Friday, April 11, 2008

தலைநகரம், சட்டம், பாதுகாப்பு = ஏட்டுச்சுரைக்காய்


திரைப்படங்களில் மட்டுமே துப்பாக்கி சத்தத்தை கேட்ட காலம் போய்,தில்லி வாழ் மக்கள் தற்பொழுது அதை தங்களின் வீட்டின் அருகிலேயே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நகரமயமாக்கல் இன்று எப்பேற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு நோய்டாவிலும், குர்கானிலும் நடக்கும் குற்றங்களே எடுத்துக்காட்டு.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் கல்லூரிக்கு எதிரே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை வழி மறித்து அவர் ஓட்டி வந்த காரை பறிக்க முயற்சி செய்து, பின்பு முடியாமல் போகவே அவரை அடிவயிற்றில் சுட்டு விட்டு ஓடி விட்டனர். இது நடந்து அரைமணியில் இந்தப் பகுதிக்கு வெகு அருகிலேயே, 27 வயது பெண் ஒருவரிடம் எதற்காகவோ வாக்குவாதம் செய்து பின் அவரை சுட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். இதை காவல் துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் சம்பவம் நடந்த உடனேயே காவல் துறையினர் எச்சரிக்கையாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.

இதைவிட கொடுமை சுடப்பட்ட ராணுவ அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட வழியில் சென்றவர்களிடன் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் எந்த மனிதப் பிறவியும் அவருக்கு உதவிக் கரம் நீட்டவில்லை. பிறகு அந்த நிலையிலேயே அவர் காரை ஓட்டிக் கொண்டு போய் வீட்டை அடைந்து, வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அடிவயிற்றில் குண்டு பாய்ந்தும், உடல் பருமனாக இருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டார். இதை அவரே சர்தார்ஜிகளுக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு " என் தொப்பை என்னை காப்பாற்றி விட்டது " என்று சொல்லி இருக்கிறார்.

குண்டுகாயம் பட்ட சர்தார்ஜியும், கொல்லப்பட்ட பெண்ணும் வழி மறித்தவர்களிடம் போராடியதால் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ரோந்தில் இருக்க வேண்டிய காவல் துறை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.


அதிக பலன்களைத் தராத விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த இந்த பகுதி மக்களிடம், இன்று கோடி கோடியாய் பணம். அதி வேக தொழில் வளர்ச்சிக்கும், விண்ணுயர்ந்த கோபுரங்களாய் நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் இந்த விவசாய நிலங்கள் இன்று விலை போய், இவர்களை திடீர் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது.

இதில் இவர்களே சிலர் நில தரகர்களாகவும் இருப்பதால், தரகு தொழிலில் இருக்கும் பலத்த போட்டியினால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று, துப்பாக்கியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ள ஒருவரிடம் இருக்க வேண்டிய உரிமம் இன்று இங்கு சர்வ சாதாரணமாக கிடைத்து விடுகிறது. இதனால் தில்லியை சுற்றி உள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் இன்று வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குர்கான் பள்ளியில் தங்களுடன் படித்த மாணவனை ஒரு சின்ன பிரச்சனைக்காக சுட்டுக் கொன்றது குர்கான் தரகர்களின் குழந்தைகள் தான்.