்தவர்களிடம் போராடியதால் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
அதிக பலன்களைத் தராத விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த இந்த பகுதி மக்களிடம், இன்று கோடி கோடியாய் பணம். அதி வேக தொழில் வளர்ச்சிக்கும், விண்ணுயர்ந்த கோபுரங்களாய் நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் இந்த விவசாய நிலங்கள் இன்று விலை போய், இவர்களை திடீர் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.
இதில் இவர்களே சிலர் நில தரகர்களாகவும் இருப்பதால், தரகு தொழிலில் இருக்கும் பலத்த போட்டியினால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று, துப்பாக்கியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ள ஒருவரிடம் இருக்க வேண்டிய உரிமம் இன்று இங்கு சர்வ சாதாரணமாக கிடைத்து விடுகிறது. இதனால் தில்லியை சுற்றி உள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் இன்று வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குர்கான் பள்ளியில் தங்களுடன் படித்த மாணவனை ஒரு சின்ன பிரச்சனைக்காக சுட்டுக் கொன்றது குர்கான் தரகர்களின் குழந்தைகள் தான்.
Thursday, February 21, 2008
காதலுக்கு காணிக்கை-மயக்கமென்ன
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.

ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே
பெண்:கற்பனையில் வரும் கதைகளிலேநான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா
ஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட
பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)
ஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூசை செய்து வர
பெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்தவண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்துமது அருந்தாமல் விட மாட்டேன்
ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)
Monday, February 18, 2008
ஆலோலம் பாடும் பச்சைக் கிளிகள்..
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி
நாயகனுக்கும் நாயகிக்கும் நட்பும் இல்லாத காதலும் இல்லாமல், ஒருவரின் மேல் ஒருவருக்கு மரியாதை. நாயகி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஓடக்காரனான நாயகன் பேச்சு வழக்கில் சொல்லித்தரும் பாட்டு.
நடிகர் திலத்திற்கும் நடிகையர் திலத்திற்குமே உண்டான பிசிரில்லாத நடிப்புடன் கூடிய பாடல் .
எனக்கு பிடித்த வரிகள்....
//தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக //
//பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக //
பாடலைக் கேட்டால், நாமும் ஓடத்தில் போவதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் கவிதை வரிகளும் இசையும்.
டி.எம்.எஸ்:ம்ம்ம் ஹம் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து,
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
டி.எம்.எஸ்:ம்ஹம், காற்று இல்லே காத்து
சுசீலா :தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
சுசீலா :அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
டி.எம்.எஸ் & சுசீலா: சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:செவ்வாழைத் தோட்டமும், தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சுசீலா :தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
டி.எம்.எஸ் & சுசீலா: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு.
எம்.எஸ்: ஓஓஓஓஓஓ
சுசீலா : ஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்:பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
சுசீலா : பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
டி.எம்.எஸ் & சுசீலா:சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு.
எம்.எஸ்:நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
டி.எம்.எஸ் & சுசீலா:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும், பூவாச்சும் வருமென்று, மீனாட்சி சொன்னதும் நமக்காக மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்தும்
Tuesday, February 12, 2008
வலிகளை பகிர்தலின் அவசியம்
நான் பார்த்தவரையில் தென்னிந்தியாவை விட இங்கே வடக்கில்தான் இந்த அவலம் அதிகமாய் இருக்கிறது.எல்லா மட்டங்களில் இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், பாமர மக்களிடையே மிகுதியாக காணமுடிகிறது
இந்துக்களின் புண்ணிய பூமியாக கருதப்படும், மதுரா, பிருந்தாவனம், வாரணாசி ஆகிய இடங்களில் மட்டும் 20,000த்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், தங்கள் உறவுகளால் ஒதுக்கப்பட்டு இங்குள்ள கோவில்களிலும் ஆசிரமங்களிலும் அரை வயிறு சோற்றிற்காக தஞ்சமடைந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் இத்தகைய நிலமை இல்லை என்று தான் நினைக்கிறேன்.
மேற்குவங்கம்,பீஹார் போன்ற மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் இருக்க வேண்டிய இடம் பிருந்தாவனம் அல்லது மதுராதான் என்று காலங்காலமாய் வேரூன்றியிருக்கும் சிந்தனை போக்கு, சமுதாய சட்டமாய் மாறி இந்த அபலை பெண்கள், வேறு வழியின்றி அவர்களாகவே இந்த சன்னியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.
இந்த பெண்களில் பெரும்பாலானோர் கோவில்களில் பஜனை பாட்டுக்கள் பாடி அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்கள் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சுய சார்பில்லாத பெண்களே பெரிதும் இத்தகைய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பெரும்பாலான இல்லங்கள் சில உள்ளூர் தொழில் அதிபர்களின் சொற்ப ஆதரவில் நடத்தப் பட்டு வருகிறது. ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சமடைந்திருக்கும் இப் பெண்கள், இங்கு வந்த பிறகாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால், ம்ம்ம்ம்..அதுவும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பெண்களின் எண்ணிக்கையால் அத்தனை பேருக்கும் இருக்க இல்லங்களிலும் இடம் இல்லை.
பிருந்தாவனத்திலும், மதுராவிலும் உள்ள இது போன்ற இல்லங்களிலும், கோவில்களிலும் வாழும் பெண்களுக்கு (17 வயது இளம் பெண் முதல் 80 வயது பாட்டி வரை) ஏற்படும் பாலியல் ரீதியான கொடுமைகள்... ஹ்ம்ம்.. என்ன சொல்ல... இல்லத்தை நடத்த பணம் தேவை படுவதால் இந்தப் பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மேலும், மேலிடத்து 'ஆதரவு' வேண்டும் என்றால், கோவில் பண்டிதர், லோக்கல் போலீஸ், அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் வாதிகளையும் திருப்திப் படுத்த வேண்டும்.
ஒரு வேளை இந்தப் பெண்கள் கர்ப்பம் அடைந்து விட்டால் பாதுகாப்பான முறையில் கருவை கலைக்க இவர்களிடம் வசதியில்லை. மருத்துவச்சி யிடமோ, நாட்டு மருத்துவரிடமோ தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், கைனகாலஜிகல் பிரச்சனைகள் மற்றும் பால்வினை நோய் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம், இவர்களில் பலர் எச்ஐவி ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
கில்ட் ஆஃப் சர்வீஸ் நடத்தி வரும் இல்லத்தைப் போல ஒரு சில இல்லங்களே மனித நேயத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் வழி வழியாக வரும் 'வெள்ளை சேலை' கலாச்சாரம் இங்கு இல்லை. இங்கு பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமாணத்தில் இந்த இல்லம் நடந்தப் படுகிறது. பெரும்பாலும் வயதானவர்களே இருப்பத்தால், இவர்களைப் பார்த்துக்கொள்ள, இவர்களில் படித்தவர்களுக்கு, செவிலியர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகிறது. இவர்கள் மற்ற இல்லங்களில் இருக்கும் வயதான பெண்மணிகளுக்கு முடியாத போது கவனித்துக் கொள்கிறார்கள்.
இங்கு நடக்கும் அவலங்களை படமாக தீபா மேத்தா 'வாட்டர்' என்ற படத்தின் மூலம் எடுத்துக் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம். படப்பிடிப்பு எடுக்க விடாமல் அவரைத் துரத்தி அடித்தனர் அங்கு இருந்த அதிகாரிகளும், மத வாதிகளும். அதனால் படப்பிடிப்பு இலங்கையில் தான் நடந்தது.
நடிகர் திலகத்தின் சகோதாரரின் மகன் தரன் தயாரித்த படமும் (White Rainbow) இந்த கொடுமைகளை எடுத்துக்காட்டுகிறது. அவரையும் படம் எடுக்க விடாமல் விரட்டி விட்டனர். பிறகு பிருந்தாவனம் போலவே சென்னையில் செட் போட்டு எடுத்தாராம்.
White Rainbow படத்தில் இருந்து ஒரு காட்சி

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்....தாயாய், தமக்கையாய்,மகளாய் சீராட்டி பாராட்டப்பட்ட இவர்கள் கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக இப்படி ஓரங்கட்டப்படுவது எத்தனை கொடுமை. இதை படிக்கும் நீங்கள் யாராவது உங்கள் வீட்டு பெண்களுக்கு இத்தகைய கொடுமையை செய்ய முன் வருவீர்களா?
இத்தகைய சமூக அவலத்திற்கு நிச்சயமாக குறைவான கல்வியறிவும், சக மனிதனின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத மனப்போக்குகளே காரணமாயிருக்க முடியும்.
தன் துனையை இழந்த ஆனோ பெண்ணோ ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை, அவர்களின் இழப்பின் வலியினை நிச்சயமாய் மற்றவர்களால் தீர்த்துவிட முடியாது, ஆனால் பகிர்ந்து கொள்வதன் மூலம் சக மனிதனாய் நமது இருப்பினை அவர்களுக்கு உணர்த்தலாம். இந்த வலி என்றேனும் ஒரு நாள் நம் எல்லோருக்கும் வரலாம்....இதை மறந்துவிடக் கூடாது.
Saturday, February 09, 2008
கலைந்திடும் கனவுகள்
கண்ணதாசனைத் தவிற வேறு யாரால் இந்த வரிகளை எழுத முடியும்
படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர் : ஜானகி
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும்
கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)
அலையில் ஆடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குள் என்ன உறவுகள்
உள்ளம்
என்றும்
ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவா
கலைந்திடும்
கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)
தேரில் ஏறும் முன்னரே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)
Friday, February 01, 2008
முதல் முறையா நான் ஓடிப்போன கதை
ஆறு வருஷம் முன்னால லக்னோவுல ஒரு கருத்தரங்குக்கு போலாம்னு அலுவலக தோழிகள் 4 பேர் ஆசைப்பட்டோம். கருத்தரங்குல ஆசை இருக்கோ இல்லையோ ஊர விட்டு தூரமா போய், ஒரு வாரத்துக்கு சுத்தலாம்னு ஆசை தானுங்க. எப்படியோ வீட்ல நச்சி ட்ரெயின் டிக்கட் 25 நாட்களுக்கு முன்னாடியே வாங்கியாச்சு. லக்னோ போறோம், லக்னோ போறோம்னு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டாதது தான் பாக்கி.
ஆனா பாருங்க சென்னைல இருந்த எங்க பிராஜக்ட் ஹெட்டுக்கு மூக்குல வேர்த்துடுச்சு. நாங்க என்னைக்கு புறப்படனுமோ அதுக்கு அடுத்த நாள் வரைக்கும் 8 நாட்களுக்கு மதுரையில ஒரு கலந்துரையாடல், எல்லாரும் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டார். நாங்களும் இல்லாத ஸ்டன்ட் எல்லாம் பண்ணி பார்த்தோம். ஹூம்..ஒன்னும் நடக்கலை.
நாங்களும் விடுவதா இல்லை. ஒரு நாள் லேட்டானாலும் பரவாயில்லை மதுரையில் இருந்து சென்னை போய் அங்க இருந்து லக்னோ ட்ரெயின் பிடிச்சுக்கலாம்னு ப்ளான். இது இன்னும் த்ரில்லிங்க. அப்ப வீட்டுக்கு 15 நாளுக்கு மட்டம்னு ஒரே சந்தோஷம். மதுரைல இருந்தும் 3 பசங்க அதே கருத்தரங்குக்கு வர்ரதா இருந்துச்சு.
மதுரையில கடைசி நாள் அன்னைக்கு கொஞ்சம் சீக்கிறமே புரப்படறோம்னு எங்க ப்ரொபசர் கிட்ட சொல்லிட்டோம். மதுரையில் இருந்து எங்களோட வர்ர பசங்களை சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுக்க சொல்லி கவுன்டவுன் ஆரம்பம் ஆச்சு. இந்த பசங்க காலையிலேயே போறவுங்க. ஆனா நாங்க விடுவமா.. மவனே போனீங்கன்னா பாருங்கன்னு மிரட்டி எங்களோட இருக்க வச்சுட்டோம்ல.
6 மணிக்கு பஸ்...ஆனா 5.30 ஆகியும் எங்களை விடற மாதிரி தெரியலை. கேக்கவும் பயம். அப்படி கேட்டாலும் ஏன் முதலிலேயே சொல்லலைன்னு திட்டுவிழும். விதியை நொந்துட்டு பேசாம உக்கார்ந்துட்டு இருந்தோம். 5.50 க்கு ட்ராவல் ஏஜென்சியில இருந்து ஃபோன். ''பதினைஞ்சு நிமிஷம் லேட்டாகும். ப்ளீஸ் இருங்க''ன்னு கெஞ்சி ஆறு மணிக்கு ஓட்டமா ஓடினோம். 6.20 க்கு போய் சேர்ந்து, பஸ்ல இருந்தவுங்க முறைச்ச முறைப்ப கண்டுக்காம உக்கார்ந்தோம்.
பஸ் போகுது, போகுது, போகுது போயிட்டே இருக்கு, வழியில போற மாட்டு வண்டி மாடெல்லாம் எங்களை திரும்பி பார்த்து சைடு சிரிப்பு சிரிச்சுட்டு போகுது. காலையில 5.55 க்கு சென்னை சென்ட்ரல்ல இருந்து ட்ரெயின். இப்படி ஓரு ஓட்டை பஸ்ல டிக்கெட் எடுத்துட்டாங்களேன்னு பசங்களை திட்டுன திட்டுல அவங்களுக்கு திருச்சி வந்ததும் இறங்கி ஓடீறலாம்னு ஆயிருச்சு.
சென்னை சென்ட்ரல் போய் சேரும் போது 6 மணி. 8 ஆவது பிளாட்பாரத்துல இருந்து ரப்தி சாகர் எக்ஸ்ப்ரெஸ் புறப்படத்தயாராக இருக்கிறதுன்னு அறிவிப்ப கேக்குது...ஓட்டமா ஓடினோம்...ஓடினோம்...வாழ்க்கையில அப்படி ஒரு ஓட்டம் ஓடி இருக்க மட்டோம். பிளாட்பாரதுக்குள்ள நுழையறோம், கண்ணு முன்னாடியே ட்ரெயின் போயிட்டு இருக்கு. பி.டி.உஷா ரேஞ்சுக்கு ஓடிப்பார்த்தோம். ஆனா ட்ரெயின் ஜெயிச்சுடுச்சு.
2 மாசமா பந்தா விட்டு, கடைசியில ட்ரெயின கோட்டை விட்டுட்டோம்னு ஊர்ல போய் சொன்னா எப்படி இருக்கும். இனி என்ன பண்ண? நடங்க அடுத்த ப்ளாட்பார்ம்ல கோவை எக்ஸ்ப்ரெஸ் நிக்குது ஏறி ஊர் போய் சேரலாம்னு சொன்னா, அதுல ஒருத்தி அதெல்லாம் முடியாது, நான் இன்னைக்கு லக்னோ போயே தான் ஆகனும்னு கீழ விழுந்து புரண்டு அழாத குறையா ஆட்டம்.
என்னமோ பண்ணுங்கன்னு அக்கடான்னு நான் உக்கார்ந்துட்டேன். இந்த டென்ஷன், அழைச்சல், ஓட்டத்துல பயங்கர வீசிங் நமக்கு. போய் தகவல் மையத்துல விசாரிச்சு சாயந்திரம் 7 மணிக்கு ஜான்சிக்கு ஒரு ட்ரெயின் இருக்குன்னு, இந்த டிக்கெட்ட கேன்சல் பண்ணி (ஏதோ கொஞ்ச பணமாவது வருமே) அந்த ட்ரெயினுக்கு டிக்கெட் எடுத்தாங்க. அதுக்கு அப்புறம் தான் அந்த ஆட்டக்காரி ஆட்டத்தை நிறுத்தினா.
ஜான்சிக்கு போய் அங்க இருந்து வேற ட்ரெயின் லக்னோக்கு. இந்த ட்ரெயினுக்கும் அந்த ட்ரெயினுக்கும் 45 நிமிஷம் தான் வித்தியாசம். இது சரியான நேரத்துல போய் சேரலைன்னா என்ன பண்ண?... ''ஜான்சி போயிட்டா அப்புறம் லக்னோ போறது சுலபம்'' னு ஆட்டக்காரி ரொம்ப தெம்பா சொல்ல, நான் கேட்டேன்..''ஓ உணக்கு அந்த அளவுக்கு பரிச்சியமான ஊரா'' அதுக்கு அவ, ''யாருக்கு தெரியும், சும்மா ஒரு அனுமானம் தான்".. தேவையா எனக்கு....ம்ம்ம்
மேல போய் ரெஸ்ட் ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தோம். வீட்டுக்கும் ஃபோன் பண்ண முடியாது( பண்ண விடலை). சொன்னா 'மவளே மரியாதையா கோயமுத்தூர்க்கு வந்து சேர்'னு சொல்வாங்க.
சாயந்திரம் 7 மணிக்கு ஒரு வழியா ட்ரெயின்ல உக்கார்ந்தாச்சு. அடுத்த நாள் ராத்திரி 9 மணிக்கு ஜான்சி போய் சேரும். 9.45 மணிக்கு லக்னோ ட்ரெயின். எல்லாரும் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். எனக்கு எப்பவும் போல டென்ஷன். ட்ரெயின் போய் சேருமான்னு. ''ஏதாவது பேசுனேனா கீழ தள்ளி விட்ருவோம்'னு மிரட்டுனதுல, திருவிழாவுல காணாம போனவ மாதிரி முழிச்சுட்டு உக்கார்ந்துட்டு இருந்தேன்.
9 மணி ஆயிருச்சு. ஆனா ட்ரெயின் இன்னும் எங்கேயோ நடுக்காட்டுல போயிட்டு இருக்கு. ட்ரெயின் போற மாதிரி என் மனசும் பட படன்னு அடிக்குது. இனி வாட்ச பார்க்க கூடாதுன்னு என்னை கட்டுப் படுத்தீட்டூ உக்கார்ந்துட்டு இருந்தேன். என்னை தவிர யாருக்கும் பதட்டம் இல்லை. உலகம் உருண்டை தானே, எங்க சுத்துனாலும் ஊர் போய் சேர்ந்துறலாம்னு தத்துவம் வேற.
ஜான்ஸி ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும் தான் வாட்ச பார்த்தேன். மணி பத்து. அடப்பாவிகளா அந்த ட்ரெயின் போயிருக்குமே...குளிர்ல என்னை இந்த பாடு படுத்தறீங்களேன்னு திட்டீட்டே ப்ளாட்பாரத்துல இறங்குனா... 'ஹேய் எங்க அந்தப்பக்கம் இறங்குறே..இந்தப்பக்கம் வான்னு, எதிர்ப்பக்கம் இருக்குற கதவு வழியா ஒவ்வொன்னும் ஜங்கு ஜங்குன்னு குதிக்குதுக. ஏன்னு கேட்டா அந்த ட்ரெயினும் லேட்டா தான் வந்துருக்கு..ப்ளாட்பாரம் பாலத்துமேல ஏறிப்போனா லேட் ஆயிடும், வா இப்படியே போயிடலாம்னு என்னோட லக்கேஜ் எல்லாம் அவங்களே எடுத்துட்டு தண்டவாளத்தை தாண்டி ஓடறாங்க. லாங்க ஜம்ப், ஹை ஜம்ப் வீராங்கனைகள் எல்லாம் தோத்துப் போகனும்.
ஒரு வழியா லக்னோ ட்ரெயின்ல ஏறி உக்கார்ந்தாச்சு. அப்புறம் பாருங்க இவ்வளவு ஓடி வந்து, ட்ரெயின் அதுக்கு அப்புறமும் 30 நிமிஷம் கழிச்சு தான் போச்சு.
இதுல முக்கியமான விஷயம், நான் லக்னோ ட்ரெயின கோட்டை விட்டதும், இப்படி ஓடுனதும் இது வரைக்கும் வூட்ல யாருக்கும் தெரியாது..:-))
Monday, January 28, 2008
குழந்தைகள் குழந்தைகள்தானே.....
அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய் வரவேற்றார்கள்.
அங்கு இருப்பவர்களிலேயே கடைக்குட்டியின் பெயர் அலோக், 4 வயதுதான். எச்ஐவி நோயாளியான அவன் அம்மா இவன் பிறந்த உடனே இறந்து போக, அப்பா இவனை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டு போய்விட்டார். இத்தனைக்கும் அவர் ஒரு கோவில் பூஜாரி. மனைவி எச்ஐவியால் இறந்து விட்ட போதும், தான் இந்த பரிசோதனை செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை அந்த தாய் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ, சரியான விவரம் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அலோக் பிறந்தவுடன் தாய் இறந்து விட, தந்தை மறுமணம் செய்து கொண்டார்.
ரெண்டாவது மனைவி பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்துக்கொள்வாள் என்று நினைப்பது இன்றைய சுயநலம் பீடித்த சூழ்நிலையில் மிகப்பெரிய மடத்தனம்.ஆதரவில்லாத அந்த பச்சை மண் இப்பொழுது காப்பகத்தில். அலோக்கின் உடம்பில் நோய் கிறுமியின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவனுக்கு ஏஆர்டி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் உட்கார பிடிக்காமல் ஓடி விளையாட துடித்தாலும், அதற்கு அவன் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. வீட்டில் எத்தனை மன உளைச்சலுக்கு தள்ளப் பட்டிருந்தால் இந்த 4 வயது பாலகன் வீட்டிற்கு போகவே பதறுவான். அப்பாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலே இல்லை.
ஹ்ம்ம்...கணவன் இறந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தையுடனும்,நோயுடனும், பழிச்சொல்லுடனும் ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இன்று ஏராளம். ஆனால் இங்கு.....ஹ்ம்ம்ம்...
அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில் ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால், அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும் பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை.
Wednesday, January 16, 2008
பிடித்த பதிவுகள்-கண்மணியின் அழைப்புக்காக
அதுல பிடித்த பதிவுகளை சொல்ல அழைப்பு விடுத்த கண்மணிக்கு நன்றி.
சில பதிவுகள் ரொம்ப ஆர்வமா,ஈடுபாட்டோட எழுதுவோம்..... அப்படி திருப்தி அளித்த (எனக்கு) பதிவுகள்
1) Growing Old... - எப்பவும் பெரியவங்க கூட இருக்கனும்னு நினைப்பேன்.. கூட்டுக்குடும்பம்...மாமியார்...அம்மா...நாத்தனார்..ம்ம்ம்... உறவுகள் விட்டு தூரமா..(மனசளவுல இல்லை) இருக்கறப்போ... இன்னும் நிறைய ஒட்டுதல் வருது....ஒரு நாள் அம்மாவும் மாமியாரும் அடுத்தடுத்து கூப்டு தங்கள் தனிமையை சொல்லாம சொல்ல...அன்னைக்கு முதியோர்கள் தினமும்...இந்த பதிவ எழுதினேன்...
2) திருநெல்வேலி குசும்பு - எப்பவும் சீரியஸா எழுதறதுனால, லைட்டான பதிவுகளே நமக்கு வராதான்னு தோனும். பதிவுல சொன்ன சம்பவத்தை அப்படியே எழுத ஆரம்பிக்க...நல்லா இருந்த மாதிரி இருந்துச்சு....முதல் முறையா லைட்டான பதிவு எழுதுனதால இந்தப் பதிவும் பிடிச்சுப் போச்சு
3) அப்பா.. - அப்பாகிட்ட தான் ரொம்ப நெருக்கமா உணர்ந்திருக்கிறேன்.. அவர் இவ்வளோ சீக்கிறமா என்னை விட்டு போவார்னு எதிர்பார்க்கலை... என்னோட இன்றைய வளர்ச்சியை பார்த்தா அவரின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.....அவர் எனக்கு குடுத்த படிப்பும், அனுபவமும், நல்ல விதத்துல உபயோகப்படறதே அவருக்கு நான் செய்யும் மரியாதை.. அவரைப்பற்றி எழுத வாய்ப்பு கிடச்சதுனால இந்த பதிவும் பிடிக்கும்.
பின்னூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.
நான் அழைப்பவர்கள்...
மலர்வனம் லக்ஷ்மி
டாக்டரம்மா....
சின்ன அம்மனி
Thursday, January 10, 2008
கண்டுபிடிச்சுட்டேன்...
யோசிக்காம எழுதுனா மொக்கை பதிவாம். ஒழுங்கா எழுதினாலே நாலு வரியில நாப்பது எழுத்துப்பிழை. இதுக்கு பெரிய மனசோட நம்ம கன் ஃபைட் காஞ்சனா பிழையே உன் பெயர் மங்கையானு ஒரு கேள்வி எல்லாம் கேட்டுட்டு போயிட்டாங்க. இதுக்கும் பதிவ நாலு தடவை படிச்சுட்டு பப்ளிஷ் பண்றப்பவே நம்ம அழகு இப்படி.
நாம என்னைக்கு யோசிச்சு பதிவு எழுதுனோம்னு நானும் யோசிச்சேன். ஹூம்...அப்படி ஒன்னு எழுதுனதா நியாபகத்துக்கு வரலை.
சரி. இந்த மொக்கை விளையாட்ட யாருங்க ஆரம்பிச்சது?
இதன் நோக்கம் என்னன்னு இந்த ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்... :-)))
நீங்க எழுதினது எல்லாமே இது வரைக்கும் மொக்கை தான்னு நம்ம ஒவ்வொருவரையும் நம்ம வாயாலேயே ஒத்துக்க வச்ச புண்ணியவான் வாழ்க. நாம எந்த அளவுக்கு நேர்மையானவங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும்.:-)))
பி-கு- இது நாள் வரைக்கும் கிடைக்காத முதல் பரிசு இப்ப எனக்குத்தான்.. என்ன சொல்றீங்க??..மொக்கை பதிவுல எழுத்துப் பிழை எல்லாம் கண்டுக்க கூடாது ஆமா...
Wednesday, January 09, 2008
நான் யார்?..யார்?..யார்?
சூப்பர் ஸ்டார் சில நாட்களுக்கு முன்னால தன்னை மராத்தின்னும் ஒத்துக மாட்டேங்குறாங்க, கன்னடக்காரர்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, தமிழன் அப்படின்னும் ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு ஒரே பீலிங்கஸ் விட்டார். நியாபகம் இருக்கா.?.. அது மாதிரி தானுங்க நானும் இப்ப ஒரெ ஃபீலிங்கஸ்ல இருக்கேன்.
இன்னைக்கு எங்க கல்லூரியில ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுக்கு வந்து இருந்த அசாம் காரர் ஒருத்தர்க்கு என்னை அறிமுகப் படுத்தினார் நம்ம குசும்பு சீதாராமன். அவர் பேர் டோர்ஜீ (Dorjee) . இவர் அறிமுகப் படுத்தினாலே ஏதாவது வில்லங்க புடிச்ச கேசா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். அதே மாதிரி தான் ஆச்சு.
சில கேள்விகளுக்கு ஒரு பதில் குடுக்க முடியாது. அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம்னு சொல்ல தோனும். ஆனா அப்படிப்பட்ட கேள்விகள் ஒரே சமயத்துலயா வரனும்.
பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின்னர் என் நெற்றியில் இருந்த விபூதிய காமிச்சு, "நீங்க தமிழா'' னார். தலைய ஆட்டி ஆமான்னு சொல்ல வாய திறக்குறதுக்கு முன்னால அவர் "இல்ல தெலுங்கா" னார். அதுக்கும் சிரிச்சுட்டே தலைய ஆட்டினேன். தமிழ்நாடா ஆந்திராவான்னு கேட்டிருந்தா தமிழ்நாடுன்னு சொல்லி இருப்பேன்.
தமிழா, தெலுங்கானு கேட்டதுனால, (என்னமோ ஹரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடுன்னு நினப்பு) ரெண்டுத்துக்கும் தலைய ஆட்டிட்டேன்
ஆனா அதுக்கு மேல ஒன்னும் சொல்லலை. அவர் எப்படி புரிஞ்சுட்டாரோ அப்படி இருக்கட்டும்னு சும்மா இருந்தேன். ஆனா மனுஷன் விடாம "அப்படின்னா" னார்.
நான் "அது அப்படித்தான்" அப்படின்னேன். அவர் உடனே "ஓ உங்க பெற்றோர்கள்ல ஒருத்தர் தெலுங்கு, இன்னொருத்தர் தமிழா'' னு ஒரு மகா கண்டு பிடிப்ப கண்டு பிடிச்சு கேட்டார்.
இதுக்கு மேல நாம வாய மூடீட்டி இருந்தா நல்லா இருக்காதுன்னு "நான் மற தமிழச்சி தான்.ஆனா என் தாய்மொழி தெலுங்கு. தமிழ்நாட்டுல தெலுங்கு பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க" ன்னு சொன்னா, மனுஷனுக்கு பதில்ல திருப்தி இல்லை. சரி போகட்டும்னு விட்டார்.
இதோடு அவரோட கேள்விக்கனைகள் நிக்கலை. இதற்குள்ள இன்னொரு தமிழ் பெண்ணும் வந்து சேர்ந்தாள். ரெண்டு பேர்கிட்டேயும், 'நீங்க எந்த ஊர்' னார். சொன்னோம்.
நாங்க சொன்னதைக் கேட்டு குசும்பர் வந்து, '' ஏன்டீம்மா, புக்காத்த சொல்லப்படாதோ, ரெண்டு பேரும் பொறந்த ஊரையே சொல்றேளே '' -
கேட்டவர்க்கு தமிழகத்துல சென்னைய தவிர வேற எந்த ஊரும் தெரியாது. அப்புறம் எது சொன்னா என்ன. பிறகு சீதாராமனே "அவங்க ஊர் அது இல்லை" அப்படீன்னு எங்களோட 'புக்காத்த' சொல்ல, டோர்ஜீ என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
அடுத்து "எய்ட்ஸ்ல நீங்க திட்டப்பணியில இருக்கீங்களா இல்லை களப்பணியில இருக்கீங்களா' னார். இரண்டும் செய்ய வேண்டி இருப்பதால "ரெண்டும் தான்" னேன். இவ கிட்ட எதுக்கும் 'ஒரு' பதில் கிடைக்காது போலன்னு டோர்ஜீ இடத்தை காலி பண்ணிட்டார்.
அப்புறம் மதியம், நானும் என்னோடு இருந்த தமிழ் பெண்ணும் சாப்டுட்டு இருந்தோம். கையில தட்டை எடுத்துட்டு அன்புத்தொல்லை மீண்டும் பக்கத்துல வந்தார், "நீங்க சைவமா அசைவமா?" னு கேட்டார்.
தோழி வேனும்னே ' ரெண்டும் தான். நான் சைவமும் சாப்பிடுவேன் அசைவமும் சாப்பிடுவேன்" னு சொல்ல, டோர்ஜீ " You guys are too naughty" னு சிரிச்சுட்டே தப்பிச்சா போதும்னு ஒரே ஓட்டமா ஓடிட்டார்.
Monday, December 31, 2007
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
கபடமில்லா இந்தச் சிரிப்பை போல் வரும் புத்தாண்டை தூய்மையான நெஞ்சோடு எதிர்கொள்வோம்
மனதில் அமைதியும், உடலில் வலிமையும், சிந்தனையில் தெளிவும் பெற்று, வாழ்வில் இன்னும் உயரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்திக்குறேன்.
அனைவருக்கும் எதிர்வரும் புத்தாண்டு இனிமையாகவும் வளமையாகவும் அமைய, இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Friday, December 28, 2007
பரீக்ஷித் - குறும்படம்
கணவன் மூலமாக எச்ஐவி நோய்க்கு ஆளாகும் ஒரு பெண், கணவனின் வீட்டாரால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அந்தப் பெண் கட்டிட வேலை செய்து குழந்தையை காப்பாற்றுகிறாள். மேலும் அவளுடன் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு எச்ஐவி பற்றி எடுத்து கூறி, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கண்டிப்பாக எச்ஐவி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறுகிறாள்.
விழிப்புணர்வு கூட்டங்களில் போட்டு காட்டவேண்டிய படமானதால் பெரும்பாலும் எச்ஐவி பற்றிய அடிப்படைத் தகவல்கள், பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷடங்கள் போன்றவை எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது.
முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். நான் எதிர் பார்த்த அளவிற்கு வரலைன்னாலும், படத்திற்கான குறிக்கோள் நிறைவேறியாச்சு.
நாமும் ஏதோ செய்திருக்கோம்னு ஒரு திருப்தி.
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அம்பாவாக நடித்த சாகரீக்கா- நிறைவான நடிப்பு
தம்லியாக நடித்த கீதா, அசத்தீட்டார்


டாக்கடராக நடித்த சந்தீப் ஆர்யா


வில்லி மாமியார்.. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய பெண் வராததால், மேக்அப் வுமன் பிரியா, மாமியாராக ஒரே காட்சியில் வந்தாலும் அசல் வில்லி தோற்றும் போகனும். அப்படி ஒரு லுக்கு.

வீட்டை விட்டு விரட்டப்பட்ட அம்பா, தெருவில் குழந்தையுடன்

டாக்டரம்மாவாக நடித்த ரிது ஆர்யா

உண்மையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பத்மாவதி
பகவதி

நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷதத்தை அம்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் தம்லி.
Tuesday, December 11, 2007
என் அருகே நீ இருந்தால்!
தாராளமாய் வந்த அன்பு
தவிக்க விடாத அன்பு
தெவிட்டா அன்பு
தவித்திருந்தேன் விழித்திருந்தாய்
தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்
தோள் கொடுப்பதில் தனையனானாய்
தேற்றி அரவணைத்து தந்தையானாய்
பொறுமையில் என் தாயானாய்
மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்
இந்த அன்பிடம் தஞ்சமடைந்தேன் என் நட்பே....
Friday, November 30, 2007
ஆதரவுக்கரம் நீட்டுவோம்- உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்
எய்ட்ஸ் இளவயதினரையும் பாலுறவில் அதிகம் ஈடுபடும் வயதினரையுமே அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில்எச்.ஐ.வி. உள்ளவரில் 88.7 சதவீதத்தினர் 15முதல் 49 வயதுக்குட்பட்டவரே.
போதை ஊசி மூலமாக பெரும்பாலும் எச்.வி.ஐயைப் பெறும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, இந்தியாவில் பலருடன் உடலுறவு கொள்வதன்மூலமாகவே 85 சதவீதத்தினர் எச்.ஐ.வியைப் பெற்றுள்ளனர்.
எய்ட்ஸினால் உருவாகும் சந்தர்ப்பவாத நோய்களில் காசநோயே அதிகமாக எச்.ஐ.வி. இருப்பவரைத் தொற்றுகிறது. இதனால் எச்.ஐ.வியும் காசநோயும் சேர்ந்து பரவும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
உலகெங்கும் பெரும்பாலும் நகர்ப்புறமக்களே எச்.ஐ.வியைப் பெறுகையில், இந்தியாவில் மட்டும் எச்.ஐ.வி.தொற்றியவரில் 60 சதவீதத்தினர் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
தமக்கு எச்.ஐ.வி. வரவே வராது என்னும் மூட நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள்.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதித்திருப்போருக்கான மனித உரிமைகள் அதிக அளவில்மக்களிடையே கொண்டு செல்லப்பட்டாலும் எச்.ஐ.வி. பாதித்திருப்போரை சமூகம் பார்க்கும் பார்வையிலும் நடத்தும் விதத்திலும் பெரிய மாறுபாடு ஏற்படவில்லை.
ஆண் பெண் பாகுபாடு, சமூகத்தில் பெண்களை சமமாக நடத்தாமலிருப்பது, பாதுகாப்பான செக்ஸ் என்பதில் பெண்கள் உரிமையின்றி இருப்பது ஆகியவை எச்.ஐ.வி. தடுப்பு நடவடிக் கைகளை பெரிதும் பாதிக்கிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கிடை யேயும் மக்கள் சென்று வருவது பல்வேறு பிரிவுகளுக்கிடையே எச்.ஐ.வி. பரவகாரணமாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மாளான உதவிகள் செய்து, அன்புக் கரம் நீட்டி மனித காப்போம்
Wednesday, November 07, 2007
பிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்
சிப்லா கம்பெனியின் புதிய அறிமுகமான ' ஐ-பில்' - கருத்தடை மாத்திரை இளம்பெண்களிடம் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தில்லியில் உள்ள மருந்துகடைகளில் இந்த மாத்திரயை வாங்குபவர்களில் 20% சதவீதம் இளம்பெண்கள் தானாம். அதுவும் 16ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள். இது நாள் வரையில் வெளிநாடுகளில் மட்டுமே இது போல 'எமர்ஜென்ஸி' மருந்துகள் உபயோகத்தில் இருந்தன. அதென்ன 'எமர்ஜென்ஸி' மருந்துகள்னு பார்க்குறீங்களா. அதாங்க உடலுறவுக்குப் பின் 72 மணி நேரத்துக்குள்ள இந்த மருந்து எடுத்துக்கோனும்.- உடலறுவுக்கு பின் ஓவரியில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டை வெளியே வராமல் தடுக்கிறது.
- ஒரு வெளியே வந்து விட்டால் அது ஆண் உயிரணுக்களை சேர விடாமல் தடுக்கிறது.
- முதிர்ச்சியடைந்த கரு முட்டைகள் கருப்பையின் உட்சுவர்களை ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறது.
முக்கியமான விஷயம், நம் நாட்டில் இன்னும் பலருக்கு கருத்தடை மாத்திரைகள் எந்த விதத்திலும் அவர்களை எச்ஐவி கிருமியிடமிருந்தோ பால்வினை நோய்களிருந்தோ காப்பாற்றாது என்ற அடிப்படை உண்மை தெரியாது.
Saturday, October 27, 2007
மாமியார்(கள்) வாழ்க..வாழ்க
இன்னைக்கு மாமியார்கள் தினமாம்
எல்லாரும் நோய் நொடி இல்லாம, சந்தோஷமா, பல்லாண்டு பல்லாண்டு வாழ உங்கள் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்.
Thursday, October 25, 2007
ஈமெயில் மோசடி..
Dr. Zubair என்பவர் ஜாமியா பல்கலைகழகத்துல பேராசிரியர். கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள்ல அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அவரோட ஜீமெயில் அக்கவுன்ட்ல இருந்து எனக்கு வந்த ஈமெயில்.
தான் ஆப்ரிக்காவுல இருப்பதாகவும், அவசரத்துல புறப்படும் போது சொல்ல முடியலைனும் எழுதி இருந்தது. மேலும், தன் பாஸ்போர்ட், பணம், பேக் முதலியன திருடு போய்விட்டதாகவும், செலவுக்கு காசு இல்லை அதனால் உடனே $2600 அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தது. நானும் எல்லாம் செக் பண்ணி பார்த்தேன். அதே ஈமெயில் ஐடி, கீழ அவர் எழுதற மாதிரியே அவரோட அலுவலக முகவரி எல்லாம் சரியா இருந்துச்சு.
அதுவும் HIV/AIDS கருத்தரங்குன்னும் எனக்காக சில புத்தங்கள் கிடைச்சதுன்னும் எழுதியிருந்துச்சு. எனக்கு அத படிச்ச பின்ன, நிஜமாவே எங்காவது மாட்டி இருப்பாரோன்னு இருந்துச்சு. ஏன்னா இவரும் அடிக்கடி வெளிநாடு செல்பவர் தான்.
ஜாமியாவுல அவரின் துறையில இருக்கும் மற்ற பேராசிரியர்களை கேட்கலாம்னா வெள்ளி விடுமுறையானதால கல்லூரியில யாரும் இல்லை. சரி அவரோட கைப்பேசிக்கே போன் பண்ணலாம்னு பண்ணேன், அதுவோ switched off.
மீண்டும் அந்த மின்னஞ்சலை படிச்சு பார்த்தேன்.. மேல மட்டும் எப்பவும் அவர் எழுதற மாதிரி இல்லை. எப்பவும் என் பெயரை மட்டுமே அவர் எழுதுவது வழக்கம். ஆனா இந்த மெயில்ல ' ஹலோ' அப்படீன்னு போட்டிருந்தது. அப்புறம் தான் இது அவர் அனுப்பலைன்னு நினைக்க தோனுச்சு. அந்த ஈமெயில் பாருங்க
Hello,
I am sorry I din't email you about my traveling to Africa for a program on HIV/AIDS that is taking place in three major countries in Africa. Ghana, SouthAfrica and Nigeria. In fact I have collected a lots of materials for you, which would be very useful to you.
It as been a very sad news and bad moment for me, thepresent condition that I found myself is very hard for me to explain.I am really stranded in Nigeria because I forgot my little bag in a Taxi where mymoney and passport documents were kept on my way to a Hotel that am staying,I have no more money left with me.
I am now owning a hotel bill of $1400and they wanted me to pay the bills soon else they will have to seize mybag and hand me over to the Hotel Management,please I need some help fromyou urgently to help me back home,and I need you to help me with the hotelbill and i will also need $1200 to feed and help myself back home so pleasecan you help me with a sum of $2600 ? to sort out this problems here
I needthis help so much and on time because i am in a terrible and tightsituation here,please understand how urgent i need your help.I am sending you this e-mail from the city of lagos.
I will appreciate what so ever you can afford to send me for now and I promise to pay back yourmoney as soon as i return home, you need to transfer the money throughWestern Union
Regards
Dr Zubair
........................................................................
Professor, Department of Social Work,
Jamia Millia Islamia [CentralUniversity],
New Delhi-110025
அப்புறம் மீண்டும் இன்னைக்கு அவர கூப்டேன். எதுக்கும் கேட்கலாம்னு. எடுத்த உடனே எங்க இருக்கீங்கன்னு கேட்டேன். அவர் '' என்ன?.. உங்களுக்கும் அந்த ஈமெயில் வந்துருச்சா, நான் எங்கேயும் போகலை, நான் நல்லா இருக்கேன். பணம் ஒன்னும் அனுப்பிடலையே'' ன்னு கேட்டார்.
ஏன்னா அவரோட பணி புரியும் பெண் ஒருவர் பணம் அனுப்பலாம்னு நினச்சுட்டு இருந்தப்போ கரெக்டா இவர் கூப்டு விஷயத்தை சொல்லிட்டாராம். இதுல முக்கியமான விஷயம் இவரோட ஈமெயில் லிஸ்ட்ல இருக்கும் பெண்களுக்கு தான் அதிகமா இந்த மின்னஞ்சல் வந்து இருக்கு.
இதே செய்தி NDTV லயும் வந்துச்சு. மும்பையில இதே மாதிரி வந்த ஈமெயில்னால ஒருவர் 6 லட்ச ரூபாய் நண்பருக்காக அனுப்பிட்டாராம்.
நண்பர்களே, இப்ப இது அதிகமா நடக்கறதா செய்திகள் வருது. ஹாக் செய்த ஈமெயில் ஐடியில இருந்து பழைய மெயில் எல்லாம் படிச்சு அதுல இருக்குற செய்திகளுக்கு தொடர்பு இருக்கும் செய்திகள் எழுதி நம்பிக்கை வர வைப்பது தான் இவங்க கையாளும் யுத்தி.
தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் சொல்லி வைங்க மக்களே. முக்கியமா வெளிநாடுகள்ல இருக்கும் நண்பர்கள் கவனமா இருங்க.
