வெகுசன ஊடகங்கள், கருத்தையும் சிநதனையையும் தூண்டும் வண்ணம் இருக்கும் காலம் போய், இப்பொழுது அப்படி ஒரு சிந்தனையே இல்லாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. இன்று குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டியும், இன்டர்னெட்டுமே கதி என்று இருக்கையில், அது ஒரு ஆரோக்கியமான ஊடகமாக இருக்க செய்வது நம் கடமையில்லையா.
பல நல்ல மாற்றங்களை செய்துவரும் ஊடகங்கலை பாராட்டவும் செய்கிறோம். ஆனால் இவை சில சமயம் தவறுகளையும் செய்து வருகிறது. செய்யக் கூடாதனவற்றை ஊடகங்கள் செய்யும் போது அதை சுட்டிக்காட்டுவது நம் கடமை. அதனால் தான் இந்த பதிவு.
நேற்று CNN-IBN லைவ்வாக நடத்திய ஒரு நிகழ்ச்சி, ஊடகங்களின் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையை கேள்விகுறியாக்கிவிட்டது. இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு விஷயம், அபிஷேன் பச்சன் - ஐஷ்வர்யா ராய் திருமணம். ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு இந்த 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' ஒரு நிகழ்வை மக்களுக்கு கொண்டு வருவதிலே மிகவும் மெனக் கெடுகிறார்கள்..சரி போகட்டும். அவர்களுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது, சம்பந்தப்பட்ட குடும்பத்தாரை குஷிப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் மக்களும் இதை எதிர்பார்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட தொலககாட்சியின் சொந்த விருப்பு, வெறுப்பு இது. நான் விமர்சிக்க கூடாது.
நான் இதைப் பற்றி பேச வரவில்லை.
நேற்று இந்த திருமணம் சம்பந்தப்பட்ட ஒரு சடங்கு அமிதாப் வீட்டில் நடந்தது. இதற்கு CNN-IBNல் இருந்து இரண்டு இளைஞர்கள், அமிதாப் வீட்டின் எதிரே நின்று கொண்டு, வருபவர்கள் போகிறவர்களை படம் பிடித்து, அபிஷேக் பற்றியும் ஐஸ்வ்ர்யா பற்றியும் 'சுவையான' தகவல்களை பரிமாரிக் கொண்டிருந்தார்கள். பின் அருகில் இருந்த குழந்தைகளிடம் சில கேள்விகள் கேட்டு இம்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு பேரில் ஒருவர் ஒரு சின்ன குழந்தையிடம்.. 4 அல்லது 5 வயது தான் இருக்கும், அந்த குழந்தையிடம் கேட்ட கேள்வி, இப்படியும் ஒரு தொலைக்காட்சி தரம் கெட்டு போகுமா என்று நினைக்க வைக்கிறது.
அந்த குழந்தையிடம் அவர் கேட்கிறார்
'' hey, do u know what happens after marraige?"
அந்த குழந்தை ஒன்றும் பேசவில்லை
''do you know what people do after marraige?''
குழந்தை மீண்டும் மிரள மிரள முழித்தது
''do you know that a child is born after marraige?''
இதற்கெல்லாம் 5 வயது குழந்தை என்ன பதில் சொல்லும்.
''do you know how a child is born?''
குழந்தைக்கே பொறுக்கவில்லை போலும்...தலையை பலமாக அட்டிவிட்டு இறங்கி ஓடிவிட்டது.
இந்த கேள்விகளை கேட்டு விட்டு அந்த இரண்டு லூசுகளுக்கும் ஹ ஹா ஹா என்று சிரிப்பு வேறு.
இதையெல்லாமா மக்கள் எதிர் பார்க்கிறார்கள்?. இவர்களுக்கு எல்லாம் என்ன சமுதாய பொறுப்பு இருக்கிறது? இத்தனை பலம் வாய்ந்த ஒரு ஊடகம், குழந்தைகளை வளர்ச்சியில் நல்லதொரு பங்கை வகுக்க வேண்டாமா?.
இதில் இன்னொரு பெண் குழந்தையை, பத்து வயது இருக்கும், ஷாருகான் பற்றி எதோ கேள்வி கேட்கிறார்கள், என்ன கேள்வி என்று மறந்து விட்டது,
அந்த பத்து வயது சிறுமியின் பதில்..
' hmmm என்று ஒரு இழுவை..பின், தோலை குலுக்கி, கண்ணை சிமிட்டி
" ya may be Shaaru is jealous of Abishek".
மக்களுக்கு கொண்டு சேரவேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் எத்தனையோ இருக்க , தேவையில்லாத செயல்களும் விமர்சனங்களும் தான் செய்து கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இது போல ஊடகங்களை எவ்வளவு கவனமாக குழந்தைகள் கவனித்து வருகிறார்கள் என்பது தெரியாதா இவர்களுக்கு?. ஊடகங்கள் எந்த அளவிற்கு ஒரு பாதிப்பை உண்டாக்கிறது என்பதை இவர்களே பல ஆராய்ச்சி அறிக்கைகளை நிபுணர்கள் கொண்டு விவாதிக்கத்தான் செய்கிறார்கள்.
நாட்டின் எதிர்காலம் பற்றிய எந்தவிதமான அக்கறையோ எதிர்பார்ப்போ இல்லாத இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை.